World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

An exchange: More on the contemporary assault on Shakespeare

ஒரு பதிலுரை: ஷேக்ஸ்பியர் மீதான சமகாலத்திய தாக்குதல்மீது மேலதிக கருத்து பரிமாற்றம்

By David Walsh
30 November 2011
Back to screen version

இயக்குனர் ரோலண்ட் எமெரீச் மற்றும் திரைக்கதையாசிரியர் ஜோன் ஓர்லோஃப்பின் Anonymous படவிமர்சனம் ஓர் "உணர்ச்சி கொந்தளிப்பாக" இருந்ததேயொழிய, “பலகோடி டாலர் ஷேக்ஸ்பியர் அமைப்பின் சலித்து ஓய்ந்துபோன வெளிப்பாடுகளே மீண்டும் கிளிப்பிள்ளை போல கூறிப்பட்டிருக்கிறது" என்பதைத் தவிர அது வேறொன்றையும் செய்யவில்லையென குறைகூறி ஒரு வாசகர், HS, நமக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடைசிப் புள்ளியை பொறுத்தமட்டில் அது, நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருந்தபோதினும் கூட பூமி பிரபஞ்சத்தின் மையத்தில் இல்லை என்று தொடர்ந்து வலியுறுத்திய, பலகோடி டாலர் காபெர்நிகஸ் அமைப்பின் சலித்து ஓய்ந்துபோன வெளிப்பாடுகளே மீண்டும் கிளிப்பிள்ளைப் போல கூறப்பட்டதன்மீது நடந்த தாக்குதலின்கீழ், சற்றே வருவதைப் போல உள்ளது.

அந்த விமர்சனம் ரோலண்ட் எமெரீச் மீது "தனிப்பட்ட தாக்குதல்களை" செய்திருப்பதாக HS கூறுகிறார். அது அவ்விதத்தில் எதையும் செய்யவில்லை. அது அவரது படங்கள் மற்றும் பொது கருத்துரைகளுக்கு விடையிறுப்பு காட்டியது. ஜேர்மனில் பிறந்த எமெரீச் தொடர்ச்சியாக கொடூரமான மற்றும் கட்டுக்கதை படங்களால் (Godzilla, Independence Day, The Patriot, etc.) அவரைஅவரே வேறுபடுத்திக் காட்டிக் கொண்டுள்ளார்.

மேலும் கூடுதலாக, எமெரீச் "உலகின் ஓரினசேர்க்கை இயக்குனர்களில் (gay director) மிகவும் பிரபலமான ஒருவரென்றும்" நமக்கு சொல்லப்படுகிறது. (உண்மையென கருதத்தக்க விதத்தில், இதன்மூலம் அவர் வர்த்தகரீதியில் மிகவும் வெற்றிபெற்றவர்களில் ஒருவர் என்று HS குறிக்கிறார்) அதற்கு நாம் பதிலளிப்பது இதுதான்: வெளிப்படையாக கூறுவதானால், அந்த விஷயத்திற்காக நாங்கள் குறைந்த கவனத்தை அளித்துவிட முடியாது.

எந்தவொரு நிகழ்விலும், எந்தவொரு அர்த்தமுள்ள சமூக அல்லது கலைத்துவ கண்ணோட்டத்திலிருந்தும்ஓரினசேர்க்கை இயக்குனர்" என்ற சொற்பதமானது உபயோகமற்றதாகும். உயிரியியல்ரீதியிலான ஒரு துணுக்கு செய்தி என்றளவிற்கு, குறிப்பிட்ட ஒருவரின் பாலியல் நிலைநோக்கு சிறிது முக்கியத்துவமும், ஆர்வமும் பெற்றிருக்கலாம். ஒரு கலைத்துவ அடையாளம் அல்லது தகுதி என்றளவில், அது அர்த்தமற்றதும், கவனிப்பதற்கு அப்பாற்பட்டதும் ஆகும்.

சிந்தனைபூர்வ மற்றும் ஆழ்ந்த உட்பார்வை கொண்ட பல இயக்குனர்கள் ஓரினசேர்க்கையாளர்களாக இருக்கின்றனர். கட்டாயம் கூறியே ஆக வேண்டுமானால், அதே பாலியியல் நிலைநோக்கு கொண்ட இழிந்த மற்றும் மேம்போக்கான இயக்குனர்களும் கூட இருக்கிறார்கள். எங்களுடைய பார்வையில், எமெரீச் இரண்டாவது வகையில் வருகிறார். Anonymous படத்தின் மையம் வரலாற்று வாதத்தில் பிணைந்திருந்தாலும் கூட, அதற்கும் அப்பாற்பட்டு, அதை பார்ப்பதென்பது ஒரு வலிமிகுந்த அனுபவமாக உள்ளது.

ஷேக்ஸ்பியரின் படைப்புகளுக்கு யார் உண்மையான ஆசிரியர், அதாவது 17ஆம் ஆக்ஸ்போர்டு கோமான் (Earl of Oxford), எட்வர்டு டி வெர் (Edward de Vere) என்பதைக் கண்டறிவதன் மூலமாக, "அந்த சாதனையை நிமிர்த்தி வைப்பதே" Anonymous படத்தின் நோக்கமாகும் என்று HS (இரண்டுமுறை!) வாதிடுகிறார். நமக்கு கடிதம் எழுதியவர், "அந்த சாதனையை நிமிர்த்தி வைப்பது" என்ற சொற்பதத்தை பரந்த மனோபாவத்தோடு (பெருந்தன்மையான விதத்தில் என்று கூட ஏறத்தாழ ஒருவர் கூறலாம்) விளங்கப்படுத்துகிறார்.

எமெரீச்-ஓர்லோஃப் படத்திலிருக்கும் தவறுகளையும், அபத்தங்களையும் மற்றும் நிரூபிக்கப்படாத ஊகங்களையும் பட்டியலிடுவதென்பது மதிப்புடைய முயற்சியாக இருக்குமென்பதைவிட, அது நிறைய இடத்தை நிரப்புவதாக இருக்கும். இருப்பினும், நாம் சிலவற்றை குறிப்பிடுவோம். முந்தைய திரைப்பட விமர்சனத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள அவற்றில் சில, HSஆல் அவருடைய மின்னஞ்சலில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. (ஸ்காட்ஸின் கேலிச்சித்திர கதாபாத்திரம் சர் ஆர்தர் வார்டோர் போல, "தேதிகள், பெயர்கள் மறும் உண்மையின் அற்பத்தனமான விஷயங்கள் மூலம் ஒருவித சில்லறைத்தனமாக இலாபம் பார்க்கும் போக்கில், நமக்கு கடிதம் எழுதியவர் நம்மை எரிச்சலூட்ட மாட்டார் என்று நம்புகிறோம்):

* 1593இல் கிறிஸ்டோபர் மார்லோவ் கொல்லப்பட்ட நிலையில், Anonymous படத்தில், 1598இல் மார்லோவ் இருப்பதாக ஒரு வேடிக்கையான (மற்றும் விசித்திரமான தவறு) நாடகபாணியில் முக்கியமாக இடம் பெற்றுள்ளது. அவரின் மரணத்திற்கு பின்னர், ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் வரையில் எழுதப்பட்டிராத ஒரு நாடகத்தை மார்லோவ் ஏளனம் செய்வதாக உள்ளது.

*பிலீபிய (plebeian) உட்கூறுகள் மிகவும் முக்கிய பாத்திரம் வகிக்கும் A Midsummer Night’s Dream நாடகத்தை பிரபுத்துவ ஆக்ஸ்போர்டு கோமான், 1559இல், அவரின் ஒன்பதாவது வயதில் எழுதினார் என்பது களிப்பிற்காக செய்யும் வாதமில்லாமல் வேறென்ன.

*Richard III நாடகம் 1597இல் இருந்து தான் அச்சில் இருக்கிறது, மற்றும் அதன் இரண்டாவது பதிப்பு 1598இல் வெளியானது என்கிற நிலையில், படத்தில் எசெக்ஸ் கோமானின் (Earl of Essex) 1601 கிளர்ச்சியில் அவருக்கு உதவ Richard III எழுதப்பட்டு, அரங்கேற்றப்படுகிறது. உண்மையில் எசெக்ஸின் எதிரெழுச்சியோடு Richard II நாடகமே பொருந்தி நின்றது. ஆனால் அது ஒரு கூனி வில்லனை உட்கொண்டிருக்கவில்லை.

*முதலாம் எலிசபெத் பல முறைதவறி பிறந்த வாரிசுகளைக் (எத்தனையென்று குறிப்பிடப்படவில்லை; படத்தைப் பொறுத்தவரையில் குறைந்தபட்சம் மூன்று) கொண்டிருந்தார் என்றும், அவர்களில் ஒருவரோடு (அது வேறுயாருமல்ல ஆக்ஸ்போர்டு கோமான் தான்) அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பதும், அவர்மூலமாகவே மேலே குறிப்பிடப்பட்ட வாரிசுகளில் ஒன்றை (Earl of Southampton) அவர் பெற்றார் என்பதும் படத்திலிருக்கும் வாதம்.

