World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: The government prepares to demolish “additional constructions” in Maligawaththa flats

இலங்கை: அரசாங்கம் மாளிகாவத்தை அடிக்குமாடி வீடுகளில்மேலதிக கட்டுமானங்களை தகர்க்கத் தயாராகின்றது 

Vilani Peiris and Kalpa Fernando
28 February 2012
Back to screen version

பெப்பிரவரி 14 கொழும்பு மாளிகாவத்தை தேசிய அடுக்குமாடி வீட்டுத் தொகுதிக்கு வந்த, கட்டுமான மற்றும் பொறியியல் சேவை மற்றும் பொது வசதிகள் அமைச்சின் கீழ் இருக்கின்ற அடுக்குமனை (condominium) முகாமைத்துவ அதிகார சபை அதிகாரிகள் சிலர், அனுமதியற்ற கட்டுமானம் என அவர்களால் பெயரிடப்பட்ட சில வீடுகளை உடைத்து அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். ஆயினும் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மேலும்ஒரு வாரம் கால அவகாசம் கொடுப்பதாகக் கூறி அதிகாரிகள் திரும்பிச் சென்றுள்ளனர்.

கால அவகாசம் முடிவைடையும் தினத்தன்று, அதாவது பெப்பிரவரி 21, குடியிருப்பாளர்கள் சிலர் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமால் வீரவன்சவுக்கு தமது துன்பங்களை தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளனர். இராணுவத்தைப் பயன்படுத்தி வீடுகளை உடைக்கும்போது, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சிரமத்துக்கு உள்ளாவதால், மேலும் ஒருவாரம் எடுத்து உரிமையாளர்களே வீடுகளை தகர்த்து விட வேண்டும் என அவர் கூறினார்.

அடுக்குமனை முகாமைத்துவ அதிகாரசபையின் அதிகாரிகள் கொடுத்த அவகாசம் முடிவடைந்து மறுநாள், பெப்பிரவிர 22 காலை, அடுக்குமாடி கட்டிடப் பகுதிக்கு இராணுவத்தினர் வந்ததாகவும், ஆயினும் வீரவன்ச கொடுத்த கால அவகாசத்தின் காரணமாக குறிப்பிட்ட அதிகாரசபையின் அலுவலர்கள் அங்கு வ்ந்திராததால் படையினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றதாக குடியிருப்புவாசிகள் உலக சோசலிச வலைத் தளத்திடம் தெரிவித்தனர். கொடுக்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்த உடனேயே வீடுகளை தகர்த்து எறிவதற்காக இராணுவத்தைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீராமானித்துள்ளமையே இதன் மூலம் தெளிவாகின்றது.

அதேவேளை, அடுக்குமனை முகாமைத்துவ அதிகாரசபையின் தலைவர் கபில கமகே, பெப்பிரவரி 15 அன்று ஐலண்ட் பத்திரிகையுடன் பேசிய போது, “முதலாவது நடவடிக்கையாக அடுக்கு மாடிகளை திருத்துவதாகவும், அத்துடன் சகல அதிகாரமற்ற குடியிருப்பாளர்களையும் அங்கிருந்து அகற்றுவதாகவும் தெரிவித்தார். “2011ம் ஆண்டே அந்த வீட்டுவாசிகளுக்கு 14 நாட்களுக்குள் அந்த இடத்தை விட்டு அகன்று செல்லுமாறு அறிவிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அவர் கூறுவதன்படி, கழிவுநீர் வாய்க்கால் மீதே புதிய கட்டுமானங்கள் கட்டப்பட்டுள்ளதன் காரணமாக, அவற்றின் புனர்நிர்மாண வேலைகளுக்கு பாதகம் ஏற்பட்டுள்ளது. ஆயினும் உண்மை என்னவெனில், 1973ல் கட்டியெழுப்பப்பட்ட இந்த தொடர் மாடி வீடுகளை திருத்துவதற்கு இன்றுவரை இருந்த அரசாங்கங்களோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் (யூ.என்.பீ.) பொறுப்பிலிருந்த கொழும்பு மாநகர சபையோ, இன்றுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை என்பதே ஆகும்.

கொழும்பு நகரின் ஜனத்தொகையில், நூற்றுக்கு ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் இதுவரை குடிசைகளில் வாழ்வதன் மூலம், இந்த அரசாங்கங்கள் வறியவர்களின் வீட்டுப் பிரச்சினையை எந்தளவுக்கு அலட்சியம் செய்துள்ளது என்பதை பலமான முறையில் இது அம்பலப்படுத்துகிறது.

