World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Greek agony

கிரேக்கத்தின் மரண வேதனை
Peter Schwarz
10 March 2012
Back to screen version

ஜோர்ஜ் ஓவெல் அவருடைய 1984 என்ற நாவலில், எதார்த்தத்தில் தலைகீழான அர்த்தத்தை கொண்டிருந்த ஒரு மொழியை சித்தாந்தரீதியில் குற்றம்சாட்டுவதற்காக "Newspeak” எனும் பதத்தைப் பயன்படுத்தி இருந்தார். கிரேக்க அரசு கடன்களை தள்ளுபடிசெய்ய  பயன்படுத்தப்படும் "haircut” (கடனை வெட்டி-குறைத்தல்) என்ற சொல்லையும் Newspeak சொற்களஞ்சியத்தோடு சேர்க்க வேண்டும்.

தனியார் கடன் வழங்குனர்களின் ஒரு விட்டுக்கொடுப்பு மற்றும் நிதியியல் சந்தைகள் செய்த "தியாகம் என்று எது பகிரங்கமாக முன்வைக்கப்பட்டதோ, அதாவது அவர்களின் கிரேக்க கடன் பத்திரங்களில் பாதிக்கும் மேற்பட்டதை தள்ளுபடி செய்தமையானது உண்மையில் வங்கிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு நிதியியல் பரிசாகும்.

வியாழனன்று இரவு கடன் வழங்குனர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட 86 சதவீதத்திற்கு அண்ணளவான கடன்வெட்டு (debt swap) கிரேக்க அரசு திவால்நிலைமையைத் தடுத்துவிடப் போவதில்லை. அது அத்தகையவொரு திவால்நிலைமையின் விளைவாக கிரேக்க கடனில் முக்கால்பகுதியாக இருக்கக்கூடிய தொகையை தனியார்துறையிலிருந்து பொதுத்துறைக்கு மாற்றிவிடுவதன் மூலம் வெறுமனே அதை தள்ளிப் போடுகிறது.    

உண்மையில் சில தனியார் பத்திர-பங்குதாரர்கள் கடன் வெட்டுக்கு  நிர்ப்பந்தமாக தள்ளப்பட்டு இருந்ததால், கிரேக்க பத்திரங்கள் மீதான திருப்பி செலுத்தவியலா கடன்களுக்கான காப்பீடுகளில் $3 பில்லியன் கடன்தொகைகளைத் தள்ளுபடி செய்வதைத் தூண்டிவிட்டு, அந்த மறுகட்டமைப்பு ஒரு "கடன்-வழங்குமுறை நிகழ்வை" உள்ளடக்கி இருப்பதாக வெள்ளியன்று International Swaps & Derivatives Association குறிப்பிட்டது. இது அந்த உடன்படிக்கையானது ஐரோப்பிய மற்றும் உலகளாவிய நிதியியல் நெருக்கடி தீர்க்கப்பட்டுவிடவில்லை, மாறாக போர்ச்சுகல், ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸிலும் கூட கடன்கள் மீது ஒரு புதிய ஊக தாக்குதலோடு தொடங்கி, அது தீவிரப்படுவதற்கு ஒரு அரங்கத்தை அமைக்கிறது என்ற உண்மையையே அடிக்கோடிடுகிறது

இந்த கடன்வெட்டி-குறைப்பு நடவடிக்கை, தனியார்துறை கடன் வழங்குனர்களுக்கு அளிக்க வேண்டிய கிரேக்க அரசு கடனில் அதிகபட்சமாக 107 பில்லியன் யூரோவைக் குறைக்கிறது. அதேநேரத்தில், பொதுத்துறை கடன்வழங்குனர்களுக்கு வழங்க வேண்டிய கிரேக்க கடனை 130 பில்லியன் யூரோ அதிகரிக்கின்றது. இது தான் ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வரும் இரண்டாவது கிரேக்க நிதிப்பொதியின் அளவாக உள்ளது. இது ஒரு "மீட்பு நிதி" என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இதுவொரு பணப்பரிசல்ல, மாறாக கிரீஸ் வட்டியோடு திரும்பி செலுத்த வேண்டிய புதிய கடன்களாகும்.

இந்த 130 பில்லியன் யூரோ பொதி கிரேக்க வரவு-செலவுத்திட்டத்திற்கும், நிச்சயமாக கிரேக்க மக்களுக்கும் இலாபமளிக்காது. மாறாக அது நேரடியாக தனியார் நிதியியல் அமைப்புகளின் கருவூலங்களுக்குள் தான் போய் சேரும். கடன்வெட்டி-குறைப்பை ஏற்றுக்கொள்ள சர்வதேச கடன் வழங்குனர்களை சம்மதிக்கச்செய்ய முப்பத்தி ஐந்து பில்லியன் யூரோ "இனிப்பூட்டியாக (sweetener) ஒதுக்கப்பட்டுள்ளது, 23 பில்லியன் யூரோ கிரேக்க தனியார் வங்கிகளை மீட்டெடுக்க செல்கிறது, 35 பில்லியன் யூரோ ஐரோப்பிய மத்திய வங்கி கிரேக்க வங்கிகளின் பணப்புழக்கத்தை தொடர்வதற்காக அதற்கு உத்தரவாதங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மீதம் மிஞ்சியிருக்கும் பணம் நிலுவையிலிருக்கும் கடன்களையும், வட்டியையும் திரும்பி செலுத்த பயன்படுத்தப்படும்.

