World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US renews military threat against Iran

ஈரானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தலை அமெரிக்கா புதுப்பிக்கிறது

By Peter Symonds
11 January 2012
Back to screen version

அதன் போர்டோ யுரேனிய செறிவுபடுத்தும் ஆலை இயங்கத்தயாராக உள்ளது என்று கடந்த வார இறுதியில் ஈரான் அறிவித்துள்ளதற்கு அமெரிக்க நிர்வாகம் புதிய இராணுவ நடவடிக்கை அச்சறுத்தல்கள் எடுக்கப்படும் என்ற வகையில் பதிலளித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை அழிக்கக் கூடிய வகையில் பொருளாதாரத் தடைகளை சுமத்த அமெரிக்காவும் ஐரோப்பாவும் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்து பாரிசீக வளைகுடாவில் பதட்டங்கள் தீவிரமாக அதிகரித்துள்ளன. 

CBSன் “Face the Nation” நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா ஈரான் தற்பொழுது அணுகுண்டைத் தயாரிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டார். ஆனால் அணுவாயுதம் தயாரிக்கும் திறனை அது வளர்த்துக் கொண்டிருக்கிறது, அதுதான் நமக்குக் கவலை அளிக்கிறது என்று கூறினார்.

 “ஈரானுக்கு நாம் இடும் சிவப்புக் கோடு இதுதான்: அணுவாயுதம் தயாரிக்காதீர்கள். அது எங்களுக்கும் ஒரு சிவப்புக் கோடாகிவிடும் என்று அவர் எச்சரித்தார். தெஹ்ரான் அணுவாயுதங்களைத் தயாரிக்கிறது என்னும் போலிக் காரணத்தின்கீழ் ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ இருப்புக்களின் மீது பேரழிவு தரக்கூடிய அமெரிக்க இராணுவத் தாக்குதல் இருக்கும் என்றும் பானெட்டா எச்சரித்துள்ளார்.

தற்போதைதைய அமெரிக்கக் கவனம் பொருளாதார, இராஜதந்திர அழுத்தத்தின் மீதுதான் என்று வலியுறுத்திய அவர் எந்த விருப்பத் தேர்வையும் மேசையில் இருந்து அமெரிக்கா அகற்றவில்லை என்ற மந்திரத்தைப் பழையபடி கூறினார்.

அதே நிகழ்ச்சியில் அமெரிக்க கூட்டுப்படைகள் குழுவின் தலைவரான ஜெனரல் மார்ட்டின் டெம்சே இதே திட்டம் குறித்து, ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா அகற்றுவதில் என்ன பிரச்சனைகள் இருக்கக்கூடும் என்று கேட்கப்பட்டார். நேரடியாக இந்த வினாவிற்குப் பதில் அளிக்காமல், அவர் சரியானமுறையில் திட்டமிடுவது உறுதி செய்யப்பட்டு, இருப்புக்கள் சரியான அடையாளம்காணப்பட்டால் அத்தகைய இராணுவ விருப்பத் தேர்வுகள் உரிய காலத்தில் செயல்பட முடியும் என்றார்.

மூலோபாய ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் தடைக்கு உட்படுத்தும் எந்த முயற்சியையும் அமெரிக்க பொறுத்துக் கொள்ளாது என்றும் பானெட்டா அறிவித்தார். அது நமக்கு மற்றும் ஒரு சிவப்புக் கோடு ஆகும்; அதற்கு தக்கவகையில் முகங்கொடுப்போம் என்றார் அவர். அப்படி நடந்தால், நாம் அதைத் தோற்கடிக்கலாம் என்பதை உறுதிபடுத்தும் திறன்களில் அமெரிக்கா முதலீடு செய்துள்ளது... நடவடிக்கை எடுத்து ஜலசந்தியை மீண்டும் திறப்போம். என்றார்.

அமெரிக்க, சர்வதேச ஊடகங்களில் ஈரானை ஒரு போக்கிரி நாடாக, அணுவாயுதங்களைத் தயாரிக்க தீவிரமாக இருக்கும் நாடாக, அரக்கத்தனமாக சித்தரிக்கும் இடைவிடா பிரச்சாரங்கள் அமெரிக்க அச்சுறுத்தல்களுடன் இணைந்து வந்துள்ளன. க்வோம் நகரத்திற்கு அருகே போர்டோவில் இரண்டாம் செறிவுபடுத்தும் ஆலையைத் திறந்துள்ளமை அத்திசையில் ஈரான் எடுத்துள்ள அடுத்த நடவடிக்கை என்று சித்தரிக்கப்படுகிறது. நாடன்ஸ் செறிவுபடுத்தும் ஆலையைப் போலவே, இரண்டாவது ஆலை நிலத்தடியில் ஆழமாக நிறுவப்பட்டுள்ளது, பெரும் பாதுகாப்பிற்கு உட்பட்டது; ஈரானின் அணுநிலையங்களை குண்டு வைத்துத் தகர்ப்பதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் பலமுறை அச்சுறுத்தல்கள் கொடுத்துள்ள நிலையில், இது ஆச்சரியப்படவேண்டியதல்ல.