அத்துடன், நிர்மானிக்கப்பட்டுள்ள இடவசதிகள் அற்ற தொடர்மாடிகள் சிலவற்றில் வாழ்பவர்கள், தமது பிள்ளைகள் வளர்ந்துவிட்டதன் காரணமாக, கட்டுமானத்தில் இருக்கின்ற சிறிய வெற்றிடங்களைப் பயன்படுத்தி, தமது வீட்டுப் பகுதியோடு சேர்த்து ஒரு சிறிய அறைகளையும் கட்டிக்கொண்டு வாழ்கின்றன. மணம் முடிக்கின்ற பிள்ளைகளின் புதிய குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கிடைக்காததால் அவர்களும் தமது பெற்றோர்களின் வீடுகளிலேயே வாழத் தள்ளப்பட்டுள்ளமை, வீட்டுத் தொகுதிகளை இவ்வாறு விரிவுபடுத்திக்கொள்வதற்கு நெருக்குகின்ற பிரதான காரணமாகும். அரசாங்கம் காட்டுகின்ற கணக்குகளின் படி, மாளிகாவத்தை தொடர்மாடி வீட்டுத் தொகுதியில், 1512 வீடுகள் இருப்பதோடு அவற்றில் 1700 குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களில் பெரும்பான்மையானவர்கள், தொழிலாள வர்க்க குடும்பங்களாகும். சிறிய வரவேற்பறை, ஒரு அறை, ஒரு சிறிய சமையலறை மற்றும் மலசலகூடம் மட்டுமே இந்த வீடுகளில் உள்ளன.

நான்கு பிள்ளைகளின் தாயார், உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, “இந்த வீடுகள் எங்கள் அம்மாவுக்கே கிடைத்தன. தங்கையும் நானும் மணம் முடித்த பின்னர், எங்களுக்கு இடம் போதாமல் போனது. எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். தங்கைக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். 10 பேர் வரை இந்த சிறிய வீட்டினுள் இருப்பது எப்படி? நாங்கள் வீட்டுக்கு முன் பக்கமும் பின்பக்கமும் சில பகுதிகளை சேர்த்துக் கட்டினோம். எங்களுக்கு வீடுகள் கிடைக்காததினாலேயே அவ்வாறு செய்தோம்,” என்றார்.

அரசாங்கம் இப்போது கழிவு நீர் வாய்க்கால் பற்றி பேசுகின்றது. பல ஆண்டுகளாக கழிவு நீர் வாய்க்கால் நிறைந்தவுடன் இங்குள்ளவர்களே பணம் சேகரித்து, பவுசர் கொண்டுவந்து அதை துப்புவரவு செய்தனர். வீடமைப்பு அதிகார சபை ஒன்றும் செய்யவில்லை. இந்த வீடுகளை உடைக்காமலேயே நாங்கள் வாய்க்காலை துப்புரவு செய்துள்ளோம். எங்களுக்கு வீடு கொடுக்காமலே விரட்டிவிடுவதற்காக அரசாங்கம் இந்தக் கட்டுக் கதையைச் சொல்கின்றது,” என இன்னுமொரு பெண் கூறினார்.

அரசாங்கம் எரிபொருள் விலையை நூற்றுக்கு 50 வீதம் அதிகரித்தமை பற்றி, இங்கு வாழ்பவர்கள் சீற்றமடைந்துள்ளனர். எரிபொருள் விலை அதிகரித்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலாபம் மீனவர் ஒருவரை பொலிசைப் பயன்படுத்தி சுட்டுக் கொன்றமை பற்றி இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிர்ப்பை வெளிப்படுத்திய இன்னொரு பெண், “இது பாதாள உலக அரசாங்கம். ஜனநாயகம் சுதந்திரம் ஒன்றும் கிடையாது. நாங்கள் இந்த அரசாங்கத்துக்கே வாக்களித்தோம். ஆனால் நாங்கள் ஏமாந்துவிட்டோம். இப்படிச் சொல்லும் போது அரசாங்கம் எங்களை சிங்களப் புலி என்று சொல்லும். யுத்தத்துக்கு ஒத்துழைப்பு கொடுத்து நாங்கள் தவறு செய்துவிட்டோம் என்பது இப்போது விளங்குகிறது, என கூறினார்.

