World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

US-backed gunmen stage massacre at Syrian TV station

அமெரிக்க ஆதரவு பெற்ற துப்பாக்கிதாரிகளால் சிரியத் தொலைக்காட்சி நிலையத்திற்கு அருகே படுகொலை

By Bill Van Auken
28 June 2012
Back to screen version

துப்பாக்கிதாரிகள் புதன் அன்று சிரியாவில் அரசாங்கச் சார்பு ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தைத் தாக்கி, 7 ஊழியர்களைக் கொன்று, மற்றவர்களைக் காயப்படுத்தி, பலரை பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். இத்தாக்குதல் சிரியா ஒரு உண்மையான போர்நிலையில் உள்ளது என்று ஜனாதிபதி பஷர் அல்-அசாத் அறிவித்த மறுநாள் வந்துள்ளது.

டமாஸ்கஸின் தெற்குப் புறநகரில் உள்ள இக்பாரியா தொலைக்காட்சி நிலையத்தில் அதிகாலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் மூன்று பேர் செய்தியாளர்கள், நால்வர் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர்கள். தாக்கியவர்கள் தானியங்கி ஆயுதங்கள் மூலமும் ராக்கெட் இயக்கும் எறிகுண்டுகளையும் பாதுகாப்புப் பிரிவினர் மீது செலுத்தி, பின்னர் துணைக்கோள் மூலம் ஒளிபரப்பும் நிலையத்தின் அலுவலகங்கள், திரைப்படப் பிரிவு ஆகியவற்றைச் சூறையாடினர்; அதன் பின் மிகச் சக்தி வாய்ந்த வெடிகளால் தாக்கியதில் கட்டிடங்கள் எரிந்ததோடு உடைந்து சிதறின.

கட்டிடங்களின் வெளிச்சுவர் ஒன்று முழுவதும் இரத்தம் படர்ந்திருந்தது; இவ்விடத்தில் நிலையத்தின் ஊழியர்கள் கட்டிப்போடப்பட்டிருந்தனர்; மண்டியிடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு பின்னர் ஈவிரக்கமின்றி சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இக்பாரியா தொலைக்காட்சி நிலையத்தின் மீதான தாக்குதல், சிரியாவின் அரசாங்கம் நடத்தும் செய்தி ஊடகத்தின் பிரிவுகள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட மறுநாள் வந்துள்ளது; முன்னதாக இம்மாதம் அரபு லீக் இரு அரபுநாடுகளில் காண்பிக்கும்  துணைக்கோள் தொலைக்காட்சி நிறுவனங்கள் சிரிய ஒளிபரப்புக்களை இருட்டடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டன.

Free Syrian Army எனப்படும் சுதந்திர சிரிய இராணுவம் மற்றும் பிற கிளர்ச்சியாளர் அமைப்பு போராளிளின் தாக்குதல்களை தீவிரப்படுத்தியதின் ஒரு பகுதியாகத்தான் இப்படுகொலை உள்ளது. இக்குழுக்கள் மேற்கத்தைய சக்திகளால் ஆதரிக்கப்படுகின்றன; இவை துருக்கியுடனும் வலதுசாரி சௌதி அரேபியா, வளைகுடா நாடுகளிலுள்ள ஆட்சிகளுடன் இணைந்து போராளிகளுக்கு பெருகிய முறையில் நவீன வெடிமருந்துகள், ஆயுதங்கள் கொடுப்பதுடன், பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் வெளிநாட்டு போராளிகளை மத்திய கிழக்கின் பிற பகுதிகள் ஆகியவற்றில் இருந்து கொடுக்கின்றன.

தொலைக்காட்சி நிலையத்தின் மீதான புதன்கிழமைத் தாக்குதல், செவ்வாயன்று டமாஸ்கசில் உள்ள முக்கிய குடியரசுப் பாதுகாப்புப் பிரிவு வளாகத்தின்மீது நடத்த தாக்குதல் பற்றிய அறிவிப்புக்களுக்கு பின் வந்துள்ளது; இதைத் தவிர நாட்டின் மற்ற இடங்களிலும் அரசாங்கத் துருப்புகள் மீது தாக்குதல்கள் நடந்தன.