கடன்வெட்டி-குறைக்கும் நடவடிக்கையானது கிரீஸின் கடனைக் குறைக்கவில்லை, மாறாக அதை அதிகரிக்கிறது. கிரீஸின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 120 சதவீதத்திற்கு உள்ள மொத்த கடனை 2020 அளவில் குறைக்கும் இலக்கு முற்றிலுமாக சமூக செலவின குறைப்பு முறைமைகள் மூலமாக நடத்தப்பட உள்ளது. அது மக்களின் பரந்த பிரிவினரின் வாழ்க்கைத்தரங்களை பல தசாப்தங்களுக்கு பின்தள்ளிவிடும்

மறுபுறம் தனியார் முதலீட்டாளர்களைப் பொறுத்த வரையில், இந்த கடன்வெட்டி-குறைப்பு ஒரு நல்ல உடன்படிக்கையாக உள்ளது. கடைசியாக பரிமாறிய அவர்களின் கிரேக்க கடன்பத்திரங்களுக்கு பெயரளவிற்கான மதிப்பில் வெறும் 30இல் இருந்து 40 சதவீதத்திற்கு பதிலாக, அவர்கள் தங்களின் அடமானம் மற்றும் கடன் திரும்பிசெலுத்தப்படுவதற்கு சர்வதேச உத்தரவாதங்களை பெற்று, சுமார் 50 சதவீத மதிப்பிலான புதிய கடன் பத்திரங்களைப் பெறுவார்கள்.  

வல்லுனர்கள் மத்தியில், கடன்வெட்டி-குறைத்தலின் உண்மையான அர்த்தம் இரகசியமாக இல்லை. வியாழனன்று பைனான்சியல் டைம்ஸில் அமெரிக்க பொருளாதாரவியலாளர் நௌரீல் ரௌபினி குறிப்பிடுகையில், கிரேக்க கடன் மறுகட்டமைப்பில் பொதுத்துறை பாதிப்பில்லாமல் விடப்பட்டநிலையில், குறிப்பிடத்தக்க இழப்புகளை தனியார்துறை கடன் வழங்குனர்கள் ஏற்றுள்ளதென்பது ஒரு "மாயை" என்று குறிப்பிட்டார்

பிரச்சினையல்லாத காலங்களில் பெரும்பாலான இலாபங்கள் தனியார்மயமாக்கப்பட்டபோது, பெரும்பாலான இழப்புகள் சமூகமயமாக்கப்பட்டன என்பதே நிஜமாகும்,” என்று ரௌபினி முடித்திருந்தார்.

Financial Times Deutschlandஇன் தலையங்கமும் இதேபோன்ற ஒரு தீர்மானத்தை வெள்ளியன்று எட்டியிருந்தது. அது எழுதியது: “தனியார்துறை கடன் வழங்குனர்களின் பங்களிப்பென்பது கிரேக்க மீட்சியின் சுமைகள் ஏதோவிதத்தில் பகிர்ந்து கொள்ளப்படுவதாக யாராவது நம்பினால் அவர் ஏமாற்றத்திற்குள்ளாகின்றார். கிரேக்க மீட்பு பொதியின் பெரும் பாகத்திற்கு பணம் அளிப்பவர்கள் தனியார்துறை முதலீட்டாளர்கள் இல்லை. அது பொதுத்துறையின் மீது அதாவது ஐரோப்பிய வரி செலுத்துவோரின் மீது விழுந்துள்ளது. கிரீஸ் திவால்நிலைமையோடு ஒப்பிடுகையில் தனியார்துறை முதலீட்டாளர்கள் இன்னமும் இந்த உடன்படிக்கையால் ஆதாயமடைய செய்யப்பட்டுள்ளனர்.”

கிரீஸின் தவிர்க்கவியலாத திவால்நிலைமையை பல பொருளாதாரவியலாளர்கள் எப்போதும் நிகழக்கூடிய விஷயமாகவே கருதுகின்றனர். ஆனால் அப்போது கிரேக்க மில்லியனர்கள் உட்பட பிரதான சர்வதேச நிதியியல் முதலீட்டாளர்கள் அவர்களின் பணத்தை வேறெங்காவது பாதுகாப்பாக மறைத்து வைத்திருப்பார்கள்

வெட்டுக்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கிரேக்க மக்கள் தான் திவால்நிலைமையின் விளைவுகளுக்காக முதலில் விலை கொடுப்பவர்களாக இருப்பார்கள். அடுத்ததாக, நிதியியல் இழப்புகள் கிரேக்கத்திற்கு ஐரோப்பிய கடன்களை வழங்க உத்திரவாதமளித்த அரசுகளின் வரவு-செலவு கணக்குகளில் வந்து விழும். இந்த அரசாங்கங்கள், கூடுதலான செலவு-வெட்டுக்கள் மற்றும் சிக்கன முறைமைகளை எடுக்க, கடந்த வாரம் புரூசெல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் கொண்டு வரப்பட்ட நிதியியல் உடன்படிக்கையின் கடுமையான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்வதற்குரிய ஒரு சந்தர்ப்பமாக அந்த சூழ்நிலையைக் கையிலெடுக்கும்

கிரேக்க கடன் "வெட்டி-குறைப்பு" தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சர்வதேச தாக்குதலின் ஒரு பாகமாகும். வருமானம் மற்றும் செல்வத்தை சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு பாரியளவில் மறுபங்கீடு  செய்வதே அதன் நோக்கமாகும்.

