World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Spanish bailout and the specter of the 1930s

ஸ்பெயினில் பிணையெடுப்பும், 1930களின் பீதியான காட்சிகளும்

Andre Damon
11 June 2012

Back to screen version

EFST எனப்படும் ஐரோப்பிய  நிதிய உறுதிப்பாட்டு அமைப்பில் இருந்து ஸ்பெயின் 100 பில்லியன் யூரோக்கள் பிணையெடுப்பை பெறும் என்னும் அறிவிப்பு முதலாளித்துவ நெருக்கடி இன்னமும் தீவிரமடைவதைத்தான் குறிக்கிறது. லெஹம்ன் பிரதர்ஸ் சரிவிற்கு நான்கு ஆண்டுகளுக்குப் பின், கிரேக்கத்தின் முதல் பிணையெடுப்பிற்கு 2 ஆண்டுகளுக்குப் பின் ஐரோப்பிய மத்திய பொருளாதாரங்களில் ஒன்றிற்குப் பிணையெடுப்பு தேவை என்பது முதலாளித்துவத்தின் உயிர்வாழும் தகமை குறித்த அனைத்துக் கூற்றுக்களையும் தவறாக்குகிறது.

பிணையெடுப்பு எந்த சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது அதன் தற்காலிக, அவநம்பிக்கையான தன்மையைத்தான் தெளிவுபடுத்துகிறது. பெரிய சக்திகளான குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும் மற்றும் பிரான்ஸும் ஜேர்மனி மீது அழுத்தம் கொடுத்தபின் இந்த அறிவிப்பு வந்துள்ளது; ஜேர்மனியோ சரிந்துவரும் ஐரோப்பிய வங்கி முறைக்கு ஏற்றம் கொடுக்க இன்னும் நாணயம் அச்சிடப்பட வேண்டும் என்பதை எதிர்த்து வருகிறது. அடுத்த ஞாயிறன்று கிரேக்கத் தேர்தல்களுக்கு முன் உடன்பாட்டை முடிப்பதற்கான அவசரம் ஸ்பெயின், இத்தாலி இன்னும் பிற ஐரோப்பிய நாடுகளில் வங்கிகளில் இருந்து பணத்தைத் திருப்பி எடுக்கும் தொடர் நடவடிக்கைகள் மற்றும் செப்டம்பர் 2008 நிதியக் கரைப்பை விட அதிகமான கரைப்பு வரும் என்ற அச்சங்களை தொடர்ந்த பிரதிவிளைவுகளால் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பாரியளவில் வாக்களிக்கப்படும் என சர்வதேச முதலாளித்துவத்தின் அச்சங்களில் பிரதிபலிக்கிறது.

பிணையெடுப்புக்கள் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் கொடுக்கப்படுகின்றன என்ற கூற்று உண்மை என எவரும் எடுத்துக் கொடுள்ளக்கூடாது. கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல் ஆகியவற்றிற்கு பணம் ஏராளமாக உட்செலுத்தப்பட்டது போல் அன்றி, ஐரோப்பிய ஒன்றியத்தின்மீது ஆதிக்கம் செலுத்தும் வங்கியாளர்கள் இப்பொழுது கடன்களுக்கு அவர்கள் கோரும் விலை குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் மீதான புதிய தாக்குதல்கள் குறித்தும் பகிரங்கமாக ஏதும் அறிவிக்கவில்லை.

2012ல் 27 பில்லியன் யூரோக்கள் சிக்கன நடவடிக்கைகளில் சேமிக்கப்படும் என ஸ்பெயின் ஏற்கனவே உத்தரவாதம் அளித்துள்ளது. இதே போன்ற தொகைதான் அடுத்த ஆண்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுக்கள் ஸ்பெயினில் மந்தநிலைமைச் சூழலை தோற்றுவிக்க உதவியுள்ளன. இங்கு இப்பொழுது வேலையின்மை விகிதம் 25% ஆகும். இளைஞரிடையே வேலையின்மை 50%க்கும் மேலாகும்.

கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு, மற்றும் ஐரோப்பாவில் மோசமாகிவரும் வங்கி நெருக்கடி, உலக நிதிய கீழ்நோக்குச் சரிவின் அடையாளங்கள் ஆகியவை முக்கிய செய்தி ஊடகங்களில் 1930களின் நிலைமைகளுக்கு மீண்டும் திரும்பலாம் என்னும் எச்சரிக்கையைத்தான் கொடுக்கின்றன. பொருளாதார வல்லுனர்களும், கட்டுரையாளர்களும் பெரும் சக்திகளிடையே உடன்பாடு இல்லாதது குறித்தும் மற்றும் ஒரு பொதுப் பெருங்குழப்பம், முடக்கம் என்னும் நிலைமை உருவாகியுள்ளது என்ற ஆபத்துணர்வை பற்றி குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய எச்சரிக்கைகள் பகிரங்கமாகக் கூறப்படுகின்றன என்பது உலக நெருக்கடியின் முதிர்ந்த தன்மைக்கு சான்று ஆகும். கடந்த வாரம் அச்சம் மிகப் பகுத்தறிவுள்ளதாகவிட்டது என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் பைனான்சியல் டைம்ஸ்  உடைய பொருளாதாரப் பிரிவு விமர்சகர் மார்ட்டின் வொல்ப் மேற்கு ஏற்கனவே கட்டுப்பட்ட மந்தநிலைக்குள் உள்ளது என எழுதியுள்ளார்.

இதற்கு முன்னால் நான் உண்மையில் 1930 எப்படி நடக்கும் என்பதை உணர்ந்ததில்லை. இப்பொழுது எனக்குத் தெரிகிறது. தேவையானதெல்லாம் பலவீனமான பொருளாதாரங்கள், ஒரு கடுமையான நிதிய அரசு, என்ன செய்யப்பட வேணடும் என்பது பற்றிய தீவிர விவாதம், கஷ்டப்படுவது நல்லது என்னும் பரந்த நம்பிக்கை, குறுகிய பார்வை உடைய அரசியல்வாதிகள், ஒத்துழைக்க மறுக்கும் இயல்பு மற்றும் நிகழ்வுகளுக்கு முன் செல்லும் ஆற்றல் இல்லாமல் இருத்தல் ஆகியவை என்பதுதான் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்குப் பின் வந்த கட்டுரை ஒன்றில், குறுகிய கால நடவடிக்கைகளை நிராகரித்து, யூரோப் பத்திரங்களை தோற்றுவித்தலையும் மறுத்த ஜேர்மனிய நிதிய அமைச்சரகத்தின் முக்கிய அதிகாரிக்கு விடையிறுக்கும் வகையில், வொல்ப் எச்சரித்தார்: குறைந்தப்பட்சம் ஜேர்மனியிலேனும், அடோல்ப் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்தது என்பது பெரு பணவீக்கத்திற்கு முன் என்பது பல நேரமும் மறக்கப்பட்டுவிடுகிறது; அவர் ஒரு தசாப்தம் முன்னர் பதவிக்கு வந்தார். ஆனால் பெருமந்தநிலை மற்றும் ஹென்ரிக் ப்ரூனிங் உடைய சிக்கன நடவடிக்கைகளுக்கு விடையிறுப்பாக வந்தது.

இதேபோன்ற முறையில் வரலாற்றாளர் நீயேல் பேர்க்குஸன் மற்றும் பொருளாதார வல்லுனர் நௌறியல் றொபீனி இருவரும் ஒரு கூட்டு விமர்சனத்தை சனிக்கிழமை பைனான்சியல் டைம்ஸில் 1930 களின் படிப்பினையை பேர்லின் புறக்கணிக்கிறது என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளனர். அவர்கள் எழுதியிருப்பது: பணவீக்த்தின் அச்சுறுத்தல் வராது என்பதில் உறுதியாக இருக்கும், இன்றைய ஜேர்மனியர்கள், ஜனநாயகம் இறந்த 1933ஐ விட 1923 க்கு (அதுதான் பெரும் பணவீக்க ஆண்டு) கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 1933க்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி ஒரு ஐரோப்பிய வங்கி நெருக்கடி நேரடியாக ஜனநாயகத்தின் சரிவிற்கு அவர்கள் நாட்டில் மட்டுமில்லாமல், ஐரோப்பிய கண்டம் முழுவதும் பங்களித்தது என்பதை நினைவிற்கொள்வது நலம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Jean-Claude Trichet, அப்பொழுது ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவராக இருந்தவர், இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகக் கடின நிலையை ஐரோப்பா முகங்கொடுக்கிறது; ஒருவேளை முதல் உலகப் போருக்குப் பின் என்றுகூடக் கூறலாம். என எச்சரித்தார். அப்பொழுது கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டு நீங்கும், பொது நாணையம் கவிழக்கூடும் என்ற கருத்துக்கள் நினைத்தும் பார்க்க முடியாதவை என அறிவிக்கப்பட்டிருந்தன. இப்பொழுது நெருக்கடி சுற்றுப் பகுதியில் இருந்து ஐரோப்பாவின் மையப்பகுதிக்குப் பரவிவிட்டது.

