World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

US SEP presidential candidate begins international tour

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சர்வதேச சுற்றுப்பயணத்தை தொடங்கினார்

By our correspondents
25 August 2012

Back to screen version

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட், நேற்று இலங்கை வந்து, தனது சர்வதேச சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.

பொதுச் செயலாளர் விஜே டயஸ் தலைமையிலான சோ... அரசியல் குழு பிரதிநிதிகள், கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் வைட்டை உற்சாகமாக வரவேற்றனர். அரசியல் குழு உறுப்பினர்கள் சோசலிச வேட்பாளரை வரவேற்கும் ஒரு பதாகையை ஏந்தி இருந்ததோடு, டயஸ் வைட்டுக்கு மலர் செண்டு வழங்கி வரவேற்றார்.

வைட் முறையே ஆகஸ்ட் 26, 28 மற்றும் 30ம் திகதிகளில் கொழும்பு, கேகாலை மற்றும் காலியில் சோசலிச சமத்துவ கட்சி ஏற்பாடு செய்துள்ள மூன்று பொதுக் கூட்டங்களில் உரையாற்ற உள்ளார். சோ.ச.க. வைட்டின் இலங்கை விஜயத்தை அறிவிக்க ஆகஸ்ட் 22 அன்று கொழும்பில் உள்ள நிப்பொன் ஹோட்டலின் மாநாட்டு மண்டபத்தில் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தியது.

உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் ஒரு உயர்ந்த போராட்ட வரலாற்றை கொண்டுள்ள இலங்கைக்கு விஜயம் செய்திருப்பது தனக்கு கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளதாக வைட் தெரிவித்தார். தெற்காசியாவில் நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற இனவாத அரசியலுக்கு எதிராக சர்வதேச சோசலிசத்துக்கான எங்கள் கட்சியின் போராட்டம், உலகம் முழுவதும் உள்ள மிக முன்னேறிய தொழிலாளர்களுக்கு ஒரு உத்வேகமாக இருப்பதோடு, அவர்களுக்கு முக்கியமான அரசியல் படிப்பினைகளையும் வழங்குகிறது."

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் மேலும் கூறியதாவது: "நான் கொழும்பிலும், தேயிலை மற்றும் இறப்பர் தோட்ட பகுதியான கேகாலையிலும் மற்றும் தெற்கு துறைமுக நகரான காலியிலும் எமது கூட்டங்களை மகிழ்ச்சியோடு எதிர்பார்ப்பதோடு, ஆசியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள தொழிலாளர்களின் பொதுவான பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றி தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் கலந்துரையாடவும் எதிர்பார்க்கின்றேன்."

இங்கிலாந்து மற்றும் ஜேர்மனி ஊடாக தொடரும் தனது பயணம், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்து திசை திரும்புவது அல்ல, மாறாக அது அதன் சாரத்தை வெளிப்படுத்துகிறது," என வைட் விளக்கினார்.

"அமெரிக்கத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் இரு பெரு வணிக கட்சிகள் மூலம் முன்னிலைப்படுத்தப்படும் தேசியவாதத்தை நிராகரித்து, தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கும் சோசலிசத்துக்காகவும் போராடுவதன் மூலம் மட்டுமே தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியும் என சோ.ச.க. ஆரம்பத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது. 2008ல் அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, ஐரோப்பாவுக்கும் பரவி, இப்போது சீனா, பிரேசில், இந்தியா மற்றும் இலங்கை போன்ற ஏற்றுமதி சார்ந்த நாடுகளையும் பாதித்துள்ளது.

"ஒவ்வொரு நாட்டிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிரந்தர வறுமையையும் கோருகின்றன. அதே நேரத்தில், ஜனாதிபதி ஒபாமா, மிட் ரொம்னி ஆகிய இருவரில் யார் வெற்றிபெற்றாலும், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பொருளாதார சரிவை ஈடுசெய்ய சிரியா மற்றும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட புதிய போர்களுக்குத் தயாராகும். இந்திய பெருங்கடலில் உள்ள இந்த தீவும் அதன் 21 மில்லியன் மக்களும் ஏற்கனவே சீனாவை சுற்றிவளைக்கவும் ஆசிய-பசிபிக்கில் அமெரிக்க மேலாதிக்கத்துக்காகவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் சிக்கவைக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் இரத்தக்களரி மிக்க போர்களை தடுக்கக் கூடிய ஒரே வழி, இந்த வங்குரோத்தான முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பகுத்தறிவு மிக்க, சமத்துவத் திட்டத்தின் அடிப்படையில் உலகப் பொருளாதாரத்தை மறு ஒழுங்கு செய்வதே."

வைட்டின் விஜயம் பற்றி இலங்கை ஊடங்களில் பல செய்திகள் வெளியாகியிருந்தன.

வியாழக்கிழமை, சிங்கள தினசரியான லக்பிம வைட்டின் வருகை பற்றி அறிவித்த சோ.ச.க. செய்தியாளர் மாநாட்டைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தது. "அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சோசலிச வேட்பாளர் திரு. ஜெர்ரி வைட், ஆகஸ்ட் 24 அன்று இலங்கை வருவார் என சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு. விஜே டயஸ் ஆகஸ்ட் 22 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்," என தடித்த எழுத்தில் வெளியான அந்த கட்டுரை தெரிவித்தது.

சோ.ச.க. நடத்தவுள்ள பொது கூட்டங்கள் பற்றிய விவரங்களை அளித்து அந்த கட்டுரை, "அவரது வருகையின் நோக்கம், உலகின் முக்கிய ஆக்கிரமிப்பாளனான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களை விளக்குவதும் மற்றும் அதற்கு எதிராக இலங்கை தொழிலாள வர்க்கத்தையும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்டுவதாகும், என கூறியது.

தமிழ் மொழி வெளியீடான தினக்குரல், அதன் ஆகஸ்ட் 23 பதிப்பில், சோ.ச.க. செய்தியாளர் மாநாட்டைப் பற்றி முன் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு தமிழ் வானொலி சேவையான சூரியன் எஃப்.எம்., வியாழக்கிழமை காலை அதன் செய்தி அறிக்கையில் வைட்டின் வருகையைப் பற்றி குறிப்பிட்டது.

சோ... உறுப்பினர்களும் ஆதரவாளர்களும், அதன் மாணவர் மற்றும் இளைஞர் பிரிவான சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பின் ஆதரவாளர்களும், பொது கூட்டங்களுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்கின்றனர். கொழும்பு, கேகாலை மற்றும் காலியில் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் பிரச்சாரம் அணிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் குடும்ப பெண்களுடனும் கலந்துரையாடுவதோடு, வைட்டின் விஜயத்தின் அரசியல் முக்கியத்துவம் பற்றி சிங்களம் மற்றும் தமிழிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கின்றன