World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Anonymous: An ignorant assault on Shakespeare

Written by John Orloff, directed by Roland Emmerich

Anonymous: ஷேக்ஸ்பியர் மீது ஓர் அறிவீன தாக்குதல்

எழுத்து - ஜோன் ஓர்லோஃப், இயக்கம் - ரோலண்ட் எமெரீச்

By David Walsh
23 November 2011
Back to screen version

Independence Day, Godzilla, The Patriot மற்றும் The Day After Tomorrow போன்ற படங்களை இயக்கியதன் மூலமாக ரோலண்ட் எமெரீச், ஆங்கில மொழியின் ஒரு தலைச்சிறந்த இலக்கியவாதி குறித்த கதையைப் படமாக்க தம்மைத்தாமே தயார் செய்திருந்தார். மெல் கிப்சனோடு சேர்ந்து அவர் செய்திருந்த The Patriot திரைப்படம் "ஒரு நகைப்பிற்கிடமான படைப்பென்றும்," கருத்துக்களையும், குறிக்கோள்களையும் பொதுவாக இந்தளவிற்கு கீழ்மட்டத்தில் வைத்திருக்கக்கூடிய நம்முடைய இந்த காலகட்டத்தில் மட்டும்தான் அத்திரைப்படத்தை ஆழமானவொன்றாக எடுத்துக்கொள்ள முடியுமென்றும் நான் 2000இல் விமர்சித்திருந்தேன்.

அவருடைய அழிவுகரமான மற்றும் பயங்கரமான படங்களும் மற்றும் அமெரிக்க புரட்சிகர வரலாற்றிற்குள் அவரின் தவறான வழிகாட்டும் முயற்சியும் இரண்டிலுமே ஜேர்மனில் பிறந்த எமெரீச் தம்மைத்தாமே வாய்ஜம்பத்திற்கும், சிக்கலற்றதாக காட்டுவதற்கும் மற்றும் பக்குவமற்ற தன்மைக்கும் அர்பணித்துவிட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். அவர் அவருடைய முந்தைய துரதிருஷ்டவசமான முயற்சிகளை மிக எளிமையாக Anonymous படத்திலும் பொருத்தியுள்ளார்.

ஆங்கில நாடக எழுத்தாளரும், கவிஞருமான வில்லியன் ஷேக்ஸ்பியரால் (1564-1616) எழுதப்பட்ட மூன்று டஜன் அல்லது அந்தளவிற்கான நாடகங்களின் உரிமையாளர் அல்ல, மாறாக அவை 17ஆம் Earl of Oxford ஆன Edward de Vereஆல் எழுதப்பட்டவை என்பதே இந்த புதிய படத்தின் சர்ச்சைக்குரிய அடித்தளமாக உள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கும் இந்த கருத்து, முற்றிலுமாக உள்-ஆதாரங்கள் (ஆக்ஸ்போர்டு ஒரு குறிப்பிடத்தக்க கவிஞர் இல்லை, அதேவேளை ஷேக்ஸ்பியர் ஒரு கவிஞராக இருந்தார்) மற்றும் வெளி-ஆதாரங்கள் (இதுகுறித்து தனிப்பட்ட மற்றும் வரலாற்றுரீதியிலான நிறைய உண்மைகளைக் குறிப்பிட்டு காட்டலாம்) என இரண்டினாலும் முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளன. உண்மையில் எமெரீச் மற்றும் அவரின் திரைக்கதை எழுத்தாளர் ஜோன் ஓர்லோஃப் இருவரும் அந்த தத்துவத்தை ஏற்கிறார்களா இல்லையா என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை ஓர்லோஃப் அதை ஏற்றிருக்கலாம். ஆனால் ஆக்ஸ்போர்டின் கோட்பாட்டை எமெரீச் பகிரங்கமாக ஆதரிக்கின்றபோதினும், அவர் அதைப்பற்றி பெரிதும் பொருட்படுத்தவில்லை போல் தெரிகின்றது. இந்த படம் வெறுமனே அவரின் கேள்விக்குரிய கண்டுபிடிப்புகளை எடுத்துக்காட்ட மற்றொரு சந்தர்ப்பமாக உள்ளது.

