World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

South Africa’s mine massacre

தென்னாபிரிக்க சுரங்கப் படுகொலை

Bill Van Auken
18 August 2012
Back to screen version

வியாழனன்று தென்னாபிரிக்காவில் வேலைநிறுத்தம் செய்த பிளாட்டினம் சுரங்கத் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதானது ஒருபக்கத்தில் நிற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இன்னொரு பக்கத்தில் நிற்கும் ஆளும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களுக்கும் இடையிலமைந்த சமரசத்திற்குட்படாத மோதலை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது.

காட்டுமிராண்டித்தனமான போலிஸ் படுகொலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 என உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் உண்மையான எண்ணிக்கை 50க்கு நெருக்கமாக இருக்கலாம் என்று பிற ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. வெட்டுக் கருவிகள் மற்றும் குச்சிகளைச் சுமந்து வந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு எதிராக தானியங்கித் துப்பாக்கிகளின் தோட்டாக்கள் சரமாரியாகப் பொழிந்த இந்த சம்பவத்தில், இன்னும் ஏராளமானோர் காயமுற்றனர், இதில் சிலர் படுகாயமுற்றுள்ளனர். போலிஸ் 259 சுரங்கத் தொழிலாளிகளைக் கைது செய்துள்ளது. காணாத தந்தைகளையும், சகோதரர்களையும், பிள்ளைகளையும் குடும்பத்தினர் மருத்துவமனைகளிலும், பிணக்குவியல்களிலும், காவல் நிலையங்களிலுமாய் தேடிப் பரிதவிக்கும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தற்காத்துக் கொள்வதற்கு ஏறக்குறைய வழி ஏதுமற்ற நிலையில் இருந்த தொழிலாளர்களின் மீது பெரும் ஆயுதங்கள் தரித்த போலிஸ் சரமாரியாக சுட்டுக் கொண்டே, உடல்களில் இருந்து கொட்டிய இரத்தத்தினால் வெளிச்சமூட்டப்பட்டிருந்த புழுதிக் களத்தில் காயமுற்றவர்களின் முனகல்களைக் கடந்து முன்னேறிச் சென்ற காட்சியானது தென்னாப்பிரிக்காவின் மனச்சாட்சியை உலுக்கி விட்டிருக்கிறது. நிறப் பிரிவினை ஆட்சியின் கீழ் 1960 இல் ஷார்ப்வில்லியிலும் 1976 இல் சோவெட்டோவிலும் நடந்த இதேபோன்ற மக்கள் படுகொலைச் சம்பவங்களில் நிகழ்ந்த படுபயங்கர ஒடுக்குமுறையை இது நினைவூட்டியது.

இந்த முறை படுகொலையானது சர்வதேசரீதியாய் வெறுப்பைச் சம்பாதித்திருந்த ஒரு வெள்ளை சிறுபான்மை ஆட்சியால் ஒழுங்கமைப்பட்டதல்ல, மாறாக அந்த ஆட்சிக்கு முன்னாளில் விரோதியும், நாட்டை 18 ஆண்டுகள் ஆட்சி செய்திருப்பதோடு தனது ஆட்சியை விடுதலைப் போராட்டத்தின் நனவு என்றும் சமத்துவத்தின் காவலன் என்றும் பிரகடனம் செய்கின்ற ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்(ANC)நடத்துகின்ற ஒரு அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் தான் இதில் மிகவும் அப்பட்டமான வித்தியாசம்.

உண்மையில், இனரீதியான நிறப் பிரிவினை என்பது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டிருக்கிறது என்கிற அதே சமயத்தில் பொருளாதார அசமத்துவம் என்பது வெள்ளை சிறுபான்மை ஆட்சியைக் காட்டிலும் மிகவும் மோசமடைந்திருக்கிறது. தென்னாபிரிக்காவின் ஆளும் உயரடுக்கிற்கும் (முன்னாள் ANC நிர்வாகிகள், தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அரசியல்தொடர்பு கொண்ட தொழிலதிபர்களில் இருக்கும் கருப்பு கோடீஸ்வரர்களும் இதில் அடக்கம்)தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் பரந்த மக்களுக்கும் இடையிலான பிளவினை எடுத்துப் பார்த்தால், நமீபியா என்கிற ஒரேயொரு நாட்டை விலக்கி விட்டு, உலகிலேயே வேறெந்த நாட்டை விடவும் தென்னாபிரிக்காவில் தான் இந்தப் பிளவு மிக விரிந்து காணப்படுகிறது.