கொழும்பு நகரத்தை ஆசியாவின் பிரதான வர்த்தக மையமாக ஆக்குவதன் மூலம், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு கொழும்பு நகரத்தைக் கொடுத்துவிட்டு வறியவர்களை விரட்டியடிப்பதற்கே இராஜபக்ஷ அரசாங்கம் தயாராகின்றது. இதன் மூலம் கொழும்பு நகரில் இருந்து 75,000 வறிய குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளன. இதற்கு குடியிருப்பாளர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை நசுக்குவதற்காக, அரசாங்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வந்ததோடு, தெமட்டகொட மற்றும் கொம்பனித்தெரு பகுதியிலும் நூற்றுக்கணக்கான வீடுகளை இராணுவத்தைப் பயன்படுத்தி அகற்றியது. அத்துடன் இராணுவத்தைப் பயன்படுத்தி, கொழும்பு நகரை அலங்கரிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாளிகாவத்தை தொடர்மாடி வீடுகள் அமைக்கப்பட்டு 38 ஆண்டுகளின் பின்னர், முதலாவதாக நடத்தப்படும் திருத்த வேலைகளும், இந்த நகரை அலங்கரிக்கும் நடவடிக்கையின் ஒரு பாகமே அன்றி, தங்களது நன்மைக்காக அல்ல என்பது அநேகமானவர்களின் கருத்து. இனிமேல் செய்யப்படும் திருத்த வேலைகளை வீட்டு உரிமையாளர்களே செய்துகொள்ள வேண்டும் என இப்போதே வீட்டுரிமையாளர்களுக்கு கூறப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 31 அன்று, பொரளை சேர்பன்டைன் தொடர்மாடி பகுதிக்கு வந்த அமைச்சர் விமல் வீரவன்ச, அவற்றை ஒழுங்காக பராமரிக்காமை சம்பந்தமாக, அதில் குடியிருப்பவர்களை குற்றஞ்சாட்டினார். தொடர்மாடிகளை திருத்துவது இனிமேல் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட மாட்டாது என அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் இவ்வாறு வேலைகளை முன்னெடுக்கும் போது, தமது ஜீவனோபாயங்களும் பறிக்கப்பட்டமை பற்றி குடும்பப் பெண்கள் உலக சோசலிச வலைத் தளத்திடம் கூறினர். கொழும்பு நகரை அலங்கரிப்பதன் கீழ், கொழும்பில் இருந்த மீன் சந்தையை பேலியகொடைக்கு கொண்டு சென்றுள்ள நிலைமையின் கீழ், அநேகமானவர்கள் தொழிலை இழந்துள்ளனர். தமது கணவன்மாரின் தொழில் பறிபோனமை மற்றும் ஜீவனோபாயம் சரிந்தமை தொடர்பாக ஒரு குடும்பப் பெண் தெரிவித்ததாவது: எனது கணவர் கொழும்பு மீன் சந்தையில் மொத்த விற்பனை செய்தார். அதை பேலியகொடைக்குக் கொண்டு சென்ற போது டென்டர் கட்டணம் நான்கு இலட்சம் கேட்டனர். பணம் தேட காலங் கடந்ததால் பேலியகொடையில் இடம் கிடைக்கவில்லை. இப்போது மீன் சந்தையில் கூலிக்கு சில்லறைத் தொழில் ஒன்றைச் செய்கின்றார். இப்போது எமது வருமானம் குறைந்துவிட்டது. வாழ்வது மிகவும் சிரமம்.’’

நெருக்கடியான நிலைமையின் கீழ், இவ்வாறு வாழ்கின்ற மக்களை வெளியேற்றுவதன் மூலம், அவர்கள் நடுவீதிக்கு வரப் போகின்றனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் போது, அரசாங்கமும் கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியும் வீடுகளைக் கட்டிக்கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்தன. கொழும்பு நகரில் புதிய வீடு ஒன்றைக் கொடுக்காமல் வீடுகளை அகற்றப் போவதில்லை என அரசாங்கம் கூறியது.

இப்போது குடிசைவாசிகள் மட்டுமன்றி, தொடர்மாடிகளில் வாழ்பவர்களும் அவற்றில் இருந்து வெளியேற்றப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர். குடிசைவாசிகளுக்கு தொடர்மாடி வீடுகள் கொடுப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தாலும், வறிய மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் மூலம் எந்த விமோசனமும் கிடையாது என்பதையே தொடர்மாடிகளில் வாழும் மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமைகள் சுட்டிக் காட்டுகின்றன.