Anonymous படத்தின் முறுக்கிக்கிடக்கும் கதையை விவரிப்பது, அதை மதிப்பிழக்க செய்வதாகும். “Anonymous” என்ற தலைப்பில் ஒரு படைப்பு, சமகாலத்திய நியூயோர்க் நகர நாடக அரங்கில் நடந்து வருகிறது. தொடக்கத்தில், டெரெக் ஜேகோப் மேடையில் நடந்து வந்து, ஒருவித முன்னுரையை அளிக்கிறார். அதில் "ஒரு கையுறை செய்பவரின்" மற்றும் ஒரு "இலக்கண பள்ளி" பட்டதாரியின் ஒரு சாதாரண மகனான ஷேக்ஸ்பியர், அத்தகையவொரு பிரமாண்டமான படைப்பை உருவாக்கி இருக்க முடியுமென்பது குறித்து சந்தேகத்தை எழுப்புகிறார். கூறப்பட வேண்டிய ஒரு "மறைந்துகிடக்கும் கதை" ஒன்று உள்ளதாக, அவர் ஆரவாரத்துடன் நமக்கு அறிவிக்கிறார்.

அங்கேயிருந்து நாம் கம்யூட்டரால் உருவாக்கப்பட்ட சுமார் 1600ஆம் ஆண்டின் இலண்டனுக்கு, அப்போதைய நாட்களில் அதிகாரபூர்வ வாரிசு இல்லாத முதலாம் எலிசபெத் (Vanessa Redgrave) ஆட்சிகாலத்துக்கு, பின்னோக்கி அழைத்துச் செல்லப்படுகிறோம். அந்த காலகட்டம் அவருக்குப் பின்னர் ஆட்சிக்கு வருவது யாரென்ற கேள்வியைச் சுற்றி அரசியல் சூழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. எலிசபெத்தின் வெளியுறவுத்துறை செயலாளரும், உளவுத்துறை தலைவருமான ரோபர்ட் சிசெல் (Edward Hogg) ஸ்காட்லாந்து மகாராணி மேரியின் மகனான ஆறாம் ஜேம்ஸை இங்கிலீஷ் அரியணைக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்கிறார். (இதன் விளைவாக, இங்கிலாந்தின் முதலாம் ஜேம்ஸாக ஆகக்கூடியவர்.)

முக்கிய பிரபுத்துவ பிரமுகர்கள் பலரும், அவர்களின் மையத்தில் Earl of Essex (Sam Reid) மற்றும் Earl of Southamptonஉம் (Xavier Samuel) சிசெலுக்கு எதிராக உள்ளனர். வில்லியம் சிசெல்லினால் (David Thewlis) உயர்த்தப்பட்டவரும், ராணி எலிசபெத்துக்கு முக்கிய ஆலோசகருமான Earl of Oxford (Rhys Ifans), ஜேம்ஸை பதவியேற்றுவதற்கு எதிராக அவர்களின் ஒரு மிகவும் மதிநுட்பமுடைய கூட்டாளியாக இருக்கிறார். வில்லியமின் மகனும், அந்த பதவிக்கு பிரதியீடாக இருக்கக்கூடியவருமான மற்றும் ஒரு கூனி வில்லனுமான முன்னர் மேலே குறிப்பிடப்பட்ட ரோபர்ட், கணிசமான அளவிற்கு அவர்களுக்கு எதிராக வெறுப்பை கொண்டிருக்கிறார்.

