World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Michigan’s right-to-work law

மிச்சிகனில் வேலை செய்யும் உரிமைக்கான சட்டம்       

Jerry White
13 December 2012

Back to screen version

மிச்சிகனின் குடியரசுக் கட்சி ஆளுனர் ரிக் ஸ்னைடர் செவ்வாயன்று “வேலை செய்யும் உரிமை” சட்ட வரைவு என்றுஅழைக்கப்படுவதில் கையெழுத்திட்டார். இது அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தை இந்த நடவடிக்கையை ஏற்கும் 24 வது மாநிலமாக ஆக்கியுள்ளது. இச்சட்டம் அனைத்துத் தொழிலாளர்களும் வேலைக்கு சேர்க்கப்படுவதற்கு முன்னிபந்தனையாக தொழிற்சங்க அங்கத்துவ சந்தாவை செலுத்துவதற்கு கையெழுத்திடும் தொழிலாளர் ஒப்பந்தங்கள் அனைத்தையும் தடை செய்கிறது. வலதுசாரிச் சக்திகளால் முன்னெடுக்கப்படும் இதன் முக்கிய நோக்கம் முதலாளிகளுடைய நலன்களுக்கு எதிராக தொழிலாளர்கள் கூட்டாகத் தங்கள் நலன்களை பாதுகாப்பதற்குப் போராடும் திறனை இல்லாதொழிப்பதாகும்.

ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கமும் (United Auto Workers -UAW) இன்னும் பிற தொழிற்சங்கங்கள் எத்தகைய தீவிர எதிர்ப்பையும் சட்டத்திற்கு காட்டாமல் இருப்பது இந்த அமைப்புக்களின் திவால்தன்மையைத்தான் நிரூபிக்கிறது. நீண்ட காலம் முன்னரே அவை தங்கள் அடிமட்ட அங்கத்தவர்கள் மற்றும் முழுத் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காகப் போராடுவதை நிறுத்திவிட்டன.

ஐக்கிய வாகன தொழிலாளர்கள் சங்கம் (UAW), மிச்சிகனின் AFL-CIO, மிச்சிகனின் கல்விச் சங்கம் இன்னும் பிற தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணிதிரட்டும் திறன் அற்றவை. கடந்த மூன்று தசாப்தங்களாக அவை தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்குதல், காட்டிக் கொடுத்தல் ஆகியவற்றிற்கு உழைத்ததுடன், ஒன்றன்பின் ஒன்றாக ஊதிய, நலக் குறைப்புக்களையும் மற்றும் பெருநிறுவனத்தின் கோரிக்கைகளையும் சுமத்துகின்றன. முந்தைய தொழில்துறை மையங்களான டெட்ரோயிட் போன்றவற்றைப் பேரழிவிற்கு உட்படுத்தும் ஆலைகள் மூடப்படல், ஏராளமான பணிநீக்கங்கள், வறிய நிலைமைக்கு தள்ளுவது போன்றவற்றிற்கு அவை ஒத்துழைத்துள்ளன. UAW ஆறு ஆண்டு வேலைநிறுத்தத் தடை ஒன்றிற்கு ஒப்புக்கொண்டுள்ளது; அது ஒபாமாவின் 2009ம் ஆண்டு வாகனத்துறை பணிப் பிரிவினால் ஆணையிடப்பட்ட ஊதியக் குறைப்புக்களில் ஒரு பகுதியாகும். முன்பு UAW இல் 1 மில்லியன் உறுப்பினர்கள் இருந்தனர். 2004 ம் ஆண்டு போன்ற சமீபக்காலத்தில்கூட அதன் உறுப்பினர் பட்டியலில் 650,000 எண்ணிக்கை இருந்தது. இன்று அதன் உறுப்பினர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 380,000 தான்.

தொழிலாளர்கள் இந்த ஜனநாயக விரோத, ஏராளமான ஆறு இலக்க ஊதியம் கொண்ட அதிகாரிகள் உள்ள இழிந்த அமைப்புக்களை மற்றும் கூட்டு தொழிற்சங்க-நிர்வாக ஒதுக்கீட்டு நிதிகளைக் கொண்டுள்ளவற்றை போராடுவதற்கான அமைப்புகளாக காண்பதில்லை. அவர்கள் அவற்றை தகுதியான இழிவான நிலையில்தான் நிறுத்தியுள்ளனர்.

UAW வையும் மற்ற தொழிற்சங்களையும் நடத்தும் நிர்வாகிகள், வேலை உரிமைச் சட்டத்தை எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய அமைப்புகளை பராமரிக்கும் சந்தா பண வரவை அது நிறுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதால்தான். தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி அவர்கள் அதிகம் கவலைப்படாததுடன், சட்டமன்றத்தில் சட்டவரைவைக் கொண்டுவந்தவர்கள் வர்க்கப் போராட்டத்திற்கு காட்டும் விரோதத்திற்கு சற்றும் குறையாத விரோதப்போக்கையே காட்டுகின்றனர்.

