World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The European fiscal pact

ஐரோப்பிய நிதிய உடன்பாடு

Peter Schwarz
5 March 2012
Back to screen version

ஐரோப்பியப் பொருளாதாரம் மீண்டும் சுருங்குகையில், வெள்ளியன்று ஐரோப்பிய ஒன்றியம் முறையாக நிதிய உடன்பாட்டை ஏற்றுள்ளது என்னும் உண்மை, இந்த உடன்பாட்டின் ஆழ்ந்த பிற்போக்குத்தன, தொழிலாளவர்க்க-விரோதத் தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பொதுச் செலவுகளைப் பெரிதும் குறைத்தல் ஆரம்பநிலையில் இருக்கும் மந்தநிலையைத் தீவிரப்படுத்திவிடும் என்றுதான் வரலாற்று அனுபவம் நிரூபிக்கிறது. ஒரு முற்றிலும் வரவுசெலவுத்திட்டம் பற்றிய நிலைப்பாட்டில், இந்த நிதிய உடன்பாடு அர்த்மற்றதாகத் தோன்றுகிறது. கிரேக்கத்தின் உதாரணம் காட்டுவது போல், அரசாங்க வருமானங்களில் ஒரு பெரிய மந்தநிலையினால் ஏற்படும் இழப்புக்கள், செலவுகள் குறைப்புக்களால் ஏற்படும் சேமிப்புக்களை விட அதிகம் ஆகிறது; இறுதியில் வரவுசெலவுத்திட்ட பற்றாக்குறை, தேசியக் கடன் ஆகியவற்றைக் குறைப்பதைவிட அதிகமாக்கித்தான்விடும்.

வெள்ளிக்கிழமை பிரஸ்ஸல்ஸில்  ஐரோப்பி உச்சிமாநாட்டில் இந்த நிதிய உடன்பாட்டை ஏற்ற ஐரோப்பிய அரசாங்கத் தலைவர்களுக்கு இது பற்றித் தெரியாது என நம்புவது கபடமற்ற தன்மையாகும். மாறாக அவர்கள் வேண்டுமென்றே ஒரு மந்தநிலையைக் கொண்டுவர முற்படுகின்றனர்; இதையும் ஒரு உறுதியான அரசியல், வர்க்கக் காரணங்களுக்காகச் செய்கின்றனர். வெகுஜன வேலையின்மையை தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைப்பதற்கும், சமூக நலன்கள், பொதுப்பணிகள் ஆகியவற்றை அகற்றுவதற்குமான முயற்சியாகத்தான் இதைப் பயன்படுத்த விரும்புகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தின்மீது தாக்குதல் நடத்துவதற்காக ஒரு மந்தநிலையை வேண்டுமென்றே தூண்டிக் கொண்டுவருவது ஆளும் வர்க்கத்தால் இது முதல் தடவையாக நடத்தப்படவில்லை. 1981ம் ஆண்டு அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு அதன் முக்கிய வட்டி விகிதத்தை முன்னோடியில்லாத 20% அதிகரிப்பிற்கு உயர்த்தியது; அது வீடுகள் வாங்குதல், கார்கள் வாங்குதல், நுகர்பொருட்களை வாங்குதல் ஆகியவற்றை நெரித்து, ஆலை மூடல்களைத் தூண்டிவிட்டு தொடர்ச்சியான பெருநிறுவனத் திவால்களையும் ஏற்படுத்தியது. இதன் விளைவு இரண்டாம் உலகப் போருக்குப் ஆழ்ந்த மந்த நிலை உருவானதுதான்.