கதை வளர வளர, ஒரு விடலைச்சிறுவனாக ஆக்ஸ்போர்டுக்கு இளம் எலிசபெத்துடன் (Joely Richardson- இவர் Redgraveஇன் மகள்) தொடர்பு இருந்தது நமக்கு தெரிய வருகிறது. அப்பெண் மூலமாக அவர் ஒரு மகனுக்கு (இவரும் கதையில் ஒரு முக்கிய பாத்திரம் வகிக்கிறார்) தந்தையாகிறார். அவர் செய்த ஒரு கொலைகுற்றத்தை மூடிமறைக்க பிரதியீடாக, நாடகங்கள் எழுதுவதை விட்டுவிட்டு, அன்னெ சிசெலை மணம் முடிக்க வேண்டுமென அவர் அச்சுறுத்தப்படுகிறார். மிகவும் அசாதாரணமான விதத்தில், தகாத உறவு ஒட்டுமொத்த காதல் விவகாரத்தையும் மிஞ்சிவிடும் விதத்தில், ஆக்ஸ்போர்டே எலிசபெத்தின் அந்த தகாத உறவில் பிறந்த மகனாக எமக்கு காட்டப்படுகின்றது.

இதற்கிடையில், ஆக்ஸ்போர்டு அவருடைய பழைய மற்றும் புதிய நாடகங்களை (படத்தில், எல்லாவிதத்திலும் ஒரு திறமைசாலியாக காட்டப்படும் Earl  அவருடைய எட்டாவது வயதிலேயே A Midsummer Night’s Dream எழுதியதாக கூறப்படுகிறது!) இலண்டன் நாடகஅரங்கங்களில் அப்போது (அதாவது 1600 அல்லது அதற்கடுத்த காலக்கட்டத்தில்) பென் ஜோன்சனின் பெயரை இட்டு, அரங்கேற்றுவதற்கு, அவரால் பென் ஜோன்சன் (Sebastian Armesto) நாடகாசிரியராக நியமிக்கப்படுகிறார். தம்முடைய நாடகங்கள் மூலமாக மக்களின் (“ஒரு கும்பலின்) பார்வையிலும், இராணியின் பார்வையிலும் கூட Essex தூக்கி நிறுத்த முடியுமெனவும் மற்றும் சிசெல் மற்றும் ஜேம்ஸின் நிலையை மதிப்பிழக்க செய்யலாம் என ஆக்ஸ்போர்டு நம்புகிறார். படைப்புகளை வெளியில் கொண்டு வருவதற்கு ஜோன்சன் உடன்படுகிறார். ஆனால் அவற்றில் அவருடைய பெயரை இடுவதிலிருந்து பின்வாங்குகிறார். ஒரு தொடக்கமாக, ஓரளவிற்கு மட்டுமே படித்த ஒரு கோமாளி நடிகரான வில்லியம் ஷேக்ஸ்பியர் (Rafe Spall) ஆக்ஸ்போர்டின் படைப்புகளுக்குரிய பெருமையை மிகவும் பணிவடக்கதோடு ஏற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஷேக்ஸ்பியரின் (ஆக்ஸ்போர்டின்) Richard III நாடகத்தை அரங்கேற்றுவதை Anonymous திரைப்படம் அதன் உச்சக்கட்ட காட்சியில் காட்டுகிறது. Richard III நாடகம் அதன் மையத்தில், ஒரு விகாரமான இராட்சஷரையும் (இது ரோபர்ட் சிசெலின் சமகாலத்தியவர்களை நினைவுபடுத்தும் நோக்கம் கொண்டது), மற்றும் பெப்ரவரி 1601இல் Earl of Essexஇன் கிளர்ச்சியையும் கொண்ட ஒரு துன்பியல் நாடகமாகும். அந்த கிளர்ச்சி படத்தின் பல முக்கிய கதாபாத்திரங்களுக்கு நாசகரமான விளைவுகளைக் கொண்டிருக்கிறது.