தனியார் முதலீட்டு நிதியங்களும் வங்கிகளும் அவற்றின் பொறுப்பற்ற ஊகவணிகத்தின் மூலமாக 2008இல் உலக பொருளாதாரத்தை பொறிவின் விளிம்பிற்குக் கொண்டு வந்ததிலிருந்து, அவை கடந்த நூற்றாண்டில் தொழிலாள வர்க்கத்தால் வென்றெடுக்கப்பட்ட சமூக நலன்களை அழிக்க இந்த நெருக்கடியை பயன்படுத்தி உள்ளன. முதலில் அவை பொதுமக்களின் கைகளிலிருந்து பில்லியன் கணக்கான யூரோக்களைக் எடுத்து தங்களைத்தாங்களே பிணெயெடுத்தன. பின்னர் அவை கடுமையாக கடன்பட்டிருந்த நாடுகளில் சமூக செலவின வெட்டு முறைமைகள் மூலமாக பொதுமக்களிடமிருந்து இந்த பணத்தைச் சுருட்ட அந்த நாடுகளை நிர்பந்தித்தன

கிரீஸ் ஒரு முன்னுதாரணமாக சேவை செய்ய ஏற்பாடு செய்யப்படுகிறது. பெரும் செலவின-வெட்டு முறைமைகள் அழிவைக் கொண்டு வந்து, மக்களின் மீது கொடூரமான வறுமையைத் திணிக்கும் என்ற போதினும் கூட, புரூசெல்ஸில் குரல் கொடுத்திருந்த ஐரோப்பிய ஒன்றியமும், அரசாங்கங்களும் அவற்றிற்காக அழுத்தம் அளிக்கின்றன. அவை நிதியியல் பிரச்சினைகளில் இருக்கும் போர்ச்சுக்கல், ஸ்பெயின், இத்தாலி, அயர்லாந்து மற்றும் ஏனைய நாடுகளிலும் இதேபோன்ற போக்கைப் பின்தொடர்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே பொருளாதாரரீதியில் மிகவும் பலம் வாய்ந்த ஜேர்மனியிலும் கூட ஒரு பெரிய குறைந்த-கூலி சந்தை உருவாக்கப்பட்டுள்ளது; பாரிய வேலைநீக்கங்களும் அதிகரித்துவருகிறது.

பொதுமக்களின் வாழ்க்கைத் தரங்கள் வீழ்ச்சி அடைந்து வருகின்ற நிலையில், பங்குகளின் விலைகள் மீண்டும் சாதனை அளவுகளை எட்டுகின்றன. நிதியியல்துறை உயர் நிர்வாகிகளும் பெரும் தொகைகளை அவர்களின் பைகளில் போட்டு வருகின்றனர். உயர்-சம்பளம் பெறும் நாற்பது அமெரிக்க தனியார் முதலீட்டு நிதிய மேலாளர்கள் கடந்த ஆண்டு 13 பில்லியன் டாலருக்கும் மேலாக தமக்கு எடுத்துக் கொண்டனர்.

ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம் அதன் அனைத்து உரிமைகள் மற்றும் கடந்தகால வெற்றிகள் அனைத்தையும் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த சக்தியாக இந்த தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும். கிரேக்கர்களுக்கு எதிராக ஜேர்மானியர்களும், ஸ்பானிஷ் தொழிலாளர்களுக்கு எதிராக பிரெஞ்ச் தொழிலாளர்களும் என தொழிலாளர்கள் தங்களைத்தாங்களே எதிரெதிராக நிறுத்த அனுமதிக்கக் கூடாது. ஐரோப்பிய ஒன்றியத்தையும் மற்றும் தேசிய அரசாங்கங்களையும் பாதுகாக்கும் மற்றும் அவற்றின் சமூக செலவின திட்டங்களை ஆதரிக்கும் அரசியலமைப்பு கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் அனைத்துடனும் தொழிலாளர்கள் முறித்துக் கொள்ள வேண்டும்.

நிதியியல் மூலதனத்தின் கட்டளைகளுக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மிகமிக அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் கூட பாதுகாக்க முடியும். நிதியியல் பிரபுத்துவத்தின் இலாப நலன்களுக்காக அல்லாமல் சமூகத்தின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக பொருளாதார வாழ்க்கையை தீவிரமாக மறுஒழுங்கமைக்க முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர் அரசாங்கங்களால் பிரதியீடு செய்யப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றியமானது ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளால் பிரதியீடு செய்யப்பட வேண்டும்.