World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The collapse of American democracy

அமெரிக்க ஜனநாயகத்தின் பொறிவு

Barry Grey
12 March 2012
Back to screen version

அமெரிக்க குடிமக்களை கொலைசெய்வதற்கு இரகசியமாக உத்திரவிடுவதற்கான ஜனாதிபதியின் உரிமையை வலியுறுத்தி, ஒரு வாரத்திற்கு முன்னர், அமெரிக்க தலைமை நீதிபதி எரிக் ஹோல்டர் ஓர் உரை நிகழ்த்தி இருந்தார். “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்றழைக்கப்படுவதை மேற்கோளிட்டு காட்டி, முன்னொருபோதும் உறுதியாகக்கூறப்படாத இந்த அதிகாரமானது ஜனாதிபதியின் யுத்தம்-தொடுப்பதற்கான அதிகாரங்களின் கீழ் சட்டரீதியானது, அது நீதித்துறை மீள்பார்வைக்கு உட்பட்ட ஒன்றல்ல என்றும் கூறியிருந்தார்.

சட்டத்திற்கு புறம்பானமுறையில் படுகொலை செய்வதற்கு உத்தரவிடும் ஜனாதிபதியின் அதிகாரமானது, சந்தேகத்திற்கிடமான பயங்கரவாதிகளை இல்லாதொழித்தல் மற்றும் அவர்களை காலவரையின்றி எந்தவித விசாரணையும் இன்றி பொதுச்சிறையிலோ அல்லது இராணுவ சிறையிலோ அடைத்து வைப்பது உட்பட பல அதிகாரங்களின் பாகமாக இருப்பதாக ஹோல்டர் வலியுறுத்தினார். பயங்கரவாதிகள் "நம்முடைய சொந்த எல்லைகளுக்கு உள்ளேயே தங்கியிருக்கிறார்கள் என்று கூறப்படுவதைக் குறித்து அவர் கூறுகையில், “கொலைசெயவதற்கான அதிகாரத்தை பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அதிகாரம் "ஆப்கானிஸ்தான் யுத்தகளங்களோடு மட்டுப்படுத்தப்பட்டு  வைக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டார்.

பொலிஸ்-ஆட்சி அதிகாரங்கள் மீதான இந்த கருத்திற்கு ஒரு அரசியலமைப்பு பொருள்விளக்கத்தை வழங்கும் ஒரு முயற்சியில் ஹோல்டர், “ஒழுங்கான வழக்கு வழிமுறையும், நீதிமன்ற வழக்கு வழிமுறையும் ஒன்றல்ல, ஒரேமாதிரியானதும் அல்ல... அரசியலமைப்பு ஒழுங்கான வழக்குவழிமுறைக்கு உத்தரவாதம் அளிக்குமே ஒழிய, நீதிமன்ற வழக்குவழிமுறைக்கு அல்ல,” என்று அதிர்ச்சியூட்டும் கருத்தை வெளியிட்டார்.

கடந்த இலையுதிர் காலத்தில் யேமனில் மூன்று அமெரிக்க குடிமக்கள் இலக்கு வைக்கப்பட்டு கொல்லப்பட்டமைக்கு ஒரு சட்டபூர்வ விளக்கத்தை அளிக்க நிர்வாகத்திற்கு அழுத்தமளிப்பதற்கான விடையிறுப்பாக அந்த உரை இருந்தது. அல்கொய்தா தலைவர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட அன்வர் அல்-அலாவ்கி, மற்றொரு அமெரிக்க குடிமகனான சமீர் கானோடு சேர்த்து ஓர் ஆளில்லா விமான தாக்குதலில் (டிரோன் தாக்குதல்) கொல்லப்பட்டார். அதற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவ்லாகியின் 16 வயது மகன் அப்துல்ரஹ்மான் அலாவ்கியும் வேறொரு டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அமெரிக்க அரசாங்கம் அதன் சொந்த குடிமக்களையே விசாரணை  எதுவுமின்றி கொல்லும் உரிமையைக் குற்றஞ்சாட்டும் இதுபோன்றவொரு துணிச்சலான மற்றும் அசாதாரணமான உரையானது அரசியல் விவாதத்தின் மையப்புள்ளியாகவும், சூடான விவாதங்களின் தலைப்பாகவும் மாறக்கூடும் என்று ஒருவர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் ஊடகங்களும் அரசியல் ஆளும்தட்டினரும் அதை உண்மையாகவே புறக்கணித்தன. மூன்று செய்தி வலையமைப்புகளில் ஒன்றின் நிகழ்ச்சிகளில் கூட அது குறிப்பிடப்படவில்லை. அந்த உரையைக் குறிப்பிட்டு வந்த பிரதான செய்தியிதழ்களின் கட்டுரைகளில் அது உட்பக்கங்களில் தள்ளப்பட்டிருந்தன.   

