World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Defend Julian Assange

அசாஞ்சை பாதுகார்

James Cogan
9 June 2012

Back to screen version

அமெரிக்க அரசாங்கமும் அதன் நட்பு நாடுகளும் விக்கிலீக்ஸ் அமைப்புக்கும் அதன் ஆசிரியர் அசாஞ்ச்க்கும் எதிராக நடத்தி வரும் நீடித்த பழிதீர்ப்பின் ஒரு முக்கிய கணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பிரிட்டனில் இருந்து ஸ்வீடனுக்கு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதற்கு அசாஞ்சை நாடுகடத்துவதை தடுப்பதற்கான சட்டபூர்வ வழிகள் விரைவாகத் தீர்ந்து கொண்டிருக்கின்றன. மே 30ம் திகதி, பிரித்தானியத் தலைமை நீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் குழுவின் பெரும்பான்மை ஸ்வீடன் அவர் மீது சுமத்திய ஐரோப்பிய கைது பிடியாணை செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு எதிரான அவர் மேல்முறையீட்டை நிராகரித்தது.

ஜூன் 13ம் திகதி காலக் கெடுவிற்குள் அசாஞ்சின் வக்கீல்கள், மேல்முறையீடு மறு விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் எனக் கோருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரித்தானிய நீதிபதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரின் வக்கீலின் வாதமான நீதிபதிகளுடைய தீர்ப்பு வழக்கு விசாரணையின் போது எழுப்பப்படாத சட்டக் கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்பதை ஏற்கத் தயாராக மாட்டார்கள். என்றே தோன்றுகின்றது. அவருடைய வக்கீல்கள் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திற்கு முறையீடு செய்யும் முயற்சியை மேற்கொள்ளக்கூடும். ஆனால் அதிலும் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு இல்லை.

ஸ்வீடனுக்கு அசாஞ்ச் நாடுகடத்தப்படுவது என்பது கிட்டத்தட்ட கிரிமினல் குற்றச்சாட்டுக்களையும் அவர் தடுப்புகாவலில் வைக்கப்படும் நிலையையும் ஏற்படுத்துவது உறுதி. இது அமெரிக்க அதிகாரிகளுக்கு ஒரு இரகசியப் பெருநடுவர் நீதிமன்றம் ஒற்றுக்கேட்ட குற்றச்சாட்டுக்களுக்காக குற்றம்சாட்டப்பட்டு ஸ்வீடனில் இருந்து அவர் அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட வேண்டும் என்ற வேண்டுகோள்களுக்கான சூழ்நிலையை தோற்றுவிக்கும்.

வேர்ஜீனியாவில் 2010ல் இரகசிய தீர்ப்பு ஒன்று இருப்பதாக Stratfor எனப்படும் தனியார் உளவுத்துறை நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரெட் பேர்ட்டனால் உறுதிப்படுத்தப்பட்டு, மின்னஞ்சல்களிலும் கசியவிடப்பட்டுள்ளது. பெப்ருவரி 2011ல் பேர்ட்டன் எழுதினார்: பகிரங்கத்திற்கு அல்லஎங்களிடம் அசாஞ்ச் பற்றி முத்திரையிடப்பட்ட தீர்ப்புக்கள் உள்ளன.... சிறையில் ஒரு நேர்த்தியான மணமகளாக அசாஞ்சே இருப்பார். பயங்கரவாதியை அடக்கு. பூனைக்குக் கொடுக்கும் உணவை நீண்ட நாள் உண்பார்.

அமெரிக்க ஆளும் வட்டங்களில் அசாஞ்ச் மீது உள்ள தீவிர வெறுப்பு, அமெரிக்க அரசாங்கம் மற்றும் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களின் தீய தந்திரச் செயல்கள் மற்றும் குற்றங்களைப் பகிரங்கமாக அம்பலப்படுத்தியதின் விளைவுதான். அவருடைய வலைத் தளம் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான், ஆகியவற்றில் நிகழ்ந்த அமெரிக்கக் கொடூரங்களைப் பற்றிய தகவல்களை வெளிப்படுத்தியதோடு, அன்றாடம் சர்வதேசரீதியாக அதிகாரத் தாழ்வாரங்களில் நடக்கும் ஜனநாயக விரோதச் சதிகளை ஆவணப்படுத்தும் அமெரிக்க தூதரகத் தகவல் செய்திகளை ஆயிரக்கணக்கில் வெளியிட்டது.

