World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

CIA directing arms shipments to Syria’s “rebels”

சிரியாவின் “கிளர்ச்சியாளர்களுக்கு" CIA ஆயுதங்களை அனுப்ப உத்தரவிடுகிறது

By Bill Van Auken
22 June 2012
Back to screen version

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் அரசாங்கத்தைத் தூக்கியெறிய கோரிவரும் சிரியாவிலுள்ள கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களுக்கு ஆயுதங்களை அளிப்பதற்கு ஏற்பாடு செய்ய CIA முகவர்கள் துருக்கியில் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூ யோர்க் டைம்ஸ் வியாழனன்று செய்தி வெளியிட்டது.

மூத்த அமெரிக்க அதிகாரிகள் மற்றும் அரபு உளவுத்துறை அதிகாரிகள் அளித்த தகவலை மேற்கோளிட்டுள்ள அந்த செய்தி, “தானியங்கி துப்பாக்கிகள், ராக்கெட்டுக்கள் மூலம் வீசப்படும் எறிகுண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் டாங்கு எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவை, சிரியா முஸ்லீம் சகோதரத்துவம் உட்பட ஒரு நிழலுலக இடைதரகர்களின் வலையமைப்பைக் கொண்டு, பெரும்பாலும் துருக்கி எல்லை வழியாக அனுப்புவதன் மூலமாக CIA அதிகாரிகளால் ஒரு மிகப் பெரிய கடத்தல் நடவடிக்கை வழிநடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு கடார், சவூதி அரேபியா மற்றும் துருக்கி ஆகியவற்றால் பணம் செலவிடப்படுவதாகவும்" குறிப்பிட்டது.

டைம்ஸில் செய்தி வெளிவருவதற்கு முதல் நாள், அரசுத்துறை செய்தித்தொடர்பாளர் விக்டோரியா நியூலாந்த், ஒபாமா நிர்வாகத்தால் வெகுஜனங்களிடையே கூறப்படும் அதே கருத்தை வலியுறுத்தினார். “சிரியாவிற்கு ஆயுதமளிக்கும் வேலையில் நாங்கள் ஈடுபடவில்லை என்பதை நாங்கள் பலமுறையும் தொடர்ந்து கூறியுள்ளோம்,” என்றார். .நா. சபையின் சிரிய தூதர் பஷர் அல்-ஜபாரி, பிரதான வெளிநாட்டு சக்திகள் அவரது நாட்டில் "ஆயுதமேந்திய பயங்கரவாத குழுக்களை" ஆதரிப்பதாகவும், “ஆட்சி மாற்றத்தை" ஏற்படுத்த சிரியாவின் நெருக்கடியை ஒரு "வெடிப்பிற்குள்" தீவிரப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டியமைக்காக அப்பெண்மணி, அவர் "ஏமாற்றுகிறார்" என்று வர்ணிக்கும் அளவிற்கு சென்றார்.

முந்தைய செய்தி ஊடகத் தகவல்களை உறுதிபடுத்தும் டைம்ஸ் கட்டுரை, சிரியாவில் ஒரு பிரிவினைவாத உள்நாட்டு யுத்தம் தூண்டிவிடப்படுவதாகவும், ஆயுதங்கள் அளிப்பதில் நடவடிக்கைகள் திருப்பிவிடப்பட்டுள்ளதாகவும், முந்தைய விஷயத்தையே, அதிக இரகசியமில்லாமல், வெளிப்படுத்துவதில் கூடுதலான விபரங்களை மட்டுமே அது அளிக்கிறது.

கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்கள் "சமீபத்திய வாரங்களில் கணிசமான அளவிற்கு அதிகமான மற்றும் சிறந்த ஆயுதங்களைச் பெறத் தொடங்கிவிட்டனர். இதற்காக பெர்சியன் வளைகுடா நாடுகளால் முயற்சி எடுக்கப்பட்டு பகுதியாக அமெரிக்காவால் ஒருங்கிணைக்கப்பட்டது,” என்று கடந்த மாதம் வாஷிங்டன் போஸ்ட் எழுதியது. "வளைகுடா நாடுகளுக்கு கிளர்ச்சியாளர்களின் நம்பகத்தன்மை குறித்த மதிப்பீடுகளையும், அவர்களுடைய கட்டளை, கட்டுப்பாடு, உள்கட்டுமானம் பற்றிய விவரங்களையும் அளிக்க அமெரிக்க அதிகாரிகள் எதிர்த்தரப்பு சக்திகளுடன் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டுள்ளதாக" The Post இதழும், அதன் மே 16ஆம் தேதி கட்டுரையில் குறிப்பிட்டது.

"சவூதி அரேபியா, துருக்கி, கட்டார் மற்றும் இன்னும் ஏனைய கூட்டாளிகளுடன் வேலை செய்து வரும் மத்திய புலனாய்வு அமைப்பு மற்றும் அரசுத்துறை இரண்டும் சிரியாவிற்குள் பொருட்களை நகர்த்துவதற்கான சரக்கு வழியை அபிவிருத்தி செய்வதிலும், தொலைதொடர்பு பயிற்சிகள் அளிப்பதிலும் உதவி அளித்து வருகின்றன,” என்று கடந்த வாரம், வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் குறிப்பிட்டது.