நாட்டிற்குள் பெருகும் வன்முறை, வெளி அச்சுறுத்தல்களால் முடுக்கிவிடப்பட்டுள்ள வன்முறையுடன் இன்னும் அதிகமாகியுள்ளன; குறிப்பாக துருக்கியில் இருந்து. இந்நாடு கடந்த வாரக் கடைசியில் சிரியப் பகுதியில் அதன் இராணுவ ஜெட் ஒன்றை சிரியா சுட்டு வீழ்த்தியதற்கு விடையிறுக்கும் வகையில் அழுத்தங்களை அதிகரித்துள்ளது. துருக்கிய செய்தி ஊடகம் புதன் அன்று துருக்கி 15 டாங்குகள், கவச வாகனங்கள், பீரங்கி ஆகியவற்றை அதன் சிரியாவுடனான தெற்கு எல்லைக்கு அருகே நிலைகொள்ளச் செய்துள்ளது எனத் தெரிவிக்கிறது. துருக்கிய அரசாங்கம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள 550 மைல் நீள எல்லையில் சிரியப் படைகள் ஏதேனும் அணுகுமானால், அவை விரோதப் போக்கு உடையவை எனக் கருதப்பட்டு இராணுவ ரீதியாக எதிர்கொள்ளும் என்று உறுதிமொழி அளித்துள்ளது.

சிரியாவிற்குள் வன்முறை ஐ.நா.வின் அரபு லீக் தூதர் கோபி அன்னன் தலையிட்டு கொண்டுவந்த ஏப்ரல் 12 போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன் இருந்த வன்முறை அளவுகளை அடைந்துவிட்டது அல்லது கடந்து விட்டது என்று  ஐ.நா.வின் துணைத் தூதர் Jean-Marie Guehenno ஐ.நா.வின் மனித உரிமைகள் குழுவிடம் (UNHRC)   புதன்அன்று கூறினார். அன்னனுடைய ஆறு அம்சத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்பது தெளிவாகிறது என்றும் அவர் சேர்த்துக் கொண்டார்.

UNHRC சிரிய நிகழ்வுகள் பற்றி விசாரணை நடத்தும் ஒரு சர்வதேச ஆணையத்தில் இருந்து அவ்வப்பொழுது நடப்பது குறித்தும் தகவல்கள் பெறுகிறது; ஆணையம் மோதல் விரைவாக ஒரு குறுங்குழுவாதிளின் உள்நாட்டுப் போராக மாறிக் கொண்டிருக்கிறது என எச்சரித்துள்ளது.

முன்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசாங்க சார்பு அல்லது எதிர்ப்பு என்னும் அடிப்படையில் இலக்கு கொள்ளப்பட்டபோது, விசாரணை ஆணையம் (CoI)  தங்கள் மத பிணைப்பை ஒட்டி இலக்கு காணப்படுபவர்கள் போல் தோன்றும் பாதிப்பாளர்கள் உள்ள நிறைய நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.

ஆவணத்தின் பெரும்பகுதி கடந்த மாதக் கடைசியில் நாட்டின் வடமேற்கே உள்ள ஹௌலாவில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி உள்ளது. கிட்டத்தட்ட 100 குடிமக்கள் கொலையுண்ட அந்நிகழ்வு வாஷிங்டன் இன்னும் பிற மேற்கத்தைய சக்திகள், மேற்கத்தைய செய்தி ஊடகங்கள் ஆகியவற்றால் பற்றி எடுக்கப்பட்டு, அசாத் ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது; அதுதான் கொலைகளுக்குப் பொறுப்பு என இவை கூறின.

இதைத் தொடர்ந்த அறிக்கைகள், குறிப்பாக ஜேர்மனியின் முக்கிய நாளேடு Frankfurter Allgemeine Zeigung ல் வந்த அறிக்கைகள், அசாத் ஆட்சியின் எதிரிகள் உட்பட நேரில் பார்த்தவர்களின் சாட்சியங்களை மேற்கோளிட்டு, படுகொலையை உண்மையில் நிகழ்த்தியவர்கள் சுதந்திர சிரிய இராணுவத்தினர்தான் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் ஷியா மத சிறுபான்மையினர் மற்றும் அரசாங்க ஆதரவாளர்கள் எனக் கருதப்பட்டவர்கள் என்றும் கூறியது.