* Romeo and Juliet முற்றிலும் "ஐஞ்சீரடியில் எழுதப்பட்ட ஒரு துன்பியலான காதல் கவிதை" (உண்மையில் அது அவ்வாறு இல்லை) என்ற உண்மையால் ஷேக்ஸ்பியரின் சமகாலத்திய நாடகாசிரியர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும் என்று வலியுறுத்தப்படுகிறது. டொரொண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹோல்ஜெர் செமெ குறிப்பிடுகையில், மார்லோவ் மற்றும் தோமஸ் டெக்கர் (Anonymousஇல் பலியாக்கப்பட்டிருக்கும் மற்றொரு கதாபாத்திரம்) உட்பட பல ஆங்கில நாடகாசிரியர்கள் "வெறும் செய்யுள் வரிகளில் குறிப்பிடத்தக்க எதையும் காணாமலேயே, பல ஆண்டுகளாக அவற்றை கொண்டு திறமையாக பகட்டாரவாரம் செய்து வந்தனர். அரங்கேற்றப்பட்ட அந்த படைப்பு செய்யுள் வடிவத்தில் அல்ல, மாறாக உரைநடை வடிவத்தில் இருந்தது என்பதை மறந்துவிட வேண்டாம்,” என்று சுட்டிக்காட்டுகிறார்.

*1593இல் முதன்முதலில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கவிதையான ஷேக்ஸ்பியரின் Venus and Adonis, எலிசபெத்தின் பழைய காதலரால், அதாவது ஆக்ஸ்போர்டால், எலிசபெத்திற்கு பிரத்யேகமாக அர்பணிக்கப்பட்ட ஒரு புதிய படைப்பாக, பெப்ரவரி 1601இல் பதிப்பிக்கப்பட்டதாக காட்டப்படுகிறது.

*ஜேம்ஸிற்கு நெருக்கமான ஆதரவாளராக, மற்றும் எசெக்ஸிற்கு (இவர் பின்னர் ஸ்காட்டிஷ் அரசரின் பிரபுத்துவ-தேசிய எதிரியாக காட்டப்படுகிறார்) எதிரியாக இருப்பதாகவும், எலிசபெத்துக்கும் மற்றும் அவருக்கு பின்னர் ஆட்சிக்குவந்த முதலாம் ஜேம்ஸ் (ஸ்காட்லாந்தின் ஆறாம் ஜேம்ஸ்) இருவருக்கும் ஒரு மூத்த ஆலோசகராக விளங்கும் ரோபர்ட் சிசெலைக் குறித்த விளக்கம். Guardianஇல் ஜேம்ஸ் ஷாப்பிரோ குறிப்பிடுகையில், “இங்கிலாந்தில் எலிசபெத் ஆட்சி முடிவுக்கு வந்துகொண்டிருந்த ஆண்டுகளின் போது, ஜேம்ஸ் பேரரசருக்கு எசெக்ஸ் மிகவும் நெருக்கமான ஆதரவாளராக இருந்தார் [மேலும் அவர் முதல்முறை சிறையிலிருந்த போது எசெக்ஸ் அவருடன் இரகசியமாக கடித தொடர்பு கொண்டிருந்தார்]. ஜேம்ஸின் அன்னை ஸ்காட்ஸின் இராணி மேரியின் மரணத்தில் அவர் வகித்த பாத்திரத்திற்காக, ஜேம்ஸ் மனவெறுப்போடு அவரை துளைத்துவிடுவார் என்று வில்லியம் சிசெல் அஞ்சினார்,” என்று குறிப்பிடுகிறார்.

*ரோபர்டின் தந்தையும், ரோபர்டிற்கு முன்னர் எலிசபெத்திற்கு ஓர் ஆலோசகராக இருந்தவருமான வில்லியன் சிசெலைக் கேலி செய்யும் விதத்தில் Hamletஇல் போலோனியஸ் கதாபாத்திரத்தைச் சித்தரிக்கும் முடிவு, ஓர் உயிரோட்டமான அதிகாரியின்மீது நிலைகுலைக்கும் மற்றும் துஷ்டத்தனமான தாக்குதலாக உள்ளது. அது உடனடியாக பார்வையாளர்களால் உணரப்பட்டது. சிக்கல் என்னவென்றால், இத்தகையவொரு கடுமையான தாக்குதல் வரலாற்றுரீதியில் கேள்விக்கிடமின்றி போய்விடுமா என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு, Hamlet முதன்முதலில் அரங்கேற்றப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே வில்லியம் சிசெல் இறந்திருந்தார்.

*ஒட்டுமொத்த கட்டுக்கதையும், அர்த்தமற்ற குழப்பங்களும் மற்றும் ஷேக்ஸ்பியர்-ஆக்ஸ்போர்டு வஞ்சனையாளர்களின் தரப்பில் பென் ஜோன்சனின் பங்கும் இருந்திருக்கலாம் என்பதற்காக அந்த நாடகாசிரியரும் சித்திரவதைக்கு ஒத்த நிகழ்வுகளுக்கு உள்ளானார் என்பதும், அதற்கு எந்த அடித்தளமும் இல்லையென்றாலும் கூட, அவை ஓர்லோஃபின் மட்டுப்பட்ட கற்பனையில் மட்டுமே இருக்க முடியும். (ஜோன்சன் பலமுறை சிறை சென்றார், ஒருமுறை மனித-கொலைக்காகவும் கூட சென்றார், ஆனால் ஷேக்ஸ்பியர் மற்றும் ஆக்ஸ்போர்டு கோமானுக்கு எதையும் செய்ததற்காக ஒருபோதும் செல்லவில்லை.)

*ரோபர்ட் சிசெலின் குண்டர்களால் குளோப் நாடககூடம் எரிக்கும் காட்சி, (உண்மையில் அந்த நாடககூடம் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே அழிக்கப்பட்டது) முற்றிலும் தொடர்பில்லாத விதத்தில் உள்ளது. (ஜூன் 29, 1613இல் Henry VIII நாடகம் நடந்து கொண்டிருந்த போது, நாடகத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு பீரங்கி, தவறுதலாக வெடித்து, உத்திரத்தையும், ஓலைகளையும் எரித்தது).

இவையனைத்தும் வெறுமனே "கவிதைகளின் உரிமை சார்ந்தது மட்டுமா?” ஒரு குறிப்பிட்ட புள்ளியைக் கடக்கும் போது, எண்ணிக்கையானது பண்பின் தரமாக திரும்புகிறது. ஓர்லோஃப் வெறுமனே ஒருசில உண்மைகளை மட்டும் மாற்றியமைக்கவில்லை. அவர் அவருடைய கருத்தேற்றத்திற்கு பொருந்திய வகையில், எலிசபெத்திய அரசியல் மற்றும் கலாச்சார வாழ்வை மறு-ஒழுங்கமைப்பு செய்கிறார்.

முந்தைய முதல் விமர்சனத்தில் குறிப்பிட்டவாறு, ஓர்லோஃபும், எமெரீச்சும் 'இருதலைபட்சமாக இருக்கிறார்கள்'. சான்றாக, ஒருபுறம், ஓர்லோஃப் குறிப்பிடுகையில், “என்னுடைய திரைக்கதை சாத்தியமான அளவிற்கு உண்மையை சார்ந்து துல்லியமாக இருக்க வேண்டுமென விரும்பினேன்,” என்று குறிப்பிடுகிறார். மறுபுறம், அதே Wall Street Journal கட்டுரையில் அவர், “படத்தில்எந்த படத்திலும் உண்மை இல்லை என்பதே உண்மை. நிஜமான இடத்தில் நிஜமான மனிதர்களைக் குறித்த, உண்மையென்று நாம் கருதும் படங்களிலும் கூட, உண்மை அவ்வாறு இருப்பதில்லை!” என்று வாதிடுகிறார். இது அலட்சியமான, தெளிவற்ற "பின்நவீனத்துவ" சார்பியல்வாதத்தின் மற்றும் சோம்பேறித்தனத்தின் சீரிய அறிக்கையாகும். இதை இதைவிட சிறப்பாக வேறு எவராலும் செய்ய முடியாது.

ஷேக்ஸ்பியரின் பெயரில் சாட்டப்பட்டுள்ள நாடகங்களை அவர் எழுதவில்லை என்ற வாதத்தைப் பொறுத்த வரையில், கருத்துமுரண்பட்ட வாதங்களை வடிவமைத்து காட்டும் பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகள் உள்ளன. ஷேக்ஸ்பியர் இருந்தார் என்பதற்கு ஆதாரமில்லை அல்லது அந்த நாடகங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை, மற்றும் குறிப்பாக அவர் படைப்புகளுக்கு சமகாலத்திய ஆதாரங்கள் எதுவும் இல்லை என்ற வாதங்களைப் பொறுத்த வரையில், இந்த வலைத்தளம் சில ஆதாரங்களைத் தருகிறது.