தொழிற்சங்க உறுப்பினர்களின் சந்தா பணங்கள் எங்கு செல்லுகின்றன? ஜனநாயகக் கட்சிக்கு நிதியளிப்பதற்கும், அதிகாரத்துவத்தின் சொந்த வசதியான வாழ்க்கை முறைக்கும்தான். இதற்கிடையில் UAW ஆலைகளில் உள்ள இளம் தொழிலாளர்கள் வறுமைத்தர ஊதியங்களான மணிக்கு 15 டாலர் என்பதற்கு உழைக்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுனர். முதுகை முறிக்கும் வேலைப்பளுவுடன் மேலதிகநேர வேலைக்கான ஊதியம் இல்லாமல் 10 அல்லது 12 மணி நேர வேலைகள் செய்கின்றனர். இதைத்தவிர “தங்கள்” தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முதலாளிகள் சார்பாக தொழிற்சாலைகளில்  வேலையையும் கண்காணிக்கின்றனர்.

பணியிடங்களில் தற்போதைய உடன்பாடுகள் காலவதியான பின்னர் ஏப்ரல் மாதம் வரை புதிய சட்டம் நடைமுறைக்கு வராது என்ற நிலையில் Solidarity House ல் மற்றும் மாநிலத்தின் தொழிற்சங்கத் தலைமையகங்களிலும் இருக்கும் UAW அதிகாரத்துவத்தினர் அதிக நேரம் உழைத்து அடுத்த சில ஆண்டுகளுக்கு தங்கள் அங்கத்துவ நிதியைப் பெற்றுவிடும் புதிய விட்டுக்கொடுப்புகளை கொண்ட ஒப்பந்தங்களை செய்ய முயல்வர்.

UAW, வேலைசெய்யும் உரிமைக்கான சட்டம் இயற்றப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஜனாதிபதி ஒபாமாவிற்கு ஒரு டெட்ரோயிட் ஆலையில் விருந்தளித்து Medicare, Medicaid மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றைக் குறைக்கும் அவருடைய திட்டங்களை கைதட்டி மகிழ்ந்தனர். தன்னுடைய உரையில் ஒபாமா வேலைசெய்யும் உரிமையை UAW தன் பயன்பாட்டை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, மற்ற வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடனும் ஒத்துழைத்து ஊதியங்களையும் நலன்களையும் குறைக்க உதவியுள்ளது, அமெரிக்க கார்த்தயாரிப்பு நிறுவனங்கள் மீண்டும் இலாபத்தில் நடக்க உதவியுள்ளது என்றார்.

தொழிற்சங்கங்களின் சரிவு என்பது அவை அடித்தளமாக கொண்டுள்ள பிற்போக்குத்தன அரசியல் முன்னோக்கின் விளைவுதான். UAW 1930களின் பரந்த போராட்டங்களில் இருந்து எழுச்சியுற்றது. அது பழைய அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு (American Federation of Labor) போன்றவற்றிற்கு எதிரான எழுச்சியில் தொடங்கியது.

புதிய தொழில்துறைத் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கு, தொழிலாளர்கள் முழு நகரங்களையும் முடக்கிவிட்ட பல உள்ளிருப்புப் போராட்டங்களையும் பொது வேலைநிறுத்தங்களையும் நடத்த வேண்டியதாயிற்று. நிறுவனத்தின் குண்டர்கள், பொலிஸ், தேசியப்பாதுகாப்புப் படை ஆகியவற்றுடன் போராடினர்—ஆயிரக்கணக்கானவர்கள் இதில் தமது வாழ்வையே அர்ப்பணித்தனர்.

இந்த இயக்கத்தின் பெரும் துன்பியல் அது வலதுசாரி, முதலாளித்துவ சார்பு அதிகாரத்துவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததுதான். ஆரம்பக் கட்டங்களில் இருந்தே அதிகாரத்துவம், புதிதாக அமைந்த தொழிற்சங்கங்களை பெருநிறுவனங்கள், ஜனநாயகக் கட்சி, மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆகியவற்றிற்குத் அடிபணிய உழைத்தது.  1940களில் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களுக்குத் தலைமை தாங்கிய சோசலிஸ்ட்டுக்களும் இடதுசாரிப் போராளிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் நடத்திய கம்யூனிச எதிர்ப்பு சூனிய வேட்டையால் UAW ல் இருந்து அகற்றப்பட்டனர்.

இந்த அமைப்புக்கள் தங்கள் வீழ்ச்சியை ஆரம்பிக்க அதிககாலம் பிடிக்கவில்லை. இது 1950கள், 1960களில் அமெரிக்கப் போருக்குப் பிந்தைய பொருளாதார ஆதிக்கத்தின் முடிவில் முதல் அடையாளங்களைக் காட்டியது. 1970கள், 1980களில் அதிகரித்த உலகளாவிய ஒருங்கிணைந்த உற்பத்திமுறை மற்றும் நிதியமுறை வெளிப்பட்டமை அவை அடித்தளம் கொண்டிருந்த தேசிய முன்னோக்கிற்கு குழிபறித்தன.

