World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain deports Sri Lankan asylum seekers

தஞ்சம் கோரும் இலங்கையர்களை பிரிட்டன் நாடுகடத்துகிறது

By Athiyan Silva 
3 January 2012
Back to screen version

நாடுகடத்தப்படுவோரின் பாதுகாப்பு, மனித உரிமைகள் அமைப்புக்களின் எச்சரிக்கைகள் ஆகியவற்றைப் புறக்கணித்தும், அவர்களுடைய தஞ்சக் கோரிக்கைகளை நிராகரித்தும், டிசம்பர் 15 ம் திகதி பிரித்தானிய கன்சர்வேடிவ் அரசாங்கம் 55 இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

சந்தேகத்திற்கு உரியவர்களைக் கடத்துதல், கொலை செய்தல் மற்றும் தடுப்புக்காவலில் இருக்கும் காலத்தில் இரகசிய முகாம்களில் சித்திரவதை செய்தல் ஆகியவற்றிற்கு இழிபுகழ்பெற்ற இலங்கை உளவுத்துறைப் பிரிவுகளில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளுவதற்காகவே அவர்கள் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியிருந்தனர்.

நாடுகடத்தப்பட்ட இக்குழுவில் பெரும்பகுதியானவர்கள் தமிழ் சிறுபான்மையினராக இருந்ததோடு, சில சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளடங்கியிருந்தனர். கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இலங்கைக்கு பிரித்தானிய அரசாங்கம் நடத்தியுள்ள நாடுகடத்தல்களில் இது மூன்றாவது மிகப் பெரிய வெளியேற்றம் ஆகும். தஞ்சம்கோரிய அகதிகள் பல மாதங்கள் வெவ்வேறு தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

கொழும்புக்கு பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானம் ஒன்றில் அவர்கள் கட்டாயப்படுத்தி ஏற்றப்பட்டனர். விமானத்தில் ஒவ்வொரு நாடு கடத்தப்பட்டவருக்கும் இரு பொலிஸ் அதிகாரிகள் காவல் காத்தனர். கொழும்பு விமான நிலையத்திற்கு வரும் தங்கள் உறவினர்களை வரவேற்று அவர்களைப் பாதுகாப்பதற்கு டிசம்பர் 16 அன்று நூற்றுக்கணக்கான தமிழர்கள் கூடியிருந்தனர்.

விமான நிலையத்தில் நாடு கடத்தப்பட்டவர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக இலங்கை குற்றப்புலனாய்வுப் பொலிசாரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பு விமான நிலையத்தில் வீரகேசரி இணைய தள தொலைக் காட்சியின் நிருபர்கள், ஒரு நாடு கடத்தப்பட்டவரைப் பேட்டி கண்டபோது: இலங்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டபின், நான் ஒரு அகதியாக லண்டனுக்குச் சென்றேன். அவர்கள் என்னுடைய மனுவை நிராகரித்து விட்டனர். லண்டனில் 14 ஆண்டுகள் வசித்தபின் அவர்கள் என்னைத் திருப்பி அனுப்பியுள்ளனர். இங்கு என் உயிருக்கு ஆபத்து என்று நான் உணர்கிறேன் என்று குறிப்பிட்டார்.

டிசம்பர் 18ம் திகதி, இலங்கையின் பழமைவாத பத்திரிகையான த ஐலண்ட் வெளியிட்ட செய்தியில்: இந்த ஆண்டு இங்கிலாந்து அதன் எல்லைக் கட்டுப்பாடுகளை இறுக்கியுள்ளதோடு, மோசடியான ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டில் நுழைவோருக்கு எதிராக கடும் தண்டனை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

சிறைவாசம், சித்திரவதை மற்றும் மரணத்தை எதிர்நோக்கும் அபாயத்திற்கு இந்த அகதிகள் முகங்கொடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையில், இப்பத்தரிகையானது: மே 2009 ல் மோதல்கள் முடிந்த பின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சானது, அவர்கள் சித்திரவதைக்கு உட்பட்டனர் என்ற கூற்றுக்கள் அபத்தமானவை என்று தெரிவித்துள்ளது. உண்மையில் (பாதுகாப்பு அமைச்சின் கருத்துப்படி) இங்கிலாந்து, தற்பொழுது நடைபெறும் மறுசீரமைப்பு மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்களுக்கு ஆதரவாக கணிசமான நிதியுதவி அளிக்கிறது. இந்த வழிவகை சர்வதேச குடியேறுவோர் குறித்த அமைப்பினால் (International Migration Organization) கையாளப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தின் எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் (UK Border Agency) இலங்கை உளவுத்துறை அதிகாரிகள் வெளியிடும் மோசடிக் கூற்றான, தடுப்புக்காவலில் இருக்கும் தமிழர்கள் தங்கள்மீது தாமே காயங்களை ஏற்படுத்தி பின்னர் தஞ்சம் கோரும் மனுக்களுக்கு ஆதரவாக அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பதை மேற்கோளிட்டு ஓரு சுற்ற்றிக்கையை விடுத்துள்ளது. எல்லைப் பாதுகாப்பு நிறுவனம் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் ஒன்று அனைத்துத் தமிழ் தஞ்சம் கோருவோருக்கும் பாதுகாப்பு தேவையில்லை என்ற தீர்ப்பையும் மேற்கோளிட்டுள்ளது.

