World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

A socialist perspective for wage struggle of electricity, oil and water board workers

மின்சார சபை, எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் நீர் வழங்கல் சபை ஊழியர்களின் சம்பளப் போராட்டத்துக்கு ஒரு சோசலிச முன்நோக்கு

Statement of Socialist Equality Party
17 January 2012
Back to screen version

இலங்கை மின்சார சபை (இ.மி.ச.), நீர் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் சுமார் 30,000 ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி போராடுவதற்குத் தீர்மானித்துள்ளனர். இ.மி.ச. தொழிலாளர்கள் ஜனவரி 18 அன்று கொழும்பு தலைமை அலுவலகத்தின் முன்பாக மறியல் போராட்டம் ஒன்றை நடத்தி, அன்று இரவு முதல் ஒத்துழையாமை போராட்டத்தை நடத்தவுள்ளதோடு நீர் வழங்கல் சபையின் ஊழியர்கள் அன்று இரத்மலானை அலுவலகத்தின் முன்பாக மறியல் போராட்டத்தையும் மூன்று மணித்தியால அடையாள வேலை நிறுத்தத்தையும் மேற்கொள்ள உள்ளனர்.

இந்த தொழிலாளர்கள் வாழ்க்கை நிலைமையை காத்துக்கொள்வதற்காக முன்னெடுக்கும் போராட்டத்துக்கு சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) ஆதரவளிக்கின்றது. அதே சமயம், தொழிலாளர்களுக்கு எதிராக சம்பள மற்றும் வாழ்க்கை நிலைமைகள் வெட்டிச் சரிக்கப்பட்டுள்ளதோடு ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படும் நிலைமையின் கீழ், அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் போராட்டம் ஒன்றை அபிவிருத்தி செய்தால் மட்டுமே இந்தக் கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியும் என சோ.ச.க. சுட்டிக் காட்டுகின்றது. சோசலிச வேலைத் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்காக போராடுவதன் மூலமே அந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

அடுத்துவரும் மூன்று ஆண்டுகளுக்கு இ.மி.ச. மற்றும் நீர்வழங்கல் சபை தொழிற்சங்கங்கள் நூற்றுக்கு 45 வீதமும் எரிபொருள் கூட்டுத்தாபன சங்கம் 35 வீதமும் சம்பள அதிகரிப்பும் கோரியுள்ளன. மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) கீழ் இயங்கும் இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கம் இ.மி.ச. தொழிற்சங்க கூட்டமைப்புக்கு தலைமை வகிக்கின்றது. ஜே.வி.பீ. சார்ந்த நீர் வழங்கல் பொறியியலாளர் சங்கம் நீர்வழங்கல் சபை தொழிற்சங்கங்களில் முன்னணி வகிக்கின்றது. மூன்று சபைகளதும் தொழிற்சங்க கூட்டமைப்புகளில் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி சார்ந்த அமைப்புக்களும் போலி சுயாதீன சங்கங்களும் சம்பந்தப்பட்டுள்ளன.

மூன்று வருடங்களுக்கு ஒரு முறை நடப்பது போல் இம்முறையும் சம்பள உயர்வு கோரிக்கை முன்வைக்கப்பட்டவுடன் அரசாங்கம் தனது ஆயுதத்தை பலப்படுத்தியுள்ளது. அமைச்சர் கெஹெலியே ரம்புக்வெல்ல நடத்திய நிருபர்கள் மாநாட்டில், மூன்று சபைகளதும் தொழிலாளர்களுக்கு மூன்று வருடங்களுக்கும் நூற்றுக்கு 18 வீத அடிப்படை சம்பள அதிகரிப்பையும் ரூபா 2,500 மாதக் கொடுப்பணவையும் கொடுக்க மட்டுமே அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத்துக்கு அடிவருடும் ஊடங்களையும் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கம் இந்த மூன்று சபைகளதும் தொழிலாளர்களுக்கு எதிராக பிரச்சாரம் ஒன்றை தொடங்கியுள்ளது. ஜனவரி 11 வெளியான த ஐலண்ட் பத்திரிகையின் பிரதான கட்டுரையில், 2003ல் இருந்து 2009 வரை மூன்று நிறுவனங்களிலும் நூற்றுக்கு 78 வீதம் சம்பள உயர்வு கொடுக்கப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கு 45 வீதம் சம்பள உயர்வு கோருவது அசாதாரணமானது என பெயர் குறிப்பிடாத ஒரு அமைச்சர் கூறியதாக தெரிவித்துள்ளது. அமைச்சரும் த ஐலண்ட் பத்திரிகையும், புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் அடிக்கடி திருத்தப்படும் சுட்டெண் கணக்குவழக்குகளின் படி கூட, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 2003 முதல் 2011 மே மாத காலப்பகுதியில் 122 புள்ளிகளால் அதிகரித்து, கொடுக்கப்பட்ட சம்பளத்தையும் விழுங்கிவிட்டதை மூடி மறைத்துள்ளனர்.

