World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Hillary Clinton’s incendiary global tour

ஹில்லாரி கிளின்டனின் தீ வைக்கும் உலகப்பயணம்

Bill Van Auken
18 July 2012
Back to screen version

வெளிவிவகாரச் செயலர் ஹில்லாரி கிளின்டனின் அசாதாரண 13 நாள் ஆசியா, மத்திய கிழக்குப் பயணம் ஆத்திரமூட்டிவிடும் தன்மை மற்றும் பாசாங்குத்தனத்தின் ஒரு தீப்பற்ற வைக்கும் கலவையை பிரதிபலித்ததுடன், உலகளவில் அமெரிக்க இராணுவவாதத்தின் புதிய வெடிப்பினையும் அடையாளம் காட்டியது.

கிளின்டனுடைய பயணப்பட்டியலில் பிரான்ஸ், ஆப்கானிஸ்தான், ஜப்பான், மங்கோலியா, வியட்நாம், லாவோஸ், கம்போடியா, எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகளில் தங்குவது அடங்கியிருந்தது. இது இரண்டு இடைத்தொடர்புடைய அமெரிக்க வெளியுறவுக் கொள்கை இலக்குகள் மீது குவிப்பைக் காட்டியது. முதலாவது மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவிலுள்ள எண்ணெய் வளம் உடைய பகுதிகளில் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதை விரிவு செய்யும் வாஷிங்டனின் எதிர்ப்புரட்சி மூலோபாயம் ஆகும்.

இரண்டாவது ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவை “முன்னிலைப்படுத்தல்” என்னும் கருத்தாய்வை வளர்த்தலாகும். இது சீனாவின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவச் செல்வாக்கை அமெரிக்க இராணுவத்தினால் சுற்றி வளைத்தல் மற்றும் பிராந்திய அழுத்தங்களுக்கு எரியூட்டல் என்பவற்றின் மூலம் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையது.

தன்னுடைய பயணத்தின்போது, வெளிவிவகாரச் செயலர் “ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக ஆதரவு என்பது அமெரிக்க மூலோபாயத்தின் இதயத்தானம்” என்று அறிவித்தார்.

தன்னுடைய பயணத்தை ஜூலை 5 ல் பிரான்ஸில் “ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள்” என்ற பெயரில் “சிரிய நண்பர்களின் மாநாடு”, பிரெஞ்சு அரசாங்கத்துடன் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியாவில் குறுங்குழுவாத உள்நாட்டுப் போரைத் தூண்டுதல், அதற்கு ஆயுதமளித்தல், ஆட்சி மாற்றத்திற்கான நேரடி இராணுவத் தலையீடு ஆகியவை பற்றி ஆலோசனைகளை நடத்தினார்.

அதே நேரத்தில் தலையீட்டிற்கான அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு அடிபணியவில்லை என்றால் ரஷ்யா மற்றும் சீனா இரண்டுமே “மிக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும்” என்ற ஒரு மறைமுக  அச்சுறுத்தலையும் அவர் கொடுத்தார்.

ஜூல 17ம்தேதி எகிப்திலும் இஸ்ரேலிலும் இறுதியாக தங்கிநின்றதுடன் தன்னுடைய பயணத்தையும் அவர் முடிவு செய்தார். எகிப்தில் அவர் நாட்டின் ஆயுதப்படைகள் குழுவின் தலைமைக்குழு என்னும் ஆட்சிக்குழு, அதன் தலைவர் பீல்ட் மார்ஷல் மகம்மது ஹுசைன் தந்தவிக்கு மரியாதை செலுத்தி, நாட்டின் பல மில்லியன் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக, சமூக விருப்புகளுக்கு எதிரான எதிரப்புரட்சியின் அரணான எகிப்திய இராணுவத்திடம் வாஷிங்டன் நம்பிக்கை கொண்டுள்ளது என மறு உறுதியைக் கொடுத்தார்.

உத்தியோகபூர்வமாக கிளின்டன் தான் ஒரு “ஜனநாயக மாற்றத்தினை” கோருவதாக கூறினார். இச்சொற்றொடர் ஒபாமா நிர்வாகம் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதன் நீண்டகால நண்பர், சர்வாதிகாரியான ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சியை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியாத தோல்விகளுக்குப்பின் அடிக்கடி கூறுகிறது.

இஸ்ரேலில் அவர் ஈரானுக்கு எதிரான புதிய போர் அச்சுறுத்தல்களை விடுத்து, வாஷிங்டனும் டெல் அவிவும் “ஒரே பக்கத்தில் இருப்பவை” என்றும், அமெரிக்கா “அமெரிக்கச் சக்தியின் அனைத்துக் கூறுபாடுகளையும்” ஈரானின் அணுவாயுதத் திட்டத்திற்கு எதிராக” செயல்படுத்த தயார் என்று வலியுறுத்தினார்.

