World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

One year of the Egyptian Revolution

எகிப்திய புரட்சியின் ஓராண்டின் பின்னர்

Alex Lantier
25 January 2012
Back to screen version

ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக எகிப்து முழுவதிலும் உள்ள நகரங்களில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் போராடுவதற்கு வீதிகளில் இறங்கிய முதல் நாளிலிருந்து, இன்றோடு ஓராண்டு முடிந்துவிட்டது. இதற்கு பதினோறு நாட்களுக்கு முன்னர், தொழிலாள வர்க்க போராட்டங்களால் துனிசிய ஜனாதிபதி ஜைன் எல் அபிடைன் பென் அலி தூக்கியெறியப்பட்டதால் உத்வேகம் பெற்ற எகிப்திய தொழிலாளர்கள், முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பதினெட்டு நாள் புரட்சிகர போராட்டத்தைத் தொடங்கினர்.

அமெரிக்க தூதர் பிரான்க் வெஸ்னெரிடமிருந்து உதவிகளும், சுமார் 840 உயிர்களைப் பலிகொண்ட போராட்டக்காரர்களுக்கு எதிரான பொலிஸ் வன்முறையும் இருந்தபோதினும், பெப்ரவரி 11இல், முபாரக் அமெரிக்க ஆதரவிலான இராணுவ ஆட்சிக்குழுவிடம் அதிகாரத்தை ஒப்படைத்துவிட்டு அவமானகரமாக பதவியிலிருந்து இறங்கினார். வறுமை மற்றும் மத்தியகிழக்கின் ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான தொழிலாளர்களின் எதிர்ப்பை நசுக்க பல தசாப்தங்களாக உதவிய ஒரு மதிப்பார்ந்த கூட்டாளியின் பொறிவால் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்கள் அதிர்ந்து போயின.   

ஸ்ராலினிஸ்டு அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை, “வரலாறு முடிந்துவிட்டதாகவும்", வர்க்க போராட்டம் மற்றும் சோசலிசத்தை முதலாளித்துவம் தீர்க்கமாக வெற்றி கண்டுவிட்டதாகவும் ஆளும் வர்க்கங்களால் கூறப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பின்னர், முபாரக்கிற்கு எதிரான ஆரம்ப வெற்றி சர்வதேச அளவில் தொழிலாளர் வர்க்கத்திற்கு சக்தியூட்டியது. கண்ணியமான கூலிகளுக்காகவும், நிலைமைகளுக்காகவும் எகிப்தில் கொண்டாட்டங்களும், வேலைநிறுத்தங்களும் பல வாரங்கள் தொடர்ந்தன. மத்திய கிழக்கு முழுவதிலும் பரவிய போராட்டங்கள், இறுதியாக இஸ்ரேல் மற்றும் அத்தோடு அமெரிக்கா உட்பட பரவின. அமெரிக்காவில் விஸ்கான்சின் ஆளுநர் ஸ்காட் வோல்கரின் சமூக வெட்டுக்களுக்கு எதிராக போராடிய தொழிலாளர்கள் "எகிப்தியரைப் போல வெளியேறு" என்று முழக்கமிட்டனர்.

ஆரம்ப வெற்றியானது, ஓராண்டு யுத்தங்கள் மற்றும் கசப்பான வர்க்க மோதல்களுக்கு களம் அமைத்தது. முபாரக் நீக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், ஆயிரக்கணக்கானவர்களை சிறையிலடைத்து சித்திரவதை செய்து வரும், நாளொன்று $2 வறிய கூலிகளுக்கு தொழிலாளர்களை ஒப்படைத்திருக்கும் இராணுவ சர்வாதிகாரம் அவ்விடத்தில் வந்து தங்கியுள்ளது. தொழிலாளர் வர்க்கம் அதன் கட்டுக்கடங்கா தைரியம் மற்றும் உறுதியை கொண்டிருந்தபோதிலும், முபாரக் ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான ஒரு போராட்டத்தால் முன்வைக்கப்பட்ட அரசியல் முன்னோக்கு, வேலைத்திட்டம் மற்றும் தலைமையின் வரலாற்று பிரச்சினைகளைத் அதனால் சாதாரணமாக கடந்து வந்துவிட முடியாது.

