World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : நினைவகம்

The enduring significance of the life and work of Comrade Keerthi Balasuriya

தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்

The International Committee of the Fourth International       
18 December 2012

Back to screen version

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு...) பொதுச் செயலாளர், தோழர் கீர்த்தி பாலசூரியவின் 25வது நினைவுதினத்தை நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவும் உலக சோசலிச வலை தளமும் இன்று நினைவு கூறுகின்றன.

தோழர் கீர்த்தி இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ட்ரொட்ஸ்கிசத்தின் மிகச் சிறந்த பிரதிநிதிகளில் ஒருவராவார். டிசம்பர் 18, 1987 காலையில் அவரது திடீர் மரணம் மிகவும் துன்பகரமானதாகும். அவர் மாரடைப்புக்கு உள்ளாகும் போது தனது 39வது வயதை அடைந்து சில நாட்களே ஆகியிருந்தன.

கீர்த்தி பாலசூரிய, இலங்கையில் மிகச்சிறந்த ட்ரொட்ஸ்கிச பாரம்பரியத்தில் இருந்து தோன்றியவராவார். அவர், மைக்கல் பப்லோ மற்றும் ஏர்னஸ்ட் மண்டேலின் சர்வதேச செயலகத்தின் இலங்கை அங்கமாக இருந்த லங்கா சமசமாஜக் கட்சி (...க-LSSP) 1964ல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையிலான முதலாளித்துவக் கூட்டரசாங்கத்தில் நுழைந்ததை எதிர்த்தவர்களுடன் தனது மிக இளம்வயதிலேயே இணைந்துகொண்டார்.

தோழர் கீர்த்தியின் வாழ்க்கையிலான திருப்புமுனை, இலங்கையில் பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிஸ்டுகளின் தலையீட்டிலிருந்தே தோன்றியது. அதன்பெறுபேறாக, ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என உரிமைகோரிய ஒரு கட்சி முதல் முறையாக முதலாளித்துவ அரசாங்கத்தில் சேர்ந்து .... செய்த காட்டிக் கொடுப்பில் உள்ளடங்கியிருந்த பிரச்சினைகள், .... முந்தைய தசாப்தத்தில் தொழிற்சங்கவாதம், பாராளுமன்றவாதம் மற்றும் சிங்கள ஜனரஞ்சகவாதத்துக்கும் அடிபணிந்ததற்கும் அப்பால் சென்றதாகும் என்பதை அவர் அடையாளங்கண்டு கொண்டார். "1964 மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு" பப்லோ மற்றும் மண்டேலின் உதவியும் ஆதரவும் கிடைத்திருந்தன.

போருக்குப் பிந்தைய முதலாளித்துவம் மறுஸ்திரப்படுத்தப்பட்ட நிலைமைகளின் கீழ், ட்ரொட்ஸ்கிஸத்தை எதிர்ப்புரட்சிகர ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவத்தினதும், காலனித்துவ நாடுகளில் தேசிய முதலாளித்துவத்தினதும் ஒரு பிற்சேர்க்கையாக மாற்ற முயற்சித்த, ஒரு ஆபத்தான சந்தர்ப்பவாத போக்கு நான்காம் அகிலத்தினுள் வளர்ச்சிகண்டதன் விளைவே இந்தக் காட்டிக்கொடுப்பாகும். ....யின் காட்டிக்கொடுப்புக்கு பதிலளிக்கவும் நிரந்தர புரட்சி வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சியைக் கட்டியெழுப்பவும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு முன்னெடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வது அவசியமாகியிருந்தது. பப்லோவாத கலைப்புவாதத்தை வெளிப்படையாக எதிர்த்து, அதன் உறுப்பினர்களை வென்றெடுப்பதற்கும் 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

1968ல், கீர்த்தி அவரது 19 வயதில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் ஸ்தாபக மாநாட்டில் அதன் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் உடனடியாக அனைத்துலக குழுவுடன் இணைய முயற்சித்தது.