இதற்கான அமெரிக்க அரசியல் தட்டின் விடையிறுப்பு இடைவிடாத் தீய தன்மையைத்தான் கொண்டுள்ளது. பகிரங்கமான கொலைசெய்யப்படும் அச்சுறுத்தல்களை அசாஞ்சே எதிர்கொள்கிறார். துணை ஜனாதிபதி ஜோசப் பிடென் அவரை உயர் தொழில்நுட்பவாத பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டியுள்ளார். விக்கிலீக்ஸின் இணையத் தள பிரிவுகள் மூடப்பட்டன, அதன் நிதியச் செயற்பாடுகள் தடுப்பிற்கு உட்பட்டன. அதன் ஊழியர்களும் ஆதரவாளர்களும் அரசாங்கத் துன்புறுத்தல், கண்காணிப்பு ஆகியவற்றிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரகசியத் தகவல் வழங்கியதாக கருதப்படும் பிராட்லி மானிங் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், நவம்பர் மாதம் ஒரு இராணுவ நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்படுவார். உளவுக்குற்றத்திற்கும், விரோதிக்கு உதவியது என்ற குற்றத்திற்கும் மானிங் ஆயுட்காலச் சிறைத் தண்டனையை பெறக்கூடும்; அதே குற்றச் சாட்டுக்கள் அசாஞ்ச் மீது சுமத்தப்பட்டால் அவரும் அதைத்தான் எதிர்கொள்ளுவார்.

ஓர் ஆஸ்திரேலியக் குடிமகனான அசாஞ்ச் மீதான அடக்குமுறைகளில் ஆஸ்திரேலிய தொழிற்கட்சி அரசாங்கம் வெளிப்படையாக (அமெரிக்காவுடன்) ஒத்துழைத்து வருகிறது. எவ்வித குற்றச்சாட்டுக்கள் அல்லது வழக்கு விசாரணைக்கு முன்னரே, பிரதம மந்திரி ஜூலியா கில்லார்ட் தூதரகத் தகவல் தந்திகளை வெளியிட்ட அசாஞ்சின் செயல்களை, சட்டவிரோதமானவை என்று முத்திரையிட்டார். அரசாங்கத் தலைமை வக்கீல், அசாஞ்சின் கடவுச்சீட்டை இரத்து செய்வதாக அச்சுறுத்தி பிரித்தானிய ஸ்வீடன் கோரியுள்ள நாடுகடத்தல் பிடியாணையை செயல்படுத்த வேண்டும் என்று கோரியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு அசாஞ்ச் திரும்பிவர முடிந்தாலும், கடந்த மாதம் தொழிற் கட்சி அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடிமக்கள் வெளிநாடுகளில் செய்யும் அரசியல் குற்றங்களுக்காக நாடுகடத்துவதற்கு இருந்த தடைகளை அகற்றிவிட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

அசாஞ்ச், மானிங், விக்கிலீக்ஸ் இவர்கள் நடத்தப்படும் முறை சர்வதே அளவில் ஏற்கனவே பயங்கரவாதத்தின் மீதான போர் என்னும் மறைப்பில் ஜனநாயக உரிமைகள்மீது நடத்தப்படும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதிதான். சுதந்திரமாகப் பேசும் உரிமை, கூடும் உரிமை ஆகியவை இப்பொழுது அரசாங்கங்களால் பெருநிறுவன உயரடுக்கின் நலன்களை பாதுகாப்பதன் பேரில் குற்றங்கள் எனக்கருதப்படுகின்றன; இது உலக முதலாளித்துவம் தீவிர நெருக்கடியில் ஆழ்ந்திருக்கையில் நடக்கிறது. அசாஞ்ச் மீதான குற்றச்சாட்டுக்களை தொடரும் பொலிஸ் அரச வழிமுறைகள், சிக்கன நடவடிக்கைகளுக்கும் போர் உந்துதலுக்கும் எதிராக போராடினால் தொழிலாள வர்க்க மக்களுக்கு எதிராகவும் இன்னும் பரந்த அளவில் இயக்கப்படும்.

அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஆளும் வட்டங்கள் ஏதும் உறுதிப்பாடு காட்டாமல் சரிந்துள்ள நிலை, தாராளவாதிகள், இடதுகள் என அழைக்கப்படுவோரின் பிரதிபலிப்பின் மூலம் தெளிவாகத் தெரிய வந்துள்ளது. ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில், இக்குழுக்கள்  முக்கியமாக அசாஞ்ச்க்கு ஆதரவு கொடுத்து பாதுகாக்க மறுத்துள்ளது. பலரும் ஒரு வலதுசாரி ஸ்வீடிஷ் அரசாங்க வக்கீல், அரசியலளவில் உந்துதல் பெற்றுக் கொண்டுவந்துள்ள, அவருக்கு எதிரான பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளின்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இத்தகைய போலி தீவிரவாதிகளில், அமெரிக்காவில் உள்ள சர்வதேச சோசலிச அமைப்பும், பிரித்தானியாவில் உள்ள சோசலிச தொழிலாளர் கட்சியும் கற்பழிப்புக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் அசாஞ்ச்க்கு ஆதரவு கூடாது என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளன. ஸ்வீடனின் குற்றச்சாட்டுக்கள் போலியானவை என்பது கவலைகள் ஒரு சதிக் கோட்பாடு என உதறித்தள்ளப்பட்டுவிட்டன.

ஆஸ்திரேலியாவில் பசுமைவாதிகளும் போலி இடது அமைப்புக்களும் அசாஞ்சை பாதுகாக்கும் வகையில் கில்லார்ட் அரசாங்கம் அவருக்கு உதவுவதற்கு இன்னும் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்று கூறுகின்றன. இப்பிரச்சாரம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் அசாஞ்ச்சை அமெரிக்கச் சிறையில் தள்ளும் முயற்சியில் தொழிற் கட்சி கொண்டுள்ள பங்கை மூடிமறைக்கத்தான் உதவுகிறது. இத்தகைய முன்னோக்கு அசாஞ்ச் மீது நடத்தப்படும் தாக்குதலை எதிர்க்கும் ஏராளமான மக்களை நோக்குநிலையற்றவர்களாக்கவும், அவநம்பிக்கையாளர்களாக மாற்றவும்தான் உதவும். பசுமைக் கட்சியின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க வகையில் இழிவானது ஆகும். எந்த ஒரு கட்டத்திலும் அதிலிருந்து முறித்துக்கொள்வது ஒருபுறம் இருக்க, ஜனநாயக உரிமைகள் பற்றிய அதன் போலிக்கவலை சிறுபான்மை தொழிற் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருப்பது பற்றிய அதனது உடன்பாடு பற்றியே உள்ளது.

அசாஞ்ச் மற்றும் விக்கிலீக்ஸ் பாதுகாக்கப்படுவதற்கு அதற்கு உந்துதலாக உள்ள அரசியல் மற்றும் வர்க்க சக்திகள் பற்றிய புரிந்துணர்வாலேயே நன்கு அறியப்படமுடியும். ஜனநாயக உரிமைகள் உலகெங்கிலும் இருக்கும் அரசாங்கங்களால் தாக்குதலுக்கு உட்படுகின்றன. இதற்குக் காரணம் நிதிய மற்றும் பெருநிறுவன உயரடுக்கு தொழிலாள வர்க்கத்திற்குள் எழும் தீவிர எதிர்ப்பை அடக்குவதின் மூலம்தான் தன் இலாபங்களையும் செல்வங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். வேறுவார்த்தைகளில் கூறினால், ஜனநாயகம் என்பது தோல்வியடைந்துவிட்ட முதலாளித்துவ ஒழுங்கமைப்புடன் இணைந்திருப்பது என்பது இயலாத செயல் ஆகும்.

ஜூலியன் அசாஞ்ச் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் என்பது இன்னும் பரந்த அளவில் பிரித்தானியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை இலாபமுறை, அரசியல்ரீதியாக அதை பாதுகாப்பவர்களுக்கு எதிராக அணிதிரட்டுதலுடன் பிணைந்துள்ளது. எதிர்ப்புக்கள் மற்றும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கோரிக்கை வைப்பதன் மூலம் குறுக்கு வழிகள் ஏதும் கிடையாது. தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவுவதற்காக போராடி, சமூகத்தை இலாப அடிப்படைக்கு என்றில்லாமல் மனிதத் தேவைக்காக மறுசீரமைப்பதற்கு உறுதிப்பாடு கொண்டு, பொருளாதார, அரசியல், சமூக வாழ்வில் ஒவ்வொரு அம்சங்களும் உண்மையான ஜனநாயகத்திற்கு அர்ப்பணித்த தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கம் ஒன்றை வளர்த்தல் மிகவும் முக்கியமாகும்.