அனைத்திற்கும் முதலாவதாக, "மறைந்துகிடக்கும் கதையைக்" குறித்த எமெரீச்சின் இந்த படம் ஓர் ஆழமான குறுகிய-புத்தியுடன் கூடிய படைப்பாகும். ஆங்கில மொழி வரலாற்றில் மிகச்சிறந்த நாடகாசிரியர்களின் (ஷேக்ஸ்பியர், ஜோன்சன், கிறிஸ்டோபர் மார்லோவின் மற்றும் தோமஸ் நாஷே மற்றும் தோமஸ் டெக்கர் உட்பட பல சிறிய பிரபலங்களின்) ஒரு குழுவை பொய்யர்கள், குண்டர்கள், அறிவற்றவர்கள், உளவாளிகள் மற்றும் மோசமானவர்களாக ஏன் ஒன்றிரண்டு குறிப்பிடத்தக்க சாதாரண சமகாலத்திய கலைஞர்கள் சித்தரிக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்கும் வேலையை நான் உளவியல் நிபுணர்களிடம் விட்டுவிடுகிறேன். இதில் பொறாமை மற்றும் சுய-நியாயப்படுத்தலின் அடையாளங்களை ஒருவரால் காண முடியுமா?

ஷேக்ஸ்பியர் குறித்த விளக்கம் மிகவும் முட்டாள்தனமாகவும், தாக்குதலாகவும் உள்ளது. உண்மையில், 37 பிரபலமான நாடகங்களின் உரிமையை Earl of Oxford இற்கோ அல்லது வேறு எவருக்கோ உரித்தானது என கூறவிரும்புவதை பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட ஓர் எழுத்தாளரை, அரைகுறை படிப்போடு தற்பெருமை பேசும் ஒருவராக, குடிகாரராக மற்றும் கொலைகாரராக காட்டுவதன் மூலம்  பலப்படுத்துமா?

Anonymous திரைப்படம் வெறுப்புக்குரியதாகவும், விரும்பத்தகாததாகவும் இருப்பதோடு, பொதுவாக அது சலிப்பூட்டுவதாகவும், ஓய்ந்துபோனதாகவும் உள்ளது. வழக்கமாக குடிப்பதையும், ஷேக்ஸ்பியர் தாசிமாரோடு திரிவதையும், சிசெலியர்கள் சூழ்ச்சி செய்வதையும், Essex மற்றும் Southampton ஆணவத்தோடு, துணிச்சலோடு அடியெடுப்பதையும் (இந்த பரிதாபத்திற்குரிய காட்சிகள் Steve Coogan, Rob Brydon ஆகியோரின் The Trip: “பெரிய மனிதர்களே, கட்டிலுக்கு செல்லுங்கள், நாங்கள் விடியலில் எழுவோம்!” என்ற பகட்டணி ஆடைகளுடனான நாடக காட்சிகளை எமக்கு ஞாபகப்படுத்துகின்றன) குளோப் தியேட்டரில் ஆஹா-ஓஹோவென்று நடப்பதையும், இதர பிறவற்றையும் காட்டும் Mermaid Tavern நகர காட்சிகள் எலிசபெத்திய காலகட்டத்தின் மாறாபடிவுருவின் கையேட்டிலிருந்து எடுக்கப்படுகின்றன.

Ifans, Thewlis, Redgrave, Hogg மற்றும் Jacobi உட்பட பல சிறந்த திறமையான நடிகர்கள் இரக்கமேயில்லாமல் வீணாக்கப்பட்டுள்ளனர். சிறிய  கதாபாத்திரங்கள் அல்லது முக்கியமற்ற காட்சிகளில் கூட பொதுவாக சிறப்பாக பிரகாசிக்கும் Redgrave, முதிர்ந்த முடியாட்சியாளராக தோன்றும் தனது பாத்திரத்தில் நம்பிக்கையற்றவராகவும், வெறுமனே வெறுக்கத்தக்கவராக உள்ளார். Earl of Oxfordஇன் கரங்கள் Hamlet, King Lear மற்றும் ஏனைய பிரமாண்ட படைப்புகளை எழுதுகின்ற அதே காலத்தில், எலிசபெத்திய பொலிஸ்-அரசு ஒடுக்குமுறைக்குள்ளேயே பெண்களை கவரும் மாவீரரைப் போல அவரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சாத்தியமற்ற வேலையை, ஓர் அருமையான நகைச்சுவை நடிகரான Ifans செய்கிறார். ஒட்டுமொத்த விஷயமும் பகுத்தறிவிற்கு ஒவ்வாததாக உள்ளது.