சிரிய சிப்பாய்களின் உயிரிழப்பு மற்றும் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் பயங்கரவாத தாக்குதல்களின் பெருக்கம் ஆகியவற்றோடு சிரியாவில் ஆயுதமேந்திய வன்முறையின் தீவிரம் அதிகரித்துள்ளது என்பது தான் இந்த நடவடிக்கையின் விளைவாக இருக்கிறது.

ஆசாத் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் நோக்கில் அது சிரிய போராளிகளுக்கு ஆயுதமளிக்கவில்லை என்ற ஒபாமா நிர்வாகத்தின் வேஷம் முற்றிலுமாக அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. சவூதி அரேபியா, கடார், துருக்கி ஆகியவையே ஆயுதங்களை அளிக்கின்றன (ஆனால் எந்தவொரு நாடும் வாஷிங்டனின் அனுமதியில்லாமல் அதுபோன்றவொரு நடவடிக்கையை நடத்தாது), அந்த ஆயுதங்கள் தவறான கைகளுக்கு போய்விடக்கூடாது என்பதை உறுதிப்படுத்த CIA முகவர்கள் வெறுமனே சிரிய எழுச்சியாளர்களை "மேற்பார்வையிடுகின்றனர்" என்ற கட்டுக்கதையின் மீது அதன் வாதங்கள் உள்ளன.

"அல் கொய்தா அல்லது ஏனைய பயங்கரவாத குழுக்களோடு இணைந்த போராளிகளின் கரங்களில் ஆயுதங்கள் சேர்ந்துவிடாமல் செய்வதில் உதவ" சிரிய-துருக்கிய எல்லையில் CIA வேலை செய்து வருவதாக கூறிய பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை டைம்ஸ் செய்தி மேற்கோளிடுகிறது.

இத்தகைய கூற்றுக்கள் அபத்தமானவை. சிரியாவிற்கு எதிராக CIAஆல் நடத்தப்பட்டு வரும் நடவடிக்கையானது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் 1980களில் நடத்திய ஒரு நடவடிக்கையோடு வியத்தகு ஒப்புமையைக் கொண்டுள்ளது என்பதே எதார்த்தமாகும். அப்போது சவூதி அரேபியாவும் ஆயுதங்களுக்கான நிதியுதவியை பெரிதும் வழங்கியதோடு, அல்கொய்தா அப்போது அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கையின் ஒரு கூட்டாளியாகவும், கருவியாகவும் உருவானது.

சிரியாவிற்குள்ளும், சுற்றி இருக்கும் அரபு நாடுகளிலும் உள்ள இஸ்லாமியக் கூறுபாடுகளும் தான் டமாஸ்கஸில் ஆட்சி மாற்றத்தை நாடும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதரவு நிறைந்த கிளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ளன என்பதற்கு பெருகிய சான்றுகள் உள்ளன. துனிசிய ஜிகதிகள் (jihadis) சிரியாவிற்கு அணிதிரண்டு செல்வது குறித்த ஒரு நீண்ட அறிக்கையை வியாழனன்று அசோசியேட்டட் பிரஸ் வெளியிட்டது. அடிப்படைவாத இஸ்லாமிய மதகுருமார்கள் இளைஞர்களை சிரியாவிற்குச் செல்லுமாறும், “நம்பிக்கையற்றவரின்” ஆட்சியை திருப்பி போடவும் வலியுறுத்தி வருகின்றனர் என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது.

ஜேர்மனிய நாளேடான Frankfurter Allgemeine Zeitung  அளித்த ஓர் ஆரம்ப அறிக்கையின்படி, லிபியாவிலிருந்து "குறைந்தப்பட்சம் 3,000 போராளிகள்", அவர்களில் பெரும்பாலானவர்கள் துருக்கி வழியாக, சிரியாயை சென்றடைந்துள்ளனர். அதேபோன்ற ஏனைய துருப்புகளும், ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பின் போது அந்நாட்டில் சன்னி மற்றும் ஷியட்களுக்கு இடையில் ஓர் இரத்த ஆறை ஓடச்செய்த ஒரு சம்பவத்தைப் போன்ற, ஒரு பிரிவினைவாத மோதலை நடத்த ஈராக்கிலிருந்து எல்லையைக் கடந்து சென்றுள்ளது.

அசோசியேட்டெட் பிரஸ் செய்தி குறிப்பிடுவதைப் போல, “அல்-கொய்தா பாணியிலான தற்கொலை குண்டுதாக்குதல்கள் சிரியாவில் அதிகளவில் வாடிக்கையாகிவிட்டன என்பதே விளைவாக உள்ளது. சிரியாவில் ஸ்திரமின்மை பரவியுள்ளதால், இஸ்லாமிய தீவிரவாதிகள் (அவர்களில் சிலர் பயங்கரவாத வலையமைப்போடு இணைந்தவர்கள்) சிரியாவை நோக்கி திரும்பி உள்ளதாக மேற்கத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்”.