கடந்த செவ்வாயன்று, அதாவது ஹோல்டர் உரை நிகழ்த்திய அடுத்த நாள், ஒபாமா இந்த ஆண்டின் முதல் வெள்ளை மாளிகை பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அந்த உரை குறித்தோ அல்லது ஜனாதிபதியின் உத்தரவின்பேரில் படுகொலை செய்யப்படுவதன் மீது எழுந்திருக்கும் பிரச்சினையின் மீதோ ஒரேயொரு செய்தியாளர் கூட ஒபாமாவிடம் கேள்வி எழுப்பவில்லை

அமெரிக்க ஜனநாயகத்தின் சீரழிவு எந்தளவிற்கு நடந்தேறியுள்ளதென்பதற்கு இதுவொரு அளவுகோலாகும். சுமார் நான்கு தசாப்தங்களுக்கு முன்னர், தண்டனைக்குரிய வரிக்கணக்குகள் மற்றும் சட்டவிரோத ஒட்டுகேட்புகளுக்கு உத்தரவிட்டமையால் ரிச்சார்ட் நிக்சன் "அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார்" என்றும் "குடிமக்களின் அரசியலமைப்பு உரிமைகளை மீறினார்" என்றும் அவரை பதவிவிலக்குவதற்கு சபையின் நீதித்துறை குழு (House Judiciary Committee) வாக்கெடுப்பு நடத்தியது. இன்று சர்வாதிகார அதிகாரங்களின் உரிமைமீறல் குடிமக்களை சட்டவிசாரணையின்றி படுகொலை செய்வதற்கு உத்திரவிடும் புள்ளியை எட்டியிருக்கும் போது, அதை அரசியல்ரீதியாக குற்றம்சாட்டுவதற்கு எந்தவொரு அழைப்புகளும் இல்லை என்பது மட்டுமல்ல, அந்த பிரச்சினை விவாதத்திற்குரிய ஒரு விஷயமாகவும் கூட இல்லை.  

தலைமை நீதிபதியின் உரையின் மீது கருத்துக்களை எழுத நியூ யோர்க் டைம்ஸிற்கு ஆறு நாட்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஒருபுறம் ஹோல்டரின் அடிப்படை வாதத்தை ஆதரித்து கொண்டும் மறுபுறம் அதன் பரந்த மற்றும் அச்சுறுத்துகிற அரசியலமைப்பு தாக்கங்களின் மீதான எவ்வித கவனிப்பையும் தவிர்த்துவிட்டு, சிறியளவில் மற்றும் நடைமுறை குணாம்சத்தின் மீது கண்டனத்தைக் காட்டும் ஒரு அறிக்கையை அது ஞாயிறன்று தலையங்கத்தில் பிரசுரித்தது.     

