World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Military continues intimidation of SEP in Jaffna

இலங்கை: இராணுவம் யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியை தொடர்ந்தும் அச்சுறுத்துகின்றது

By our correspondent
10 February 2012

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சியை (சோ.ச.க.) அச்சுறுத்தும் தமது முயற்சிகளை அரசாங்கமும் இராணுவமும் தொடர்வதன் இன்னுமொரு அறிகுறியாக, கடந்த வாரம் இரு கடற்படை அலுவலர்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று அவரது விபரங்களைக் கேட்டுள்ளனர். இராணுவம் சோ.ச.க. பற்றிய விபரங்களை சேகரிக்கும் பரந்த முயற்சிகளின் பாகமாகவே இந்த சம்பவம் தெரிகின்றது.

ஜனவரி 29 அன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் சோ.ச.க. நடத்தவிருந்த பொதுக் கூட்டமொன்றை பாதுகாப்பு அமைச்சு தடுத்ததன் பின்னரே இந்த அச்சுறுத்தல் பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சகல அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி சோ.ச.க. முன்னெடுக்கும் பிரச்சாரத்தின் பாகமாகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம் தடைசெய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர், யாழ்ப்பாணத்தில் கூட்டத்துக்காக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இரு சோ.ச.க. உறுப்பினர்களை இராணுவம் தடுத்து வைத்து விசாரணை செய்திருந்தது. இந்த விசாரணை சட்டவிரோதமானதாவதோடு கட்சியின் அடிப்படை ஜனநாயக உரிமைகைள மீறுவதாகும். அதே படையினர் சோ.ச.க. உறுப்பினர்கள் மீது பின்னர் ஒரு சரீரத் தாக்குதலையும் திட்டமிட்டிருந்தனர்.

இராசேந்திரன் சுதர்சன், விசாரணைக்குட்படுத்தப்பட்ட சோ.ச.க. உறுப்பின்ரகளில் ஒருவராவார். பெப்பிரவரி 4 அன்று, அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தைப் பற்றியும் மற்றும் சோ.ச.க. பற்றியும் மேலும் தகவல்களைத் திரட்டும் நோக்கில், ஊர்காவற்துறை தீவில் உள்ள அவரது வீட்டுக்கு இரு கடற்படையினர் வந்திருந்தனர். சுதர்சன் மற்றும் அவரது மனைவியின் தேசிய அடையாள அட்டை இலக்கங்களைப் பெற்றுக்கொண்ட அவர்கள், பின்னர் பிள்ளைகளது பெயர்களையும் அவர்களது பாடசாலைகளின் பெயர்களையும் கேட்டனர்.

இந்த தகவல்களை ஏன் சேகரிக்கின்றீர்கள் என சுதர்சன் கேட்ட போது, உயர் மட்டத்தில் உள்ளவர்கள் அந்த விபரங்களைக் கேட்டதாக அந்த அலுவலர்கள் கூறினர். அவர்கள் பொலிசாரின் அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்டு சட்ட விரோதமாக செயற்பட்டுள்ளனர். இது யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் இராணுவ ஆட்சிக்கு சமமான ஒன்றே இன்னும் இருப்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்த விசாரணை குற்றத்தன்மை உடையதாகும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டதற்கும் படுகொலை செய்யப்பட்டதற்கும் அரசாங்க-சார்பு கொலைப் படைகளே பொறுப்பாளிகளாவர். இராணுவம், குறிப்பாக அதன் பல்வேறு புலானாய்வு முகவர்களும் இவற்றில் உடந்தையாய் இருந்துள்ளதை, அல்லது நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதை சகல ஆதாரங்களும் சுட்டிக்காட்டியுள்ளன.

2007 மார்ச்சில், சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் வேலணையில் காணாமல் போயினர். அவர்களை கடைசியில் கண்ட போது கடற்படை சோதனைச் சாவடியொன்றை நெருங்கிக்கொண்டிருந்தனர்.

இராணுவம் தகவல்களைத் திரட்டுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பீ.டி.பீ.) உதவிவருவதற்கான ஆதரங்கள் உள்ளன. சோ.ச.க.யின் யாழ்ப்பாண அமைப்பாளரதும் ஏனைய உறுப்பினர்களதும் பெயர்களைக் கேட்ட போது, அந்த இரு கடற்படையினரும், ஊர்காவற்துறையில் சுதர்சனே கட்சியின் அமைப்பாளர் என தமக்கு ஈ.பீ.டி.பீ.யினர் கூறியதாக தெரிவித்துள்ளனர்.

ஆளும் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளியான ஈ.பீ.டி.பீ., ஒரு துணைப் படைக் குழுவை வைத்திருப்பதோடு அது பாதுகாப்பு படையினருடன் நெருக்கமாக செயற்படுகின்றது. ஈ.பீ.டி.பீ. தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவை அமைச்சராவார்.

சோ.ச.க.யை எதிர்ப்பதில் ஈ.பீ.டி.பீ.க்கு நீண்ட வரலாறு உண்டு. 2000 ஆண்டு மார்ச் மாதம், ஒரு உள்ளூர் ஈ.பீ.டி.பீ. தலைவர் சுதர்சன் மீது தாக்குதல் நடத்தியதோடு அவரது அரசியல் வேலைகளை நிறுத்துமாறும் அச்சுறுத்தியிருந்தார். 2010 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, கே. சித்திரகுமார் உட்பட மூன்று சோ.ச.க. உறுப்பினர்கள் ஈ.பீ.டி.பீ. குண்டர்களால் தாக்கப்பட்டனர்.