ஈரானிய அரசு பலமுறையும் அணுவாயுதம் தயாரிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ளது. சர்வதேச அணுசக்தி அமைப்பில் ஈரானின் தூதராக இருக்கும் அலி சோல்டநீ அமெரிக்கா இதை எதிர்கொள்ளும் முறை மிகையானது, அரசியல் நோக்கத்தை கொண்டுள்ளது என்று விவரித்தார்.

ஈரான் கருத்துப்படி, போர்டோ ஆலை மருத்துவ பதாகங்களை தயாரிப்பதற்குத் தேவையான அளவிற்கு யுரேனியத்தில் 20 சதவிகித தரத்தினை செறிவுபடுத்தும். சர்வதேச அணுசக்தி அமைப்பு ஆலைக்குள் புகைப்படக் கருவிகளை நிறுவி செயற்பாடுகளைக் கண்காணித்து வருகிறது, இராணுவ நோக்கங்களுக்காக அடர்த்தி செய்யப்படும் யுரேனியம் திசைதிருப்பப்படவில்லை என்பதை முறையான ஆய்வுகள் நடத்தி உறுதி செய்கிறது என்றும் சோல்டநீ சுட்டிக்காட்டினார்.

ஈரானிய ஆட்சியும் ஒரு கடுமையான நிலைப்பாட்டிற்கு அடையாளம் காட்டும் வகையில், ஒரு அமெரிக்க குடிமகனும் முன்னாள் இராணுவ மிர்சானீ ஹெக்மடி மீது உளவுபார்த்த குற்றத்திற்காக மரண தண்டனையை விதித்துள்ளது. ஹெக்மடி ஒரு ஒற்றர் என்பதை அமெரிக்கா மறுத்துள்ளது.

பல தொடர்ச்சியான படுகொலைகள் மற்றும் ஈரானின் அணுசக்தி, இராணுவத் திட்டங்களை சேதப்படுத்தும் திட்டம் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்றுவருவதில் நடுவே இக்குற்றச் சாட்டுக்கள் வெளிப்பட்டுள்ளன; அமெரிக்க ஆதரவுடன் ஈரானுக்குள் இஸ்ரேல் ஒரு மறைமுகமான போர் நடத்துகிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் ஈரான்மீது அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில், திட்டமிட்டதற்கு ஒரு வாரம் முன்னதாக ஜனவரி 23ம் திகதி வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டம் நடக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது ஏற்கனவே கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட எண்ணெய் மீதான தடைக்கு இறுதி வடிவம் கொடுக்கும். ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கு இடையே இன்னும் பிளவுகள் உள்ளன. அவற்றில் கிரேக்கம் போன்ற சில நாடுகள் ஈரானில் இருந்து வரும் எண்ணெயை பெரிதும் நம்பியுள்ளன. மாற்று விநியோகங்களை பெறுவதற்கு அவை நீடித்த தயவு அடிப்படையிலான காலஅவகாசத்தை கோருகின்றன. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 20% ஐரோப்பாவிற்குச் செல்லுகிறது.

அமெரிக்க நிதி மந்திரி டிமோதி கீத்னர் தற்போது சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளார். இவை இரண்டுமே அதிக அளவில் ஈரானிய எண்ணெயை இறக்குமதி செய்கின்றன. ஈரானிடம் இருந்து வாங்குவதை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க அவர் வருகிறார். ஈரானின் மத்திய வங்கியுடன் வணிகம் செய்யும் பெருவணிக நிறுவனங்கள் அமெரிக்க நிதிய முறையில் இருந்து அகற்றப்படும் என்று கூறும் சட்டம் ஒன்றில் ஒபாமா கையெழுத்து இட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் செயற்பாடுகளில் பெரும்பாலானவை மத்திய வங்கியுடன் தொடர்பு உடையவை.