கடந்த பெப்ரவரியில் புரட்சியின் ஆரம்ப நாட்களில், உலக சோசலிச வலைத்தளம் விளக்கியது:புரட்சி அதன் ஆரம்ப கட்டத்தில் மட்டுமே உள்ளது. வெடிப்பால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வர்க்க சக்திகள், குறிப்பிட்ட கோரிக்கைகளின் மூலம் தம்மைத்தாமே வரையறுக்க மட்டுமே தொடங்கியுள்ளன… பல தசாப்தகால ஒடுக்குமுறையிலிருந்து எழுந்த தொழிலாளர் வர்க்கம் அதன் சொந்த வேலைத்திட்டத்தை இன்னும் ஒழுங்குபடுத்தி இருக்கவில்லை. கட்டவிழ்ந்துவரும் போராட்டங்களின் இத்தகைய ஆரம்பகட்ட தருணங்களில், அது வேறு எவ்விதத்திலும் இருக்க முடியாது.”

ஆரம்பகட்ட போராட்ட இயக்கத்தில் எழுந்த ஏனைய வர்க்க போக்குகளிலிருந்து வேறுபட்டு, நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான அரசியல் முன்னோக்கை எடுத்துக்காட்ட போராடியது. லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை அடித்தளமாக கொண்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, தொழிலாள வர்க்கத்தைக் கண்டு அஞ்சி ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்கும் முதலாளித்துவமும் குட்டி முதலாளித்துவமும் ஒரு ஜனநாயக ஆட்சியை உருவாக்க முடியாது. அதற்கு மாறாக, தேசிய மற்றும் சர்வதேச பொருளாதாரத்தை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்டுப்பாட்டின்கீழ் வைக்க, தொழிலாள வர்க்கத்தின் தலைமையில், சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகர போராட்டத்தின் மூலமாக மட்டுமே ஜனநாயகத்தை அடைய முடியும் என்பதை விளக்க முயன்றது.   

புரட்சியால் பொதுவாழ்விற்குள் நுழைந்திருந்த தொழிலாளர்களுக்கும் ஏனைய வர்க்கங்களின் பிரிவுகளுக்கும் இடையில், அதாவது முஹம்மது எல்பரடேயின் ஆதரவுடன் இருந்த தாராளவாத முதலாளித்துவத்தாலும் மற்றும் முபாரக்காலும் பகுதியாக சட்டவிரோதமாக ஆக்கப்பட்டிருந்த இஸ்லாமிய கட்சிகளான முதலாளித்துவ அடுக்குகளுக்கும், குறிப்பாக வளமான மத்தியதட்டு வர்க்கத்தின் "இடது" பிரிவுகளுக்கும் இடையில் ஆழமடையும் முரண்பாடுகளை  நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு தெளிவாக்க முயன்றது.

எகிப்தை ஆள முதலாளித்துவ கட்சிகள் இராணுவத்துடன் ஓர் உடன்பாட்டை எட்ட விரும்பின. பொருத்தமற்ற பெயரைக் கொண்ட எகிப்தின் புரட்சிகர சோசலிஸ்டுகள் (RS) மற்றும் அவர்களின் சர்வதேச சக-சிந்தனையாளர்கள் போன்ற மத்தியதட்டு வர்க்க "இடது", தாங்கள் வளமாக இருக்கக்கூடிய ஒரு இராணுவ ஆட்சியின்கீழ் "பரந்த ஜனநாயக இடத்தை" உருவாக்க, மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்பவும், கட்டுப்படுத்தவும் வாஷிங்டனோடு இணைந்து வேலை செய்ய விரும்பின.

"சுயாதீனமான" தொழிற்சங்கங்கள் என்றழைக்கப்பட்டவைக்கும் மற்றும் அரசியல் குழுக்களுக்கும் நிதியுதவி அளிப்பதன் மூலம், ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் ஜனநாயக மாற்றத்தை நடத்த அரேபிய எழுச்சி போராட்டங்களுக்கு வாஷிங்டன் உதவி வருகிறது என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிரச்சார அழைப்புகளுக்கு அந்த சக்திகள் சற்றே "இடது" சாயத்தை அளித்தன.