கீழ்நிலையிலிருக்கும் ஒரு கையுறை தயாரிப்பாளரின் மற்றும் ஒரு இலக்கண பள்ளி பட்டதாரியின் மகன் இந்த குறிப்பிடத்தக்க படைப்புகளை உருவாக்கி இருக்க சாத்தியமுள்ளதா என்பதன்மீது எலிசபெத்திய சகாப்த ஏளனங்களைக் குவித்துவிட்டு, அதற்கு பதிலாக இங்கிலாந்தின் மிகவும் மேம்பட்ட குடும்பங்களில் ஒன்றிலிருந்து ஒரு தளர்ந்துபோன மேற்குடியாளரை விரும்பும், வெற்று-மூளை கற்பனைகளால் நிறைந்திருக்கும் சமகாலத்திய ஹாலிவுட் மேற்தட்டை என்ன கூறுவது?

எமெரீச்சும், ஓர்லோஃப்பும் அவர்களது படைப்பின் மீதான எவ்விதமான எதிரான விமர்சனமும் ஒரு "கருத்து முரண்பட்ட" மற்றும் "தைரியமான" படைப்பைக் கொண்டு, கல்வித்துறை-ஷேக்ஸ்பியர் தொழிற்துறையை நிலைகுலைய செய்துவிட்டதற்கான ஆதாரம் என காட்ட முனைகின்றனர். படத்தின் மடைமைகளோடு அவர்கள் எதிர்பட்டதும், 'வரலாறும், வரலாற்று படங்கள் அனைத்தும் வெறுமனே கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று என்பதால், அதை கண்டு ஏன் ஒருவர் எரிச்சல்பட வேண்டும்?' என்ற இரண்டாந்தர போலி-பின்நவீனத்துவ வாதத்தின் பாதுகாப்பிற்குள் அவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள்.

ஒரு நிகழ்ச்சியில், ஷேக்ஸ்பியரில் இருந்த சில பிழைகளை, ஓர்லோஃப் வேகவேகமாக சுட்டிக்காட்டினார்: “இப்போதெல்லாம் ஷேக்ஸ்பியர் எல்லாயிடங்களிலும் வரலாற்றோடு விளையாடுகிறார். அவை வரலாறு அல்ல; அவை நாடகம். … நாம் நாடகாசிரியரை தொடர்ந்து கொண்டிருக்கிறோம்,” இது அவர் நேர்காணல் செய்த ஒருவரிடம் கூறியது. இது குறித்து ஒருவர் என்ன கூறுவது?

டொரோண்டோ பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறை இணை பேராசிரியரும், டொரோண்டோ மிஸ்சிஸ்சௌகா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் நாடகத்துறையின் தலைவருமான ஹோல்கர் செமி அவருடைய வலைப்பதிவில் எழுதியது: “அடிப்படையில், பதினாறாம் நூற்றாண்டின் எந்தவொரு நிகழ்வுகளுக்கு இருக்கும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்களின் ஒட்டுமொத்த கையிருப்புகளையும் தவிர்த்துவிட்டு, நிச்சயமாக எமெரீச்சும் ஓர்லோஃப்பும் அவர்களின் வரலாற்றின் மெய்யியல் என்ன சொல்கிறதோ, அதன்படி அவர்களுக்கு மனதில்பட்ட அளவிற்கு உரிமை எடுத்துள்ளனர்.”