தோழர் கீர்த்தி 1985-86 ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக்கட்சி (WRP) உடனான பிளவின் ஊடாக நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு மீது ட்ரொட்ஸ்கிச கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த முன்னெடுத்த வெற்றிகரமான போராட்டத்தில் மிகவும் தீர்க்கமான பாத்திரத்தை ஆற்றினார்.

இன்று நாம் மறு பிரசுரம் செய்துள்ள தோழர் கீர்த்தியின் வாழ்க்கை பற்றிய ஒரு நீண்ட ஆய்வில், உலக சோசலிச வலை தள ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், தொழிலாளர் புரட்சிக் கட்சி சந்தர்ப்பவாதத்திற்கு தடம்புரண்டமை குறித்த அனைத்துலக குழுவின் விரிவான அம்பலப்படுத்தலுக்கு பங்களிப்பு செய்ததில், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் தலைவர் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்கள் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் வரலாறு பற்றிய அவரது பரந்த அறிவை வெளிக்கொண்டுவந்துள்ளார் என விளக்கியுள்ளார்.

ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் காட்டிக்கொடுப்புக்கள் மற்றும் இரண்டாம் உலக போருக்கு பின்னர் உலக முதலாளித்துவத்தின் தற்காலிக மீள்ஸ்திரப்பாட்டுடன் தொடர்புபட்ட சிக்கலான காரணங்களால், தொழிலாள வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் நான்காம் அகிலத்தை விட ஏனைய அமைப்புகள் மீது நம்பிக்கை கொண்ட ஒரு காலகட்டத்திலேயே கீர்த்தியின் முழு அரசியல் வாழ்வும் பரந்திருந்தது.

பாரம்பரிய மார்க்சிஸ்டுகளும் நான்காம் அகிலமும் அபிவிருத்தி செய்த விஞ்ஞானப்பூர்வமான முன்னோக்கில் காலூன்றியிருந்த தோழர் கீர்த்தி, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தை தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்றீடாக பார்த்தவர்களை அல்லது விவசாயிகளைத் அடித்தளமாகக் கொண்டமக்கள் யுத்தம்என்ற மாவோவின் தேசியவாத வேலைத்திட்டத்தின் மேலெழுந்தவாரியான வெற்றிகளால் மெய்மறந்து போயிருந்தவர்களை முற்றிலும் எதிர்த்தார்.

சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் அவர் நன்கு உட்கிரகித்துக்கொண்டிருந்தார்.

கீர்த்தியின் மரணச்சடங்கில் பங்குபற்றிய நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரதிநிதி ஒருவர் மாவோவாதிகள், ஹோசிமின்வாதிகள், நேருவாதிகள் மற்றும் காஸ்ரோவாதிகள் போன்ற பல்வேறு ஸ்ராலினிச மற்றும் முதலாளித்துவ தேசியவாத தலைவர்களோ அன்றி, கீர்த்தி பாலசூரியவே எதிர்வரும் காலத்தில் புரட்சிகர சிந்தனைகொண்ட தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஆசிரியராக இருப்பார் என முன்னறிவித்திருந்தார்.

ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்பு அந்த முன்னறிவிப்பை அனைவரும் இல்லாவிடினும், ஒருசிலர் ஒரு வெறும் துணிச்சலானது என்பதை விட ஒரு மிகைப்படுத்தலாக உணர்ந்தனர். எனினும், வரலாறு அதை அதிகளவு நிரூபித்துவிட்டது.

கீர்த்தி மரணமடைந்து ஐந்து ஆண்டுகள் ஆவதற்கு முன்னரே, ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீள்புனருத்தானம் செய்தநிலையில் சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சிகளும் கலைக்கப்பட்டுவிட்டன.

சீன மக்கள் குடியரசும் வியட்நாம் சோசலிச குடியரசும் பெயரளவில் இன்னமும் உள்ளன. ஆனால் இரு அரசுகளிலும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் முதலாளித்துவத்தை மீண்டும் ஸ்தாபித்துள்ளதோடு அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானிய மற்றும் தைவானைத் தளமாகக் கொண்ட நாடுகடந்த நிறுவனங்கள் மற்றும் புதிதாக செல்வம் படைத்த ஒரு புதிய உள்ளூர் முதலாளித்துவ வர்க்கத்தட்டினதும் சார்பாக தொழிலாள வர்க்கத்தை இரக்கமற்று சுரண்டுவதற்கு தலைமை வகிக்கின்றன.