கிளின்டனின் பயணத்தின் இரண்டாம் பகுதி அவரை ஆப்கானிஸ்தானத்திற்கு இட்டுச் சென்றது. அங்கு அமெரிக்க ஆதரவுடைய கைப்பாவை ஜனாதிபதி ஹமித் கர்சாயுடன் அவர் வாஷிங்டன் அந்நாட்டை ஒரு முக்கிய “நேட்டோவில் இல்லாத முக்கிய நட்பு நாடு” என அழைத்து, அதை தென் கொரியாவுடன் இராஜதந்திரரீதியாக ஒரேயிடத்தில் இருத்தி, பல ஆயிரக்கணக்கான அமெரிக்கத் துருப்புக்கள் காலவரையற்று அந்நாட்டினை ஆக்கிரமிப்பிற்கான அஸ்திவாரங்களையும் அமைத்தார்.

ஆசியாவில் பாசாங்குத்தன மனித உரிமைகள் கருத்துக்களையும் கிளின்டன் கூறினார். மங்கோலியாவில் ஆற்றிய உரை ஒன்றில் அங்கிருக்கும் தன்னலக்குழு ஆட்சிக்கு ஆதரவாக அதை ஜனநாயகம் மற்றும் செழுமைக்கு வழிகாட்ட இருப்பது என்றும், இது சீனாவில் இருக்கும் ஒரு கட்சி முறைக்கு முற்றிலும் மாறானது என்றும் பாராட்டினார். மங்கோலியாவில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாழ்கின்றனர், ஒரே ஒரு சிறிய அடுக்குத்தான் உயர்மட்டத்தில் தன்னை சுரங்கத் தொழிலின் ஏற்றத்தினால் செல்வத்தை குவித்திருப்பது என்பது கிளின்டனுக்கு அமெரிக்காவிலேயே இருக்கும் சமூக சமத்துவமின்மை பற்றியதுபோல் சிறிதும் கவலை கொள்ள வைக்கவில்லை.

நியூ யோர்க் டைம்ஸ்  மங்கோலிய மக்களின் உண்மை நிலை பற்றித் திங்களன்று ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளது. தலைநகருக்குப் புறத்தே “நெரிசல் நிறைந்த யர்ட் சேரிகளில் பெரும்பாலான மக்கள் வாழ்வதை” குறிப்பிட்டுள்ளது. சில உள்ளூர்வாசிகள் அதை மங்கோலியாவின் favelas-பிரேசிலில் உள்ள பாரிய சேரிகள்- என்று குறிப்பிடுகின்றன. வேலையின்மை அங்கு மிகவும் அதிகரித்துள்ளதுடன், மின்சாரமும் குடிநீரும் தட்டுப்பாடாக உள்ளன. குறைந்த வசதியுடையவர்கள் சாக்கடை அருகே வசிக்கும் நிலையில்தான் உள்ளனர். அங்கு அவர்கள் தட்ப நிலை 40க்கும் கீழே போகும்போது சுடுநீர்க்குழாய்களுக்கு அருகே அடைகின்றனர்.

வாஷிங்டனுடைய கூட்டுக்கள் ஜனநாயகம் என்னும் “உலகளாவிய கொள்கைகளால்” நிர்ணயிக்கப்படுகிறது என்னும் வெளிவிவகாரச் செயலரின் கூற்று உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சித்திரவதை ஆட்சியுடன் அது கொண்டுள்ள நெருக்கமான பிணைப்பினால் பொய்யாகிறது. இந்நாடு ஆப்கானியப் போரில் பொருள் விநியோக பாதையில் முக்கிய இணைப்பு ஆகும். இதைத்தவிர, உலகில் மிக அதிகம் யுரேனியம் உற்பத்தி செய்யும் காஜக்ஸ்தானில் இருக்கும் சர்வாதிகார ஆட்சி, மற்றும் இந்தோனிசியாவில் இருந்து தென் கொரியா வரை நீண்டகாலமாக இராணுவச் சர்வாதிகாரங்களுக்கு அமெரிக்கா கொடுக்கும் ஆதரவு ஆகியவை கூறப்பட வேண்டிய தேவையே இல்லை.

கிளின்டனுடைய பயணத்தில் லாவோஸிற்கு ஒரு வருகையும் இருந்தது; 57 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் இந்நாட்டிற்கு மேற்கொண்ட பயணம் ஆகும் இது. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, 1960 களின் நடுப்பகுதியில் இருந்து 1970 களின் நடுப்பகுதி வரை, அமெரிக்க ஏகாதிபத்தியம் லாவோஸை உலகிலேயே ஒரு தனிநபருக்கு மிக அதிகம் குண்டு வீசப்பட்ட நாடு என மாற்றியது; அமெரிக்காவுடன் போரில் ஈடுபடாத ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகன் மீதும் 0.84 தொன் வெடிகுண்டுகளை வீசியது. இதைத்தவிர 30,000 லாவோஸ் மக்கள் இந்த நெருப்புக் கோளத் தாக்குதலால் கொல்லப்பட்டனர். மற்றும் 20,000 பேர் போரின்போது வெடிக்காது பின்னர் வெடித்த குண்டுகளினால் உயிர்களை இழந்தனர்.