ஐ.நா.விற்கு அனுப்பப்பட்ட அறிக்கை விசாரணை உறுதியாக எவர் படுகொலைகளை நிகழ்த்தியது எனக் கூறுவதற்கில்லை என்பதை ஒப்புக் கொண்டுள்ளது. மூன்று சாத்தியக் கூறுகளையும் அது தெரிவித்துள்ளது: முதலாவது, செய்தவர்கள் ஷப்பிஹா அல்லது மற்ற உள்ளூர்ப் போராளிகள் அருகில் இருந்த கிராமங்களில் இருந்து வந்திருக்காலம், ஒருவேளை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படைகளுடன் சேர்ந்து அல்லது அதன் இசைவடன் செய்யப்பட்டிருக்கலாம்; இரண்டாவது படுகொலை செய்தவர்கள் அரசாங்கத்தை எதிர்க்கும் சக்திகள், வன்முறையைப் பெருக்கும் நோக்கம் உடையவை, எழுச்சிக்கு ஆதரவு கொடுக்காதவர்கள் அல்லது கொடுக்க மறுப்பவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பவை; மூன்றாவது எவரெனத் தெரியாதவற்றுடன் இணைந்து செயல்படும் வெளிநாட்டுக் குழுக்கள்.

விசாரணை ஆணையம் இவற்றில் எதையும் தள்ளுவதற்கு இல்லை என்று அறிக்கை கூறுகிறது; ஆனால் ஐ.நா. அதிகாரிகள் அரசாங்க சார்பு போராளிகள் செய்திருக்கக் கூடிய வாய்ப்பு அதிகம் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த அறிக்கையே இதற்கு மாறான சான்றுகளைத்தான் கொடுத்துள்ளது; அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஓய்வு பெற்ற மற்றொரு இப்பொழுதும் செயல்படும் சிரியப் பாதுகாப்புப் படைகளில் இருப்பவர் உள்ளார் என்றும், கொல்லப்பட்ட குழந்தைகளில் ஒன்று சிரியத் தேசியக் கொடியை அலங்காரமாகக் கொண்ட கங்கணத்தை அணிந்திருந்தது என்றும் கூறியுள்ளது. கொலைகாரர்கள் மழித்த தலைகளையும், நீண்ட தாடிகளையும் கொண்டிருந்தனர் என்ற சான்றுகளையும் அது குறித்துள்ளது: இது சுன்னி இஸ்லாமியவாதச் சக்திகளைக் குறிப்பிடுகிறது; இதில் வெளிநாட்டுப் போராளிளும் உள்ளனர்; ஆட்சிக்கு எதிராக அவர்களும் திரட்டப்பட்டுள்ளனர்.

இதுவரை அமெரிக்கத் தலைமையிலான சிரிய ஆட்சிமாற்றம் கோருதலை எதிர்த்துவரும் ரஷ்யா, மேற்கத்தைய ஆதரவுடைய எழுச்சியாளர்கள்  கட்டவிழ்த்துள்ள வன்முறை அளவை ஐ.நா. அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் குறைகூறியுள்ளது.

இந்த அறிக்கை போராளிகள் செய்த வன்முறையின் பரப்பைப் பிரதிபலிக்கவில்லை என்று வசிலி நெபென்ஸ்யா, ரஷ்ய வெளியுறவு அமைச்சரகத்தின் மனிதாபிமான ஒத்துழைப்பு, மனித உரிமைகள் துறையில் இயக்குனர் கூறினார். இச்சக்திகள் கொலை செய்கின்றன, குடிமக்களை பிணைக் கைதிகளாக எடுத்துச் செல்லுகின்றன; இதில் புகழ்பெற்ற சிரிய அரசியல் அரசாங்க,முனிசிபல், பொது மற்றும் மதச் செயலர்கள், புனிதப் பயணிகள் அடங்குவர். என்றும் அவர் கூறினார்.

அவர் மேலும் கூறினார்: அரசாங்க நிறுவனங்களும் உள்கட்டுமான வசதிகளும் கிட்டத்தட்ட அன்றாட நடவடிக்களில் தாக்கப்படுகின்றன. மைன்ஸ் யுத்தம் ஒன்று முழுவீச்சில் நடைபெறுகிறது. சிரிய நகரங்களில் போராளிகள் குருதி கிளறிப் பயங்கரவாதச் செயல்களைச் செய்கின்றனர். இத்தகைய வனைமுறை வெளிநாட்டுப் பணம் ஆயுதங்கள் ஆகியவற்றால் நடைபெறுகின்றன என்றார் நெபென்ஸ்யா.