செமி தொடர்ந்து எழுதுகிறார், “தெளிவாக இந்த திரைப்படமும், அதன் அர்த்தமற்ற திரைக்கதையும் வரலாறு குறித்து சிறிதும் அக்கறைப்படவில்லை. அதுவொரு திரைப்பட இயக்குனரின் தனியுரிமைகள். ஆனால் பின்னர் ஏன் ஓர்லோஃப்பும், எமிரீச்சும் அதையே இரண்டு வழிகளில் அடைய முயல்கின்றனர்? Tudor காலத்திய இங்கிலாந்தைக் குறித்து ஒட்டுமொத்த கல்வித்துறைசார் இலக்கிய மேதைகள் மற்றும் வரலாற்றாளர்களின் சமூகத்தையும் விட, எழுத்தாளரும், இயக்குனரும் மட்டுமே சிறந்த புரிதலைக் கொண்டிருப்பதாக படம் முழுக்க சொல்லப்படுவது, அளவுக்கதிகமான வெற்றுத்தீனியில் உட்கார்ந்திருப்பது போன்று சிறிது எரிச்சலூட்டுகிறது.” [http://www.dispositio.net/archives/449]

கதையின் முரண்பாடுகள் மற்றும் அபத்தங்களுக்கு அப்பாற்பட்டு, (தகாத உறவில் எத்தனை குழந்தைகளை எலிசபெத் பெற்றார்? அந்த தலைச்சிறந்த நாடகங்களின் ஆசிரியர் ஷேக்ஸ்பியராக இருக்க முடியாதென்று துல்லியமாக அறிந்த ஷேக்ஸ்பியரின் நாடக உலக சகாக்களில் யாருமே ஏன் அவரை அம்பலப்படுத்திக்காட்ட தீவிரமாக ஒன்றுமே செய்யவில்லை? அறிவார்ந்த ஒற்றர்படைத் தலைவர் சிசெலும், அவருடைய கடினமாக உழைக்கும் ஒற்றர்களைக் கொண்ட வலையமைப்பும், தங்களின் மூக்கின் கீழே தான் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட, முதன்மை கூனி கதாபாத்திரத்தையும் கொண்ட, Richard IIIஇன் தயாரிப்பு நடந்து வருகிறதென்று ஏன் அறிவிக்கின்றன? ஆக்ஸ்போர்டு ராணி தான் அவர் தாய் என்று அறியும் நேரமான (இந்த இடத்தில் எலிசபெத்திற்கு அது தெரியவில்லை), அவர்களின் மகனைக் குறித்து ஆக்ஸ்போர்டிற்கும் எலிசபெத்திற்கும் இடையில் நடப்பது தான் இறுதி உரையாடலா? இது சிறிது குழப்புவதாக உள்ளது?), இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டு, படத்தில் இருக்கும் எலிசபெத்திய காலத்து இலக்கிய வாழ்வு குறித்த உண்மைகள் முற்றிலுமாக தவறாக போகிறது.

பேராசிரியர் செய்ம் சிலவற்றை குறிப்பிடுகிறார். 1598இல் நாடகாசிரியர்களின் கும்பலை நாம் முதன்முதலில் சந்திக்கும் காட்சி குறித்து அவர் கவனிப்பது: "Shoemaker’s Holidaysஇன் தோல்விக்காக Marlowe [தோமஸ்] டெக்கரை எள்ளி நகையாடி, வரலாற்று நாடகாசிரியர்கள் மத்தியில் ஒப்புயர்வற்ற நிலையில் இருப்பதாக ஏளனஞ் செய்கிறார். பெரும்பாலும் 1593இல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பதால், அப்போது அந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு வரலாற்று நாடகத்தைக் கூட Marlowe எழுதியிருக்காத நிலையில், அது நகைச்சுவையாக உள்ளது. மேலும் டெக்கனின் நாடகம் 1599 வரையில் எழுதப்பட்டிருக்கவில்லை. (இது பதிவுசெய்யப்பட்ட உண்மை, இதில் பிரபலமான மற்றும் மோசடியான அரச சதியின் நினைவுச்சின்னமும் உள்ளது. இல்லையென்றால் இது Henslowe’s Diary என்று அறியப்பட்டிருக்கும்.)