உண்மையில், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சியானது உள்நாட்டு மற்றும் சர்வதேசச் சட்டங்களை மீறிய வகையில் மிகப் பரந்த பொலிஸ்-அரசாங்க அடக்குமுறையைத் தொடர்கிறது.

சர்வதேச மன்னப்புச்சபை மற்றும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு உட்பட பல மனித உரிமைகள் அமைப்புக்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள தமிழர்கள் கொழும்பு விமான நிலையத்தில் இறங்கியவுடன் கைது, தவறாக நடத்தப்படுதல் ஆகியவற்றை எதிர்கொள்ளக்கூடும் என்று கவலைகளை எழுப்பியுள்ளன. தீவில் இரு ஆண்டுகளுக்கு முன்பு 26 ஆண்டுக்கால உள்நாட்டுப்போர் முடிவடைந்துவிட்டது என்றாலும் கூட, இராஜபக்ஷவின் அரசாங்கத்தின்கீழ் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுதல் ஆகியவை தொடர்கின்றன.

டிசம்பர் 15ம் திகதி பிரித்தானிய கார்டியன் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில்: கடந்த மாதம் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. கமிட்டியானது பரந்த அளவில் சித்திரவதை இன்னும் பிற கொடூர, மனிதாபிமானமற்ற இழிந்த முறையில் நடத்தப்படுவது குறித்து தொடர்ச்சியான  குற்றச்சாட்டுக்களுக்கு தீவிரமாகக் கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இக்கருத்து பல அரசாங்கம் சாரா அமைப்புக்கள் மற்றும் இலங்கை அரசாங்கம் அளித்த சாட்சியங்களை அடுத்து வந்துள்ளது. இலங்கையில் இருக்கும் அரசாங்கம் எதையும் செய்யலாம் என்ற சூழல் குறித்தும் இக்கமிட்டி கவலை தெரிவித்துள்ளதாக இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

ஐ.நா.வின் சித்திரவதையில் இருந்து விடுதலை என்னும் அமைப்பு (Freedom From Torture) விடுத்துள்ள அறிக்கையில், 35 பேர்களில் 20 ற்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது, பொதுவாக சூடேற்றப்பட்ட உலோகக் கம்பியினால், தொடர்ச்சியாக முதுகுகளில் பாய்ச்சப்படுகிறது. வெளிநாட்டில் இருந்து திரும்பிய 14 பேர்கள் இவ்வாறு சித்திரவதைக்கு உட்பட்டுள்ளனர் என்று மேலும் இக் கட்டுரை குறிப்பிடுகிறது.

மக்கள் காணாமற்போதல், சித்திரவதை, நீதிக்கு புறம்பாக நடக்கும் கொலைகள் ஆகியவை இலங்கையின் இராணுவ உளவுத்துறை, அதன் துணை இராணுவக் குழுக்கள் நடத்தும் இரகசிய தடுப்பு முகாம்களில் நடைபெறுவது குறித்தும்’’ இந்த அமைப்பு தகவல் கொடுத்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் ஏராளமானவர்கள் நாடுகடத்தப்படுவது குறித்து திட்டமிடப்பட்டபோது, பிரித்தானிய உள்துறை அமைச்சு நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் நலன்கள் குறித்து கண்காணிப்பு இருக்கும் எனக் கூறியது. பின்னர் அவ்வாறு நடக்காது என்று ஒப்புக் கொண்டது.

டிசம்பர் 18 அன்று, சர்வாதிகார இராஜபக்ஷ அரசாங்கம் அதன் சொந்த மக்களையே துன்புறுத்துதலுக்கு உட்படுத்துவதில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் உடந்தையை, பெரும் ஆர்வப் பரபரப்புடன் த ஐலண்ட் பத்திரிகை பின்வருமாறு குறிப்பிட்டது : “கடந்த வெள்ளியன்று 58 இலங்கையர்களை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றியதானது, பிரித்தானிய அரசாங்கம் போலிக் காரணங்களைக் காட்டி அந்நாட்டில் தொடர்ந்து இருக்க விரும்புபவர்கள் சார்பில் பல கட்சிகளும் குழுக்கும் நடத்தும் பிரச்சாரத்தை இனி கருத்திற்கொள்ளமாட்டாது என்பதை நிரூபிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2009ல் முதலாளித்துவ பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) எதிரான போரின் இறுதிக் கட்டங்களில் 30,000க்கும் மேற்பட்ட நிரபராதிகளான தமிழர்கள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் படைகளினால் கொல்லப்பட்டனர். புனரமைப்பு முகாம்கள் என அழைக்கப்பட்ட இழிந்த தடுப்பு முகாம்களில் 280,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காவலில் வைக்கப்பட்டனர். இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் 11,000க்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர்களை இந்த முகாம்களில் இருந்து விசாரணைக்காக பிடித்துச் சென்றனர். அவர்களில் 5,000 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். மிகுதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் யுத்தகாலத்தில் காவலில் வைக்கப்பட்ட 850 பேர்கள் என்று கிட்டத்தட்ட 7,000 பேர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்ந்தும் பாகுபாட்டிற்கும் பொலிஸ் கண்காணிப்புக்கும் முகங்கொடுக்கின்றனர்.

இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் உட்பட ஐரோப்பிய அரசாங்கங்கள், தங்கள் நாட்டில் வசிக்கும் குடியேறிய தொழிலாளர்களை வெளியேற்றுவதற்காக இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் மேற்கத்தைய ஏகாதிபத்தியம் தோற்றுவித்த போர்கள், பொருளாதாரப் பேரழிவு ஆகியவற்றில் இருந்து தப்புவதற்காக பெரும்பாலானவர்கள் ஐரோப்பாவிற்குக் குடியேறுகின்றனர்.

2005ம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மந்திரிகள் குடியேறுவோர், அகதிகள் ஆகியோர் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஐரோப்பிய எல்லைகள் மீதான கட்டுப்பாட்டை ஒருங்கிணைக்க முடிவெடுத்தனர். 2008ம் ஆண்டு முந்தைய தொழிற்கட்சி அரசாங்கம் இங்கிலாந்து எல்லைப்புற நிறுவனம் (UK Border Agency) என்பதைத் தோற்றுவித்தது. இது குடியேறுபவர்களையும், உத்தியோகபூர்வ அந்தஸ்து இல்லாமல் தஞ்சம் கோருவோரையும் வெளியற்றுவதற்கு பொறுப்பைக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயுதமேந்திய, குடியேறுவோருக்கு எதிரான படையான Frontex 2007ல் நிறுவப்பட்டது. மத்தியதரைக்கடல் வழியே ஐரோப்பாவிற்கு கடினமான முறையில் நம்பிக்கையிழந்து வர முற்படும் பெருமளவான அகதிகளில் ஆயிரக்கணக்கானவர்கள் கடலில் மூழ்கிப்போதல், பட்டினி ஆகியவற்றால் இறந்துள்ளனர்.

2010ம் ஆண்டில் 26,000 அகதிகள் மற்றும் குடியேறிய தொழிலாளர்கள் பிரிட்டனில் 11 குடியேறுவோரை அகற்றும் மையங்களில் (தடுப்பு முகாம்களில்) தங்க வைக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்டவர்களிடையே இறப்புக்கள் மற்றும் தற்கொலைகள் பற்றியும் சிறுவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளது பற்றியும் சில அறிக்கைகள் வெளிவந்துள்ளன. 2010ல் யார்ல் வுட் குடியேற்றக் காவல் மையத்தில் (Yarl’s Wood Immigration Detention Centre) காவலில் வைக்கப்பட்டுள்ள பெண்கள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர். ஹீத்ரூ விமான நிலையத்திற்கு அருகே உள்ள கொல்ன்ப்ரூக்கில் (Colnbrook) இரு ஆண்கள் நெஞ்சுவலியினால் இறந்துபோயினர். மூன்றாவதாக இன்னுமொருவர் ஆக்ஸ்போர்ட்ஷயரில் (Oxfordshire) உள்ள காம்ப்ஸ்பீல்ட் ஹௌஸ் தடுப்பு முகாமில் தற்கொலை செய்து கொண்டார்.

ஜிம்மி முபெங்கா என்னும் அங்கோலா நாட்டை சேர்ந்த ஒருவர் அக்டோபர் 2010 ல் ஒரு தனியார் G4S பாதுகாப்பு நிறுவனம் நியமித்த காவலர்களால் கட்டாயப்படுத்தி நாடுகடத்தப்பட்டபோது உயிரிழந்தார்.

இத்தகைய நாடுகடத்தல்கள் என்பன ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பாகமாகும். உலக நிதிய நெருக்கடி மற்றும் பொருளாதார மந்தநிலையினால் உந்தப்பெற்று, ஆளும் உயரடுக்கினர் பெருகிய முறையில், அகதிகள் எதிர்ப்பு, குடியேறுவோருக்கு-எதிர்ப்பு, முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வுகளை தூண்டி விட்டு, தொழிலாள வர்க்கத்தைப் பிளவிற்கு உட்படுத்தி, சமூக அழுத்தங்களை பிற்போக்குத்தன வழிகளில் திசைதிருப்ப முயல்கின்றன.

ஒடுக்குமுறை ஆட்சியாளர்களிடம் இருந்து தங்களைக் பாதுகாத்துக்கொள்ள புலம் பெயர்ந்து தஞ்சம் கோரிய அகதிகளை, அதே ஒடுக்குமுறை ஆட்சியாளர்களிடம் ஒப்படைத்தல் என்பது பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் குற்றம் சார்ந்த, காட்டுமிராண்டித்தன பாத்திரத்தை தெளிவாக புலப்படுத்துகிறது.