முக்கிய முதலாளித்துவ விமர்சகர்கள் இப்பொழுது பகிரங்கமாக உலக மந்த நிலை பற்றி எச்சரித்து, அடால்ப் ஹிட்லரின் பீதியுருவையும் நினைவுபடுத்துகின்றனர், மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் என்ன கூறப்படுகிறது?

1930களில் முதலாளித்துவத்தின் சரிவு என்பது அத்துடன் பாசிசத்தையும், 70 மில்லியன் மக்கள் உயிரையும் குடித்த இரண்டாம் உலகப் போரையும் கொண்டுவந்தது. இக்கொடூரங்கள் நடந்ததற்குக் காரணம், முதலாளித்துவத்தின் நெருக்கடியால் தோற்றுவிக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள் ஸ்ராலினிசத்தாலும் சமூக ஜனநாயகத்தாலும் காட்டிக் கொடுக்கப்பட்டதாலாகும்.

1938ல், நான்காம் அகிலத்தின் நிறுவன வேலைத்திட்டத்திற்காக எழுதிய லியோன் ட்ரொட்ஸ்கி, உலக நிலைமையைக் கீழ்க்கண்டவாறு விவரித்தார்: மனிதகுலத்தின் உற்பத்திச் சக்திகள் தேக்கம் அடைந்துள்ளன. ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புக்களும் முன்னேற்றங்களும் பொருளாதாய வளங்களை அதிகரிக்க முடியவில்லை. முழு முதலாளித்துவ நெருக்கடியினால் தோன்றியுள்ள நெருக்கடிகள், இன்னும் அதிக இழப்புக்களையும், இடர்களையும் வெகுஜனங்கள்மீது கொண்டுவந்துள்ளன. தன் பங்கிற்குப் பெருகும் வேலையின்மை, நாட்டின் நிதிய நெருக்கடியைத் தீவிரப்படுத்துகிறது, உறுதியற்ற நிதிய முறைகளுக்கு குழிபறிக்கின்றது. ஜனநாயக ஆட்சிகளும், பாசிச ஆட்சிகளும் ஒரு திவால்தன்மையில் இருந்து மற்றதற்கு தள்ளாடிச் செல்லுகின்றன. முதலாளித்துவத்திற்கே வெளியேறும் வழியேதும் தெரியவில்லை.

இந்த மதிப்பீட்டில் இருந்து இன்றைய நிலைமையை விவரிக்க ஒரு சொல் கூட மாற்றப்பட வேண்டியதில்லை. இதில் இருந்து ட்ரொட்ஸ்கி உள்ளீர்த்துக் கொண்ட முக்கிய முடிவு, நான்காம் அகிலத்தை நிறுவுவதற்குப் போராடி அதனை சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியாக கொண்டுவருவதற்கு உந்துதல் கொடுத்தது. அதன் அவசரத் தன்மை அனைத்தையும் அது இன்றும் கொண்டுள்ளது. மனிதகுலத்தின் வரலாற்று நெருக்கடி புரட்சிகரத் தலைமையின் நெருக்கடியாக சுருக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்க மக்கள் 1930களின் நினைவுகளைப் பற்றி எச்சரிக்கையாகக் கொண்டு, தேவையான முடிவுகளை எடுக்கவேண்டும். அப்பொழுது இருந்தது போலவே, ஒரு புரட்சிகர வர்க்கப் போராட்டக்காலம் வந்து கொண்டிருக்கிறது. அப்பொழுது போலவே மாற்றீடுகள் சோசலிசமா அல்லது காட்டுமிராண்டித்தனமா என்பதுதான்.

தொழிலாள வர்க்கத்தின் புதிய புரட்சிகரத் தலைமையை கட்டமைக்கும் முக்கிய பணிக்கு எதிர்வரவிருக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு தொழிலாளர்களுடைய நலன்களை வரையறுக்கும் முற்றிலும் தேர்ச்சியான மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தினால் ஆயுதபாணியாக்குவதுதான்.  ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் ஒன்றுதான் செயல்படுத்தப்பட வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்துலக் குழுவும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சிகளும்தான் அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்த முடியும். தோற்றுவிட்ட முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சோசலிசத்திற்காக போராடவேண்டும் என்னும் தேவையைக் காண்பவர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்து அதைக் கட்டியமைக்க வேண்டும்.