அவர் தொடர்கிறார்: “சில தேதிகள் குறித்து என்ன கூறுவது? 1558இன் Midsummer Night’s Dream நிச்சயமாக கவர்ச்சிகரமானது. நிச்சயமாக கூறுவதானால், Richard III விட கவர்ச்சிகரமானது. "நம்முடைய மனக்குறையைத் தீர்க்க வந்திருக்கும் குளிர்ச்சி" என்றெல்லாம் 1601இல் உற்சாகத்தோடு புதியதாக விளம்பரப்படுத்தப்படுவது விரல்விட்டு எண்ணக்கூடிய நாடக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கும். அவர்கள் ஏற்கனவே 1597இல் அதை அச்சுக்கு கொண்டு வந்தனர். அல்லது 1598இல் இரண்டாம் பதிப்பை அச்சுக்கு கொண்டு வந்தனர். Essex எழுச்சியின் காலக்கட்டத்தில், வருந்தும்படியாக ஒரு கூனி இல்லாத, Richard II இன் பாத்திரப்படைப்பு குறித்து பல பார்வையாளர்கள் பேசினர் என்பது கூடுதலாக சிறிது பிரச்சினையாக உள்ளது என்பதும் உண்மையே. இந்த பாத்திரபடைப்பு 1601இல் பல குற்றங்களுக்காக Earl மற்றும் அவரின் சக சூழ்ச்சியாளர்களுக்கு எதிரான ஆதாரமாக பயன்படுத்தப்பட்டது என்பதே உண்மை.” இப்படி பல உள்ளன.

ஷேக்ஸ்பியருக்கு எதிரான, ஆக்ஸ்போர்டுக்கு சார்பான வாதங்கள் எந்த நிலைப்புள்ளியிலிருந்தும் உறுதியாக இல்லை. தற்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கும் Jonathan Bate அவருடைய மதிப்பார்ந்த The Genius of Shakespeare (1998) என்பதில் "படைப்புரிமை குறித்த கருத்துமுரண்பாடு" என்ற அவரின் அத்தியாயத்தில் அவர் பின்வரும் பாணியில் அறிமுகப்படுத்துகிறார்: “வில்லியம் ஷேக்ஸ்பியரின் பிறப்பு குறித்து ஒரு புரியாபுதிர் நிலவுகிறது. அதுவென்னவென்றால்: வில்லியம் ஷேக்ஸ்பியர் Stratford-upon-Avon நகரத்தின் ஒரு நடிகரென்று ஏன் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்?” என்கிறார்.

ஷேக்ஸ்பியரின் பிந்தைய நாடகங்களில் உள்ளபடி, 1601இல் பெருமைமிக்க earlஇன் மரணத்திற்குப் பின்னர் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்கள் அல்லது குறிப்புகள் உட்பட ஆக்ஸ்போர்டு அந்த படைப்புகளின் எழுத்தாளராக இருக்க முடியாதென Bate ஆணித்தரமாக ஆதாரத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார்.

ஷேக்ஸ்பியரின் எந்தவொரு கடிதமும் இப்போது இல்லை என்று Stratfordianகளுக்கு எதிரானவர்கள் முறையிடுகின்றனர். இதையே தான் ஓர்லோஃப்பும் மீண்டும் மீண்டும் முறையிடுகிறார். “Venus and Adonis மற்றும் The Rape of Lucrece [ஷேக்ஸ்பியரின் கவிதைகள்] மற்றும் அவருடைய எந்தவொரு முழுமையடைந்த பதிப்பிலும் தொடக்கத்தில் உள்ள எழுத்துக்கள் Earl of Southamptonக்கு எழுதப்பட்ட கடிதங்களாக கருதலாம்" என்று Bate சுட்டிக்காட்டுகிறார். அந்த மடல்களின் பணிவான தொனியைக் குறிப்பிட்டுக்காட்டும் அவர், “எலிசபெத்திய சமூகத்திற்கு பிறந்த ஊரின் பெருமை மிகவும் முக்கியமானதாகும். பெருமைமிக்க Earl of Oxfordஇன் நாற்பத்தி-மூன்றாவது வயதில், [Lord] Burghleyஇன் இளம் வாரிசுகளில் ஒருவரைக் குறித்து இதுபோன்ற சொற்களை எழுதும் கருத்தானது, அவரின் சொந்த மரணத்திற்குப் பின்னர் அவர் நாடகங்கள் எழுதியதாக சிந்திப்பதையும் விட மிகவும் கற்பனையாக உள்ளது.”