இதன் நோக்கம் தொழிலாளர் இயக்கத்தின் முதுகை முறிப்பதுதான்; தொழிற்சங்கத் தலைவர்களின் காட்டிக் கொடுப்பு இருந்தபோதிலும்கூட, அவ்வியக்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் போர்க்குணமிக்க எதிர்ப்பின் காரணமாக வேலைநிறுத்த அலைகளைத் தொடக்கி உயரும் பணவீக்கத்திற்கு எதிரான ஊதியத் தரங்களை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வைத்தன. இந்த இயக்கத்தின் உச்சக்கட்டம் 100,000 சுரங்கத் தொழிலாளர்களின் 111 நாள் வேலைநிறுத்தம் 1977-1978ல் நடத்தப்பட்டதில் அடையப்பட்டது. சுரங்கத் தொழிலாளர்கள், மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்னும் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் ஆணையை மீறினர்.

போருக்குப் பிந்தைய காலத்தில் வட்டிவிகிதங்களை உயர்த்தியதற்கு பொறுப்பானவர் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவரான போல் வோக்கர் ஆவார். அவர் 1979 ஆகஸ்ட்டில் அப்பதவிற்கு நியமிக்கப்பட்டிருந்தார். அவர் மத்திய வங்கிக்கூட்டமைப்பின் தலைவராக கார்ட்டருக்குப் பின் பதவிக்கு வந்த குடியரசுக் கட்சி ஜனாதிபதி ரோனால்ட் ரேகன் காலத்தில் இருந்து தொழில்துறைத் தகர்ப்புக் கொள்கைக்கு தலைமை தாங்கினார். இதில் தொழில்துறையில் குறைந்த இலாபம் உடைய பிரிவுகள் அகற்றப்படுதல், அமெரிக்கப் பொருளாதாரம் உற்பத்தித் துறையில் இருந்து நிதிய ஊக, திரித்தல் முறைக்கு மாற்றம் கொண்டுவரப்பட்டது.

AFL-CIO தலைமையுடைய ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட PATCO விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் சங்கத்தை அழிப்பதில் தொடர்ந்த ரேகன் நிர்வாகத்தின் 1981 தாக்குதலில் இருந்து ஒரு தசாப்தக்கால வேலைநிறுத்த முறிப்புக்கள், தொழிற்சங்கத் தகர்ப்புக்கள் மற்றும் தொழிலாளர்களை போலிக்குற்றச்சாட்டுக்குள்ளாக்குதல் என்ற நடவடிக்கைகள் மூலம் தொழிலாளர்களின் ஊதியங்களைக் குறைத்த தன்மையில் தொடங்கி, தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் விளைவாக முந்தைய தசாப்தங்களில் கிடைத்த நலன்களின் இழப்பில் முடிந்தது. சமூகச் சமத்துவமின்மையும் மிக உயர்மட்டத்தில் இருக்கும் செல்வந்தர்களின் வருமானங்களுடன் பெரிதும் உயர்ந்தது.

இதேபோல், ஐரோப்பியத் தலைவர்களும் இப்பொழுது முழு உணர்வுடன் பணவாட்டக் கொள்கையைத் (Deflationary policy) தொடர முற்பட்டுள்ளனர். இதனால் ஊதியங்கள், சமூக நிலைமைகள் ஆகியவற்றில் தொழிலாள வர்க்கம் முன்னதாக பெற்ற வெற்றிகளை அழிக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் ஆகும். இந்த நிதிய உடன்பாட்டிற்குப் பின்புலமாக இருந்து உந்துதல் சக்தியைக் கொடுத்த ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் பலமுறையும் ஐரோப்பாவிற்கு அதன் போட்டித் தன்மையை அதிகரிக்காவிட்டால் வருங்காலம் இல்லை என்று வலியுறுத்தியுள்ளார்அதாவது உற்பத்திச் செலவுகளைக் குறைக்கும் வகையில் தொழிலாள வர்க்கத்தை வறுமைப்படுத்தி, அதைச் சுரண்டுவதைத் தீவிரப்படுத்தாவிட்டால்.

