World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Thousands attend slain fisherman’s funeral in Sri Lanka

இலங்கையில் கொல்லப்பட்ட மீனவரின் மரணச்சடங்கில்ஆயிரக்கணக்கானவர்கள் பங்குபற்றினர்

By our reporters
21 February 2012
Back to screen version

பெப்பிரவரி 16 அன்று பொலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் அன்டனி பெர்ணான்டோ வர்ணகுலசூரியவின் மரணச் சடங்குகள் சனிக்கிழமை சிலாபம் எகொடவத்த மயானத்தில் இடம்பெற்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் பாகமாக அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபம்-வெல்ல பிரதேச மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே வர்ணகுலசூரிய சுட்டுக் கொல்லப்பட்டார். ஏனைய மூவர் துப்பாக்கிச் சூட்டில் கடும் காயமடைந்ததோடு அவர்கள் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர்.

எரிபொருள்களின் அதிக விலை அதிகரிப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்ட மீனவர்கள், குறிப்பாக வடமேல் கரையோர மீனவர்கள், பெப்பிரவரி 12 முதல் தொடர்ச்சியாக எதிர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மரணச் சடங்கன்று காலை முதல் கிட்டத்தட்ட 30,000 பேர்வரை வர்ணகுலசூரியவின் வீட்டுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகவும் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும் வருகை தந்தனர். சுமார் 20,000 பேர் மயாணத்தில் கூடினர். சிலாபத்தில் இத்தகைய கூட்டம் கூடுவது அரிதானதாகும். நீர்கொழும்பு முதல் கல்பிட்டி வரை முழு வடமேல் கரையோரப் பகுதியிலும் உள்ள கிராமங்களில் இருந்து மீனவர்கள் மரண வீட்டுக்கு பஸ்களில் வந்து இறங்கினர்.

இறுதிச் சடங்கு நடந்த தினம், சடலத்தை எந்தவொரு வன்முறைக்கும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சிலாபம் நீதிமன்றத்தில் நீதவானிடமிருந்து உத்தரவு ஒன்றை பொலிசார் பெற்றுக்கொண்டனர். இந்தக் கட்டளை, பெருந்தொகையான பாதுகாப்புப் படையினரை நகரில் நிலைப்படுத்தியிருந்ததையும் எந்தவொரு எதிர்ப்புப் போராட்டத்தையும் தடை செய்வதையும் நியாயப்படுத்த பயன்பட்டது. சிலாபம் நகரத்திலும் அதனைச் சூழவும் சுமார் 1,500 பொலிசார் நிலைகொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான படையினரும் நிலைகொண்டிருந்ததோடு பல கவச வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

மீனவர்களின் எதிர்ப்பு வெடிக்கக்கூடிய சாத்தியத்தை உணர்ந்த பொலிசும் இராணுவமும், மரணச் சடங்கு இடம்பெற்ற இடத்தில் இருந்து தூரவே நின்றுகொண்டன. மரணச் சடங்கு ஏற்பாடுகளை கட்டுப்படுத்தும் பொறுப்பையும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தடுக்கும் பொறுப்பையும் கத்தோலிக்க பாதிரிமார் ஏற்றுக்கொண்டிருந்தனர்.

சிலாபம் ஆயர் வெலன்ஸ் மென்டிஸின் ஆலோசனைப் படி செயற்படத் தள்ளப்பட்ட குடும்பத்தினர், பூதவுடலை வீட்டில் இருந்து சுமார் 2.30 மணியளவில் எடுத்துச் சென்று, 4.00 மணியளவில் அடக்கம் செய்தனர். அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படைகளையும் விமர்சித்துவிடுவார்கள் என்று பீதியடைந்ததால் உறவினர்களுக்கோ, மீனவர் சங்கங்கள் அல்லது அரசியல் கட்சிகளுக்கோ உரை நிகழ்த்த அனுமதிக்கப்படவில்லை.

கிரமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், சோசலிச சமத்துவக் கட்சிக்கு (சோ.ச.க.) உரையாற்ற சந்தர்ப்பம் வழங்க ஆதரவளித்த போதிலும், கிளவுட் ஹிசின் என்ற பாதிரியார் அதைத் தடுத்தார். அதை அனுமதிக்க முடியாது, இன்று இது அமைதியாக இடம்பெற வேண்டும், என அவர் காரணம் கூறினார்.

மக்கள் சீற்றமடைந்துள்ளதை நன்கு அறிந்திருந்ததால் அரசாங்க அமைச்சர்களோ உள்ளூர் அரசியல்வாதிகளோ மரணச் சடங்கிற்கு வரவில்லை. கடந்த வெள்ளிக் கிழமை, அரசாங்க அமைச்சரான மில்ரோய் பெர்ணான்டோவும், பிரதேசத்தில் இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரும் வர்ணகுலசூரியவின் வீட்டுக்கு வந்திருந்த போதிலும் மக்கள் அவர்களை கூச்சலிட்டு வெளியேற்றினர்.

எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுதிச் சடங்கிற்கு முன்னதாகவே வந்ததோடு வர்ணகுலசூரியவின் குடும்பத்துக்கு நட்டஈடு கொடுப்பது பற்றி பாராளுமன்றத்தில் பேசுவதாக வாக்குறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மீதான பரந்த எதிர்ப்பை சுரண்டிக்கொள்ளும் முயற்சியில், விக்கிரமசிங்கவும் யூ.என்.பீ.யும் எரிபொருள் விலை அதிகரிப்புக்காக அரசாங்கத்தின் வீணடிப்புகளையும் ஊழல்களையும் காரணம் காட்டிய அதே வேளை, முதலாளித்துவத்தின் அடிநிலையில் உள்ள நெருக்கடியில் இருந்து கவனத்தை திசை திருப்பினர். யூ.என்.பீ. ஆட்சியில் இருந்த போது, அதுவும் சர்வதேச நாணய நிதியத்தின் சந்தை சார்பு மறுசீரமைப்பு திட்டத்தை பலமாக முன்னெடுத்தது.