The Genius of Shakespeare விக்டோரியன் காலத்து இங்கிலாந்திற்குப் பின்னர் தோன்றிய நிலையில், ஸ்டார்போர்டியர்களுக்கு எதிரான வாதத்தை அது விவாதிக்கின்ற போது, “முதன்முதலாக, ஆங்கில கலாச்சாரம் உறுதியாக மத்தியதட்டு வர்க்கமாக இருந்த போது, அந்த விஷயத்தை திட்டமிட்டு சிக்கலுக்கு உள்ளாக்குவதாகும். அந்த மத்தியதட்டு வர்க்கங்கள் 'கீழ்நிலையிலிருந்து' வரும் முன்பின் தெரியாதவர்களுக்கு மிகவும் உணர்வுபூர்வமாகவும், 'மேல்நிலையிலிருக்கும்' பிரமுகர்களுக்கு மிகவும் பொறுப்புடனும் இருந்தனர். … எதிர்-ஸ்டான்போர்டியனிசம் William of Stratford விவசாயியாக ஆக்குகிறது. அவரை தூர விலக்கி வைக்கிறது. மேலும் அது காணும் ஏதாவதொரு பிரபுக்கு அவரின் படைப்புகளை அர்பணிக்கிறது.”

Earl of Oxfordஇன் காரணத்தை வெற்றிகொள்ளும் Who Was Shakespeare? (1955) என்ற தலைப்பிட்ட, இருபதாம் நூற்றாண்டிற்கு மத்தியில் வெளியான சட்ட வழக்கறிஞரான Christmas Humphreysஇன் முதல் புத்தகத்தில் உள்ள கருத்துக்களை Bate மேற்கோளிடுகிறார். Earl of Oxford கூறும் காரணம் இதுதான்: “இது மேதைக்கு எதிரானது; நம்முடைய தேசிய மதிப்பிற்கு எதிரானது; ஷேக்ஸ்பியர் நாடகங்கள் மற்றும் கவிதைகளின் உண்மையான ஆசிரியரை விட்டுவிட்டு ஒரு குறுகிய-புத்தியுள்ள வணிகரின் நினைவுகளை மதிப்பது நாடகத்தைக் குறித்த நம்முடைய நேர்மையான உணர்வை அவமதிப்பாகும், புறக்கணிப்பதாகும். அனைத்திற்கும் மேலாக, ஒரு தலைசிறந்த மனிதரின் படைப்பாகவும், எலிசபெத்திய கால இங்கிலாந்திற்கு மிகவும் நெருக்கமானவரின் படைப்பாகவும் பார்க்கும் போது அந்த நாடகங்கள் இன்னும் சுவாரசியமாக இருப்பதைக் காண்கிறேன்.”

அதற்கு பொருத்தமாக Bate கூறுவது, "'நம்முடைய தேசிய கண்ணியம்', 'ஒரு குறுகிய-புத்தி வணிகர்', 'ஒரு தலையாய மனிதர்', ஆகிய இந்த மூன்று சொற்களுமே மொத்த கதையையும் கூறுகின்றன. இங்கிலாந்தின் ஏனைய பல கேள்விகளைப் போலவே, இதுவும் ஒரு வர்க்கக்கேள்வியாகும்.”

Anonymous திரைப்படம் ஒரு சோம்பேறித்தனமான, கவனக்குறைவான, பொறுப்பற்ற, இப்போதைய, மூன்றாந்தர, ஹாலிவுட்-பகட்டு, பின்நவீனத்துவ-பிரச்சாரத்தோடு ஷேக்ஸ்பியரின் "படைப்புகள் மீதான கருத்துமுரண்பாட்டை" அளிக்கிறது. துரோகமும், மோசடியும் இங்கே ஓர்லோஃப் மற்றும் எமெரீச்சினுடையவையே.