இந்த பிற்போக்கான அடுக்கிற்கும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டங்களுக்கும் இடையில் ஆழமடைந்து வந்த முரண்பாடுகள் கடந்த ஆண்டின் ஒரு சிக்கலான உட்கூறாக இருந்தது. எழுச்சியின் போது, இராணுவத்தோடு அதிகரித்துவந்த மக்கள் அதிருப்தி ஒரு "இரண்டாவது புரட்சிக்கு" அழைப்பு விடுக்க இட்டுச் சென்றது. புரட்சிகர சோசலிஸ்டுகள் அந்த அழைப்புகளை எதிர்த்தனர். அதற்கு பதிலாக, மக்கள் ஆதரவை அன்னியப்படுத்தியும், மற்றும் இறுதியாக தஹ்ரீர் சதுக்கத்தில் புத்துயிர்பெற்ற ஜூன்-ஜூலை போராட்டங்களை நசுக்க இராணுவத்தை அனுமதித்தும், காமா இஸ்லாமியாஹ் போன்ற அதி-வலது இஸ்லாமிய சக்திகள் உட்பட “எதிர்ப்பு" கட்சிகளின் ஓர் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தை ஒழுங்கமைக்க அவர்கள் உதவினர்.  

அவசரகால சட்டத்தின்கீழ் நடத்தப்பட்ட ஒரு போலி "ஜனநாயக மாற்றத்தின்" மீது அதிகரித்த மக்கள் கோபத்தை பிரதிபலிக்கும் விதத்தில், எகிப்தின் நாடாளுமன்ற தேர்தல்கள் தொடங்குவதற்கு சற்று முன்னர் நவம்பர் இறுதியில், வேலைநிறுத்தங்கள் மீண்டும் அடியிலிருந்து வெடிப்பார்ந்து வளர்ந்து வந்தன. தேர்தலுக்கு ஆதரவான பரந்த பிரச்சாரங்களுக்கு இடையில் ஆர்வமற்ற குறைந்த வாக்குபதிவுகளால் குறிக்கப்பட்ட அந்த தேர்தல்கள், நாடாளுமன்றத்தில் எஞ்சியிருந்த அதிகாரத்தையும் இஸ்லாமியவாதிகளிடம் ஒப்படைத்தது. இது புரட்சியில், இஸ்லாமியவாதிகளின் பாத்திரத்தை அதிகளவில் பிரதிபலிக்கவில்லை. அது குறைவாகவே இருந்தது. மத்தியதட்டு வர்க்க கட்சிகளிடமிருந்து ஆதரவைப் பெற்றுவந்த அவர்கள், எகிப்து மற்றும் பாரசீக வளைகுடா ஷேக்குகளிடமிருந்து நிதியுதவிகளையும் அனுபவித்து வந்தனர்.

இவ்வாறு இருந்தபோதினும் கூட, முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் அதி-வலது சலாபிஸ்டுகள் போன்ற இஸ்லாமிஸ்டு சக்திகளின் தலைமையிலான ஒரு மக்களாட்சியிடம் அதிகாரத்தை ஒப்படைக்க, புரட்சிகர சோசலிஸ்டுகள் தற்போது அழுத்தமளித்து வருகின்றனர்.