டைம்ஸ் எழுதியது: “மரபொழுங்கான யுத்தத்தின் போது  மரபொழுங்கான எதிரிகளுக்கு எதிராக அல்லது மரபொழுங்கற்ற யுத்தங்களில் மரபொழுங்கற்ற எதிரிகளுக்கு எதிராக கொலைசெய்யும் அதிகாரத்திற்கு உத்திரவிடும் அதிகாரம் ஒரு ஜனாதிபதிக்கு உண்டு.” [அழுத்தம் சேர்க்கப்பட்டது] இது "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு முரணாக செயல்படுபவர்களைப் படுகொலை செய்வதற்கான போலிக்காரணத்தின் கீழ் அமெரிக்க அரசாங்கத்தால் வலியுறுத்தப்பட்ட உரிமையையும் ஏற்றுக்கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு பூசிமெழுகுதல் ஆகும்.    

நீதிமன்ற தலையீடு இல்லாமல், முழுமையாக தான்தோன்றிதனமாக அல்லது பொதுமக்கள் கவனத்திற்குக் கூட கொண்டு வராமல் அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்ய சட்டபூர்வமான அதிகாரத்தைக் கோரும் முதல் ஜனாதிபதியாக ஜனாதிபதி ஒபாமா ஆகியுள்ளதை அந்த நாளிதழ் ஒப்புக்கொள்கிறது. பொலிஸ், வழக்கு தொடுப்பவர், நடுநிலை பார்வையாளர், நீதிபதி மற்றும் தண்டனைக்குள்ளாகுபவர் ஆகியோர் ஒழுங்கான வழக்கு வழிமுறைக்கு எதிராக இருப்பதால் இந்த உயர்மட்ட நடவடிக்கை இரகசியமாக வைக்கப்படுகிறது,” என்று எழுதியதன் மூலம், ஒழுங்கான வழக்கு வழிமுறைக்கும் நீதித்துறை வழிமுறைக்கும் இடையில் ஹோல்டர் சுட்டிக்காட்டிய வேறுபாட்டோடு அது விடயத்தை இணைத்துச்செல்கிறது.”

ஆனால், டைம்ஸின் கருத்துப்படி, இந்த பிரச்சினை தீர்க்கப்படக்கூடியது என்றும் மற்றும் வெளிநாட்டு உளவுத்துறை கண்காணிப்பு நீதிமன்ற (FISA) நடவடிக்கைகளுக்கு ஒத்த வகையில் ஒரு புதிய இரகசிய நீதிமன்றம் அமைப்பதன் மூலம் ஒழுங்கான வழக்கு வழிமுறையை மீட்டெடுக்கலாம் என்கிறது. வெளிநாட்டு உளவுத்துறை கண்காணிப்பு நீதிமன்றமானது (FISA) அரசு படுகொலைக்கு ஒரு சட்டபூர்வ மறைப்பை அளிக்க அமெரிக்க குடிமக்கள் மீது அரசியலமைப்பு சட்டத்திற்குமாறான வேவுபார்ப்புகளுக்கு வழமையான ஒப்புதலளித்துவருகின்றது. டைம்ஸின் குள்ளத்தனமும் அரசியலைமைப்பு உரிமைகள் மீதான அவதூறும் அது வெளிநாட்டு உளவுத்துறை கண்காணிப்பு நீதிமன்றம் விரைவாக செயற்படுவதுடன் ஒரு கைதுசெய்யும் ஆணைக்கான கோரிக்கையை  அரிதாகவே நிராகரிக்கின்றது எனக்கூறி இந்த புதிய உயர் மன்றம் ஒரு பயங்கரவாதி மீதான தாக்குதலை மெதுவாக்காது என விவாதிப்பதன் மூலம் முற்றாக வெளிப்படையாகின்றது.