இந்த நிலைமையில், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் ஆளப்படும், கொழும்பு நகரசபைக்கு உரிய சொத்துக்களை, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு, ஜனநாயக விரோதமான முறையில் கொண்டுவரப் பட்டுள்ளது. குதிரைப் பந்தைய திடல், ஹெவ்லொக் மைதானம், மெனிங் சந்தை, புனித ஜோன் மீன் சந்தை ஆகியவற்றை நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் கொண்டுவந்த இராஜபக்ஷ அரசாங்கம், அண்மையில் வர்த்தமாணி அறிவித்தல் மூலம், விகாரமாதேவி பூங்கா, நொமேட்ஸ் மைதானம் ஆகியவற்றை இந்த அதிகாரசைபயின் கீழ் கொண்டுவந்துள்ளது. இந்தக் காரணங்களால், கொழும்பு மாநகர சபையின் வருமானத்தில் நூற்றுக்கு 40 வீதம் குறைந்து போயுள்ளதோடு அதனால் நகரசபையினால் மட்டுப்படுத்தப்பட்டளவில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரம் உட்பட நலன்புரிச் சேவைகளை சபை வெட்டிக்குறைக்கத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில், குடிசைவாசிகளுக்கு வீடுகளை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சி, அரசாங்கத்தின் வீடுகளைத் தகர்க்கும் நடவடிக்கை சார்பாக செயற்படுகின்றது. அரசாங்கம் வறியவர்களின் வீடுகளை தகர்த்து நடமுறைப்படுத்துகின்ற, கொழும்பு நகரை அலங்கரிக்கும் வேலைத் திட்டத்துக்கு அதன் மேயரும் யூ.என்.பீ. தலைவர்களில் ஒருவருமான ஏ.ஜே.எம். முஸம்மில் உடைய ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. சண்டே லீடர் பத்திரிகைக்கு கருத்துத் தெரிவித்த முஸம்மில், கொழும்பை அழகுபடுத்துவதற்கும் துப்புரவு செய்வதற்கும், எனது எதிர்ப்பு இல்லை என்று தெரிவித்தார். நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் செயற்படுவது பிரியோசனம் அற்றது அல்ல என அவர் மேலும் கூறினார். அவர் பின்வருமாறு கேள்வி எழுப்பினார்: விகாரமாதேவி பூங்காவின் அதிகாரம் அரசாங்கத்துக்கு வேண்டுமென கேட்டால், நான் அதை எப்படி நிறுத்துவது?

ஆட்சியாளர்கள் ஆயிரக்கணக்கான வறிய குடிசைவாசிகள் மற்றும் தொடர்மாடிவாசிகளை கொழும்பு நகரில் இருந்து வெளியேற்றி, அவர்களை நடுவீதிக்கு இழுத்துப் போடும் அதேவேளை, தேசிய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவவாதிகளுக்காகவும் சுற்றுலாப் பயணிகளுக்காகவும் ஆடம்பரமான பிரமாண்ட ஹோட்டல், பூங்கா, மைதானம் மற்றும் உடற்பயிற்சிக்கான விசேட பிரதேசங்கள் போன்ற சகலதும் அடங்கிய கொழும்பு நகரை கட்டியெழுப்பிக்கொண்டிருக்கின்றனர்.

காலிமுகத் திடலில் கட்டியெழுப்பப்படும் அறைகள் 661 ஷங் ரிலா ஹோட்டல் கட்டிடத்துக்கு கடந்த 24ம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் இராஜபக்ஷ அடிக்கல் நாட்டியதோடு, கொழும்பு நகரில் இரண்டாவது உடற்பயிற்சி மையத்தை அதற்கு அடுத்தவாரம் பாதுகாப்புச் செயலர் கோடாபாய இராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் கோடிக்கணக்கான தொகையை இறைத்து கொழும்பை சுற்றுலா மற்றும் வர்த்தக சுவர்க்கமாக்குவதற்கு விரைவாக செயற்படும் அதேவேளை வறியவர்களின் வீட்டு உரிமை மீது தாக்குதல் தொடுப்பதை துரிதப்படுத்திக்கொண்டிருக்கின்றது.