துப்பாக்கிமுனையிலும் மற்றும் முபாரக்கிற்கு எதிராக தொழிலாளர்களை போராட்டத்திற்கு இழுத்து வந்த சமூக அபிலாசைகளுக்கு எதிராக இருந்த விரோதத்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இதுபோன்ற ஓர் அரசாங்கம், இராணுவத்தின் தொடர்ச்சியான ஆட்சிக்கு ஒரு கவசமாக இருந்து உதவி ஒரு வன்முறையான எதிர்-புரட்சிக்கு உதவும் ஒரு ஆட்சியாக இருக்குமேயொழிய வேறொன்றுமாக இருக்காது. “இராணுவம் முந்தைய அரசியலமைப்பில் பெற்றிருந்த இடத்தையும் விட, அதிக சிறப்பார்ந்த ஒரு இடத்தை பெறுவதற்கான உரிமையை அது கொண்டிருப்பதாக,” சமீபத்தில் இஸ்லாமிய நிர்வாகிகள் வலியுறுத்தினர்

மத்தியதட்டு வர்க்க "இடது" அதேயளவிற்கு எகிப்திற்கு வெளியிலும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கு விரோதமாக உள்ளது. புரட்சிகர சோசலிஸ்டுகளும் மற்றும் பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சி (SWP) மற்றும் பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) போன்றவற்றோடு இணைப்புபெற்ற அதன் சர்வதேச அமைப்புகளும், அண்டைநாடான லிபியாவில் தலையீடு செய்வதன் மூலமாக ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக அவர்கள் போராடி வருவதாக குறிப்பிட்ட மேற்கத்திய சக்திகளின் அதே அழைப்புகளை கிளிப்பிள்ளை போல திரும்பதிரும்ப கூறிவந்தன. லிபியாவில் ஒரு யுத்தத்தைத் தொடங்கவும், மத்தியகிழக்கு முழுவதிலும் ஒரு பரந்த தலையீட்டை நடத்தவும் நேட்டோ இதையொரு வாய்ப்பாக கைப்பற்றியது.  

அக்டோபரில், நேட்டோ தலைமையிலான படைகள் குறைந்த பட்சம் 100,000 லிபியர்கள் காயமடைந்த ஒரு யுத்தத்தில் லிபிய ஆட்சியை கவிழ்த்தது. லிபிய எண்ணெய் வயல்களின்மீது மேற்கத்திய பெருநிறுவன கட்டுப்பாட்டை திடமாக்கிய அந்த நடவடிக்கை கடாபியின் படுகொலையோடு முடிவுக்கு வந்தது. சிரியாவில் ஓர் உள்நாட்டு யுத்தத்திற்கு எரியூட்ட சென்ற அமெரிக்க ஏகாதிபத்தியம், ஒரு நாசகரமான பிராந்திய அல்லது ஓர் உலக யுத்தத்தையும் கூட வெடிக்க செய்யக்கூடிய அபாயங்களைக் கொண்ட ஈரானுடன் ஓர் இராணுவ மோதலை பாரசீக வளைகுடாவில் நிலைநிறுத்துகிறது. உலக ஏகாதிபத்தியமும் அதனது மத்தியதர வர்க்க கூட்டாளிகளும் எண்ணெய் மற்றும் இரத்தத்தில் மூழ்கிய கரங்களோடு தொழிலாள வர்க்கத்திற்கு முன்னால் நிற்கின்றன.   

வெகுஜனங்களின் ஒரு புரட்சி வெடிக்கக்கூடும் என்ற அச்சதால் அவசரகால சட்டத்தை ஒரு "பகுதியாக" நீக்க எகிப்திய இராணுவ ஆட்சிக்குழு இன்று ஆலோசித்து வரும்நிலையில், வட ஆபிரிக்காவிலும் மத்தியகிழக்கிலும் 2011இன் பாய்ந்தோடிய அபிவிருத்திகளால், நிரந்தர புரட்சி தத்துவம் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியம், எகிப்திய முதலாளித்துவம் மற்றும் அவர்களின் மத்தியதட்டு வர்க்க கூட்டாளிகளும் மத்தியகிழக்கில் ஜனநாயகத்தை தோற்றுவிக்கவோ அல்லது தொழிலாளர்களை அழுத்தும் சமூக முறையீடுகளுக்கு விடையிறுக்கவோ தவறிவிட்டன. முதலாளித்துவ ஒடுக்குமுறை மற்றும் ஏகாதிபத்திய யுத்தத்திற்கு எதிராக தொடர்ச்சியான புரட்சிகர போராட்டங்களும் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்குமே எதிர்காலம் உரித்தானது.