இருந்தபோதினும் சில புள்ளிகள் இங்கே:

ஷேக்ஸ்பியரின் எந்தவொரு கடிதமும் இப்போதில்லை என்ற வாதத்தையே HSஉம் கூறுகிறார். உண்மையில், Venus and Adonis (1593) மற்றும் The Rape of Lucrece (1594) இரண்டும் அவற்றின் அறிமுக மடல்களில், வில்லியம் ஷேக்ஸ்பியரின் கையொப்பத்தையும், சௌதம்தொன் கோமானுக்கு (Earl of Southampton) எழுதப்பட்டிருப்பதைக் குறித்து காட்டுகின்றன. இரண்டு கடிதங்களுமே பணிவான பாணியில், சாதாரண மனிதராக இருக்கக்கூடிய ஒருவரால் ஒரு தலைச்சிறந்த ஒருவருக்கு எழுதப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு கோமான் போன்ற ஒரு பிரபுத்துவவாதிக்கு இது அவ்வாறு சிந்திக்கவே முடியாததாக இருந்திருக்க கூடியதாகும்.

ஷேக்ஸ்பியர் நாடகங்களின் (1623) முதல் தொகுப்பானது, “To the Memory of My Beloved the Author, Mr. William Shakespeare” என்ற பென் ஜோன்சனால் எழுதப்பட்ட அசாதாரணமான மற்றும் ஆழ்ந்த கவிதைத்தொடரை முன்னுரையாக கொண்டுள்ளது. (பென் ஜோன்சன் அப்போது உடன்வாழ்ந்த நாடகாசிரியர். எதுவென்னவென்று இவருக்கு தெரிந்திருக்கும் என்று கருதப்படுகிறது) அவருடன் இருந்து மறைந்த நண்பரான அந்த நாடகாசிரியருக்கு ஜோன்சன் பின்வருமாறு எழுதுகிறார்: “Soul of the age! The applause, delight, the wonder of our stage, My Shakespeare, rise!”

ஷேக்ஸ்பியரைக் குறிப்பிட்டு, “Sweet Swan of Avon!” என்ற வரிகளை அந்த கவிதை கொண்டுள்ளது. அதுவொன்றே, ஸ்ட்ராட்போர்டு-அபான்-அவொன் (Stratford-upon-Avon) நகரம் ஷேக்ஸ்பியர் பிறந்த இடமேயொழிய, ஆக்ஸ்போர்டு கோமானின் பிறப்பிடமல்ல என்ற வாதத்தைத் தீர்த்துவிடுகிறது. ஆனால் Anonymous படத்தை உருவாக்கியவர்களும், உண்மையென கருததக்க வகையில் ஷேக்ஸ்பியருக்கு எதிராக தூண்டிவிட்டுவரும் ஏனையவர்களும் ஜோன்சன் ஏன் அந்த எழுத்தாளரின் உண்மையான அடையாளத்தை மூடிமறைக்கிறார் என்ற ஒரு "தத்துவத்தை" பிடித்துக்கொள்கின்றனர். இதுவே போதுமென்று சமாதானமடைபவர்கள் அதற்காக வரவேற்கப்படுகிறார்கள்.

வேறு ஆதார வகைகளும் உள்ளன. ஆக்ஸ்போர்டை பிரஸ்தாபிப்பவர்கள், 37 நாடகங்கள் அனைத்தும் கோமான் மரணமடைந்த ஆண்டான 1604க்கு முன்னரே எழுதப்பட்டதாகவும், “அப்போது அவை கையெழுத்து பிரதிகளாக வைக்கப்பட்டு, பின்னர் 1604க்குப் பிந்தைய நிகழ்வுகளையும் சேர்த்து அவை முக்கிய மறைகுறிப்புகளோடு நாடகத்துறையினரால் திருத்தம் செய்யப்பட்டதாகவும் வாதிட வேண்டியவர்களாக உள்ளனர். (ஜோனாதன் ஃபேட், The Genius of Shakespeare). இது ஏன் இவ்வாறு செய்யப்பட்டதென, யாராலும் காரணத்தை விவரிக்க முடியாது. பேராசிரியர் ஃபேட் தொடர்ந்து குறிப்பிடுகையில், “ஆனால் இந்த வாதம், Macbeth மற்றும் The Tempest பொறுத்த விஷயத்தில் முற்றிலும் பிழையாக உள்ளது. முதலாவது நாடகம் (Macbeth) வெறுமனே [1605இன்] துப்பாக்கிமருந்து சதியை மட்டும் குறிப்பாக சுட்டிக்காட்டவில்லை. அது முழுவதுமே துப்பாக்கிமருந்து குறித்த நாடகமாக இருக்கிறது. அதேவேளை அடுத்த நாடகம் (The Tempest) 1603இல் புளோரியோவின் Montaigne மொழிபெயர்ப்பின் பிரசுரத்திற்குப் பின்னர் மட்டுமே எழுதப்பட்டிருக்க முடியும். அந்த சூறாவளி 1609இல் பெர்முடாவில் சர் ஜோர்ஜ் சோமெரின் (Sir George Somer) கப்பலை மூழ்கடித்தது,” என்று குறிப்பிடுகிறார்.

இதற்கும்மேலாக, ஷேக்ஸ்பியரின் பிந்தைய நாடகங்களை விமர்சித்த சோவியத் விமர்சகர் அலெக்சாண்டர் A. ஸ்மெர்னோவ்வால் செய்யப்பட்ட பகுப்பாய்வு (அது ஆக்ஸ்போர்டு ஆதரவாளர்களுக்கு எதிராக திரும்பியிருக்கவில்லை என்றபோதினும் கூட), குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. Shakespeare: A Marxist Interpretation என்பதில் ஸ்மெர்னோவ் 1610க்கு பின்னர் இலண்டன் தியேட்டரில் ஏற்பட்ட மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகிறார். "அதிகரித்துவந்த செல்வந்தர்களின் ஆதரவினாலும், அரசாங்கங்கள்மீது புரீடன்கள் (Puritans) கொண்டிருந்த சமரசமற்ற வெறுப்பினாலும், அது மிகவும் பலமாக பிரபுத்துவத்திற்கு சார்பாக" மாறியிருந்தது. பிரான்சிஸ் போமாண்ட் மற்றும் ஜோன் பெட்சர் ஆகிய நாடகத்துறை இரட்டையர்களின் செல்வாக்கோடு தொடர்புபட்ட ஒருவித வித்தியாசமான நாடகம் நடைமுறைக்கு வந்திருந்தது.

ஷேக்ஸ்பியர் அரங்கங்களில் கூட்டம் குறைந்தன; “அவருடைய பாணியையே கூட பாதிப்பிற்கு உட்படுத்திய சில சித்தாந்த விட்டுகொடுப்புகளைச் செய்து" அவர் விடையிறுப்புக் காட்டினார், என்று ஸ்மெர்னோவ் தொடர்கிறார். இந்த காலக்கட்டத்தில் (1609-1611) அவர் பெட்சர் செய்த விதத்தில் பல சோகம் கலந்த நகைச்சுவை நாடகங்களை [Cymbeline (1609), The Winter’s Tale (1610), and The Tempest (1611)] எழுதினார். அதன் பின்னர் உளவியல் ஆய்வுகளும், தீர்க்கமான உத்வேக செயல்பாடுகளும் காணாமல் போகத்தொடங்கின; நிஜ மெய்ம்மைவாதம் கற்பனை கதைகளுக்கும், புராணங்களுக்கும் பாதையை அளித்து விலகியது. பொதுமக்கள் விரும்பியபடிக்கு, வாழ்க்கை சிக்கல்களைக் கொண்ட மற்றும் புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்ட கதைகளை (Cymbeline) ஷேக்ஸ்பியர் நிரப்ப வேண்டியவரானார். அவருடைய நாடகங்கள் மீண்டும் ஒருமுறை முற்றிலும் நாடககூத்துகள், கிராமியகலைகள், மற்றும் கற்பனை காட்சிகள் போன்ற அலங்கார, அழகுநய உட்கூறுகளால் நிரம்பின. இவையனைத்தும் அவருடைய ஆரம்பகாலக்கட்டத்தில் நிரம்பியிருந்தவை. பின்னர் அவருடைய இரண்டாம் காலக்கட்டத்தில் இவை இல்லாமல் போயிருந்தன.” இத்தகைய நாடகங்களை வேறு காலக்கட்டத்தில் எழுதுவதென்பது ஏறத்தாழ நினைத்தும் பார்க்க முடியாததாகும்.

இருப்பினும், பொதுவாக, ஸ்ட்ராட்போர்டியனுக்கு எதிரானவர்கள் (anti-Stratfordians) சமாதானமடைந்தவர்களாக தெரியவில்லை. இங்கே அடிப்படை பிரச்சினை தர்க்க வாதமாக இருக்கவில்லை; ஒவ்வொரு உண்மையும் ஓர் அளப்பரிய மூடி-மறைத்தலின் மற்றுமொரு உட்கூறாக காட்டப்படுகின்றன. 'அந்த நாடகங்களின் எழுத்தாளர் ஸ்ட்ராட்போர்டு-அபான்-அவொனின் வில்லியம் (William of Stratford-upon-Avon) அல்ல என்று ஷேக்ஸ்பியரின் சமகாலத்திய ஒரேயொரு நபர் கூட அறிவுறுத்தவில்லை; ஒரு துணுக்கு ஆதாரமும் கூட ஆக்ஸ்போர்டு கோமானை ஷேக்ஸ்பியரின் மேதைமையோடு இணைப்பதாகவும் இல்லை,' என்ற இவையெதுவுமே எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.