Sowetan செய்தித்தாள் வெள்ளியன்றான முதற்பக்க தலையங்கத்தில் துல்லியமாக குறிப்பிட்டதைப் போல, இந்தப் படுகொலையானது, “டைம் பாம் ஓடுவது நின்று விட்டது, அது வெடித்து விட்டிருக்கிறது! என்கின்ற யதார்த்தத்திற்கு நம்மை தட்டியெழுப்ப சேவை செய்திருக்கிறது.

இந்த வெடிப்பு என்பது இறுதி ஆய்வில் முதலாளித்துவத்தின் உலக நெருக்கடியால் தூண்டப்பட்டிருப்பதாகும். இந்நெருக்கடியின் தாக்கம் தென்னாபிரிக்கப் பொருளாதாரத்தின் மீது, குறிப்பாக சுரங்கத் துறையின் மீது ஏற்படுத்தியிருக்கும் பாதிப்பு, மத்திய கிழக்கிலும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகமெங்கிலும் அது செய்ததைப் போலவே இந்நாட்டிலும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு எழுச்சிக்கு இட்டுச் சென்றுள்ளது.

குருதி கொட்டிய இந்தச் சம்பவங்களை சுரங்கத் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கும் (NUM)[300,000 பேரை உறுப்பினர்களாகக் கொண்ட இச்சங்கம் ANC உடன் அரசியல் கூட்டணி கொண்ட COSATU என்கிற(தென்னாப்பிரிக்க தொழிற்சங்கப் பேரவை)தொழிற்சங்கக் கூட்டமைப்பின் இருதயம் போன்று விளங்கி வருவதாகும்] சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(AMCU)என்கிற கூடுதல் போர்க்குணத்துடனான சுயாதீனமானதொரு சங்கத்திற்கும் இடையிலான ஆதிக்க சண்டையாகக் குறைத்துக் காட்டுவதற்கு அரசியல் ஆய்வாளர்கள் முனைந்து வந்திருக்கின்றனர்.

NUM நிர்வாகத்தின் ஊழலின் மீதும் அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொண்டதின் மீதும்(இதன் உயிர்வாழும் உதாரணம் NUM முன்னாள் தலைவரான சிரில் ரமாபோசா. தென்னாப்பிரிக்காவின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவராக ஆகியிருக்கும் இவருக்கு சொந்தமாகவே சுரங்கத் துறையில் கணிசமான பங்குகள் இருக்கின்றன என்பதோடு தற்போதைய படுகொலைச் சம்பவம் நடந்த சுரங்கத்திற்கு உரிமைபடைத்த இலண்டனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் லோன்மின் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இயக்குநர் குழுவிலும் இவர் இடம்பெற்றிருக்கிறார். அரசாங்கம் மற்றும் அது சேவை செய்கின்ற நாடுகடந்த சுரங்க நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு சுரங்கத் தொழிலாளர்களின் நலன்களை கீழ்ப்படியச் செய்வதற்கென அளித்த சேவையிலேயே அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கிட்டியிருந்தது)தொழிலாளர்கள் கொண்டிருக்கும் கோபம் பெருகியதன் காரணத்தாலேயே AMCUவின் வளர்ச்சி கிட்டியது

எப்படியிருப்பினும் புதுச் சங்கத்தாலேயே கூட வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களின் போர்க்குணத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் போனது என்பதை படுகொலை நடந்த இடத்தில் இருந்து வரும் தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.

ஒரு வாரத்திற்கு முன்னர் லோன்மின் பிளாட்டினச் சுரங்கத்தில் இருந்து வேலை வெளிநடப்புச் செய்த தொழிலாளர்களை இந்தப் பூகோளத்திலேயே மிகவும் அதிகமாகச் சுரண்டப்படும் பிரிவுகளுக்குள் கூற முடியும். தரைக்கடியில் வெகு ஆழத்தில் கற்பனைக்கும் எட்டாத கடினமான மற்றும் ஆபத்தான நிலைமைகளின் கீழ் வேலைசெய்யும் இந்தப் பாறைத் துளையிடும் தொழிலாளர்களுக்குக் கிட்டும் ஊதியம் மாதத்திற்கு சுமார் 500 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. இவர்களில் பலரும் மொசாம்பிக் மற்றும் சுவாசிலாந்து போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். இவர்கள் தங்களின் ஊதியத்தின் பெரும்பகுதியை தாய்நாட்டில் இருக்கும் தத்தமது குடும்பத் தேவைக்காய் அனுப்பி விட்டு மின்சாரமோ ஓடுநீரோ அற்ற பொந்துகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர்

லோன்மினின் மரிக்கானா சுரங்கத்தைப் பார்த்ததிசையில் இருக்கும் மலைப்பகுதியில் ஒன்றுதிரண்ட 3,000 சுரங்கத் தொழிலாளர்களும் போலிஸ் பந்தோபஸ்துக் காருக்குள் இருந்தபடி அவர்களிடம் பேச முயற்சித்த NUM தலைவரை முதலில் துரத்தியடித்தனர். அதன்பின், கூட்டத்தைக் கலைந்து செல்லச் செய்வதற்கு AMCU இன் தலைவர் விடுத்த வேண்டுகோளையும், செத்தாலும் நடப்பு நிலைமை மாறாமல் வேலைக்குத் திரும்ப மாட்டோம் என்று கூறி நிராகரித்தனர்.

இந்தத் தொழிலாளர்களை சுட்டு வீழ்த்தும் இலக்கோடு தான் போலிஸ் அனுப்பப்பட்டது. இந்த வேலையை D-Day மிஷன் என்று குறிப்பிட்ட போலிஸ் அதிகாரிகள்அதிகப்பட்ச படையை பயன்படுத்துவதற்கு சபதமெடுத்துக் கொண்டனர். ஸ்டார் என்கிற ஜோகன்னஸ்பேர்க் தினசரியின் செய்தியாளரான போலோகோ து வெள்ளியன்று எழுதியதைப் போல, “இது ஒரு ஆர்ப்பாட்டத்தைக் கொலைக் களமாக மாற்றிய நன்கு திட்டமிட்டதொரு தாக்குதலாகும்.”

கண்ணீர்ப் புகையையும், தண்ணீர் பீரங்கியையும் அத்துடன் திசைதெரியாமல் செய்யும் கையெறி குண்டுகளையும் கொண்டு கூட்டத்தைக் கலைத்த பின்னர், குதிரையின் மீதும் ஆயுதந்தரித்த கார்களிலும் சென்று சுரங்கத் தொழிலாளர்களை விரட்டினர். இத்தொழிலாளர்களின் ஒரு பகுதியினர் தானியங்கித் துப்பாக்கிகளையும் வெடி மருந்துகளையும் கொண்டு தயாராய் இருந்த போலிஸின் பக்கமாய் விரட்டப்பட்டனர். தொழிலாளர்களிடம் பெருகும் போர்க்குணத்தை அடக்குவதும் தளர்ந்து கொண்டிருக்கின்ற அரசாங்க ஆதரவு தொழிற்சங்கங்களின் பிடியைப் பாதுகாப்பதுமே இந்த குருதிபாய்ச்சலின் பின்னமைந்த நோக்கமாய் இருந்தது.

இந்த தொழிற்சங்கங்களின் தலைவர்கள், ANC இன் முக்கட்சிக் கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள இன்னொரு கட்சியான ஸ்ராலினிச தென்னாபிரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து கொண்டு, மிகவும் கீழ்த்தரமானதொரு பாத்திரத்தை ஆற்றியுள்ளனர். போலிசின் கொலைகாரர்களைப் பாதுகாத்திருக்கும் இவர்கள், வேலைநிறுத்தம் செய்கின்ற சுரங்கத் தொழிலாளர்களில்  “கிரிமினல்கள்என்று இவர்கள் குறிப்பிடுகின்ற தொழிலாளர்களை ஒடுக்குவதற்கும் அத்தொழிலாளர்களைஆட்டுவிக்கின்ற தலைவர்களைத் தண்டிப்பதற்கும் கோரினர்.