ஒருபுறம் வாஷிங்டன் மற்றும் அதன் பிராந்திய கைப்பாவைகள் (சவூதி அரேபியா, கட்டார், துருக்கி) ஆகியவை கிளர்ச்சியாளர்கள் எனக் கூறப்படுபவர்களுக்கு ஏராளமான ஆயுதங்களையும், நிதியுதவிகளையும் அளித்து வருகின்றனர். மறுபுறம் பிரதான சக்திகள் சிரிய ஆட்சியைத் தனிமைப்படுத்தவும், முன்னொருபோதும் இல்லாத தடைகள் மற்றும் சர்வதேச அழுத்தங்களைக் கொண்டு அதன் ஆதாரவளங்களை அபகரிக்கவும் கோரி வருகின்றன.

அந்நாட்டிற்குள் இரகசியமாக ஆயுதங்களைக் குவித்து கொண்டிருக்கும் அதேவேளையில், அமெரிக்க அதிகாரிகள் சிரியாவுடனும், டார்டஸில் உள்ள அதன் மத்தியதரைக்கடல் பகுதி தளத்திலும் ரஷ்யா தொடர்புகளைத் தக்க வைத்திருப்பதற்காக கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்தியகிழக்கு பகுதியில் மாஸ்கோவின் மீதமிருக்கும் ஒரே கூட்டாளியாக சிரியா மட்டுமே உள்ளது. டமாஸ்கஸிற்கு ரஷ்யா அதன் புதிய ரஷ்ய தாக்குதல் ஹெலிகாப்டர்களை வினியோகித்ததாக ஆதாரமின்றி குற்றஞ்சாட்டி, மாஸ்கோவிற்கு எதிராக ஒரு பொய் பிரச்சாரத்தை அமெரிக்க வெளியுறவு விவகாரத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்.

அங்கே புதிய ஹெலிகாப்டர்கள் ஏதும் கொடுக்கப்படவில்லை என்றும், பல தசாப்தங்களுக்கு முன்பு சிரியா வாங்கி இருந்த பழைய விமானங்களை பழுது பார்ப்பதற்காக ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதையே அது மீண்டும் திருப்பி அனுப்புவதாகவும் ரஷ்யா பதிலளித்தது. புதுப்பிக்கப்பட்ட ஹெலிகாப்டர்களைச் சுமந்து சொன்ற கப்பலின் (Curacaoஇல் பதிவுசெய்யப்பட்ட MV Alaed) காப்பீட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நிர்பந்தத்தின் பேரில் இலண்டனை மையமாக கொண்ட ஒரு காப்பீட்டு நிறுவனம் இரத்து செய்த பின்னர், அக்கப்பல் வியாழனன்று மீண்டும் இரஷ்ய துறைமுகம் முர்மான்ஸிற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. பத்திரிகை செய்திகளின்படி, அந்த கப்பலை திருப்பி அனுப்ப இராணுவ சக்தியைப் பயன்படுத்தவும் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆலோசனை நடத்தி இருந்தது.

ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜே லாவ்ரோவ் பிரிட்டிஷ் நடவடிக்கையை, மற்ற நாடுகள் மீது ஒருதலைப்பட்சமான தடைகளைத் திணிப்பதற்கான ஒரு முயற்சியென்று கண்டித்தார். “ஐரோப்பிய ஒன்றிய தடைகள் சர்வதேச சட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை,” என்று கூறிய அவர், அந்த சரக்குகள் ரஷ்யாவின் பிரதான கப்பலில் மாற்றப்பட்டு மீண்டும் சிரியாவிற்கு அனுப்பப்படும் என்று உறுதியளித்தார்.

இது ஒரு சரிவை நோக்கிய பாதை,” என்று Russia Today தொலைக்காட்சியிடம் லாவ்ரோவ் கூறினார். “எந்தவொரு நாடோ அல்லது நிறுவனமோ, சர்வதேச விதிகளை மீறாத போதும், .நா. பாதுகாப்பு அவையின் தீர்மானங்களை மீறாத போதும், யாரோவொருவரின் பிராந்தியம்-கடந்த பயன்பாடுகள் மீதான ஒருதலைபட்சமான தடைகளுக்கு உட்படுத்தப்படுவார் என்பதே இதன் பொருளாகும்,” என்றார்.

பிரிட்டனுக்கும் மற்றும் பிற பிரதான ஏகாதிபத்தியச் சக்திகளுக்கும் சோவியத்-கால ஹெலிகாப்டர்கள் என்பதை விட, அதன் பயணத்தை நிறுத்திக்கொள்ள நிர்பந்திக்கப்பட்ட அந்த கப்பலில் புதிய நவீன விமான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லப்படுகிறதோ என்பதே ஒருவேளை பெரிய கவலையாக இருந்திருக்கலாம். அத்தகையவொரு உபகரணங்களானது, லிபியாவில் மௌம்மர் கடாபியைக் கவிழ்க்க பயன்படுத்தப்பட்ட ஒருவிதமான குண்டுவீச்சு பிரச்சாரத்தைச் செயல்படுத்த அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளின் ஒரு முயற்சிக்கு ஒரு தடையாக இருக்கக்கூடும்.