அரசாங்கம் நிபந்தனைகளின் கீழேயே 18 வீதம் என்ற அற்பத் தொகையையும் நீட்டியுள்ளது. இது வரை நடைபெற்றிராத முறையில், மூன்று ஆண்டுகளுக்கு எந்தவொரு கோரிக்கைக்காகவும் போராட விடாமல் செய்யும் சட்டம் உட்பட, ஊழியர்களின் கை கால்களைக் கட்டிப்போடும் கூட்டு ஒப்பந்தமொன்றையும் அரசாங்கம் பிரேரித்துள்ளது. இந்த நிறுவனங்கள் உட்பட மேலும் பல அரச நிறுவனங்களில் ஊழியர்களின் வருமான வரியை அந்த நிறுவனங்களே நீண்ட காலமாக செலுத்தி வந்ததற்கான காரணம், ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை கீழ் மட்டத்திலேயே வைத்திருக்கவேயாகும். இது சட்ட விரோதமானது என அரச நிறுவனங்கள் சம்பந்தமான கமிட்டியின் தலைவர் அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அதன்படி வருமான வரி செலுத்துவதை ஊழியர்கள் மீதே சுமத்துவதற்கு அரசாங்கம் பிரேரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தத்தின் கீழ், விசேடமாக இ.மி.ச. மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபனத்தையும் மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த சபைகளின் ஊழியர்களது சம்பளக் கோரிக்கையை நிராகரித்துள்ளது. இந்த நிறுவனங்களின் பிரமாண்டமான நட்டங்களைத் தீர்ப்பதற்காக திரைசேரியில் இருந்து நிதி கொடுக்கக் கூடாது என சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டிருப்பது, அவற்றின் விலைகளை அதிகரித்து அந்த சுமைகளை பாவனையாளர்கள் மீதும் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் அவர்களது உரிமைகளையும் குறைத்து ஊழியர்கள் மீதும் நெருக்கடியின் சுமைகளை சுமத்துவதற்கேயாகும்.

கடன் சுமையில் மூழ்கியுள்ள கிரேக்கம், ஸ்பெயின் உட்பட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவிலும் உள்ள அரசாங்கங்கள் நிதிச்செல்வந்தர்களின் தேவைக்காக தொழில் மற்றும் சேவை நிலைமைகளை வெட்டிச் சரிப்பதைப் போலவே இலங்கை அரசாங்கமும் நாணய நிதியத்தின் கட்டளைகளை நடைமுறைப்படுத்துகிறது.

சம்பளக் கோரிக்கைக்காக இந்த ஊழியர்கள் போராட்டத்துக்கு வருவது அறிவிக்கப்பட்ட உடன், ஜனாதிபதி இராஜபக்ஷ தனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்ந்த தொழிற்சங்கத்தை அழைத்து ஜனவரி 10 அன்று நடத்திய கூட்டத்தில், சங்கத் தலைவர்கள் காலத்துக்கு ஏற்ற முறையில் நாட்டின் நன்மைக்காக செயற்பட வேண்டும் என கூறியுள்ளார். அரசாங்கத்தின் தொழிற்சங்கத் தலைவர்களான அமைச்சர்கள், அரசாங்கத்தின் நடவடிக்கைகளை குழப்புபவர்களுக்கு எதிராக முகங்கொடுக்கத் தயாராக வேண்டும் எனக் கூறிக்கொள்கின்றனர்.

தொழிலாளர்கள் தமது உரிமைகளுக்காக நடத்திய போராட்டங்களை பயங்கரவாதத்துக்கு செய்யும் உதவி என்று முத்திரை குத்தி, தொழிற்சங்கத் தலைவர்களின் ஒத்துழைப்புடன் அவற்றை ஒடுக்குவதற்காக, இராஜபக்ஷ அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தான் மீண்டும் தொடக்கிய யுத்தத்தை தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டது. யுத்தத்தின் பின்னர் இப்போது நாட்டின் அபிவிருத்திக்கு குழிபறிப்பவர்கள் என தொழிலாளர்கள் மீது பாய்வதற்கு அரசாங்கம் தயாராகின்றது.

கடந்த ஆண்டு செப்டெம்பரில், தாமதிக்கப்பட்டுள்ள தமது சம்பள மீதியை பெறுவதற்காக பிரச்சாரம் செய்வதற்கு இ.மி.ச. ஊழியர்கள் தயாரான போது, அவசரகாலச் சட்டம் இல்லாத நிலையில் அத்தியாவசிய சேவைச் சட்டத்தின் கீழ் இ.மி.ச.யை அத்தியாவசிய சேவையாக வர்த்தமாணியில் பிரகடனம் செய்ததை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.  