மரிக்கானா சுரங்கத்தில் கொட்டியிருக்கும் இரத்தம் தென்னாப்பிரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையைக் குறித்து நிற்கிறது. இது எந்த வகையிலும் ஒரு துண்டிக்கப்பட்டதொரு தனியான நிகழ்வு அல்ல, மாறாக இன்று 25 சதவீத உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதத்தையும் அத்துடன் வறுமைப்பட்ட நகரங்களில் நிறவெறிக் காலத்தில் நிலவிய துயரத்தில் அதிகம் மாற்றமில்லாத வாழ்நிலைமைகளையும் எதிர்கொண்டு நிற்கின்ற தென்னாபிரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வெடித்தெழுந்த போராட்டங்களின் ஒரு பகுதியே அதுவாகும்.

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் மீதான திட்டமிட்ட அரசப் படுகொலையை சர்வதேசத் தொழிலாள வர்க்கம் ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் தொழிலாளர்களது உரிமைகளின் மீதான தாக்குதல்களுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு பெருகுகின்ற நிலையில் அதன் பதிலிறுப்பாக அதிகமான அளவில் பயன்படுத்தப்பட இருக்கும் வழிமுறைகளையே இது சுட்டிக்காட்டுகிறது. பரந்த சமூக எதிர்ப்புக்கான அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் பதிலிறுப்பும் அதன் தென்னாபிரிக்க சகாவைப் போன்றதாகவே இருக்கும் என்பதில் அமெரிக்காவில் தொழிலாளர் போராட்ட வரலாறு குறித்த அறிவு படைத்த எவரொருவருக்கும் சந்தேகமிருக்க முடியாது.  

தென்னாபிரிக்க அபிவிருத்திகள் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் மிகத் திட்டவட்டமான உறுதிப்படுத்தலை வழங்கியிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட நாடுகளில், முதலாளித்துவத்துடன் பிணைக்கப்பட்டு தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்ற நிலையில் இருக்கும் முதலாளித்துவ தேசிய இயக்கங்கள், ஜனநாயகத்திற்கும் மற்றும் ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் இருந்தான விடுதலைக்குமான போராட்டத்தினை இறுதி வரை நடத்தி முடிக்கவும், அதே அளவுக்கு தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட பரந்த மக்களின் சமூக அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கும் உயிர்ப்புத் திறனற்றவையாக இருக்கின்றன என்று அத்தத்துவம் ஸ்தாபித்தது

இந்தக் கடமைகள், ஒடுக்கப்பட்ட அத்தனை சமூக அடுக்குகளையும் தனக்குப் பின்னால் அணிதிரட்டிக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் தோள்களில் விழுகிறது. இவை நடந்தேற வேண்டுமாயின், ANC யுடனும் மற்றும் அதன் தொழிற்சங்க எந்திரத்துடனும் தீர்மானகரமானதொரு அரசியல் முறிவும் அத்துடன் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கின் அடிப்படையில் ஒரு புதிய சுயாதீனமான தலைமையைக் கட்டியெழுப்புவதும் அவசியமாக உள்ளது. சுரங்கங்களையும் பொருளாதாரத்தின் பிற முக்கிய துறைகளையும் அரசுடைமையாக்குகின்ற, அத்துடன் செல்வத்தை தீவிரமாய் மறுவிநியோகம் செய்கின்ற ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடுவது, அதே வேளையில் புரட்சியை ஆபிரிக்கக் கண்டம் முழுமைக்கும் மற்றும் அதனைத் தாண்டியும் விரிவுபடுத்த முனைவது என்பதே இதன் அர்த்தமாகும். இந்த முன்னோக்கிற்கான போராட்டத்திற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தென்னாபிரிக்க பிரிவு ஒன்றினைக் கட்டியெழுப்புவது அவசியமாயிருக்கிறது.