World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Chicago frame-up: The “war on terror” comes home

சிகாகோ போலி வழக்குகள்:“பயங்கரவாதத்தின் மீதான போர்” உள்நாட்டிற்கும் வருகிறது

Joseph Kishore
15 June 2012
Back to screen version

கடந்த மாதம் இல்லிநோய்சில் சிகாகோவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின்போது நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களில் ஐந்து பேர் மீது பயங்கரவாதம் சதித்திட்டத்திற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடுத்திருப்பது முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் ஓர் எச்சரிக்கை ஆகும். பயங்கரவாதத்தின் மீதான போரின்போது கட்டமைக்கப்பட்டுள்ள அடக்குமுறைகள் உள்நாட்டு எதிர்ப்பிற்கு எதிராக பயன்படுத்தப்படுவதை விரிவாக்குவதற்கான அச்சுறுத்தும் முன்னோக்கிய அடி என்பதை குறிக்கிறது.

இந்த வாரம், ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் அரசாங்க வக்கீல்கள் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றி தகவலை வெளியிட மறுத்து விட்டனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவர்கள் குற்றச்சாட்டுக்கள் இல்லாமல் காவலில் உள்ளனர். வழக்கை விசாரித்த நீதிபதிகூட அரசாங்க வக்கீல்கள் குற்றச்சாட்டை முன்வைக்காதது வினோதமானது என்றார். அவை ஜூலை 2 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசாரணையின் முக்கிய நோக்கம் பயங்கரமான குற்றவாளிகள் போல் கைகளையும் கால்களையும் விலங்கிட்டநிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி வைப்பது எனத் தோன்றுகிறது. மூன்று முக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மிகஅதிக பிணையெடுப்பு பத்திரத்திற்கான 1.5 மில்லியன் டாலர் என்னும் அசாதாரண உயர்ந்த தொகை உட்பட மற்ற நிபந்தனைகளும் இது தேசியப் பாதுகாப்பில் முக்கிய பிரச்சினை போல் காட்டப்பட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது.

இல்லிநோய்ஸ் மாநில அரசாங்க வக்கீல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நாட்டின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களை ஒட்டி குற்றம் சுமத்தப்படுவர் என்று அடையாளம் காட்டியுள்ளார். இச்சட்டங்கள் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்குப் பின் இயற்றப்பட்டவை. அத்துடன் இதே போன்ற நிறைய சட்டங்கள் மாநிலங்களிலும் கூட்டாட்சி மட்டத்திலும் உள்ளன. இல்லிநோய்ஸில் உள்ள சட்டம் குறிப்பிடத்தக்க வகையில் பயங்கரவாதம் என்பது என்ன என வரையறுக்கையில் பரந்த தன்மையுடையதாக உள்ளது. உதாரணமாக கால்நடைகள், பயிர்களுக்கு கணிசமான சேதத்தை ஏற்படுத்தக்கூடிய எச்செயலும் இதில் இடங்கும். குற்றம் சாட்டியுள்ள வக்கீல்களில் ஒருவர் கூறியிருப்பது போல், ஒரு தேனிக்கூட்டை அழித்தால் கூட உங்கள்மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டைச் சுமத்த முடியும்.

அவர்கள் கைது செய்யப்பட்டநேரத்தில், இல்லிநோய்ஸ் அரசாங்க வக்கீல் அனிதா அல்வாரெஸ் ஐந்து பேரில் மூவரான Jared Chase, Brent Betterly, Brian Church ஆகியோர் ஜனநாயகக் கட்சி அமைப்புக்களை இலக்கு வைப்பதற்காக தரமற்ற மோலோடோவ் குண்டுகளை தயாரிக்க முற்பட்டனர் என்று கூறினார்.

Sebastian Senakiewics, Mark Neiweem என்னும் மற்ற இருவரும் இரு தனி சம்பவங்களுக்காக பயங்கரவாதத் தொடர்புடைய குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ளனர். Senakiewics வெடிகுண்டுகள் ஏதும் இல்லாமல் அது இருந்ததாகப் பெருமை அடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தவறான குண்டுத் தாக்குதல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களுக்கு வழிவகுத்தள்ளது. Neiweem ஒரு குழாய்க்குண்டிற்கு தேவையான பொருட்களை எழுதிவைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வெடிமருந்துகளை வைத்திருப்பதற்கான முயற்சி என்னும் குற்றச்சாட்டு வந்துள்ளது.