முதல்பார்வைக்கு பார்த்தால், ஷேக்ஸ்பியர் படைப்புகளின் உள்ளடக்கம் மற்றும் சாரத்தோடு, ஷேக்ஸ்பியர் நாடகங்களின் நூலாசிரியர் குறித்த வாதத்திற்கு எந்த சம்பந்தமும் இருப்பதாகவே தோன்றாது. எதுஎப்படியோ, பெயரில் என்ன இருக்கிறது? அது பிரான்சிஸ் பேகனோ, எட்வர்டு டி வெர்ரோ அல்லது வில்லியம் ஷேக்ஸ்பியரோ யார் நாடங்கங்களை எழுதியிருந்தால் என்ன? அது வசனத்தின் ஒரு வார்த்தையையோ அல்லது ஒரேயொரு நாடக காட்சியையோ மாற்ற போவதில்லை.

ஆனால், ஆழ்ந்த பிரதிபலிப்பில், 400 ஆண்டுகளுக்கு முந்தைய நாடகங்களின் வரலாற்று சித்தரிப்பும், விமர்சன விளக்கங்களும் இரண்டாந்தர விஷயங்கள் அல்ல என்பது வெளிப்படையாக இருக்கும். சமகாலத்திய வாசகரோ அல்லது பார்வையாளரோ அத்தகைய கலை படைப்புகளோடு நேரடியாக மற்றும் உடனடியான தொடர்பைப் பெற போவதில்லை. புத்திஜீவிய "வாயிற்காவலர்", அங்கே, ஓரளவிற்கு முக்கியஸ்தராக ஆகிறார், அல்லது ஆவதற்கு நிச்சயமாக விருப்பமுறுகிறார். தொடர்ந்து நடந்துவரும் விவாத துடிப்புகள் எடுத்துக்காட்டுவதைப் போல, இலக்கிய கலாச்சாரத்தில் முக்கிய பிரமுகரைக் குறித்த சொல்லாடலைக் கட்டுப்பாட்டில் வைப்பது அல்லது திருப்பிவிடுவதென்பது சிறிய விஷயமல்ல.

19 மற்றும் 20ஆம் நூற்றாண்டுகளின் ஸ்ட்ராட்போர்டியனுக்கு எதிரான ஆங்கிலேயர்கள் பலரைப் பொறுத்தவரையில், கீழ்குடியில் பிறந்த "குறுகிய-புத்தி வணிகரான" ஷேக்ஸ்பியர் ஓரங்கட்டப்பட வேண்டும்; ஆங்கில பெருமையின் புனைவுகளை வைத்திருக்கக்கூடிய ஒரு பிரபுத்துவர், அந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தப்பட வேண்டும் என்ற வர்க்க கர்வமே அதில் ஒரு உந்தும் சக்தியாக உள்ளது.

அதுவே சமகாலத்திய வாதங்களில் ஓர் உட்கூறாக நிறைந்திருக்கிறது. ஆனால் அது செல்வாக்கு பெற்றும் இல்லை, அல்லது குறைந்தபட்சம், நேரடியாகவும் இல்லை.

ஆக்ஸ்போர்டு ஆதரவாளர்களும், நூலாசிரியர் குறித்து சூழ்ச்சி செய்யும் ஏனைய தத்துவவியலாளர்களும் ஷேக்ஸ்பியரின் மேதைமையை அடிக்கடி கௌரவிப்பதும் உண்டு. பொதுவாக ஓர்லோஃபும், எமெரீச்சும் இதிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். HS அத்தகையவொரு பாராட்டையும் அவருடைய குறிப்புரையில் இணைக்கிறார், அதுவாவது: “அந்த படம் [Anonymous] ஷேக்ஸ்பியர் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் அல்ல. அது ஆங்கில மொழியில் தலைச்சிறந்த எழுத்தாளராக இருந்திருக்கக்கூடியவரின் பிரமிப்பூட்டும் நாடகங்கள் மற்றும் கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு புகழாரம் ஆகும்,” என்கிறார்.

வரலாற்றில் நினைவுகூரத்தக்க ஒரு பிரபலமாக விளங்கும் ஷேக்ஸ்பியர் மீது தாக்குதலை கொண்டு வருவது சிக்கலானதாகும். அவருடைய படைப்பு மேற்கத்திய கலாச்சாரத்தின், மற்றும் பரந்து விரிந்தளவில் உலக கலாச்சாரத்தின் எலும்பு-மஜ்ஜைக்குள் மிகவும் ஆழமாக ஆழ்ந்துள்ளது. வெளிப்படையாக தடுமாறும் ஒரு ஹேம்லெட், இரகசியமாக திட்டமிடும் ஒரு மேக்பெர்த் பெண்மணி, ஒடுக்குமுறையின் மற்றும் பழிவாங்கும் ஒரு ஷேய்லோக், முற்றத்திலிருந்து தாவிகுதிக்க விழையும் மூன்றாம் ரிச்சர்டு, கொடூரமான பழிக்கு அஞ்சாத ஃபால்ஸ்டாஃப் நாடகங்களில் இருக்கும் இவர்களையும், இன்னும் ஏனையவர்களையும் வெறுமனே நாம் நாடக கதாபாத்திரங்களாக அல்ல, மாறாக முக்கிய மனிதர்களாகவே உள்வாங்கியுள்ளோம்.

பிரபலமான மரபுத்தொடர்களுக்கு இரண்டாவது மிகப்பெரிய ஆதாரமாக விளங்கும் ஜேம்ஸ் அரசரின் பைபிளில் பயன்படுத்தப்படும் வெளிப்பாடுகளையும்விட, ஷேக்ஸ்பியரின் சொற்தொடர்கள் அன்றாட ஆங்கில பேச்சில் அதிகளவில் வழக்கத்தில் உள்ளன. “a laughing stock,” “dead as a doornail,” “eaten out of house and home,” “a plague on both their houses,” “he wears his heart on his sleeve,” “in the twinkling of an eye,” “send someone packing,” “mum’s the word,” “at one fell swoop,” “it’s Greek to me,” “fight fire with fire,” “good riddance” போன்றவற்றையும் மற்றும் இன்னும் ஏனைய ஆயிரக்கணக்கான சொற்றொடர்களையும் 37 நாடகங்களில் ஒன்றைக்கூட ஒருபோதும் பார்த்திராத மக்கள் வேண்டுமானால் பயன்படுத்துவதைச் சிரமமாக உணரலாம். ஆனால் அவை அனைத்தும் ஷேக்ஸ்பியரால் கண்டுபிடிக்கப்பட்டன அல்லது பிரபலமாக்கப்பட்டன. ஷேக்ஸ்பியர் படைப்புகளில் இசை பொருந்தியிருந்த விதமும், கையாளப்பட்ட விதமும் வெர்டி (Verdi) மற்றும் வேக்னர் (Wagner) போன்ற இசைக்கலைஞர்களால் நடத்தப்பட்ட இசைநாடகங்களிலிருந்து Prokofievஇன் கூட்டுநடனம் மற்றும் Cole Porterஆல் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி வரைக்கும் அவர்களின் இசைத்தொகுப்புகளில் இடம் பெற்றிருந்தது.

பகுப்பாய்வின் இறுதியாக, இந்த காரணத்திற்காகவே, ஷேக்ஸ்பியர் மீதான தாக்குதல், மற்றும் ஆக்ஸ்போர்டு வாதமும் மற்றும் ஏனைய அதுபோன்ற வாதங்களும், அதாவது அனைத்து ஷேக்ஸ்பியர் மீதான தாக்குதலும், ஏதேனும் ஒரு கோணத்தில் கையாளப்பட வேண்டியுள்ளதாக நான் வாதிடுகிறேன்.

நம்முடைய தற்போதைய அறிவுஜீவிய சூழலில், அந்த தாக்குதல் பரந்தளவிலான கருத்துருக்கள் மற்றும் கவலைகளைக் கையாண்ட ஒரு கலைஞராக, நவீன காலத்தின் தொடக்க காலத்தில் மிகவும் பிரமிக்கவைத்த மனித பிரச்சினைகளுக்கு சிறிதும் பின்வாங்காமல் போராடிய ஒரு மறுமலர்ச்சி பிரபலமாக விளங்கிய ஷேக்ஸ்பியரை மையத்தில் கொண்டுள்ளது. தேசிய, உலகியல் அல்லது பாலியல் வரம்புகள் இல்லாமல், ஒவ்வொருவரை குறித்தும், ஒவ்வொன்றை குறித்தும் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் எழுத துணிவுகொண்ட ஒரு நாடகாசிரியருக்கு அளிக்கப்பட்ட மிகப்பெரிய அவமதிப்பைப் போல, இந்தளவிற்கு ஒரு பின்நவீனத்துவ சார்பியல்வாதிக்கோ அல்லது கருத்துவாதிக்கோ, கலையில் "அடையாள அரசியலை" புகுத்துபவருக்கோ, அல்லது "கருத்து வேறுபாடுகளைக் கொண்ட" ஒரு தத்துவவியலாளருக்கோ ஏற்பட்டிருக்குமா?