மேலும், தம்மை ஏகாதிபத்தியத்தின் எதிரிகளாக காட்டிக்கொண்டு சோசலிச வாய்ச்சவடால்களை விட்டுக்கொண்டிருந்த முதலாளித்துவ தேசியவாத தலைவர்களின் நிலை என்ன?

சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் ஆதரவு இல்லாமல், காஸ்ட்ரோ ஆட்சியானது ஐரோப்பிய, கனேடிய மற்றும் லத்தீன் அமெரிக்க முதலீடுகளுக்கு அதன் கதவுகளை திறந்து விட்டுள்ளதோடு, எப்போதும் ஆழமடைந்து வரும் சமூக சமத்துவமின்மை மற்றும் வறுமைக்கும் வழிகாட்டியாக இருக்கின்றது. அதே சமயம், அது அமெரிக்க டொலர்கள் சுதந்திரமாக செயற்பட அனுமதித்துள்ளதுடன் அரசுக்கு சொந்தமான பொதுத்துறையின் பெரும் பகுதியை மூடிவிட்டது.

பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் பாலஸ்தீன அதிகாரத்தின் தலைவர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் காவற்காரராக செயல்படுகின்றனர்.

இந்தியாவின் காங்கிரஸ் கட்சி, மக்களை திசைதிருப்பும் ஒரு முயற்சியாக காங்கிரஸ் சோசலிசம் என அது கூறிவந்த அரசாங்கத்தினால் வழிநடாத்தப்படும் திட்டங்களை  நீண்டகாலத்துக்கு முன்பே கைவிட்டுவிட்டது. அது உலக முதலாளித்துவத்தின் ஒரு மலிவு உழைப்பு களமாக இந்தியாவை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. வெளியுறவு கொள்கையில், இந்திய முதலாளித்துவ வர்க்கம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் ஒரு மூலோபாய கூட்டின் பேரிலும் மற்றும் அதன் சொந்த இராணுவ வலிமையை கட்டியெழுப்பவும் அணி சேராமை கொள்கையை ஒதுக்கி வைத்துவிட்டது.

முதலாளித்துவத்தின் "புதிய பொருளாதார கொள்கையை," வெளிப்படையாக ஆதரித்த இந்தியாவின் "வெகுஜன" ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகள், காங்கிரஸ் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு தொடர் அரசாங்கங்களுக்கு ஆதரவு கொடுத்தன. அவர்கள் ஆட்சியில் இருந்த மாநிலங்களில், "முதலீட்டாளர் சார்பு" கொள்கை என அவர்களே கூறிக்கொண்டதை முன்னெடுத்தனர்.

இலங்கையினுள், ஒரு கால் நூற்றாண்டுகால வரலாற்று முடிவு மிகத்தீர்க்கமாக உள்ளது. லங்கா சமசமாஜ கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியில் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு அடிபணியவைத்த நிலைமைகளின் கீழ் வளர்ந்து பலமடைந்த குட்டி முதலாளித்துவ அமைப்புக்கள், ஒரு முட்டு சந்து என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.), வலதுசாரி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் ஆதரவளித்ததுடன், தமிழ் சிறுபான்மையினருக்கு எதிரான சிங்கள முதலாளித்துவத்தின் இனவாத யுத்தத்துக்கு ஆர்வத்துடன் ஆதரவளித்தது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கக் கூடிய ஒரே சமூக சக்தியான சிங்கள மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கு எந்தவொரு அழைப்பும் விடுப்பதை எதிர்த்தது. மாறாக, அது இந்தியா மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் ஆதரவுக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு முதலாளித்துவ அரசை உருவாக்குவதற்கு முயன்றது.