எல்லா நாடுகளையும் விட ஜேர்மனி கூடுதல் போட்டித்தன்மைக்கு உந்துதல் கொடுக்கிறது என்பது விந்தையான புதிராக முதலில் தோன்றக்கூடும்; ஏனெனில் அது சமீபத்திய ஆண்டுகளில் தொழிலாளர் செலவுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளது; யூரோப்பகுதியில் வேறு எந்த நாட்டையும் விட அதிக ஆதாயத்தைப் பெற்று, மிக அதி வணிக உபரிகளையும் அனுபவிக்கிறது. ஆனால் ஜேர்மனிக்கு பிரச்சினை ஐரோப்பியச் சந்தை மட்டும் அல்ல; உலகச் சந்தை என்று உள்ளது; அங்குத்தான் சீனா, வியட்நாம், பங்களாதேசம் போன்ற நாடுகள் பெருகிய முறையில் அடையாளமாக காணப்படுகின்றன.

சர்வதேச நிதியச் சந்தைகளை கட்டுப்படுத்தும் முதலீட்டு வங்கிகளும், ஒதுக்குநிதி நிறுவனங்களும் குறைந்தப்பட்சம் 20% அல்லது அதற்கும் அதிக இலாபத்தை ஈட்ட வேண்டும். அத்தகைய ஆதாயங்கள் தொழில்துவக்கக் கால முதலாளித்தவத்தின் ஆரம்பநாட்களில் மேலாதிக்கம் கொண்டிருந்த சுரண்டுதல் தன்மையின்கீழ்த்தான் சாதிக்கப்பட முடியும்.

ஜேர்மனிய முதலாளித்துவம் உலகச் சந்தையில் அதன் தளத்தை அது ஐரோப்பாவை அதன் உற்பத்தி மையம் மற்றும் உட்சந்தை என்று நம்பமுடிந்தால் மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும் (எனவேதான் அது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவுடன் இணைந்திருப்பது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது); அதே நேரத்தில் ஐரோப்பிய ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகளைச் சர்வதேச தளத்திற்குக் குறைத்தல் என்பதும் வேண்டும் (எனவேதான் நிதிய உடன்பாட்டிற்கான பிரச்சாரம்).

சில நேரங்களில் மற்ற ஐரோப்பிய அரசாங்கங்கள் ஜேர்மனிய ஆணைகளைப் பற்றி முணுமுணுக்கும். ஆனால் பெரும் சமூக அழுத்தங்களை எதிர்கொள்ளுகையில் ஐரோப்பிய ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக என வரும்போது தன் வேறுபாடுகளைக் களைந்து கொள்ளும். 27 ஐரோப்பிய அரசாங்களில் 25 நிதிய உடன்பாட்டில் ஏன் கையெழுத்திட்டன என்பதை இது விளக்குகிறது. இதே காரணத்தை ஒட்டி குரோஷியா, சேர்பியா மற்றும் துருக்கி ஆகியவை யூரோ நெருக்கடியையும் மீறி ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