மரமண்டைகள் மட்டுந்தான், ஷேக்ஸ்பியரை மற்றொரு சாதாரண "இறந்துபோன வெள்ளைநிற ஐரோப்பிய ஆண்மகன்" என்று வெளிப்படையாக அறிவிக்க தேர்ந்தெடுப்பர். ஆனால் ஏதோவொரு விதத்தில், அந்த வலியுறுத்தலும், பல விமர்சனங்களில் இருக்கின்றன. நனவுபூர்வமாகவோ அல்லது இல்லாமலோ, முதலாளித்துவ கலாச்சாரம் உருவாக்கிய உலக பிரசித்திபெற்ற ஒரு நபரை, கலைஞரை நெருக்கமானவராக காட்ட சுருக்குவதும், புகழ்மங்க செய்வதுமே அதன் நோக்கமாகும். அவரை ஒரு தற்பெருமை பேசுபவராக, ஒரு மோசடிக்காரராக மற்றும் ஒரு கொலைகாரராக Anonymous படத்தில் இழிவாக சித்தரிப்பதென்பது, HS குறிப்பிடுவதைப் போல, தற்செயலாகவோ அல்லது வெறுமனே "தூக்கிப்பிடித்து" காட்டுவதோ அல்ல. அது, அந்த கலாச்சாரத்தின் அஸ்திவாரத்திலேயே அழுகிப்போன, கண்ணுக்குப்புலப்படாத, சந்தேகத்திற்குரிய, இழிந்த ஏதோவொன்று உள்ளது என்ற, ஷேக்ஸ்பியருக்கு எதிரான வாதத்தின் மெய்யான அறிவுஜீவிய தாகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

அதற்கு முரண்பட்ட விதத்தில், ஒரு ஷேக்ஸ்பியரை உருவாக்கிய அதே உயிரினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக நாங்கள் பெருமை கொள்கிறோம். அது நன்னம்பிக்கைவாதத்தின் ஓர் ஆதாரமாக உள்ளது. எந்தளவிற்கு சவாலாக உள்ளதென்பது ஒரு விஷயமே அல்ல, மனிதயினத்தால் எவ்வித பிரச்சினையையும் சமாளிக்க முடியுமென்ற நம்பிக்கையை கணிசமான அளவிற்கு அது நமக்கு அளிக்கிறது. ஷேக்ஸ்பியரும், அவருடைய படைப்புகளும் இருக்கின்றன என்றறிவதே அதற்கு ஆழ்ந்த மறு-உத்வேகத்தை அளிக்கின்றன.

எலிசபெத்திய நாடகாசிரியர் பல வழிகளில் ஓர் எதிரீடாக உள்ளார். அவருடைய கலைத்துவ மேதமை திணறடிப்பதாகவும், சாதாரணமானவர்களுக்கு புரிந்துகொள்ள முடியாததாகவும், நாடகாசிரியரையும், வரலாற்றுரீதியில் அவருடைய சமகாலத்தியவர்களையும் காணமுடியாமலும் உள்ளதாக தெரிகிறது.

கிறிஸ்டோபர் மார்லோவ் குறித்து செமெர்னோவ் கருத்து கூறுகையில், இளம் வயதிலேயே இறந்துபோன அந்த ஆங்கில மறுமலர்ச்சியாளரின் "அதிர்வூட்டும் மேதமையைக்" குறித்து சொல்வளத்துடன் எழுதினார். மார்லோவின் நாடகங்கள், அனைத்து உத்வேகத்தையும், அனைத்து அதீத பலத்தையும், மற்றும் புதிய சிந்தனை மற்றும் விருப்பத்தை பயமுறுத்தும் அனைத்து கற்பனாவாதத்தையும், வீண்ஜம்ப வர்க்கத்தையும், உலகை வெற்றிகொள்வதற்கான சண்டைக்குள் அடித்துபிடித்து நுழையும் பேரார்வத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் காண்கிறார்.

வலதில் இருந்த ஒரு குறிப்பிடத்தக்க அறிவுஜீவியான செமெர்னோவ், ஷேக்ஸ்பியரைக் குறித்த அவருடைய பகுப்பாய்வில், பகுப்புவாதத்திலிருந்து (schematism) முற்றிலும் சுதந்திரமாக இருந்துவிடவில்லை. அது 1930களில் ஸ்ராலினிச ஆட்சியின் இருண்டகாலத்தில் செய்யப்பட்டது. ஆனால், "நாடகாசிரியரின் கண்ணோட்டத்தின் ஒரு விமர்சன குணாம்சம் "ஒரு புதிய அறநெறியாக", அது மதத்தின் அல்லது நிலப்பிரபுத்துவ பாரம்பரியத்தின் அதிகாரத்தில் அல்லாமல், மாறாக மனிதனின் சுதந்திர சிந்தனையின்மீது, அவனுடைய மனசாட்சியின் குரலின்மீது, உலகையும் மற்றும் அவனையுமே குறித்த அவனின் பொறுப்புணர்வின்மீது தங்கியிருந்தது" என்று அவர் குறிப்பிட்ட போது அவர் உறுதியானவிதத்தில் சரியாக இருந்தார். இது உணர்வுகளிலிருந்து விடுதலையடைதல் (emancipation of the feelings) மற்றும் தனிநபரின் தனிமனிதவியல்பு (personality of the individual) ஆகியவற்றிற்கு அழைப்புவிடுத்தது; குறிப்பாக, இது மறுமலர்ச்சியின் அதி-முக்கியமான மற்றும் அவசியமான குணாம்சமாக இருந்த தனித்துவவாதத்தை (individualism) அவசியப்படுத்தியது. அது ஷேக்ஸ்பியரில் அதன் முழு வெளிப்பாட்டைக் கண்டது.”

செமெர்னோவ் ட்ரொட்ஸ்கியின் இலக்கியமும் புரட்சியும் (Literature and Revolution) படித்திருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படைப்பில் அந்த எழுத்தாளர் குறிப்பிடுவது: "அதன் வளர்ச்சி காலக்கட்டத்தின் போது மனித உறவுகளை துண்டுதுண்டாக உடைத்து போட்டுள்ள, பூர்ஷூவா சமூகம், அதற்கென ஒரு பெரும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. தனிநபர் விடுதலை என்பதே அதன் பெயர். அதிலிருந்து தான் ஷேக்ஸ்பியரின் நாடகங்களும், கோத்தேவின் Faustஉம் வளர்ந்தன. மனிதன் தன்னைத்தானே உலகின் மையத்திலும், அதன்மூலம் கலையின் மையத்திலும் கூட, நிறுத்திக் கொண்டான். இந்த கருத்துரு பல நூற்றாண்டுகளாக பின்தொடர்ந்தது. எதார்த்தத்தில், அனைத்து நவீன இலக்கியங்களும் இந்த கருத்துருவின் விரிவாக்கமேயொழிய, வேறொன்றுமில்லை,” என்று வாதிட்டார்.

ஷேக்ஸ்பியர் குறித்து HSஇன் கண்ணோட்டம் அவருடைய கடிதத்தின் இறுதியில், அவர் பின்வருமாறு எழுதுகையில், மிகவும் சக்தியுடன் வெளிப்படுகிறது: “நீங்கள் வர்க்க மேன்மைகளைப் பார்க்கிறீர்கள் என்றால், அந்த நாடகங்களையும், 14அடி செய்யுள்களையும் கடந்து பார்க்க வேண்டியதில்லை. 37 நாடகங்களில், 36 சிறப்பு நீதிமன்றங்களிலும், செல்வந்த உலகிலும் நடைபெறுகிறது. ஷெய்லோக் மற்றும் பால்ஸ்டாஃப் போன்ற சிலரைத் தவிர, ஏறத்தாழ அனைத்து முதன்மை கதாபாத்திரங்களும் பிரபுத்துவத்தினராக உள்ளனர். இவை அனைத்திலிருந்தும், பிரபுத்துவ வாழ்வின் நவநாகரீகவாதிகள், வீரமரபினர், மற்றும் பெருந்தன்மையாளர்களோடு அடையாளம் காட்டி, ஷேக்ஸ்பியர் அவரின் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தை முற்றிலுமாக பகிர்ந்து கொண்டுள்ளார் என்று நாம் கூறலாம். ஷேக்ஸ்பியரில் ஏறத்தாழ அனைத்து கீழ் வர்க்க கதாபாத்திரங்களும் நகைச்சுவை பாணியில் அறிமுகப்படுத்தப்பட்டு, குறைவான அபிவிருத்தியே அவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ளது. Snug, Stout, Starveling, Dogberry, Simple, Mouldy, Wart, Feeble மற்றும் இதர பிற அவர்களின் பெயர்களே அவர்களின் மதிப்பைக் குறிப்பிட்டுக் காட்டுவனவாக உள்ளன. வரலாற்று நாடகங்கள் உயர்மட்ட அதிகாரங்களோடு ஒருங்கிணைந்து நிற்பதையும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலுமே பெரிதும் அக்கறை கொண்டுள்ளன என்பதோடு, உயர்-ரக இரத்த மக்களின்மீது விழும் தவறுகளையும் சரியென்று காட்டுவதிலேயே அக்கறை கொண்டுள்ளன.”

ஒரு அசாதாரணமான பத்தி. இது அதன் விரிந்த பொருளில் அம்பலப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியர் ஒருவேளை உயர்-வர்க்கத்திற்கு சாதகமாக இருந்திருக்கலாம் என்பதில் HS உடன்படுகிறாரா அல்லது உடன்படவில்லையா என்பது தெளிவாக இல்லை. அந்த பத்தி ஒரு விரோத, போலி-இடது மனோபாவத்தை வெளிக்காட்டுகிறது. ஆனால் ஒரு தலைச்சிறந்த மனிதர் "பிரமிப்பூட்டும்" நாடகங்களை எழுதியுள்ளார் என்பதற்கு ஆதரவாக நம்முடைய வாசகர் உள்ளார். ஆகவே அது அவரை எங்கே நிறுத்துகிறது?

அனைத்திற்கும் முதலாவதாக, எந்தவொரு விஷயத்திலும், அந்த அணுகுமுறை முற்றிலுமாக வரலாற்றைக் கைவிட்டதாக உள்ளது. 1590கள் அல்லது 1600களின் தொடக்கத்தில் ஒரு பிரதான கலைஞரின் பிரச்சினையிலிருந்து விலகியிருக்கும் ஒரு நிலைப்பாடாக, ஏதோவொருவகை "கீழ் வர்க்க" வடிவத்திலிருக்கும் ஒரு கலைஞரை மட்டுமே நாம் ஏற்போம் என்று HS தெளிவாக அனுமானிக்கிறார். ஷேக்ஸ்பியர் அவருடைய காலத்தின், அதாவது பூர்ஷூவா காலத்தின் புரட்சிகர வர்க்கத்தோடு தொடர்புபடுத்தி அடையாளம் காணப்பட்டார். செமெர்னோவ் விவரிப்பதைப் போல, அவர் பூர்ஷூவா உள்ளடக்கத்தின் பெரும்பாலான பகுதியை வெளிப்படையாக விட்டுவிட்டிருந்தால், அது அவருடைய காலத்திலிருந்த ஏனைய அசாதாரணமான மனிதாபிமானவாதிகளைக் கருத்தில் கொண்டிருந்திருக்க வேண்டும். “மத்தியதட்டு வர்க்க கருத்துருக்கள் அவர்களின் சிந்தனைகளை போதியளவிற்கு வெளிப்படுத்தியிருக்கவில்லை. மேலும் அவை அவர்களின் முயற்சிகளின் ஆழத்தையும், விரிவையும் தடுத்திருந்திருக்கக்கூடும்.” எவ்வாறிருந்தபோதினும், பிரபுத்துவ அமைப்புகள் மற்றும் கருத்துத்துருக்களை நோக்கிய ஷேக்ஸ்பியரின் கோபம், அவருடைய படைப்புகளில் நீக்கமற நிறைந்துள்ளன.

எலிசபெத்திய இங்கிலாந்தில், பெரும் நிலப்பிரபுக்களுக்கு எதிராக, அரசியின் ஆதரவின்கீழ், பூர்ஷூவா, நற்குடிமக்கள் (மத்தியதட்டு மற்றும் குட்டி முதலாளித்துவ பெருந்தகைகள்) மற்றும் ஏனைய சமூக உட்கூறுகளுக்கு இடையில் இருந்த ஒரு தற்காலிக கூட்டணியைக் குறித்து நின்ற, தங்குதடையற்ற "அரச குடும்ப அதிகாரத்தை" நோக்கிய நாடகாசிரியரின் மனோபாவம் ஒரு சிறப்பார்ந்த மற்றும் வரலாற்றுரீதியிலான முற்போக்கு உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது என்பது HSக்கு தோன்றவில்லை.

ஷேக்ஸ்பியரின் "கீழ் வர்க்க கதாபாத்திரங்கள்" மீதிருந்த ஷேக்ஸ்பியரின் விரோதங்கள் குறித்து குறிப்பிடும் HSஇன் குறிப்புரைகளைப் பொறுத்த வரையில், அதற்கான சிறந்த மாற்றுமருந்து அந்த நாடகங்களை அவர் பார்ப்பதும், படிப்பதுமே ஆகும். உண்மையில் நமக்கு கடிதம் எழுதியவர் அவற்றில் ஒன்றையாவது ஆழ்ந்து சிந்தனைபூர்வமாக படித்துள்ளாரா என்று ஒருவர் கேட்க வேண்டியுள்ளது. ஷேக்ஸ்பியர் வீதிகளில் பேசப்படும் பேச்சுவழக்கிலும், மக்களின் வழக்குமொழியிலும் மிகவும் பரிச்சயப்பட்டிருந்தார். வேலையாட்கள், குதிரையோட்டிகள், சவக்குழி வெட்டுவோர், நாட்டுப்புறத்தார்கள், விவசாயிகள், விடுதி-பெண்டிர், செவிலியர்கள், காவலாளிகள், துணி நெய்வோர், கிராமத்து துறவிகள், கால்நடை மேய்ப்போர், கப்பலோட்டுவோர் மற்றும் சாதாரண சிப்பார்கள் என வாழும் மாந்தர்-தொகுப்பை (உண்மையில் இவர்களின் பாத்திரப்படைப்பு ஆக்ஸ்போர்டு கோமானால் முற்றிலும் சாத்தியப்பட்டிருக்காது), பெரும்பாலும் நகைச்சுவையின் ஆன்மாவாகவோ அல்லது சமயோசித உணர்வாகவோ, ஒரு வாசகர் அல்லது பார்வையாளரால் அங்கே காண முடியும். இவை போதுமான அளவிற்கு, தீர்க்கமாக நம்முடைய வாசகரின் குற்றச்சாட்டை பொய்யாக்குகிறது.

அந்த பத்தி HSஇன் வாதங்களை முற்றிலுமாக சிதைத்து விடுகிறது. அவருடைய வாதங்கள் துல்லியமாக இருந்ததென்றால், ஷேக்ஸ்பியர் ஏதோவொருவகை பிற்போக்கான பிரபுத்துவத்திற்கு வக்காலத்துவாங்குபவர் என்றால், அந்த வாதம் நிச்சயமாக 37 நாடகங்களையும் ஆக்ஸ்போர்டு எழுதினார் என்ற வாதத்திற்குப் பொருந்துகிறது. பின்னர் அவருடைய நாடகங்களும், கவிதைகளும் எந்தவிதத்தில் "பிரமிப்பூட்டுவன" என்று விளக்குவது கணிசமான அளவிற்கு மிகவும் சிக்கலாக போய்விடும்.

HS உணரவில்லை என்றபோதினும் கூட, அவருக்கு இரண்டு வழியுமே இல்லை. ஷேக்ஸ்பியரின் மொழி அழகும், புத்துணர்வும், ஆக்ஸ்போர்டு கோமானின் வழியில் அவர் ஒரு பிரபுத்துவனர் அல்லர் என்ற அவருடைய சொந்த சமூக இருப்போடு பிணைந்திருந்தது. மேலும் நாடங்களின் சமூக மற்றும் வரலாற்று சாரம், அதாவது, அவை ஒரு முழுவளர்ச்சி எய்தாத மாறிவந்த உலக முதலாளித்துவத்தின் உணர்வுகளை மற்றும் சிந்தனைகளை வெளியிட்டன. அவை அதன் அனைத்து பரிமாணங்களிலும் வாழ்வைக் குறித்த ஒரு பாரபட்சமற்ற தேடலையும், ஆய்வையும் சாத்தியமாக்கி இருந்தன.

எல்லாவற்றிற்கும் மேலாக, HSஇன் கடிதத்தோடு என்னால் குறைந்தபட்சம் கூட உடன்பட முடியவில்லை.

டேவிட் வால்ஷ்
29
நவம்பர் 2011

* * * * *

திரு. வால்ஷ் அவர்களுக்கு:

ரோலண்ட் எமெரீச்சின்Anonymous” படம் குறித்த உங்களின் திறனாய்வு குறித்து எழுதுகிறேன். பல ஆண்டுகளாக நான் யாருடைய திறனாய்வுகளைப் படித்துவந்தேனோ அந்த எழுத்தாளர், யாருடைய கூர்மையான உட்பார்வைகளும், அறிவும் உண்மையிலேயே முன்னோடியாக இருந்ததோ அந்த எழுத்தாளர், பல கோடி டாலர் ஷேக்ஸ்பியர் அமைப்பின் சலித்துஓய்ந்துபோன சாதாரண வாதங்களையே கிளிப்பிள்ளை போல கூறுவதைக் கண்டு, நான் உண்மையிலேயே அதிர்ந்தும், மனக்கவலை அடைந்தும் போயுள்ளேன். உலகிலுள்ள மிக பிரபலமான ஓரினசேர்க்கை இயக்குனர்களில் (gay director) ஒருவரும், நான் என்னுடைய நண்பர் என்று பெருமையோடு அழைக்கும் மனிதரான ரோலண்ட் எமெரீச் மீதும், திரைக்கதை எழுத்தாளர் ஜோன் ஓர்லோஃப் மீதும் இத்தகைய தனிப்பட்ட தாக்குதலை நடத்தும் அளவிற்கு நீங்கள் கீழிறங்கி போயுள்ளது உண்மையிலேயே மிகவும் துரதிருஷ்டவசமானதாகும். உயர்ந்த படைப்புத்திறனும், அர்பணிப்பும் கொண்ட, ஷேக்ஸ்பியர் துறையைக் கையிலெடுக்கும் துணிவும் கொண்ட இத்தகைய மனிதர்களின் ஒரே நோக்கம், இந்த பிரச்சினையின் மீதிருக்கும் சர்ச்சையை திணறடிப்பதே ஆகும்.