இந்த மூன்று வழக்குகளையும், ஐந்து குற்றம்சாட்டப்பட்டவர்களையும் இணைப்பது, இரு மறைமுகமாகச் செயல்படும் பொலிஸ் தகவல் தருவோர், மோ, குளோவ்ஸ் ஆகியோரின் தொடர்பு ஆகும். இவர்கள் சிகாகோ ஆக்கிரமிப்பு அமைப்பில் சில மாதங்கள் முன்பே ஊடுருவியிருந்தனர். எந்தவித தடயச் சான்றுகளோ முன்வைக்கப்படவில்லை அல்லது வழக்கிற்கு ஆதாரமான சான்றுகளும் கொடுக்கப்படவில்லை. மேலும் வன்முறைக்கான திட்டங்கள் முற்றிலும் பொலிஸ் தகவல்தருவோரால் தூண்டிவிடப்பட்டதாகத்தான் தோன்றுகிறது.

கைதுகளுக்கு இட்டுச்சென்ற நடவடிக்கைகள் ஆர்ப்பாட்டங்களின்போது பரந்தளவில் பொலிஸ் அணிதிரட்டப்பட்டதின் ஒரு பகுதியாகும். நான்கு நாட்களுக்கு சிகாகோ நகரமையத்தைப் பொலிசார் கிட்டத்தட்ட மூடி, 100 ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து, பொறுப்பற்ற முறையில் எதிர்ப்பாளர்களை அடித்து உதைத்தனர்.

பயங்கரவாதக் குற்றத் தயாரிப்பு உட்பட சிகாகோ நிகழ்வுகளுக்கு ஒபாமா நிர்வாகத்தின் விடையிறுப்பு பொலிசைப் பாராட்டுவது ஆகும். பொலிசார் பெரும் பணியை, கணிசமான அழுத்தத்தின் கீழ் செய்துள்ளனர். என்று ஒபாமா கூறினார். இவ்வாறு கூறுகையில் அவர் நிர்வாகம் கைதுகளுக்கு ஒப்புதல் கொடுக்கிறது என்பது தெளிவு.

பொலிஸ் ஆத்திரமூட்டல் வழிவகைகளை மேற்கொள்வது என்பது அமெரிக்க சமூகத்தை சமரசத்திற்கு இடமில்லாத மோதல்கள் கிழித்தெறிவதைத்தான் பிரதிபலிக்கிறது. இரு பெருவணிகக் கட்சிகளும், அமெரிக்காவின் இழிந்த அரசியல் நடைமுறையில் முற்றிலும் உறுதிப்பாடு கொண்டுள்ள கொள்கைகளான வேலைகள் மற்றும் சமூகத்திட்டங்கள் மீதான தாக்குதல்கள், வங்கி மீட்பு மற்றும் எண்ணற்ற போர்கள் மீதான தொழிலாள வர்க்கத்தின் சீற்றம் அதிகரித்துள்ளது.

இதே சமூக இயக்கமுறைதான் பயங்கரவாதத்தின் மீதான போர் வளர்ச்சியுற்ற தசாப்தத்தில் அமெரிக்க ஜனாநாயகத்தில் ஆழ்ந்த அழிவை ஏற்படுத்தியதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது 2000ம் ஆண்டு தேர்தல் திருடப்பட்டதில் தொடங்குகிறது. செப்டம்பர் 11 தாக்குதல்களில் இருந்து, புஷ் பின்னர் ஒபாமாவின் கீழ், ஆளும் வர்க்கம் பரந்த அளவில் அரசாங்கத்தின் அதிகாரங்களை விரிவாக்கியுள்ளது. பயங்கரவாதத்தின் மீதான போர் என்பது அமெரிக்காவில் ஒரு பொலிஸ் அரசாங்கத்தின் சட்டபூர்வ வடிவமைப்பு தோற்றுவிக்கப்பட எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு அனைத்தையும் நியாயப்படுத்தும் சொற்றொடர் ஆகிவிட்டது.