சர்வதேச நாணய நிதியம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்துவதன் மூலம், உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் சீரழிக்க ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் தயாராகின்ற நிலைமையிலேயே சோ.ச.க.க்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சோ.ச.க. மீதான இந்த அச்சுறுத்தல் பிரச்சாரமானது, தொழிலாள வர்க்கம் தனது நலன்களை காக்க போராடுகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் முன்னெச்சரிக்கையாகும்.

அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளின் அரசியல் முக்கியத்துவத்தை தெளிவுபடுத்துவதற்காக வேலைத் தலங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிலாள வர்க்கப் பிரதேசங்களில் சோ.ச.க. உறுப்பினர்கள் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கின்றனர். சோ.ச.க. சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளையும் அவர்களது பொது வர்க்க நலன்களையும் பாதுகாப்பதற்காக அவர்களை ஐக்கியப்படுத்துவதற்காக சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராடுகின்றது.

சோ.ச.க. இந்த விடயங்களை விளக்குவதற்காக கொழும்பில் ஒரு பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் பெப்பிரவரி 13 அன்று மாலை 4.00 மணிக்கு நடக்கவுள்ள கூட்டத்திற்கு வருகை தருமாறு நாம் உழைக்கும் மக்களுக்கும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.

***

பின்வரும் அறிக்கை, மத்திய வங்கி ஊழியர் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அதன் தலைவர் எம்.டபிள்யூ. பியரத்ன மற்றும் செயலாளர் பீ. பிறேமசிறியும் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுக் கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சு தலையிட்டு தடுத்ததை நாம் கண்டனம் செய்கின்றோம். இராணுவச் சிப்பாய்கள் இரு சோ... உறுப்பினர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்து விசாரணை செய்ததையும் பின்னர் அவர்களைத் தாக்கியதையும் நாம் கண்டனம் செய்கின்றோம். இது. சோ...யின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடக்கவிருந்த சோ... கூட்டத்தை பாதுகாப்பு அமைச்சு தடை செய்துள்ளது. அந்தக் கூட்டத்துக்காக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த சோ... உறுப்பினர்கள் மீது படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கூட்டம் நடக்கவிருந்த மண்டபத்தின் அனுமதியை இரத்துச் செய்வதன் பேரில் பாதுகாப்பு அமைச்சு சோ... “பிரிவினைவாதத்துக்கு ஆதரவளிப்பதாக பொய்க் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளதாக எமக்குத் தெரியவந்துள்ளது. சோ...யின் அரசியல் பற்றி எமது தொழிற்சங்கத்துக்கு பரீட்சியம் உள்ளது. பல சோ... உறுப்பினர்கள் இந்த தொழிற்சங்கத்தின் தலைமைத்துவத்தில் இருந்துள்ளதுடன் நான்கு தசாப்தங்களாக அரசியல் போராட்டத்தையும் முன்னெடுத்துள்ளனர்.

அவர்களது தலைமைத்துவம் மற்றும் வழிநடத்தலின் கீழ், எமது தொழிற்சங்கம் பரந்தளவில் தொழிலாளர்கள், இளைஞர்கள் கிராமப்புற வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகைளக் காத்து வந்துள்ளது. சோ... தயக்கமின்றி மத்திய வங்கி ஊழியர்களின் உரிமைகளை காக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சோ... உறுப்பினர்களின் தலையீட்டின் காரணமாக எமது தொழிற்சங்கம் யுத்தத்தையும் வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பையும் மற்றும் அரசியல் கைதிகளை தடுத்து வைத்திருப்பதையும் எதிர்த்துள்ளது.

1988-1989 காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் ஒடுக்குமுறையில் இருந்தும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) பாசிசத் தாக்குதல்களில் இருந்தும் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களையும் பாதுகாப்பதற்காக சோ.ச.க. (அப்போது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்) இந்த நாட்டிலும் ஆஸ்திரேலியா உட்பட சர்வதேச ரீதியிலும் பிரச்சாரமொன்றை முன்னெடுத்திருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை சோ.ச.க. முழுமையாக எதிர்ப்பது எமக்கு நன்கு தெரிந்த விடயம். 1996ல் மத்திய வங்கி மீதான குண்டுத் தாக்குதல் உட்பட தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மீதான புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலை சோ.ச.க. கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்காக தமிழர்-விரோத இனவாதத்தை தூண்டிவிட்டது. அதே போல், புலிகளும் தொழிலாளர்கள் மத்தியில் இனவாத பிளவுகளை ஆழப்படுத்த தமது பிரிவினைவாத வேலைத் திட்டத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். சோ.ச.க. சோசலிச அடிப்படையில் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காகவும் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்துக்காகவும் போராடிக்கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் சோ.ச.க.யின் ஜனநயாக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் அதே வேளை, தொழிலாளர்கள் மற்றும் வறிய மக்கள் மீது மேலும் பொருளாதாரச் சுமைகளை திணிக்கத் தயாராகின்றது. இந்தச் சுமைகளை திணிப்பதற்கு எதிராக தவிர்க்க முடியாமல் வெடிக்கவுள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்களை நசுக்குவற்காக அரசாங்கம் யுத்த காலத்தில் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒடுக்குமுறை வழிமுறைகளை பயன்படுத்தும்.

தொழிலாளர்களும் இளைஞர்களும் மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட மக்களும் தமது ஜனநாயக உரிமைகளைக் காக்க அரசியல் ரீதியில் தயாராக வேண்டும். சோ.ச.க. மீதான தாக்குதலை எதிர்ப்பதானது இந்தத் தயாரிப்பின் பாகமாகும்.

சோ.ச.க. மீது கைவைக்க வேண்டாம் என்றும் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு எதிரான இராணுவ அச்சுறுத்தலை நிறுத்துமாறும் நாம் கோருகின்றோம். சோ.ச.க. மற்றும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கும் பிரச்சாரத்துக்கு நாம் முழுமையாக ஆதரிவளிக்கின்றோம்.