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது அரசாங்கத்தால் திணிக்கப்பட்டுள்ள ஒரு நடவடிக்கை மட்டுமே. டொலருக்கு எதிராக ரூபாயை மதிப்பிறக்கம் செய்வது, போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது மற்றும் அரசாங்கச் செலவுகளை வெட்டிக் குறைப்பதும் ஏனையவற்றில் அடங்கும். இவை அனைத்தும் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாகும். சர்வதேச நாணய நிதியம் கொடுக்கவிருந்த கடனின் இறுதிப் பகுதியான 800 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொடுப்பதற்கான நிபந்தனைகளைகாவே இந்த வழிமுறைகளை அது வலியுறுத்தியுள்ளது.

அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் இருந்து உத்தரவு இல்லாமல் நிராயுதபாணிகளான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது என உழைக்கும் மக்களுக்கு விடுக்கும் திட்டமிட்ட எச்சரிக்கையே அது. என்ன அரசியல் விலை கொடுத்தாவது இந்த சிக்கன நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் என பெரும் வர்த்தகர்களுக்கும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் உறுதிப்படுத்துவதும் இதன் குறிக்கோளாகும்.

ஆர்ப்பாட்டம் செய்த மீனவர்கள் மீதான தாக்குதல், சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சம்பந்தமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த போது அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் வன்முறைக்கு சமமானதாகும். அப்போது கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்த பொலிசார், ரொசான் சானக என்ற இளம் தொழிலாளியை கொன்றனர்.

சிலாபம் நகரைச் சேர்ந்த ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினார். மீனவர்களுக்கு மட்டும் உரித்தான காரணத்துக்காக அன்டனி சாகவில்லை. எரிபொருள் விலையதிகரிப்பு ஒட்டு மொத்த மக்களையும் பாதித்துள்ளது. நேற்று மின்சாரக் கட்டனங்களும் அதிகரித்துள்ளன. அரசாங்கத்தை சவால் செய்ய பலமான எதிர்க்கட்சி இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறு நடக்கின்றன.

சோ... முன்னரும், இறுதிச் சடங்கின் போதும் அந்தப் பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டதோடு ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மீனவர் கொல்லப்பட்டார் என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியான கட்டுரையின் பிரதிகளையும் விநியோகித்தது. அந்தக் கட்டுரைக்கு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

ஒரு பிரச்சாரத்தின் போது, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சிலாபம் உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவர், அரசாங்கத்துக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகிப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறி, சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்தினார். தான் பொலிசுக்கு அறிவிப்பதாக அவர் எச்சரித்தார். அங்கு உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய இளம் மீனவர் குழுவினர், சோ.ச.க. உறுப்பினர்களை பாதுகாத்ததோடு அவர்களது பிரச்சாரத்தை தொடருமாறும் கூறினர்.

எமது வலைத் தளத்துடன் உரையாற்றிய போது, மரணச் சடங்கிற்கு வந்திருந்த பல மீனவர்களும் குடும்பப் பெண்களும் தமது உணர்வுகளை பின்வருமாறு வெளிப்படுத்தினர். இந்தக் கொலைக்கு அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டும். அரசாங்கம் எரிபொருள் மானியம் கொடுப்பதாகக் கூறுவதை நாம் நம்ப மாட்டோம். எங்களுக்கு முந்தைய விலையிலேயே எரிபொருள் வேண்டும். அன்டனி வர்ணகுலசூரிய முழு மீனவர் சமுதாயத்துக்குமாகவே உயிரை விட்டார்.

சிலாபத்தைச் சேர்ந்து ஒரு இளம் மீனவர் கூறியதாவது: நாங்கள் வெறுமனே மானியத்துக்காக மட்டும் போராடவில்லை. எங்களது தொழிலை செய்ய வேண்டுமானால் எரிபொருள் விலைகள் குறைந்தபட்சம் முன்னைய மட்டத்துக்காகவாவது குறைய வேண்டும். நாங்கள் அது வரை போராடுவோம். எங்களுக்கு ஆதரவளிக்குமாறு நாம் ஊடகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பொலிஸ் வர்ணகுலசூரியவின் மரணத்தைப் பற்றி போலி விசாரணை ஒன்று நடத்த உத்தரவிட்டும், அவரது உறவினர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா கொடுப்பதன் மூலமும் மக்களின் சீற்றத்தை தணிக்க முயற்சித்தது. அதே சமயம், குற்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சுமத்துவதற்காக, சம்பவ இடத்தில் வாள், பெற்றோல் குண்டுகள் மற்றும் குண்டாந்த தடிகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் கூறிக்கொள்கின்றது. பொலிசார் கூறுவதை கடமையுணர்ச்சியுடன் எதிரொலித்த கொழும்பு ஊடகம், மீனவர்கள் வன்முறையை நாடியமை பற்றி செய்திகளை பிரசுரித்தன.

உண்மையில், வாழ்க்கைத் தரத்தின் மீதான அரசாங்கத்தின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது ஒரு அப்பாவி மீனவனைக் கொன்றமை, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான சிக்கன திட்டத்தை அமுல்படுத்துவதற்கு விரோதமான எதிர்ப்பு அலையுடன் சேர்ந்துள்ளது.