இந்த படம் ஷேக்ஸ்பியர் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதல் அல்ல. அது ஆங்கில மொழியில் தலைச்சிறந்த எழுத்தாளராக இருந்திருக்கக்கூடியவரின் பிரமிப்பூட்டும் நாடகங்கள் மற்றும் கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட ஒரு புகழாரம் ஆகும்.” ஸ்ட்ராட்போர்டிலிருந்து வந்த படிக்காத மேதையின் புராணத்தை அம்பலப்படுத்த, மற்றும் நீண்டகாலத்திற்கும் முன்னரே உண்மையான எழுத்தாளருக்கு இல்லாமல் அழிக்கப்பட்ட புகழை மீண்டும் பெற்று தர, அந்த சாதனையை நேராக நிறுத்துவதே அந்த படத்தின் நோக்கமாகும். ஸ்ட்ராட்போர்டின் வில்லியத்திற்கு அர்பணிக்கப்பட்ட அந்த படைப்புகள் ஒரு செல்வந்தரது என்ற கருத்தை நீங்கள் விரும்புகிறீர்களோ இல்லையோ, ஆனால் அது உண்மையா இல்லையா என்பதே இங்கே இருக்கும் ஒரே பிரச்சினையாக உள்ளது. இது வர்க்கம் குறித்த பிரச்சினையல்ல, மாறாக ஆதாரம் குறித்த பிரச்சினையாகும். உண்மையான ஆசிரியர் எட்வர்டு டி வெர் என்பதை ஆதாரங்கள் தெளிவாக சுட்டிக்காட்டுவதாக நான் நம்புகிறேன்.

அந்த கருத்துமுரண்பாட்டின் மீது திரு. எமெரீச்சை "கவன குறைவாக விட்டுவிட முடியாது" என்ற உங்களின் கருத்து, முற்றிலும் தவறாகும். பழைய நிலைப்பாடு முழுவதும் புகைச்சலும், எதிரொளியும் நிறைந்துள்ளது என்பதோடு அவை ஷேக்ஸ்பியர் மேதமையின் உண்மையான எழுத்தாளரை விவரிக்கவில்லை என்ற கருத்திற்கு அவர் ஒரு பலமான ஆதரவாளராக உள்ளார். ஸ்ட்ராட்போர்டிடம் ஒப்படைக்கப்பட்டமை குறித்து கேள்விஎழுப்புதல், நீங்கள் கூறுவதைப்போல ஒரேயொரு காரணம் சம்பந்தப்பட்டதல்ல, அது நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுழன்று கொண்டிருக்கிறது. ஏனென்றால் எந்தவிதத்திலாவது அவரை ஒரு எழுத்தாளராகவும், ஆங்கில மொழியின் ஒரேயொரு தலைச்சிறந்த எழுத்தாளர் என்றும் காட்டும் ஸ்ட்ராட்போர்ட் ஷேக்ஸ்பியர் குறித்து நம்மிடம் வெகு குறைவான தகவல்களே உள்ளன. “குறிப்பிடத்தகுந்த பல்வேறு தனிப்பட்ட மற்றும் வரலாற்று உண்மைகள்" ஆய்வுகளின் மீது தங்கியிருப்பதாக இல்லை.

வில்லியன் ஸ்ட்ராட்போர்டின் சுயசரிதைகள் ஒரு பக்க உண்மைகளையும், “ஒருவேளை அவர் இருந்திருக்கலாம்", “அவருடையதாக இருந்திருக்கலாம்" என்பது போன்ற 599 ஊகங்களையும், கொண்டுள்ளன. ஸ்ட்ராட்போர்டிலிருந்து வந்த ஷேக்ஸ்பியர் குறித்து நாம் அறிந்திருக்கும் வெகுசில உண்மைகள், அவரே அந்த ஆசிரியர் என்பதை நம்பும்படி செய்யும் வகையில் நீட்டி, முழக்கி, இட்டுக்கட்டப்பட்டு உள்ளன. அவரை அந்த படைப்புகளோடு இணைக்கும் ஒன்றுமே அவருடைய சுயசரிதத்தில் இல்லை. உண்மையில் அதற்கு எதிரானவையே உண்மையாக உள்ளன. Shakespeare Birthplace Trustஆல் வெளியிடப்பட்டShakespeare in the Stratford Records” (1994) என்பதில் ரோபர்ட் பீர்மென் பின்வருமாறு ஷேக்ஸ்பியரின் வாழ்க்கையை தொகுக்கிறார்: “மனித நிலைமைகளை விளக்குவதில் எல்லா காலத்திலும் மிகவும் அர்பணிக்கப்பட்டதாக இருக்கக்கூடிய ஒருவருடைய எழுத்துக்களிலிருந்த அவரின் வாழ்க்கையை நாம் ஆராய்கிறோம் என்பதை நமக்கு நினைவூட்ட, ஏதாவதொன்று இருக்கிறதென்றால், நிச்சயமாக, அது மிகவும் குறைந்தளவே இருக்கிறது. ஏனையவர்கள் பட்டினி கிடக்கும் போது, அவர் சொத்துக்களை வாங்கியும், பார்லி மற்றும் சத்துமாவுகளின் தாராளமான கையிருப்புகளை பதுக்கி வைத்துக் கொண்டும், அவருடைய உபரிகளை விற்றுக்கொண்டும், கடனாளிகளை நீதிமன்றத்திற்கு இழுத்துக் கொண்டிருந்த, உலகின் ஒரு மனிதராகவே வெறுமனே அவர் தெரிகிறார். …”

வில்லியம் ஷேக்ஸ்பியரின் பெயரில் சில படைப்புகள் பிரசுரமாகின என்ற உண்மை அந்த பெயருக்கு பின்னால் இருக்கும் மனிதரை அடையாளப்படுத்தவில்லை. ஏறத்தாழ ஆறு தெளிவில்லாத கையொப்பங்களைத் தவிர, அவருடைய கையெழுத்தில் ஒன்றுகூட இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த பெயருக்குப் பின்னால் இருக்கும் மனிதரைக் கண்டறிய கடிதங்களோ, மடல்களோ, கையெழுத்து பிரதிகளோ, காகித வரைவுகளோ எதுவுமே இல்லை, ஒரேயொரு சொல் கூட இல்லை. அந்த மனிதரை சந்தித்ததாக எவருமே முறையிட்டதில்லை. சமகாலத்தியவர்கள் வில்லியம் ஷேக்ஸ்பியர் என்று குறிப்பிடும் போது, அவர்கள் தலைப்பு பக்கத்தில் அந்த பெயரை மட்டுமே குறிப்பிடுகிறார்களேயொழிய, வேறொன்றையும் குறிப்பிடுவதில்லை. கல்வியாளர்களின் நன்மதிப்புகளும், ஒருவிதத்தில் அவர்களின் தொழில்வாழ்க்கையுமே கூட பணயத்தில் வைத்து, அவர்களால் அந்த வாதம் எதிர்க்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராட்போர்டு சுற்றுலா வாய்ப்பை அளிக்கும் Shakespeare Birthplace Trustஉம் நிரந்தரமாக மூடப்படக்கூடும்.

ஸ்ட்ராட்போர்டியருக்கு சொந்தமானதைக் குறித்து சந்தேகம் எழுப்பியவர்களின் பட்டியலில், ஹென்றி மற்றும் வில்லியன் ஜேம்ஸ், ரால்ஃப் வால்டோ எமர்சன், மார்க் ட்வைன், சிக்மண்ட் பியூட், மோர்டைமர் அட்லர், மார்க் ரெய்லன்ஸ், டெரெக் ஜேகோப், சார்லஸ் டெக்கன்ஸ், வால்ட் வெட்மேன், உச்சநீதிமன்ற நீதிபதி ஹென்றி பிளாக்முன், ஹார்வர்டு பேராசிரியர் வில்லியம் Y. ஏலியட், கிளிப்டொன் பேட்மேன், ஷோன் கால்ஸ்வொர்த், இன்னும் ஏனையவர்கள் உட்பட அமெரிக்க வரலாற்றிலுள்ள மிக பிரபலமான எழுத்தாளர்களும், நடிகர்களும், சிந்தனையாளர்களும் உள்ளனர். பார்க்கவும், http://doubtaboutwill.org/past_doubters.

Anonymous திரைப்படம் எந்தவிதத்திலும் "ஓர் ஆழ்ந்த குறுகிய-புத்தி படைப்பல்ல". அது ஷேக்ஸ்பியர் மேதைமையின் உண்மையான எழுத்துரிமையின்மீது அந்த சாதனையை நிமிர்த்தி நேராக வைக்க ஒருவரால் செய்யப்பட்ட விஞ்ஞான படைப்பாகும். தலைச்சிறந்த ஷேக்ஸ்பியர் என்ற விளக்கத்தைத் தவிர, அவரைக் குறித்து வேறொன்றுமே நமக்கு தெரியாது என்ற உண்மைக்கு, வேறொரு சாத்தியமான மாற்று விளக்கத்தை அவருடைய திரைப்படம் அளிப்பதாக திரு. எமெரீச் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் குறிப்பிடுவதைப் போல அந்த திரைப்படம் இழிவார்ந்த முறையில் யாரையும் குறிப்பிட்டுக் காட்டவில்லை. ஈரானில் ஜாபர் பனாஹி கையாண்ட அதேவிதத்தில், சட்டவிரோத அரசியல் குற்றங்களுக்காக தொடர்ந்து அரங்கங்களை மூடிய, மற்றும் மாடியிலிருந்து எழுத்தாளர்களைத் தூக்கியெறிந்த சர்வாதிபத்திய முடியாட்சியின் தாக்கங்களால் பாதிக்கப்பட்ட பெரும் மதிப்பிற்குரிய ஒருவராக பென் ஜோன்சன் காட்டப்படுகிறார்.

