World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions betray university workers’ strike

இலங்கை தொழிற்சங்கங்கள் பல்கலைக்கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது

By Dehin Wasantha
4 July 2012

Back to screen version

அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக் குழு (IUTUJC), அதன் கோரிக்கைகள் எதனையும் வெற்றிகொள்ளாமல் இலங்கை பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டது. 25 சதவீத உடனடி சம்பள உயர்வு கோரியும் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரியும் ஜூன் 5 தொடங்கிய வேலை நிறுத்தம், மூன்று வாரங்களுக்கு மேல் தொடர்ந்து, ஜூன் 26 அன்று முடிவுக்கு வந்தது.

எதிர் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.), ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.), ஆகியவற்றைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும், அதே போல் சுயாதீனம் என்று சொல்லிக்கொள்ளும் பல தொழிற்சங்கங்களும் இந்த தொழிற்சங்க கூட்டுக் குழுவில் உள்ளன. ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) சார்ந்த தொழிற்சங்கம் இந்த கூட்டுக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் அதேவேளை, வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டு குழு தலைவர்கள், தாம் அரசாங்கத்துடனும் பல்கலைக்கழக அதிகாரிகளுடனும் எந்தவொரு சமரசமும் செய்யப் போவதில்லை என வேலைநிறுத்தத்தின் ஆரம்பத்தில் பெரிதாகக் கூறிக்கொண்டன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை "காலவரையற்ற வேலைநிறுத்தம்" செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். இவை வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கு சொல்லப்பட்ட ஏமாற்று வார்த்தைகளாகும். ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனும் (UGC) அரசாங்க அதிகாரிகளுடனும் கொடுக்கல் வாங்கலுக்குச் செல்வதற்கான விருப்பத்தை சமிக்ஞை செய்திருந்தன.

தொழிற்சங்கங்கள் யு.ஜி.சி.யுடனும் திரைசேறியுடனும் இரு சுற்று கலந்துரையாடல்களும், அதே போல் தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் மேலும் மூன்று சுற்று பேச்சுவார்த்தைகளும் நடத்தியிருந்தன. உண்மைக்கு மாறாக, தொழிற்சங்க தலைவர்களால் வேலை நிறுத்தக்காரர்களுக்கு சொல்லப்பட்ட செய்தி, சாதகமான பதில் கிடைக்கும் என்பதே ஆகும்.

விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருந்த அதே சமயம், உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, வேலை நிறுத்தம் செய்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தான் தயாரில்லை என்று திமிர்த்தனமாக அறிவித்ததோடு உடனடியாக வேலைக்கு திரும்புமாறும் அவர்களுக்கு கட்டளையிட்டார். அவர் வேலைநிறுத்தம் செய்த காலத்துக்கான தொழிலாளர்களின் சம்பளத்தை நிறுத்திவைப்பதாகவும் அச்சுறுத்தினார்.

தொழிற்சங்கங்கள் ஒரு வியாபாரத்துக்கான சமிக்ஞையை காட்டத் தொடங்கின. கூட்டுக் குழுவின் தலைவர் இணை தலைவர் ஆர்.எம். சந்திரபால, தொழில் திணைக்களத்தில் நடந்த இரண்டாவது கலந்துரையாடலின் முடிவில், தொழிற்சங்கங்கள் 25 சதவிகித சம்பள அதிகரிப்புக்கான கோரிக்கையை "மறுபரிசீலனை" செய்யத் தயார் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இறுதியில் தொழிற்சங்க தலைவர்கள் யு.ஜி.சி. உடன் ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கையெழுத்திட்டவர்களில் ஒருவரான கூட்டுக் குழுவின் ஊடக பேச்சாளர் விஜேதிலக ஜயசிங்க, யு.ஜி.சி. சம்பள முரண்பாடுகளை திருத்தி 45 நாட்களுக்குள் ஒரு சுற்றறிக்கையை வெளியிட ஒப்பு கொண்டதாகக் கூறினார். 25 சதவீத சம்பள அதிகரிப்பு பற்றியோ அல்லது வேலைநிறுத்த காலத்துக்கு ஊதியத்தை வெட்டுவதாக அமைச்சர் விடுத்த அச்சுறுத்தல் பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

மீண்டும், எதிர்காலத்தில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என்ற மலிந்த வாக்குறுதிக்காக தொழிற்சங்க கூட்டுக்குழு தொழிலாளர்களை காட்டிக் கொடுத்துள்ளது. தனது வாக்குறுதிகளை மீறுவதில் பேர் போன அரசாங்கமே இந்த வாக்குறுதியைக் கொடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் (IMF) வகுத்த பரந்த சிக்கன திட்டத்தின் ஒரு பகுதியாகவே அரசாங்கம் கல்விசாரா ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க மறுக்கின்றது. அரசாங்கம் எரிபொருள், உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்தி, சமூக செலவுகளை வெட்டிக் குறைத்துள்ள நிலையிலும் கூட ஊதிய உயர்வை கட்டுப்படுத்திவருகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் கசப்புடன் எதிர்க்கும் தொழிற்சங்க கூட்டுக்குழு, கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்துக்கும் மேலாக சம்பளப் பிரச்சினைக்காக நடந்த போராட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக காட்டிக்கொடுத்து வருகிறது.