உலகப் பொருளாதாரத்தை பெரும் நிறுவனங்கள் மேலாதிக்கம் கொண்டதற்கு எவ்வித பதிலையும் தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கவில்லை. இது முதலாளித்துவத்தினரை உலகத் தொழிலாளர் சந்தையை சுரண்டவும், உற்பத்தியை குறைவூதிய நாடுகளுக்கு மாற்றவும் வகை செய்தது. அவர்களுடைய ஒரே விடையிறுப்பு நிறுவனங்களின் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கு பணிநீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் மற்றும் விரைவான பணி ஆகியவற்றைச் செயல்படுத்த தொழிலாளர்களுக்கு அழுத்தத்தைக் கொடுப்பதாக இருந்தது.

வ்வகையான சுயாதீனமான போராட்ட வகையையும் தொழிற்சங்கங்கள் நிராகரித்து, பெருநிறுவனக் கொள்கையான தொழிற்சங்க-நிர்வாக “பங்காளித்துவத்தை” ஏற்றன. இது பொருளாதாரத் தேசியவாதத்தை வளர்க்கும் வகையில் அமெரிக்க தொழிலாளர்களை உலகெங்கிலும் இருக்கும் தங்கள் வர்க்க சகோதரர்களுக்கு எதிராக ஊக்குவிக்கும் முயற்சியுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டது. இந்த வழிவகையின் விளைவு தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை சுரண்டும் அமைப்புக்களாக மாறியதுதான். தொழிலாளர்கள் வியர்வையில் இருந்து வரும் இலாபங்களில் ஒரு பகுதியை நாடும் வணிக அமைப்புக்கள் போல் அவை செயல்பட்டன. இன்று UAW  மூன்று பெரிய கார்த்தயாரிப்பு நிறுவனங்களிலும் முக்கிய பங்குகளைக் கொண்டுள்ளது. அதன் வருமானம் தொழிலாளர்கள் இழப்பில் இலாபங்களை அதிகரிப்பதிலும் நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரிப்பிலும் இருந்துதான் கிடைக்கின்றது.

இவற்றில் இருந்து என்ன முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்?

சர்வதேச சோசலி அமைப்பு போன்ற தொழிற்சங்கத்தின் போலி இடது நட்பு அமைப்புக்கள் பல முன்வைப்பதுபோல் இந்த ஊழல் வாய்ந்த, பிற்போக்குத்தன அமைப்புக்களுக்கு புத்துயிர் கொடுப்பதன் மூலம் இதைச் செய்ய முடியாது.

UAW மற்றும் பிற தொழிற்சங்கங்களில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக அமைக்கப்படும் அடிமட்ட போராட்ட நடவடிக்கை குழுக்கள், முற்றிலும் புதிய முன்னோக்கு கொண்ட புதிய அமைப்புக்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அதன் வழிகாட்டும் கொள்கைகள் வேலைகள், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பணிநிலைமைகள் என்று அனைத்து தொழிலாளர்களுடையதையும் நிபந்தனையற்று பாதுகாப்பதாக இருக்க வேண்டும். பெருநிறுவன முதலாளிகளும் அவற்றின் அரசியல் பிரதிநிதிகளும் தங்களால் கட்டுபடியாகும் என்பதை ஏற்பது அல்ல.

இத்தகைய குழுக்கள் தொழிற்துறை ரீதியாகவும் மற்றும் அரசியல் ரீதியாகவும் முழுத் தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்ட போராடவேண்டும். அவை “அமெரிக்கப் பொருட்களை வாங்குக” என்னும் தொழிற்சங்கங்களின் தேசியவாதத்தை நிராகரிக்க வேண்டும், உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் உலக நிறுவனங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஒருங்கிணைக்க வேண்டும். இன்னும் அடிப்படையாக தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசில் முன்னோக்கும், புதிய அரசியல் கட்சியும் தேவையாகும். தொழிலாளர்கள், இந்த அல்லது அந்த பேராசை கொண்ட முதலாளிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை மாறாக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் ஆளும் உயரடுக்கின் தேவைகளை திருப்தி செய்யும் ஒரு முழுப் பொருளாதார அமைப்புமுறையை எதிர்கொள்கின்றனர் —அதாவது இலாப நோக்கு அமைப்பு முறையை- அது ஆளும் உயரடுக்கின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சமூக துன்பங்கள், வறுமை, போர் மற்றும் சுரண்டல் மிக கொடூரமான வடிவங்களில் பரவ வேண்டும் என எதிர்பார்க்கிறது.

பிரச்சினை நல்ல விதிமுறைகள் மூலம் சுரண்டலை நடத்துவதற்காக போராடுவதல்ல மாறாக சுரண்டலை அடித்தளமாக கொண்ட அமைப்பு முறைக்கே முற்றுப்புள்ளி வைப்பதுதான். பெருவணிகத்தின் இரு கட்சிகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கம் தனியார் செல்வத்தை குவிப்பதற்காக இல்லாமல், பொருளாதார வாழ்வை சோசலிச மறுச்சீரமைப்பிற்கு, மனிதத்தேவை என்ற அடிப்படையில் போராட தன் சொந்த வெகுஜனக் கட்சியை கட்டமைக்க வேண்டும். நாம் தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையாக சோசலிச சமத்துவ கட்சியை கட்டமைக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.