அமெரிக்காவிற்கு நெருக்கமான நட்பு நாடான ஜப்பான் ஈரானில் இருந்து அதன் எண்ணெய் இறக்குமதிகளை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஜப்பானின் அரசாங்கத்திற்கு சொந்தமான எண்ணெய் ஆய்வு நிறுவனமான இம்பெக்ஸ் அமெரிக்க அழுத்தங்களுக்கு அடிபணிந்து அஜடெகன் இயற்கை எரிவாயு வயலில் அதன் கூட்டு அபிவிருத்தியை கைவிட்டுவிட்டது. ஜப்பானின் வெளியுறவு மந்திரி கோய்சிரோ ஜேம்பா நேற்று செய்தி ஊடகத்திடம் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் இடம் கூடுதல் எண்ணெய் பெற முயற்சிகள் உள்ளன என்றும் இதற்குக் காரணம் ஈரானில் இருந்து பெறும் எண்ணெய் இறக்குமதிகளை நிறுத்தப்போகிறது என்பதால் என்றார். ஜப்பானும் தென் கொரியாவும் ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிகளில் கிட்டத்தட்ட 25% த்தை வாங்குகின்றன.

பல துறைகளிலும் அமெரிக்கக் கோரிக்கைகளுடன் மோதும் சீனா இதுவரை அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து வந்துள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி ஒபாமா ஒரு முக்கிய மூலோபாய மீளாய்வை வெளியிட்டார். இது ஆசியாவை அமெரிக்க இராணுவத்தின் மிக்குயர் முன்னுரிமையாக செய்து, அப்பிராந்தியத்தில் அமெரிக்கப் பொருளாதார, மூலோபாய நலன்களுக்கு சீனா முக்கிய அச்சுறுத்துல் என்று குறிப்பாகக் கூறியுள்ளது.

சீனா அதன் நாணய மதிப்பை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்னும் அமெரிக்கக் கோரிக்கைகளை கீத்னர் பழையபடி கூறுவார். சீனா அமெரிக்கக் கார்களின்மீது காப்புவரிகளை நவம்பர் மாதம் சுமத்தியபின் வணிக உறவுகள் ஏற்கனவே அழுத்தங்களை கொண்டுள்ளன. புதுப்பிக்ககூடிய எரிசக்தி தொழில்களுக்கு அமெரிக்க அரசாஙக்கம் கொடுக்கும் மானியநிதிகள் பற்றி ஒரு விசாரணையையும் ஆரம்பித்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்துப்படி, ஒபாமா நிர்வாகம் சீனாவில் நியாயமற்ற வணிக வழக்கங்கள் குறித்து விசாரிக்க ஒரு செயற்குழுவை நிறுவ இருக்கிறது.

ஈரான் மீதான ஒருதலைப்பட்ச அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு சீனாவும் இணங்க வேண்டும் என்னும் அமெரிக்கக் கோரிக்கை சீனப் பொருளாதார, மூலோபாய நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வடிவமைப்பைக் கொண்ட மற்றொரு ஏற்பாடாகும். ஈரானுடன் சீனா நெருக்கமான பொருளாதார உறவுகளைக் கொண்டு, ஈரானிய எண்ணெயை அதிக அளவில் வாங்குகிறது. இது அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளான சவுதி அரேபியா, வளைகுடா நாடுகளை முற்றிலும் நம்பியிருப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகும்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இன்னும் அபராதங்களைச் சுமத்துவதை சீனா பகிரங்கமாக எதிர்த்துள்ளது. இதுவரை அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு கொடுக்க மறுத்துள்ளது. சீனாவின் துணை வெளிநாட்டு மந்திரி, க்யீ டியன்கை திங்களன்று, சீனாவிற்கும் ஈரானுக்கும் இடையே உள்ள வழமையான பொருளாதார வணிக உறவுகள் அணுப்பிரச்சினையுடன் தொடர்பைக் கொண்டிருக்கவில்லை என்று அறிவித்தார்.

பெய்ஜிங்கை அச்சுறுத்தும் வாஷிங்டனின் முயற்சிகள், ஈரானுடன் மோதல் என்பதைத் தீவிரமாக்குவது உலக ஏகாதிபத்திய மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உள்ளதுடன், தெஹ்ரானிடம் இருப்பதாகக் கூறப்படும் அணுவாயுதங்கள் என்னும் குற்றச்சாட்டுக்களுக்கு அப்பால் செல்கின்றன என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. மாறாக அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் உள்ள முக்கிய எரிசக்தி செழிப்புப் பிராந்தியங்களில் தன் தடையற்ற மேலாதிக்கத்தை நிறுவத்தான் முற்படுகிறது. இது அதன் ஐரோப்பிய, ஆசியப் போட்டி நாடுகளுக்கு குழிபறிக்கும் ஒரு வழிவகையாகும்.

பெய்ஜிங்கிற்கு கீத்னரின் பயணம் அமெரிக்கா ஈரானுடன் வணிகம் நடத்தும் சீனப் பெருநிறுவனங்களை தண்டிக்கக்கூடும் என்ற ஆழமான அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள பொருளாதார அழுத்தங்களை பாரியளவில் அதிகரித்துவிடும்.