இருகட்சிகளின் ஆதரவுடனும், புஷ் நிர்வாகம் Patriot Act இயற்றப்பட்டதை மேற்பார்வையிட்டது. அரசாங்கத்தின் ஒற்றாடல் அதிகாரங்களை விரிவாக்கி, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை என்பதை நிறுவி மற்றும் அமெரிக்காவை கண்காணிக்க இராணுவக் கட்டுப்பாடு தோற்றுவித்துள்ளது. இது வரலாற்றில் முன்னோடியில்லாத அளவிற்கு நிர்வாகப் பிரிவின் அதிகாரம் சித்திரவதை செய்தல், போரைத் தொடக்குதல், அமெரிக்க மக்கள் மீது உளவுபார்த்தல் ஆகியவற்றை உறுதிபடுத்தியது. தேசியப்பாதுகாப்பு நிறுவனம் அமெரிக்கக் குடிமக்களின் தொடர்புகளைக் கண்காணிக்கும் ஒரு சட்டவிரோத முறையைத் தோற்றுவித்தது.

ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகள் அமெரிக்காவில் பொலிஸ் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைக்கு எதிராக இருகட்சி முறையினுள் போராடுவதின் முயற்சிகளின் பயனற்ற தன்மையையும் மற்றும் திவால்தன்மையையும் எடுத்துக்காட்டுகின்றன.

ஒபாமாவின் வெள்ளை மாளிகை குற்றவிசாரணை நடத்துவது ஒருபுறம் இருக்க, அதற்கு முன்பு பதவியில் இருந்தவரின் சட்டவிரோத செயல்களை விசாரிக்கும் முயற்சிகளைக்கூட எதிர்த்துள்ளது. மாறாக, அமெரிக்காவை ஒரு உலகப் போரில் ஒரு போர்க்களமாக நடத்துகிறது. இதில் நேரம், இடம் போன்ற தடைகளுக்கு இடமில்லை. 2012ல் தேசியப் பாதுகாப்பு இசைவுச் சட்டம் இயற்றப்படுவதை இது மேற்பார்வையிட்டது; அதில் அமெரிக்கக் குடிமக்கள் காலவரையின்றி குற்றச்சாட்டுக்களோ, விசாரணையோ இல்லாமல் இராணுவக் காவலில் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சமீபத்தில் ஒபாமா எந்தவித நீதிமன்றப் பரிசீலனையும் இல்லாமல் அமெரிக்கக் குடிமக்களை படுகொலை செய்யும் ஜனாதிபதியின் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளார். தலைமை அரசாங்க வக்கீல் எரிக் ஹோல்டர் அரசிலமைப்பு உரிமையான முறையான வழிவகை, நிர்வாகத்தின் ஒருதலைப்பட்ச செயலுக்கு எதிரான அடிப்படைப் பாதுகாப்பு ஜனாதிபதி அவருடைய நெருக்கமான ஆலோசகர்களுடன் மேற்கொள்ளும் உள்விவாதங்கள் மூலம் திருப்தி அடைந்துவிடுகிறது என்று வாதிட்டுள்ளார். இந்த அடிப்படையில், முற்றிலும் ஜனாதிபதியின் விருப்பத்தின்படி எந்த நபரும் கொல்லப்படலாம் அல்லது வேறுவகையில் அடிப்படை உரிமைகளை இழக்கலாம்.

இந்த நிகழ்வுகள் உலக சோசலிச வலைத் தளத்தின் எச்சரிக்கைகளை சரியென காட்டுகின்றன. பயங்கரவாதத்தின் மீதான போரின்போது கட்டமைக்கப்பட்ட ஜனநாயக விரோத அமைப்பின் முக்கிய இலக்கு அமெரிக்க மக்களேதான் என்று அது விளக்கியது. உத்தியோகபூர்வ அரசியலுக்கு அப்பால் மட்டுமே வெளிப்பாட்டைக் காணக்கூடிய எழுச்சிபெறும் சமூக எதிர்ப்பிற்கு அஞ்சும் ஆளும் வர்க்கம், அதை அச்சுறுத்துதல், போலிவழக்குகள் மூலம் ஒழித்துக் கட்ட முற்படுகிறது.