ஒபாமாவின் கொள்கைகள் அரசியலமைப்பிற்குப் புறம்பானதும், அது அவருடைய பதவி பிரமாண மீறல் என்பதையும் டைம்ஸ் இதழ் எங்கேயும் ஒரு தெளிவான அறிக்கை அளிக்கவில்லை. பதவிப் பிரமாணமானது ஜனாதிபதி அரசியலமைப்பை பேணிக்காப்பதை, பாதுகாப்பதை மற்றும் காப்பாற்றுவதை உறுதி செய்கிறது. ஐந்தாவது சட்ட திருத்தமானது வழக்கின்றி தூக்கிலிடுதல், சித்திரவதை மற்றும் சட்டத்திற்கு புறம்பாக படுகொலை செய்தல் போன்ற விஷயங்களை சட்டப்பாதுகாப்பிலிருந்து விலக்குவதில் தயவுதாட்சண்யமின்றி உள்ளது. “எந்தவொரு நபருடைய வாழ்க்கையோ, சுதந்திரமோ அல்லது சொத்தோ... சட்டத்தின் ஒழுங்கான வழிமுறையின்றி பறிக்கப்படாது" என்பது அதனுடைய உரிமைக் கட்டளையில் மிகத்தெளிவாக உள்ளது.

யேமனில் மூன்று அமெரிக்க குடிமக்களைப் படுகொலை செய்வதற்கான சட்டப்பூர்வ அடித்தளத்தை அமைத்ததாக கருதப்பட்ட நீதித்துறையின் செயற்குறிப்பைப் பிரசுரிக்க நிர்வாகத்தை வலியுறுத்தி அந்த தலையங்கம் முடிக்கிறது. “பொதுமக்களிடமிருந்து இதுபோன்ற முக்கியமான தகவல்களை மறைத்துவைப்பதில் திரு. புஷ்ஷால் அமைக்கப்பட்ட கொடூரமான முன்னுதாரணத்தை ஏன் திரு. ஒபாமாவும் பின்பற்றுகிறார் என்று நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை,” என்று அந்த இதழ் போலித்தனமாக எழுதுகிறது.  

இது இதுபோன்ற பிரதானமான பிரச்சினைகளை மேலோட்டமான தனிமனித பண்புகளின் மட்டத்தின் மீது அரசிலமைப்பைக் கந்தலாக்கும் விதத்தில் கையாளும் அணுகுமுறையாகும். உண்மையில் இதுபோன்ற அபிவிருத்திகள் ஆழ்ந்து நடந்துவரும் வரலாற்றுரீதியிலான மற்றும் சமூக நிகழ்முறையின் விளைவாக மட்டுமே இருக்க முடியும். அரசியலமைப்புரீதியான சரிபார்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவது மற்றும் ஜனநாயக உரிமைகளின் ஒட்டுமொத்த மாளிகையும் கடந்த தசாப்தத்தில் எவ்விதத்தில் பொறிந்துள்ளதோ அந்த திகைப்பூட்டும் வேகமானது, இந்த நிகழ்முறை அமெரிக்க சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள முரண்பாடுகளில் வேரூன்றி உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.         

ஐக்கிய அமெரிக்கா பணக்காரர் ஆட்சியால் (plutocracy) நடத்தப்படுகிறது. இந்த பணக்காரர்கள் ஆட்சி உயிர்வாழ்க்கை மக்களின் மிக அத்தியாவசிய தேவைகளுடன் பாரியளவில் மோதிக்கொண்டு நிற்கின்றது. அதன் நலன்களுக்காக சமூக எதிர்புரட்சியை அது நடத்தி வருவதோடு சேர்ந்து, அதுவொரு சட்டரீதியான எதிர்புரட்சியாகவும் உள்ளது.

ஏகாதிபத்தியம் "எல்லாவிதத்திலும் பிற்போக்குத்தனமானதாகும்" என்ற லெனின் அடைமொழி, இராணுவவாதம் மற்றும் யுத்தத்தின் பரவல், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல், மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கும் ஆட்சியின் சர்வாதிகார வடிவங்களுக்கும் திரும்புதல் ஆகியவற்றால் ஒவ்வொரு நாளும் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பரந்தளவில் அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே இன்று ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கமுடியும்