வியன்டைனில் இருந்து தூதரக அலுவலகர்களிடம் கிளின்டன் அவருடைய பயணத்தின்மூலம் “அமெரிக்கா ஆசிய-பசிபிக் பகுதியில் நம் ஈடுபாட்டை ஆழப்படுத்தியுள்ளது. நாம் முன்னே நிலைநிறுத்தும் இராஜதந்திர நெறி என்பதைக் கடைப்பிடிக்கிறோம்” என்றார். வேறுவிதமாகக் கூறினால், “மீண்டும் ஆசியாவிற்கு” என்னும் அதன் மூலோபாயத்தால் அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்பிராந்தியத்தில் அதன் கடைசி குற்றம் சார்ந்த போர் நடந்த இடத்தை அடுத்தப் போருக்கு முன்னிலைச் செயற்பாடுகள் கொண்ட தளமாக மாற்ற முற்படுகிறது.

கம்போடியாவில் கிளின்டன் ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்டார். இதில் பிராந்தியத்தில் வாஷிங்டன் ஆத்திரமூட்டும் தலையீடுகள் பற்றிய கருத்துக்கள் அம்மாநாட்டைத் தேக்க நிலைக்கு கொண்டுவந்தன. முதல் தடவையாக பங்குபெற்றவர்கள் இறுதிக் கூட்டு அறிக்கை வெளியிட முடியாமல் போனது: இதற்குக் காரணம் சீனாவை பிலிப்பைன்ஸ், வியட்நாம், ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையிலான கடல்பிராந்தியங்கள் குறித்த தீவிரக் கருத்து வேறுபாடுகள்தாம்.

2010ல் இருந்து அமெரிக்க தன்னுடைய “பசிபிக் சக்தி” என்னும் அந்தஸ்த்தைத் தென் சீனக் கடலில் உரிமை கொண்டாடப் பயன்படுத்துகிறது. அந்த இடமோ மூலோபாய வணிகப் பாதைகளையும் பரந்த எரிசக்தி இருப்புக்களையும் கொண்டது. இதை ஒரு அமெரிக்க ஏரி போல் அமெரிக்கா மாற்ற முயலும வகையில் அப்பகுதியில் தன் “தேசிய நலன்கள்” உள்ளன என உறுதியாகக் கூறுகிறது.

இப்பிராந்தியத்தில் கிளின்டனுடைய வருகையைத் தொடர்ந்து இரண்டு உயர்மட்ட பென்டகன் அதிகாரிகளும் வரவுள்ளனர். அமெரிக்கப் பசிபிக் கட்டுப்பாட்டின் புதிய தலைவர் சாமுவெல் லோக்லியர், பிலிப்பைன்ஸுக்குப் பறந்துவந்து, அங்கிருக்கும் உயர்மட்ட அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகளைச் சந்தித்து, தான் எப்படி பாரிய பசுபிக் வகைகுடா கடற்படைத்தளத்தில் ஒரு இளம் அதிகாரியாக அங்கு இருந்தார் என்பது பற்றி நினைவு கூர்ந்தார். இது ஒரு புதிய அமெரிக்க இராணுவ நிலைப்பாடு ஒரு சீன எதிர்ப்புக் கூட்டினை அதிகரிக்க வரவுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

துணைப் பாதுகாப்பு மந்திரி ஆஷ்டன் கார்ட்டர் 10 நாள் ஆசியப் பயணத்தை செவ்வாயன்று ஆரம்பித்தார். ஓர் உயர்மட்ட பென்டகன் செய்தித்தொடர்பாளர் இப்பயணத்தை “ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவத்தின் அணுகுமுறை நடைமுறையில் என்ன அர்த்தத்தை கொண்டிருக்கும் என்பது பற்றிய விரிவான விவாதங்களைக் கொண்டிருக்கும்” என விவரித்தார்.

இப்பிராந்தியத்தில் பென்டகனுடைய இராணுவ கட்டமைப்பும்  வெளிவிவகாரச் செயலர் கிளின்டன் நடத்தும் ஆத்திரமூட்டல்களும் அமெரிக்க ஏகாதிபத்திய மூலோபாயமான அதன் பொருளாதாரச் சரிவை ஈடுகட்டுதல், சீனாவின் மூலோபாயப் போட்டித் திறன் எழுச்சியைக் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றிற்கு அமெரிக்க இராணுவ வலிமை பயன்படுத்தப்படும் என்பதின் வெளிப்பாடு ஆகும்.

அமெரிக்கா மற்றும் உலக முதலாளித்துவத்தின தீவிர நெருக்கடியினால் உந்துதல் பெற்றுள்ள இந்தப் பொறுப்பற்ற மூலோபாயம் தன்னுடன் நூறாயிரக்கணக்கான மில்லியன் மக்களுடைய வாழ்வை அச்சுறுத்தும் ஒரு புதிய உலக மோதல் என்ற ஆபத்தையும் கொண்டுள்ளது.