World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

India: Maruti Suzuki fires workers en masse, reopens plant under police gauntlet

இந்தியா மாருதி சுசுகி பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்றுகிறது போலிஸின் இரும்புக்கரத்தின் கீழ் ஆலையை மீண்டும் திறக்கிறது

By Palash Roy and Arun Kumar
23 August 2012
Back to screen version

மாருதி சுசுகி கார் தயாரிப்பு நிறுவனத்தின் மானேசர் ஒன்றுசேர்ப்பு ஆலையில் நிலவும் மோசமான வேலை நிலைமைகளுக்கு தொழிலாளர்கள் காட்டும் அத்தனை எதிர்ப்பையும் அடித்து நொருக்குவதற்கு அந்நிறுவனமும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கமும் ஒரு தீவிரமான பிரச்சாரத்தை இணைந்து முன்னெடுக்கின்றன. இந்த ஆலையின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் பலரை அகற்றுவது, போலிஸையும் பாதுகாப்புக் காவலர்களையும் நூற்றுக்கணக்கில் நிறுத்துவது, அத்துடன் போர்க்குணம் பெற்ற தொழிலாளர்களில் அநேகம் பேரை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் தள்ளுவது ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கின்றன.

மானேசர் கார் ஒன்றுசேர்ப்பு ஆலையின் ஒரு மாத கால கதவடைப்பை MSI நன்கு திட்டமிட்டு செவ்வாயன்று முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால் ஒரு சில நூறு தொழிலாளர்கள் மட்டுமே ஆலைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த கதவடைப்பை அகற்றுவதற்கு முந்தைய நாட்களில், இந்தியாவின் இந்த மிகப் பெரும் கார்த் தயாரிப்பு நிறுவனம் 546 தொழிலாளர்களை தன்னிச்சையாக வேலையிலிருந்து நீக்கியது. இந்த எண்ணிக்கை நிறுவனத்தின் 1500 நிரந்தரத் தொழிலாளர் எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கிற்கும் அதிகமானதாகும். செப்டம்பர் 2 முதலாக ஏறக்குறைய 1900 ஒப்பந்தத் தொழிலாளர்களையுமே தான் ஆய்வுக்குட்படுத்தப் போவதாகவும் MSI மேலும் கூறியுள்ளது, அவர்களில் பெரும்பான்மையோரை அது வேலையிலிருந்து அகற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

நிறுவனத்தின் தூண்டுதலின் பேரில் அரசாங்கம் 134 தொழிலாளர்களை சிறையில் தள்ளியிருக்கிறது, அத்துடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கைதுக்கு அஞ்சி தங்களது சொந்தக் கிராமங்களுக்கு தப்பித்து ஓடியிருக்கின்றனர். சிறையிலடைக்கப்பட்டவர்களில் சென்ற ஆண்டில் நிறுவனத்தின் எடுபிடித் தொழிற்சங்கத்திற்கு எதிராக தொழிலாளர்களால் சுயாதீனமாக உருவாக்கப்பட்டதான மாருதி சுசுகி தொழிலாளர்கள் சங்கத்தின் (MSWU)ஒட்டுமொத்தத் தலைமையும் அடங்கும்.

MSI இன் மறுதிறப்பு தடங்கலின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு, காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கம் செவ்வாயன்று 1200 போலிசாரை நிறுத்தியது, ஆலையின் பிரதான வாயிலில் மட்டும் பல நூறு போலிசார் நிறுத்தப்பட்டனர். நிறுவனமும் தன் பங்கிற்கு 100 பேர் கொண்ட ஒரு புதிய பாதுகாப்புப் படையை உருவாக்கியிருக்கிறது. பிரபலமான தேசியப் பாதுகாப்புப் படையின் முன்னாள் கமாண்டோக்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அத்துடன் உள்ளூர் பாதுகாப்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றிலிருந்து ஆயுதமேந்திய காவலர்களும் கூட வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

மானேசர் ஆலையில் நடந்த தொழிலாளர் மோதல் முதலீட்டாளர்களை அச்சுறுத்தக் கூடும் என்பதான கவலையை அரசாங்க மற்றும் வர்த்தகத் தலைவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அரசும் நிறுவனமும் ஒன்றுசேர்ந்து மிகவும் போர்க்குணம் பெற்ற தொழிலாளர்களை வேட்டையாடுவதும் MSI இன் பாதுகாப்பிற்கென பெருந்திரளாய் போலிஸ் நிறுத்தப்பட்டுள்ளதும், ஒரேசமயத்தில் தொழிலாள வர்க்கத்திற்கும் - இந்த ஆலை இந்தியாவின் மிகப்பெரும் தொழிற்துறைப் பகுதியில் அமைந்திருக்கிறது - அத்துடன் முதலீட்டாளர்களுக்கும் ஒரு செய்தியைச் சொல்லும் நோக்கம் கொண்டதாகும். இந்தியாவின் தேசிய அரசாங்கத்திற்கு தலைமை கொடுக்கின்ற காங்கிரஸ் கட்சியும், இந்திய அரசு எந்திரமும் வேலையிடங்களின் வியர்வைக்கூட நிலைமைகளை பலவந்தமாக உறுதி செய்ய தீர்மானத்துடன் இருக்கின்றன என்பதோடு தொழிலாளர்களது எதிர்ப்பைக் களைந்தெறிவதில் அவை முதலாளிகளின் அமலாக்கப் பிரிவாகச் செயல்படும் என்பதுமே அந்தச் செய்தியாகும்.