கல்விசாரா ஊழியர்கள் 2,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு கோரி, 2004 செப்டம்பரில் வேலை நிறுத்தம் செய்தபோது, தொழிற்சங்க அதிகாரிகள் 1,000 ரூபா கொடுப்பனவுக்கு கைம்மாறாக வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டனர்.

2005 ஜூலையில், தொழிலாளர்கள் அதே கோரிக்கைகளுக்காக மீண்டும் வேலை நிறுத்தம் செய்தபோது, அந்த போராட்டத்தை ஜே.வி.பி. தலைமையிலான அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கம் (IUSTU) கீழறுத்தது. அனைத்துப் பல்கலைக்கழக சேவைகள் தொழிற்சங்கம், அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சுனாமி நிவாரண நிதியை கூட்டாக நிர்வகிப்பதற்கு எதிரான ஜே.வி.பி.யின் இனவாத பிரச்சாரத்தில் கவனம் செலுத்தும் பொருட்டு, தொழிலாளர்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியது.

2007 மேயில், "நாட்டில் நிலவும் சூழ்நிலையின்" காரணமாக கூட்டுக் குழு இன்னொரு வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது. வேறு வார்த்தைகளில் சொன்னால், தொழிலாளர்கள் புலிகளுக்கு எதிரான ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்துக்காக தங்கள் நலன்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), சமீபத்திய வேலைநிறுத்தத்தின் தொடக்கத்தில் இருந்தே, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் இன்றி தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெற்றிபெற முடியாது என்று எச்சரித்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) அறிக்கையொன்று விளக்கியதாவது: "ஊதிய வெட்டுக்களும் கல்விசாரா ஊழியர்கள் மீது அதிகரித்து வரும் பணிச்சுமைகளும் அரசாங்கத்தின் சந்தை சார்பு நிகழ்ச்சித் திட்டத்துடன் பிணைந்துள்ளது. ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் இதே நிலை நிலவுவதால், ஜனாதிபதி இராஜபக்ஷ சிக்கன நடவடிக்கைகள் மூலம் உழைக்கும் மக்கள் மீது உலக முதலாளித்துவ நெருக்கடியின் சுமைகளை சுமத்த நிதிய சந்தைகளின் கோரிக்கைகளை அமுல்படுத்தி வருகிறார்.

"தொழிற்சங்கங்களும் மற்றும் அவை சார்ந்த அரசியல் கட்சிகளும் அரசாங்கத்தின் கொள்கைகளுடன் அடிப்படை வேறுபாடுகளைக் கொண்டிருக்கவில்லை. மற்றும் இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுத்து சலுகைகள் பெற முடியும் என்ற மாயையை அவை ஊக்குவிக்கின்றன."

தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து வந்து தமது சொந்த சுயாதீன போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என சோ.ச.க. வலியுறுத்தியது. இதற்கு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை வேலைத் தளங்களிலும் அயல் பிரதேசங்களிலும் அமைப்பது அவசியம்.

இந்த அரசியல் போராட்டத்தில், சமுதாயத்தை தனியார் இலாபத்துக்காக அன்றி, சமூக தேவைகளை இட்டு நிரப்புவதன் பேரில் மறு ஒழுங்கு செய்வதற்காக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ ஆட்சிக்கு முடிவு கட்டி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை நிறுவ ஒரு சோசலிச முன்னோக்குடன் ஆயுதபாணியாக வேண்டும். இந்த பணிக்கு சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள், முதலாளித்துவத்தின் அனைத்து பிரிவுகளில் இருந்தும் சுயாதீனமாக ஐக்கியப்பட வேண்டும். அதே போல் பிராந்தியத்திலும் மற்றும் சர்வதேசம் முழுவதும் தமது வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஐக்கியப்பட வேண்டும்.

ஆரம்பத்தில் இருந்தே, தொழிற்சங்கங்கள் அத்தகைய ஒரு அரசியல் போராட்டத்துக்கு முற்றிலும் விரோதமானவையாக இருந்தன. சோ.ச.க., பேராதனை மற்றும் ருகுணு பல்கலைக்கழகங்களில் தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்போது, தொழிற்சங்க தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் சோ.ச.க. உறுப்பினர்களை அச்சுறுத்தி, கலந்துரையாடல்களை தொடரவிடாது தடுத்தனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில், அனைத்து அமைப்புகளையும் சேர்ந்த தொழிற்சங்க தலைவர்கள், இக்கட்டுரையின் ஆசிரியர் மீது சரீரத் தாக்குதல் நடத்த ஒன்றிணைந்தனர். அவர் பல தடவை அச்சுறுத்தல்களை உடைத்தெறிந்து கூட்டங்களில் தொழிலாளர்கள் முன் பேசினார்.

ஒட்டுமொத்த தொழிலாளர்களும் இந்த காட்டிக்கொடுப்பில் இருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். தொழிற்சங்க கருவிகளில் இருந்து முழுமையாக பிரியாமல் மற்றும் ஒரு சோசலிச முன்னோக்கின் பக்கம் திரும்பாமல், தொழிலாள வர்க்கம் ஒரு அடியேனும் முன்னெடுத்து வைப்பது சாத்தியமற்றது. நாம் சோசலிச சமத்துவ கட்சியின் வேலைத் திட்டத்தை முழுமையாக படிக்குமாறும், அதை தொழிலாள வர்க்கத்தின் புதிய வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்ப அதில் இணையுமாறும் சகல கல்விசாரா ஊழியர்களுக்கும் ஏனைய தொழிலாளர் தட்டினருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.