கோரிக்கையை முழுமையாக வெல்வதாக தொழிற்சங்கத் தலைவர்கள் பிதற்றிக்கொண்டனர். ஜனவரி 3 அன்று கொழும்பு இ.மி.ச. தலைமையகத்தின் முன்னால் மறியல் செய்த பின்னர் நடந்த கூட்டத்தில் இலங்கை மின்சார ஊழியர்கள் சங்கத்தின் மற்றும் சங்க கூட்டமைப்பின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் நாங்கள் உயிரை அர்ப்பணித்த இயக்கத்தின் உறுப்பினர்கள், இந்த போராட்டத்தில் உயிரைக் கொடுக்கவும் தயார் என ஜே.வி.பீ.க்கு பழக்கமான வாய்சவாடல் விட்டார். இந்த நிறுவனங்களின் ஊழியர்களை எதிர்ப்புப் போராட்டங்களுள் இறுக்கி வைத்திருப்பதும், அரசாங்கத்தின் பாய்ச்சலுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் இருந்து அவர்களைத் தடம்புறளச் செய்வதும் மூடி மறைக்கப்பட்டிருந்தது.

இப்போதே பின்வாங்குவது பற்றிய சமிக்ஞை எரிபொருள் கூட்டுத்தாபன சங்கங்களிடம் இருந்து வந்துள்ளது. எரிபொருள் துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உடன் நடத்திய பேச்சுவார்த்தையில், அந்த தொழிற்சங்கம் அரசாங்கம் பிரேரித்த சம்பள அதிகரிப்புக்கு உடன்பட்டிருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததோடு அரசாங்கத்துக்குச் சார்பான அமைப்புகளே அத்தகைய உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டணி தெரிவிக்கின்றது. ஆயினும் இந்த சங்க கூட்டணி தனது கோரிக்கை சார்பாக எதிர்ப்பு அறிக்கை கூட வெளியிடாது அரசாங்கத்துக்கு அடிபணியும் தயார் நிலையை வெளிப்படுத்தியுள்ளது.

2009ல் நூற்றுக்கு 40வீத சம்பள அதிகரிப்பைக் கோரிய இந்த மூன்று நிறுவனங்களதும் சங்கங்களின் தலைவர்கள், யுத்தத்தாலும் உலக நெருக்கடியினாலும் அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள முடியாத நிலையின் கீழ், நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கம் பிரேரித்துள்ள நூற்றுக்கு 22 வீத சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொண்டன.  யுத்தம் நடந்த ஆண்டுகளில் ஜே.வி.பீ. மற்றும் அதைச் சார்ந்த சங்கங்களும் ஏனைய சங்கங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தின் இராணுவத் தாக்குதல்களுக்கு ஆதரவு கொடுத்து தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கி அவர்களது கோரிக்கைகளையும் வெட்டித் தள்ளின.

அரசியல் போராட்டங்கள் இன்றி இந்த நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்களின் கோரிக்கைகளை வெற்றிகொள்ள முடியாது என்பது தெளிவாகின்ற நிலையில், எதிர்ப்புப் போராட்டங்கள் மூலம் அரசாங்கத்தை அடிபணியச் செய்ய முடியும் என்ற மாயையை தொழிற்சங்கத் தலைமைத்துவம் பரப்பி வருகின்றது. இந்த தொழிற்சங்கங்கள் முதலாளித்துவ தேசிய அரசுடன் பிணைந்துள்ளது. அவற்றை இயக்குகின்ற யூ.என்.பீ., ஜே.வி.பீ. உட்பட கட்சிகள் முதலாளித்துவ முறைமையை பாதுகாக்கும் சந்தைச் சார்பு பொருளாதார முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளன.

அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தமது கோரிக்கைகளை வெற்றிகொள்வதற்கு தொழிலாளர்கள் ஏனைய தொழிலாளர்களது ஆதரவுடன் தமது சக்தியைப் பிரயோகிக்க வேண்டும். ஆயினும், வெறுமனே போராளிக்குணம் மட்டும் போதுமானதல்ல. தொழிலாளர்களுக்கு அரசியல் வேலைத் திட்டம் ஒன்று அவசியம்.

இதனாலேயே போராட்டத்துக்கு வந்துள்ள தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து தமக்கேயுரிய நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பி அரசியல் போராட்டமொன்றை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும் என சோ.ச.க. வலியுறுத்துகின்றது. தொழிலாளர்கள் சகல முதலாளித்துவ மற்றும் சந்தர்ப்பவாத கட்சிகளில் இருந்து வெளியேற வேண்டும். ஏனைய தொழிலாளர்களுடன் ஐக்கியப்பட்டு, கிராமப்புற வறியவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, அனைத்துலக தொழிலாள வர்க்கத்துடனான ஒன்றிணைவுக்காக செயற்பட்டு, சோசலிச இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு இ.மி.ச., நீர்வழங்கல் சபை மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபன தொழிலாளர்களுக்கு சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது.