World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Syrian army casualties rise as West inflames civil war

மேற்கு நாடுகள் உள்நாட்டுப் போருக்கு எரியூட்டுகையில் சிரிய இராணுவ இறப்புக்கள் அதிகரிக்கின்றன

By Bill Van Auken
5 June 2012

Back to screen version

அமெரிக்காவும் நேட்டோவிலும், பாரசீக வளைகுடாவிலுள்ள முடியரசுகளில் அதன் நட்பு நாடுகளும் ஆட்சி மாற்றத்திற்கான பிரச்சாரத்தை தீவிரமாக்கும்போது, மொத்த இறப்புக்களின் எண்ணிக்கை குறைகையில் சிரியாவில் கொல்லப்படும் இராணுவத்தினரது எண்ணிக்கை தீவிரமாக உயர்ந்துள்ளது.

SOHR எனப்படும் லண்டனைத் தளமாக கொண்டதும் மற்றும் சவுதி, கட்டார் ஆட்சிகளிடம் இருந்து நிதி பெறும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கடந்தவாரம் வெளிவிட்ட அறிக்கை ஒன்றின்படி டமாஸ்கஸின் புறநகரிலும் இட்லிப் மாநிலத்திலும் கிட்டத்தட்ட 100 படையினர் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் மருத்துவமனை ஆதாரங்கள் மூலம் இறந்த படையினரது 80 பேர்களுடைய பெயர்களைத் தான் உறுதி செய்துள்ளதாக இக்குழு கூறுகிறது.

இக்கண்காணிப்புக்குழு, சனிக்கிழமை அன்று 57 சிரிய படையினர் கொல்லப்பட்டனர் என்றும், அந்த எண்ணிக்கை மார்ச் 2011ல் சிரியாவில் சமூக அமைதியின்மையின் தொடக்கத்தில் இருந்து ஏற்பட்டுள்ள மிகஅதிக இராணுவ இறப்பு எண்ணிக்கை என்றும் கூறியுள்ளது.

தெரு மோதல்களில் பயிற்சி பெற்றிராத காரணத்தால், இத்தகைய தாக்குதல்களுக்கு எளிதில் இரையாவதால் துருப்புக்கள் பெரும் இழப்புக்களுக்கு உட்படுகின்றன என்று SOHR உடைய தலைவர் சமி அப்துல் ரஹ்மான் AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். இத்தாக்குதல்களில் கார்க்குண்டுத்தாக்குதல்கள், படைகளை காவிச்செல்லும் வாகனங்கள் மீது தாக்குதல் மற்றும் சோதனைச் சாவடி மீதான தாக்குதல்கள் ஆகியவை அடங்கும்.

துருப்புக்கள் இறப்பு பற்றிய சமீபத்திய அறிக்கைகள் மக்கார்தி செய்தித்தாட்கள் குழுவிலுள்ள டேவிட் எண்டர்ஸுடைய ஆய்வுடன் இணைந்து காணப்படுகின்றன. அந்த ஆய்வில் ஐக்கிய நாடுகள் சபை தூதர் கோபி அன்னானின் முயற்சியில் போர்நிறுத்தத் திட்டம் ஏப்ரல் செயல்படுத்தப்பட தொடங்கியதில் இருந்து, மொத்தத்தில் வன்முறை இறப்புக்கள் துரிதமாகச் சரிந்து வருகின்றன என்றாலும் இராணுவத்தினர் இறப்பு எண்ணிக்கை தீவிரமாகியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

சிரிய மனித உரிமைகள் இணையம் தொகுத்துள்ள புள்ளிவிவரங்களை மேற்கோளிட்டு, மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் பொதுவாக வன்முறை 36% குறைந்து விட்டது என்று எண்டர்ஸ் தகவல் கொடுக்கிறார்.

அரசாங்கச் செய்தி நிறுவனத்தின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் கட்டுரைகளின்படி, 953 பொலிஸ் அதிகாரிகள் மார்ச் 11ல் இருந்து இறந்துள்ளனர். இவர்களுள் 404 பேர், அல்லது 42% மே மாதம் மட்டும் கொல்லப்பட்டனர் என்று எண்டர்ஸ் கூறியுள்ளார்.

சிரிய பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் கொலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை மேற்கு ஆதரவில் தங்களை சுதந்திர சிரிய இராணுவம் என்று அழைத்துக் கொள்ளும் அரசாங்க எதிர்ப்பு குழுக்களுக்கு ஆயுதமளித்து, பயிற்சியளிப்பது கணிசமாக அதிகரித்துவிட்டது என்பதைத்தான் காட்டுகிறது. சிரிய அரசாங்கம் ஆயுதங்கள் கடத்தப்படுவதை தடைக்குட்படுத்தியுள்ளது அதிகரித்துள்ளதாக, குறிப்பாக லெபனிய எல்லையில் இருந்து என்று கூறியுள்ளது. சவுதி அரேபியா மற்றும் கட்டார் ஆகியவை அரசாங்க எதிர்ப்புச் சக்திகளுக்கு நிதி, ஆயுதங்கள் வழங்கும் தங்கள் விருப்பங்களை அறிவித்துள்ளன.

அரசாங்க படைகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன என்னும் உண்மை, அதே நேரத்தில் பொதுவான வன்முறை அளவு குறைந்துவிட்டது என்று கூறப்படுவதும், மே 15 அன்று ஹௌலாவில் 108 பேர் படுகொலைகள் செய்யப்பட்டதைச் சூழ்ந்திருந்த செய்தி ஊடகப் பிரச்சாரத்தினால் முற்றிலும் மறைப்பிற்கு உட்படுகிறது. அக்கொலைகளுக்கான பொறுப்பு குறித்து உறுதியான சான்றுகள் வெளிப்படவில்லை என்றாலும், அரசாங்கச் சார்பு மற்றும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகள் இரண்டுமே இதே போன்ற கொடூரங்களை நிகழ்த்தியுள்ளன.

சிரிய அரசாங்கம் நடத்தும் செய்தி நிறுவனமான SANA தன்னை ஜபாத் அல் நுஸ்ரா (Jabhat al Nusra -Al-Nusra Frong) எனஅழைத்துக்கொள்ளும் இஸ்லாமியக் குழு ஒன்று சிரியத் தலைநகரான டமாஸ்கஸில் கடந்த மாதம் 55 பேரை கொன்றதற்கான குண்டுத்தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளதாகவும், அதன் வலைத் தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, கடந்த வாரம் கைகள் பின்புறம் கட்டப்பட்ட நிலையில் தலையில் அருகில் இருந்து சுட்டுக் கொல்லப்பட்ட 13 குடிமக்கள் கொலைகளையும் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இது டையிர் எஸ்ஸோர் என்னும் கிழக்கே பாலைவனத்தில் உள்ள மாநிலத்தில் நடந்தது.

சிரிய கிளர்ச்சியாளர்கள் நடத்திய பெரும்பாலான கொடூரங்களைப் போலவே இந்த வெகுஜனப் படுகொலை மேலைச் செய்தி ஊடகத்தில் அதிக கவனம் கொடுக்கப்படவில்லை.

ஞாயிறன்று நிகழ்த்தி உரை ஒன்றில் அசாத் பாதுகாப்புப் படையினர் கொலைகளை நடத்தினர் என்பதை மறுத்தார். அரச சார்பு போர்க்குழுக்கள் இதைச் செய்திருக்க வேண்டும் என்று கூறப்படும் முயற்சியையும் கேள்விக்குட்படுத்தினார். இதில் எவருக்கு இலாபம்... அரசாங்கமோ, அரசாங்கச் சார்புடைய நபர்களோ இச்செயலை அன்னன் வருவதற்கு முன்செய்து வருகையைத் தோல்வி அடைய வேண்டும் என விரும்பினரா? என்று அசாத் கேட்டுள்ளார்.

ஹௌலா கொலைகளைத் தொடர்ந்து, மேலைச் சக்திகளும் அவற்றின் அரபு வளைகுடா நாடுகளும் சிரிய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வேளியேற்றி, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான கோரிக்கைகளையும் அதிகப்படுத்தின. சிரியாவிற்குள் இருக்கும் அரசாங்க எதிர்ப்புச் சக்திகளும் இதைப் பின்பற்றின.

சுதந்திர சிரிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேற்கின் ஆதரவுடைய எழுச்சியாளர்கள் அன்னானுடைய போர்நிறுத்தத் திட்டத்திற்கு ஆதரவு தருதல் என்ற போலித்தனத்தைக் கூடக் கைவிட்டதாகக் கூறினார் என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தப் போர்நிறுத்தத்திற்கு ஒப்புதல் என்பதை முடித்துவிட நாங்கள் முடிவெடுத்துவிட்டோம் என்று சுதந்திர சிரிய இராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் சமி அல்-குர்டி செய்தி நிறுவனத்திடம் கூறினார். எங்கள் தாக்குதலை மீண்டும் நடத்துகிறோம்: ஆனால் தற்பாதுகாப்பு தாக்குதல்களைத்தான். இதன் அர்த்தம் நகரங்களில் இருக்கும் சோதனைச் சாவடிகளை மட்டுமே நாங்கள் தாக்குகிறோம் என்பதாகும்.

ஐ.நா. சிரியாவில் அதன் செயற்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அல்-குர்டி அழைப்பு விடுத்துள்ளார்: அது ஒரு சமாதானத்தை நிலைநிறுத்தும் பணியாக மாற வேண்டும், பிற சக்திகள் பறக்கக்கூடாத பகுதியை நடைமுறைப்படுத்தவேண்டும், அசாத்தை பதவியிறக்க சிரிய எல்லையை அடுத்து இடைப்பட்ட பகுதியை நிறுவ வேண்டும். அடிப்படையில் இது லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் நடந்தது போல் இங்கும் நடக்க வேண்டும் என்ற அழைப்புத்தான்.

இராணுவ நடவடிக்கை குறித்த பகிரங்க அச்சுறுத்தல்கள் தீவிரமாக அதிகரித்துவிட்டன. வாஷிங்டனும் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளும் ரஷ்யா மீதி அழுத்தங்களை அதிகரித்து ஆட்சிமாற்றத்தை வெளியில் இருந்து கொண்டுவருவதற்கு அதன் எதிர்ப்பைக் கைவிடுமாறு கோருகின்றன.

அசாத் நாட்டை விட்டு நீங்க வேண்டும் என்பது முன்னிபந்தனையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் சிரிய மோதல் பற்றிய அரசியல் தீர்வின் விளைவாக அது இருக்கவேண்டும் என்று ஞாயிறன்று ஸ்டாக்ஹோமில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெளிவிவகார செயலாளர் கிளின்டன் அறிவித்தார்.

ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவுடன் நடத்தப்பட்ட ஒரு முந்தைய தொலைப்பேசிப் பேச்சை நினைவுகூர்ந்த அவர், வெளியுறவு மந்திரிக்கு என் செய்தி எளிமையானது, நேரடியானது. நாம் அனைவரும் ஓர் அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளோம். ரஷ்யா அது நடக்க உதவுவதற்கு பேச்சுவார்த்தை மேசையில் உதவ வேண்டும். என்று கூறினார்.

இவ்வாரம் பிற்பகுதியில் இஸ்தான்புல்லில் சிரிய நண்பர்கள் குழுவின் முக்கிய உறுப்பினர்களைச் சந்திக்க உள்ளதாகக் கிளின்டன் அறிவித்தார். இதில் உள்ள பிரான்ஸ், பிரிட்டன், ஜேர்மனி, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், சவுதி அரேபியா, ஜோர்டன் ஆகியவை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கும்.

திங்களன்று பேர்லினில், பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Laurent Fabius மற்றும் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்லே இருவரும் இரு அரசாங்கங்களும் சிரியா குறித்துத் தன் நிலைப்பாட்டை ரஷ்யா மாற்றிக்கொள்ள அழுத்தம் கொடுப்பதாகக் கூறினர்.

திங்களன்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் ஐரோப்பியத் தலைவர்கள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பேச்சுக்கள் நடத்தினர். இதில் சிரியா முக்கிய தலைப்பாகும். உச்சாமாட்டிற்குப் பின் புட்டின் சிரியா பற்றி விவாதிக்கப்பட்டது என்றார், வேறு கருத்து ஏதும் கூறவில்லை. ஐரோப்பிய குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரொம்பே ரஷ்யாவும் 27 நாடுகள் முகாமும் சில மாறுபட்ட மதிப்பீடுகளைக் கொண்டுள்ளன என்றார்.

இதற்கிடையில் செய்தி ஊடகத் தகவல்கள் நேரடி இராணுவத் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்கள் தீவிரமாகிவிட்டன என்ற குறிப்பைக் காட்டுகின்றன. Christian Science Monitor அமெரிக்க இராணுவத் திட்டத்தை முடுக்கிவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. அதில் நாட்டின் வான் பாதுகாப்புக்களை பயனற்றதாகச் செய்யும் சைபர் போர்முறைகளுக்கான தயாரிப்புக்களும் உள்ளன என்று கூறியுள்ளது.

பிரித்தானிய பரபரப்பு ஏடு Daily Star , Whitehall ஆதாரங்களை மேற்கோளிட்டு, சிறப்புப் படைப் பிரிவுத் துருப்புக்களான SAS உம், M16 முகவர்களும் நாட்டில் உள்ளனர், ஏற்கனவே உள்நாட்டுப் போர் வெடித்தால் எழுச்சியாளர்களுக்கு உதவுவதற்காக இத்தயார் நிலையில் உள்ளனர் என்று கூறியுள்ளது.

பாதுகாப்பான பிராந்தியங்களை அமைப்பது என்பது சிரியா மீதான படையெடுப்பாகும்; ஆனால் அது உயிர்களை பாதுகாப்பதற்காக. என்று செய்தித்தாள் பெயரிடப்படாத முக்கிய Whitehall ஆதாரங்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளது. SAS அப்பகுதியைச்சுற்றி ஆயுத பாதுகாப்பளிக்கும், அது சில மணிநேரங்களுள் அமைக்கப்பட்டுவிடும்.

அரபு லீக்கிடம் வார இறுதியில் பேசிய ஐ.நா. தூதர் கோபி அன்னான் சிரியா ஒரு முழுப் போருக்கு அருகே வந்துவிட்டது என்று எச்சரித்தார். உள்மோதல்கள் ஒரு பிராந்திய போராக விரிவாகும் ஆபத்து உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு முழு உள்நாட்டு யுத்தத்தில் இருந்து எழும் இது கவலையளிக்கும் குறுங்குழுவாத வடிவத்தை எடுக்கும் ஆபத்து ஒவ்வொரு நாளும் அதிகரிக்கின்றது என்றார் அன்னன்.

இந்த விளைவைத்தான் வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் சிரியாவில் ஓர் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, ஏற்பாடு செய்ய முற்படுகின்றன. அதுதான் எண்ணெய் வளமுடைய மத்திய கிழக்கு மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடி, அதன் பிராந்திய மேலாதிக்கத்திற்கு போட்டியாக உள்ள ஈரானுடன் பெரும் மோதலுக்கான தயாரிப்புமாகும்.