ஸ்ரீலங்கா-தமிழீழம் ஐக்கிய சோசலிச குடியரசுகளுக்காகப் போராடுவதற்கு தொழிலாள வர்க்கத் தலைமைத்துவத்தின் கீழ் சிங்கள மற்றும் தமிழ் உழைக்கும் மக்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கு புரட்சிக்கமுயூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக்கட்சியும் அபிவிருத்தி செய்த முன்னோக்கே, வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாஷைகளை யதார்த்தமாக்கக் கூடிய ஒரே வழி என்பதை தெளிவுபடுத்தியுள்ளது.

மதிப்பிழந்தமுறையில் தங்களை ட்ரொட்ஸ்கிஸ்டுகள் எனக் கூறிக்கொண்ட பப்லோவாதிகளைப் பொறுத்தவரை, அவர்கள் முதலாளித்துவ சிக்கன நடவடிக்கைகளை சுமத்திய மற்றும் ஏகாதிபத்திய போருக்கு ஆதரவு கொடுத்த, ஜேர்மனியில் இடது கட்சி முதல் இத்தாலியில் Rifondazione Communista வரை பல்வேறு அரச கட்சிகளுடன் தங்களை இணைத்துக்கொண்டனர்.

தற்போது மண்டேலின் அகிலத்தைச்சேர்ந்த இலங்கை நவசமசமாஜக கட்சி, இலங்கை முதலாளித்துவத்தின் பாரம்பரிய வலதுசாரி கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (UNP) உடன் ஒரு "ஜனநாயக" கூட்டணியில் உள்ளது. 1977 இல் சந்தை சார்பு சீர்திருத்தத்தை தொடங்கிய ஐக்கிய தேசிய கட்சியே 1983இல் தமிழர் விரோத போரை முன்னெடுத்தது.

தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் கல்வியூட்டி அணிதிரட்டுவதை தனது திசையமைவாகக் கொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவே, ட்ரொட்ஸ்கிசத்தின் மற்றும் பாரம்பரிய மார்க்சிசத்தின் உண்மையான குரல் என்பதில் எவர் சந்தேகம் கொள்ள முடியும்? அது உலக சோசலிச வலை தளம் மூலமாக, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்குடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்கப் போராடும் அதே வேளை, தினசரி அனைத்து பிரதான அரசியல், சமூக மற்றும் வரலாற்றுப் பிரச்சினைகளை தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில் இருந்து வரையறுக்கின்றது.

ஒரு கால் நூற்றாண்டு கால வெளிச்சத்தில், தோழர் கீர்த்தியின் வாழ்க்கை மற்றும் போராட்டத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடாதது மட்டுமன்றி, விரிவாக முன்னிலைக்கு வந்துள்ளது.

மாபெரும் பொருளாதார பின்னடைவு மற்றும் அது உருவாக்கிய உலகப் போரின் பின்னர் தற்போது ஏற்பட்டுள்ள மாபெரும் உலகப் பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களும் மேலும் மேலம் முதலாளித்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் இறங்கத் தள்ளப்படுவர். அவர்கள் உத்வேகமான மற்றும் கொள்கைப் பிடிப்பான அரசியல் போராட்டத்தின் ஈர்க்கும் உதாரணத்தை தோழர் கீர்த்தி பாலசூரியவின் அரசியல் வாழ்க்கை வரலாற்றில் காண்பர். மேலும் முக்கியமான வகையில், அவர் பாதுகாத்து அபிவிருத்தி செய்த மார்க்சிச அரசியல் கோட்பாடுகளில், அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்துக்காகவும் மற்றும் அவர்களை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்குமான போராட்டத்தின் வழிகாட்டியாக தத்துவார்த்த மற்றும் அரசியல் ஆயுதங்களை அவர்கள் காண்பர்.  

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு

***

அடுத்து வரும் ஆண்டில், உலக சோசலிச வலை தளம் சர்வதேச வாசகர்களுக்கு தோழர் கீர்த்தி எழுதியவற்றை பிரசுரிக்கும். இதில் அவர் குட்டி முதலாளித்துவ ஜே.வி.பீ. சம்பந்தமாக முதலில் எழுதிய தீர்க்கதரிசனமான நூலும் அடங்கும். ஜே.வி.பீ.யின் வர்க்க சுபாவமும் அரசியலும் என்ற அந்த நூல் 1970ல் வெளியிடப்பட்டது.