ஜூலை 18 அன்று தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான ஒரு ஆவேசமான கைகலப்பு தீவைப்பில் முடிந்து, ஒரு முதுநிலை மேலாளர் உயிரிழப்பிலும் மற்றும் ஏராளமான தொழிலாளர்களுக்குக் காயத்திலும் முடிந்த அந்தச் சம்பவத்தையே மானேசர் MSI தொழிலாளர்களுக்கு எதிரான தமது தாக்குதலுக்கான சாக்காக நிறுவனமும் அரசாங்கமும் காட்டி வருகின்றன.

தொழிற்சங்க தலைவர்களே இந்த கைகலப்பை திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டும் நிறுவனம் அவர்கள் மீது தீவிரமான கிரிமினல் குற்றச்சாட்டுகளைப் பதிவதற்கு முனைந்து வருகிறது. அத்துடன், ஜூலை 18 சம்பவத்தில் சம்பந்தப்பட்டதாக அது கூறும் எந்த ஒரு தொழிலாளியையும் நிறுவனத்தில் இருந்து அகற்றுவதற்கும் அது உறுதி பூண்டிருக்கிறது.

உண்மையில், உலக சோசலிச வலைத் தளம் முன்னதாக தெரிவித்திருந்ததைப் போல, ஜூலை 18 கைகலப்பு என்பது நிர்வாகத்தின் திட்டமிட்ட சீண்டல் நடவடிக்கையாகும். ஒரு தொழிலாளி தன்னை ஒரு சூபர்வைசர் சாதியைக் குறிப்பிட்டு முறையற்று திட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அத்தொழிலாளியை நிறுவன அதிகாரிகள் பணியிடைநீக்கம் செய்தனர். இந்த சஸ்பென்சன் நடவடிக்கையில் கோபமடைந்த தொழிலாளர்கள் எதிர்ப்பினைத் தொடங்கினர், பதிலாக அந்த சூபர்வைசர் மீது தான் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர்கள் கோரினர். இந்தப் பிரச்சினை குறித்து MSWU தலைவர்கள் நிர்வாகத்தின் பிரதிநிதிகளுடன் விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், நூற்றுக்கணக்கிலான நிறுவன-ஏற்பாட்டிலான அடியாட்கள் கையில் ஆயுதங்களுடன் தொழிலாளர்களை மிருகத்தனமான தாக்கி, ஒரு பெரும் மோதலுக்குச் சீண்டினர். (காணவும்: இந்தியா: மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையைத் தொடக்குகிறது

மாருதி சுசுகி நிறுவனம் அதன் தொழிலாளர்களை வேலையிலிருந்து அகற்றுவதை ஆணவத்துடன் நியாயப்படுத்திய அதன் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறினார்: எங்களுக்கு அவர்கள் மேல் நம்பிக்கை போய் விட்டது. மறுபடியும் இன்னும் நிறைய பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் (வேலைநீக்க) அறிவிக்கை அனுப்பப்படும் சாத்தியமும் உள்ளது.

நிறுவனம் அது ஆண்டாண்டு காலமாய் ஒப்பந்தத் தொழிலாளர்களை பயன்படுத்தும் முறையை - அதாவது அங்கீகாரமற்ற நிரந்தர உற்பத்தித் தொழிலாளர்களாக இருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவே ஊதியம் கிட்டும் - கைவிட முடிவு செய்திருந்ததாக ஊடகச் செய்திகள் கூறின. இனிமேல் MSI தனது தொழிலாளர் படையின் ஐந்தில் ஒரு பகுதியை குறுகிய கால ஒப்பந்தப் பணிகளில் ஆனால் மையமாயில்லாத வேலைகளுக்கு மட்டும் பணியிலமர்த்தும்.