பெரும்பாலும் அதிருப்தியாளர்களைத் திக்குமுக்காட செய்ய விரும்பிய ஒடுக்குமுறை அரசின் திசைகாட்டலின்கீழ் கிறிஸ்டோபர் மார்லோவ் கொலை செய்யப்பட்டார் என்பதே உண்மை. இந்த படம் ஷேக்ஸ்பியரை ஒருபடி மேலாகவே வைத்து கையாண்டிருக்கிறது என்றபோதினும், அவர் மற்றொருவரின் படைப்புகளுக்குரிய பெருமையை பெற விரும்பும் ஒரு சந்தர்ப்பவாத நாடக தரகர் என்ற உண்மையை ஆதாரம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

ஆக்ஸ்போர்டு இறந்த ஆண்டான 1604 பொறுத்தவரையில், எந்தவொரு ஷேக்ஸ்பியர் நாடகத்தின் எந்தவொரு ஆதாரதமும் 1604க்குப் பிந்தைய தேதியைக் குறிப்பிடவில்லை. 1604க்குப் பின்னர் எந்தவொரு 14அடி செய்யுளும் எழுதப்படவில்லை. 1593க்கும் 1604க்கும் இடையில், ஷேக்ஸ்பியரின் பெயரில் பதினேழு நாடகங்கள் பதிப்பிக்கப்பட்டன. 1605இல் இருந்து 1623 வரையில், ஐந்து மட்டுமே வெளியாகின. அதுவும் கூட்டுமுயற்சியில் உருவானதாக கூறப்பட்டது.

நீங்கள் இதை ஒரு வர்க்க பிரச்சினையாக ஆக்கவும், கர்வத்தைக் குறித்த சாதாரண பாமர மனிதனின் வாதத்தைக் கொண்டு வரவும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். பிரச்சினை ஆதாரத்தைக் குறித்ததேயொழிய, வர்க்கத்தைக் குறித்ததல்ல. ஸ்ட்ராட்போர்டின் வில்லியம் ஷேக்ஸ்பியருக்கான ஆதரவுக்குப் பின்னாலிருக்கும் ஊகம், அவர் சாதாரண மனிதரல்ல என்பதால் உண்டாகிறது. ஏனென்றால் அவ்வாறில்லையென்றால் நாடகங்களில் காணப்படும் சட்டம், வெளிநாட்டு மொழிகள், இத்தாலி, நீதிமன்றம் மற்றும் பிரபுத்துவ சமூகம் குறித்த விபரமான அறிவும், வல்லுறு வளர்ப்பு, டென்னிஸ், குதிரையேற்றம், வேலியமைத்தல், மற்றும் வேட்டையாடுதல் போன்ற விளையாட்டுகளும் இருந்திருக்காது. அந்த மேதை மிகவும் விரும்பாத சூழ்நிலைகளிலிருந்து தாவிசென்றுள்ளார் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த விவகாரத்தில் அதை ஆதரிக்க எவ்வித ஆதாரமும் இல்லை என்பதே இங்கிருக்கும் ஒரே பிரச்சினையாக உள்ளது. ஆங்கில மொழியின் தலைச்சிறந்த எழுத்தாளர் அவருடைய மகள்களை கல்வியறிவற்றவர்களாக இருக்க அனுமதித்திருப்பாரா?

நீங்கள் வர்க்க மேன்மைகளைப் பார்க்கிறீர்கள் என்றால், அந்த நாடகங்களையும், 14அடி செய்யுள்களையும் கடந்து பார்க்க வேண்டியதில்லை. 37 நாடகங்களில், 36 சிறப்பு நீதிமன்றங்களிலும், செல்வந்த உலகிலும் நடைபெறுகிறது. ஷெய்லோக் மற்றும் பால்ஸ்டாஃப் போன்ற சிலரைத் தவிர, ஏறத்தாழ அனைத்து முதன்மை கதாபாத்திரங்களும் பிரபுத்துவத்தினராக உள்ளனர். இவை அனைத்திலிருந்தும், பிரபுத்துவ வாழ்வின் நவநாகரீகவாதிகள், வீரமரபினர், மற்றும் பெருந்தன்மையாளர்களோடு அடையாளம் காட்டி, ஷேக்ஸ்பியர் அவரின் கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தை முற்றிலுமாக பகிர்ந்து கொண்டுள்ளார் என்று நாம் கூறலாம். ஷேக்ஸ்பியரில் ஏறத்தாழ அனைத்து கீழ் வர்க்க கதாபாத்திரங்களும் நகைச்சுவை பாணியில் அறிமுகப்படுத்தப்பட்டு, குறைவான அபிவிருத்தியே அவற்றிற்கு அளிக்கப்பட்டுள்ளது. Snug, Stout, Starveling, Dogberry, Simple, Mouldy, Wart, Feeble மற்றும் இதர பிற அவர்களின் பெயர்களே அவர்களின் மதிப்பைக் குறிப்பிட்டுக் காட்டுவனவாக உள்ளன. வரலாற்று நாடகங்கள் உயர்மட்ட அதிகாரங்களோடு ஒருங்கிணைந்து நிற்பதையும், அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலுமே பெரிதும் அக்கறை கொண்டுள்ளன என்பதோடு, உயர்-ரக இரத்த மக்களின்மீது விழும் தவறுகளையும் சரியென்று காட்டுவதிலேயே அக்கறை கொண்டுள்ளன.”

எட்வர்டு டி வெர் ஓர் "உழைத்து தேய்ந்து போன பிரபுத்துவவாதி" அல்ல. பெரும் திறமைகள் நிறைந்த ஓர் அங்கீகரிக்கப்பட்ட செய்யுள் மற்றும் நாடகாசிரியரான அவர், “சிறந்த நகைச்சுவைக்காக" 1598இல் சிறப்பு பெற்றார். அவர் ஆக்ஸ்போர்டின் ஆண்கள் (Oxford’s Men) மற்றும் ஆக்ஸ்போர்டின் சிறுவர்கள் (Oxford’s Boys) என்ற இரண்டு வெற்றிகரமான நாடக கம்பெனிகளை நடத்திய நாடகத்துறைக்கான ஒரு மனிதரும், கலைகளின் ஆதரவாளரும் ஆவார். ஆக்ஸ்போர்டின் பெயரில் நம்மிடையே எந்தவொரு நாடகமும் வரவில்லையென்றாலும் கூட, ஆரம்பகால செய்யுள்களை அவர் அங்கீகரித்ததும், இப்போதிருக்கும் அவருடைய மடல்களும் ஷேக்ஸ்பியரினுடையதைப் போன்ற அதே வடிவங்கள், சொற்கள் மற்றும் சொற்றொடர்களை மீளமைக்கிறது. ஷேக்ஸ்பியரின் நாடகங்களும், கவிதைகளும் இலக்கியத்தின் சில குறிப்பிட்ட படைப்புகளைக் குறித்தும், எலிசபெத் நீதிமன்றத்தின் குறிப்பிட்ட பிரதான நபர்களைக் குறித்தும், அவர்களோடு சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் குறித்தும் இருப்பது அந்த எழுத்தாளர் சிறப்பார்ந்த அறிவைப் பெற்றிருந்தார் என்பதை காட்டுகிறது. செய்யுள்கள் மற்றும் நாடகங்களில், ஆக்ஸ்போர்டின் வாழ்க்கை காலத்திற்கு இணையாக நடந்த சம்பவங்களின் ஆதாரங்கள் நிறைய உள்ளன.

ஏதோவொருவித எதிர்பார்ப்புகளோடு, ஆழமாக கையாள தகுதியுடைய அந்த பிரச்சினையைக் கையாள மறுத்த மரபார்ந்த கல்வியில் வேரூன்றிய வாதங்களின் அடித்தளத்தில் நீங்கள் உங்கள் அறிவை வைத்திருப்பதாக தெரிகிறது. உங்களின் "விமர்சனம்" வெறுமனே ஒரு உணர்ச்சி கொந்தளிப்பாக உள்ளது. உண்மையில் நீங்கள் எட்வர்டு டி வெர் வாழ்க்கை குறித்த மற்றும் இந்த விஷயத்தை அவருடையதாக வாதிக்கும் ஒரு புத்தகத்தையாவது இதுவரை வாசித்துள்ளீர்களா என ஆச்சரியமாக உள்ளது. என்னுடைய பார்வையில் அவை பலமானது மட்டுமல்ல; அவை நம்பிக்கையளிப்பதாகவும் உள்ளன.

Howard S
Vancouver, British Columbia
23 November, 2011