கிரேக்கத்தில் செயல்படுத்தப்பட்ட பேரழிவுதரும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் இதுதான் காரணம் ஆகும். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டை திவால் தன்மையில் இருந்து காப்பாற்றாது என்பது இப்பொழுது வெளிப்படையாகிவிட்டது. மாறாக திவால்தன்மையை விரைவுபடுத்தத்தான் செய்யும். உண்மையான நோக்கம் ஐரோப்பா முழுவதற்கும் ஒரு புதிய அடையாளக் கல்லை நிறுவுதல் என்று உள்ளது. தொழிலாளர்கள் தங்களை வறுமைத் தர ஊதியங்களுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு பிற சமூகநலப் பணிகள் தகர்ப்பிற்கும், பொதுத்துறையில் நூறாயிரக்கணக்கான ஊழியங்கள் அகற்றப்படுவதற்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமூக சமரசக் கொள்கைக்கு இனி திரும்புவது 2008ல் வோல்ஸ்ட்ரீட் சரிவில் தொடங்கிய உலக முதலாளித்துவமுறைச்சரிவு என்னும் நிலைமையில் இயலாததாகிவிட்டது. ஐரோப்பாவில் வர்க்கப் பிளவுகள் மிக உயர்ந்த அளவிற்கு அதிகரித்துள்ளதை அடுத்து இனி சமரசம் குறித்த அரைகுறை நடவடிக்கைகளுக்கு இடமில்ல என ஆக்கிவிட்டன. ஒரு காலத்தில் சமூக சீர்திருத்தம், ஜனநாயகம் மற்றும் சமாதானம் ஆகியவற்றைப் பெரிதும் வளர்த்திருந்த அனைத்துச் சமூக அமைப்புக்களையும் பிற்போக்குத்தன புலத்தில் தள்ளிவிட்டதில் நிரூபணம் ஆகிறது. தொழிற்சங்கங்களின் ஆதரவைக் கொண்டுள்ள சமூக ஜனநாயகக் கட்சிகள் சிக்கன நடவடிக்களை சுமத்துவதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன; அதே நேரத்தில் முன்பு சமாதானப்போக்கை கொண்டிருந்த பசுமைவாதிகள் ஏகாதிபத்திய போருக்கு ஆர்வத்துடன் குரல் கொடுப்பவர்களாக மாறிவிட்டனர்.

இன்று சமூகச் சீர்திருத்தம் குறித்து எவர் உபதேசம் செய்தாலும் ஜேர்மனிய இடது கட்சி, அதேபோன்ற அமைப்புக்கள் தொழிலாளர்களை ஏமாற்றவும், குழப்பத்திற்குள்ளாக்கவும் தான் அவ்வாறு செய்கின்றன. ஐரோப்பிய நெருக்கடி தவிர்க்க முடியாத புரட்சிகர தாக்கங்களை கொண்டுள்ளது.

நிதிய உடன்பாடு மற்றும் அதன் விளைவுகள் ஜனநாயக வழிமுறைகள் மூலம் செயல்படுத்தப்பட முடியாதவை. 1930ல் ஜேர்மனிய சான்ஸ்லர் ஹென்ரிச் புரூனிங் ஒரு சர்வதேச நிதிய நெருக்கடிக்கு நடுவே இதேபோன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ஹிட்லர் ஜேர்மனியில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டார்.

இன்று மிக அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள்கூட ஒரு சோசலிசத் வேலைத்திட்டத்தின் கீழ்த்தான், தொழிலாள வர்க்கத்தின் அணிதிரட்டலின் மூலம்தான் பாதுகாக்கப்பட முடியும். ஐரோப்பா முழுவதும் வேலைக்கான உரிமை, ஒரு கௌரவமான ஊதியத்திற்கான உரிமை, ஒரு பாதுகாப்பான ஓய்வுக்கால உரிமை, கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வீடுகளுக்கான உரிமை ஆகியவற்றிற்குத் தொழிலாள வர்க்கத்தினர் ஒன்றுபட வேண்டும்; அதையொட்டி அவர்கள் நிதியத் தன்னலக்குழுவினர், அவர்களுடைய அரசியல் கருவியான ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் ஆகியவற்றின் சக்தியை முறிக்க முடியும். இருக்கும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு பதிலாகத் தொழிலாளர்கள் தொழிலாளர் அரசாங்கங்களை நிறுவ வேண்டும்; அவை பெருவணிகத்தின் இலாப நலன்களைவிட சமூகத் தேவைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கும். ஐரோப்பிய ஒன்றியம் என்பதற்குப் பதிலாக ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பது அமைக்கப்பட வேண்டும்.

இப்போராட்டத்தினை ஒழுங்கமைக்கவும் அதற்கு ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்தை வழங்கவும் ஒரு புதிய தலைமை கட்டமைக்கப்பட வேண்டும். இதன் பொருள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் தேசிய பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகள் நிறுவப்பட வேண்டும் என்பதுதான்.