இடைப்பட்ட காலத்தில் அது நடப்பு நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களில் இருந்தும் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களிலும் சிறப்பாக சோதிக்கப்பட்டவர்களில் இருந்தும் மிகவும் கீழ்ப்படிகின்ற தன்மை கொண்ட தொழிலாளர்களைக் கொண்ட ஒரு புதிய நிரந்தரத் தொழிலாளர் படையை உருவாக்கும். இப்போதிருக்கும் 1,869 ஒப்பந்தத் தொழிலாளர்களில் 1,200க்கும் அதிகமான பேருக்கு வேலையளிப்பு நிறுத்தப்பட எதிர்பார்ப்பதாய் MSI அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

546 நிரந்தரத் தொழிலாளர்களை தன்னிச்சையாக நீக்கிய செயலுக்கு ஒரு சட்டப்பூர்வ போர்வையை அளிப்பதற்கான ஒரு முயற்சியில், நிறுவனம் இந்தத் தொழிலாளர்கள் ஒவ்வொருவரது வங்கிக் கணக்கிலும் 50,000 ரூபாய் முதல் 70,000 ரூபாய் வரை (சுமார் 900 அமெரிக்க டாலர்கள் முதல் 1,275 அமெரிக்க டாலர்கள் வரை)வைப்பு செய்திருக்கிறது. தொழிலாளர்களின் ஜூலை மாத சம்பளம், அத்துடன் மூன்று மாத கால ஊதியம், அத்துடன் பணிக்காலத்தின் ஒவ்வொரு ஆண்டுக்கும் 15 நாட்களுக்கான சம்பளம் ஆகியவற்றின் மொத்தத் தொகை இது என MSI கூறுகிறது. இத்தனை தொகையும் சேர்த்தே சுமார் $1000 அளவுக்குத் தான் வருகிறது என்பது MSI யிலும் மற்றும் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் வாகனத் துறையிலும் நிலவுகின்ற வியர்வைக்கூட நிலைமைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

MSI அதன் தொழிலாளர் படையை தன்னிச்சையாக வெளியேற்றச் செய்யும் முயற்சிக்கு ஒட்டுமொத்த மானேசர்-குர்கான் தொழிற்துறைப் பகுதியிலும் தொழிலாளர்கள் இடையே எதிர்ப்பு பெருகிக் கொண்டிருக்கிறது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட மானேசர் தொழிலாளர்களை மீண்டும் வேலையில் சேர்க்கக் கோரி, ஆகஸ்டு 17 அன்று, ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இண்டியா, சோனா ஸ்டியரிங், சத்யம் ஆட்டோ, முஞ்சால் ஷோவா, ரிகோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனங்களில் இருந்தான சுமார் 7,000 தொழிலாளர்கள் குர்கானில் ஒரு அரசாங்க அலுவலகத்திற்கு வெளியே பேரணி நடத்தினர்

முக்கியமாய், சுயாதீனமான MSWU விற்கு எதிராக 18 மாத காலமாய் யுத்தம் செய்து வருகின்ற MSI இப்போது, தான் ஒரு ஸ்தாபகமான தொழிற்சங்கக் கூட்டமைப்பிடம், அதாவது இந்தியாவின் அரசியல் கட்சிகளில் ஒன்றுடன் இணைந்த ஒரு அதிகாரத்துவ எந்திரத்திடம், மானேசர் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு கேட்கலாம் என்பதாய் யோசனை தெரிவித்துள்ளது.

MSI இன் தலைமை செயல்பாட்டு அதிகாரி(நிர்வாகம்)எஸ்.ஒய்.சித்திக் அறிவித்தார்: ஜூலை 18 சம்பவத்தின் வெளிச்சத்தில், ஒரு வளர்ச்சி-நோக்கிலான வர்த்தக-ஆதரவு வெளிப்புற சங்கம் நிறுவனத் தொழிலாளர்களுக்கு உதவிகரமாக இருக்குமா என்றும் நாங்கள் ஆராயலாம். இது எங்களுக்கு சுயபரிசோதனைக்கு அவசியமான ஒன்றாக இருக்கும். முதிர்ச்சி வாய்ந்த சரியாக சிந்திக்கக் கூடிய ஒரு தொழிற்சங்கம் வளர்ச்சி நோக்கிலமையும். அத்தகையோர் வன்முறையில் ஈடுபட்டிருக்க முடியும் என நான் கருதவில்லை.

அனைத்திந்திய தொழிற்சங்கப் பேரவை(AITUC)மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின் மையம்(CITU)ஆகிய ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளுடன் இணைந்த சங்கங்கள் உள்பட உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்கள் எல்லாம் எவ்வாறு மானேசர் தொழிலாளர்களைத் திட்டமிட்டு தனிமைப்படுத்தியிருக்கின்றன என்பதையும் தொழிலாளர்களை எவ்வாறு போராட்டங்களை விலைபேசிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ள நெருக்குதலளித்திருக்கின்றன என்பதையும் MSI தெளிவாய்க் குறித்துக் கொண்டிருக்கிறது. வேலையிழந்த MSI தொழிலாளர்கள் தங்களின் சார்பாகத் தலையீடு செய்வதற்கு, நிறுவனத்துடன் எந்த அரசாங்கம் கைகோர்த்து வேலை செய்து கொண்டிருக்கிறதோ அதே காங்கிரஸ் கட்சி தலைமையிலான மாநில அரசாங்கத்திற்கு, அழுத்தமளிப்பதற்கு தங்கள் சக்தியைச் செலவிட வேண்டும் என்று தான் இப்போதும் கூட AITUC வும் CITU வும் ஆலோசனையளித்துக் கொண்டிருக்கின்றன.