World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Greek crisis is only the beginning

கிரேக்க நெருக்கடி ஒரு தொடக்கம் மட்டுமே

Nick Beams
19 March 2012
Back to screen version

ஊடக செய்திகள் அதை கிரேக்க பிணையெடுப்பாக குறிப்பிட்டன. இது முற்றிலும் தவறான ஒரு சொல் வழக்காகும். கடந்த வாரம் ஐரோப்பிய மண்டல நிதியியல் மந்திரிமார்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட 130 பில்லியன் யூரோ பொதி கிரீஸிற்கான ஒரு பிணையெடுப்பல்ல, மாறாக அது கிரீஸின் பத்திரங்களில் பணத்தை குவித்துள்ள வங்கிகள் மற்றும் நிதியியல் அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட ஒரு பிணையெடுப்பாகும்.  

புருசெல்ஸிஸால் அளிக்கப்பட்ட ஒவ்வொரு யூரோவிலிருந்தும் வெறும் 19 சென்டுகள் மட்டுமே கிரேக்க அரசிற்கு போகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மீத தொகை நேரடியாக வங்கிகள் மற்றும் நிதியியல் முதலீட்டாளர்களின் பணப்பெட்டிகளுக்குள் பாயும். இதை திருப்பி செலுத்தும் சுமைகள் கிரேக்க மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. கடுமையான வேலை வெட்டுக்களும் சமூக சேவைகளின் அழிப்புகளும் அந்நாட்டை மீண்டும் பெருமந்த கால நிலைமைகளுக்கு இட்டுச்செல்கின்றன. ஏற்கனவே ஏறத்தாழ மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.    

நிதி மந்திரிமார்களின் யூரோ மண்டல குழுவின் தலைவர் ஜீன் கிளவ்ட ஜங்கர் கடந்த வாரம் முடிவை அறிவிக்கையில், "வரவுசெலவுத்திட்டத்தை ஸ்திரப்படுத்தல், கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் தனியார்மயமாக்கலுக்கு" ஏதென்ஸ் ஒரு "பலமான பொறுப்புணர்வை" எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதென வலியுறுத்தினார். இச்சொற்கள் சர்வதேச நிதியியல் மூலதன ஓநாய் கூட்டத்தால் கிரீஸ் கொள்ளையடிக்கப்படுவதற்கான குறிச்சொற்களாக உள்ளன

ஜங்கர் தொடர்ந்து கூறியது: “தொடர்ச்சியான சீர்திருத்தம் கிரேக்க பொருளாதாரத்தை மீண்டும் ஒரு ஸ்திரமான பாதைக்கு திருப்பி கொண்டு வர அனுமதிக்கும்,” என்றார். ஆத்திரமூட்டும் விதத்தில் இதுவொரு பொய்யாகும். கடந்த ஆண்டில் இருந்த 7 சதவீதத்திற்கும் அதிகமான பொருளாதார சுருக்கத்தோடு கிரீஸ் ஒரு பின்னடைவின் ஐந்தாம் ஆண்டில் உள்ளது. தற்போது 20 சதவீதத்தில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை இன்னும் அதிகமாக உயர்வதோடு சேர்ந்து மந்தநிலைமைக்குள் வீழ்வதென்பது இன்னும் தீவிரப்படுத்தப்படும். கிரீஸ் ஒரு நச்சு வளையத்துள் மாட்டிக் கொண்டுள்ளது. சிக்கன முறைமைகளின் நடைமுறையானது மேலும் கூடுதலாக கடன் சுமையை அதிகரித்து பொருளாதாரத்தை ஒரு சுருக்கத்தினுள் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் முதன்முதலில் அபிவிருத்தி செய்யப்பட்ட அணுகுமுறைகளை நினைவூட்டும் விதத்தில், கிரீஸ் தோற்றப்பாட்டளவில் சர்வதேச நிதியியல் மூலதனத்தின் ஒரு அரை-காலனித்துவ நாடாக மாற்றப்பட்டுள்ளது. அரசின் கொள்கைகளை வரிக்குவரியாக தணிக்கைசெய்ய "முக்கூட்டு" (troika) என்றழைக்கப்படுவதைச் சேர்ந்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் குறைந்தபட்சம் நான்கு அதிகாரிகளும் அவர்களோடு சேர்ந்து சர்தேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் (ECB) பிரதிநிதிகளும் நிரந்தரமாக ஏதென்ஸில் இருத்தப்பட இருக்கிறார்கள்.  

பிணையெடுப்பு பொதி கிரேக்கத்தின் கடன் சுமையைக் குறைக்கும் என்று திரும்பதிரும்ப கூறப்படும் கருத்துக்கள் தவறானவையாகும். 2010இன் தொடக்கத்தில் இந்த நெருக்கடி தொடங்கிய போது, அந்நாட்டின் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் சுமார் 120 சதவீதமாக இருந்தது. அது இதுவரையில் 170 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதை பழைய நிலைக்கு 120 சதவீதமாக வெட்டுவதே இப்போது கூறப்படும் நோக்கமாக உள்ளது.

பரந்த நிதியியல் பொறிவின் அச்சுறுத்தல் தடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படும் கருத்துக்களும் கூட ஒரு பொய்யாகும். கடந்த டிசம்பரில் ஐரோப்பிய நிதியியல் சந்தைகள் சில நாட்களுக்குள்ளாக உறைந்துவிடும் நிலையில் இருந்தன. செப்டம்பர் 2008இல் லெஹ்மென் பிரதர்ஸின் பொறிவைத் தொடர்ந்து ஏற்பட்ட அதேயளவிற்கு ஓர் உருகுதல் இருக்குமென்று அஞ்சி, ஐரோப்பிய மத்திய வங்கி  அதன் நீண்டகால மீள்-நிதியாக்கல் (refinancing) செயல்முறை திட்டத்தின் கீழ் (LTRO) 1 சதவீத வட்டிவிகிதத்தில் ஏறத்தாழ 500 பில்லியன் யூரோவைப் புழக்கத்தில் வைக்க தலையீடு செய்தது. மொத்தமாக 1 ட்ரில்லியன் யூரோ வங்கிகளுக்கு கிடைக்கும் விதத்தில் ஒரு கூடுதல் உதவியும் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

ஆச்சரியத்திற்கு இடமின்றி அது அளித்த இலாபம் ஈட்டுவதற்கான சந்தர்ப்பங்களினால், இந்த திட்டத்தின் உடனடி தாக்கம் நிதியியல் சந்தைகளை ஊக்குவிப்பதாக இருந்துள்ளது. வங்கிகள் 1 சதவீத வட்டியில் பெற்ற நிதிகளை அவற்றைவிட பல மடங்கு இலாபமளிக்கும் பத்திரங்கள் மற்றும் ஏனைய நிதியியல் உடைமைகளில் முதலீடு செய்ய பயன்படுத்தி உள்ளன. இவை அவற்றின் உயர் நிர்வாக அதிகாரிகள் மற்றும் நிதியியல் வர்த்தகர்களின் "நிதியியல் மதிநுட்பத்திற்கு" வெகுமதியாக பெருத்த கொடுப்பனவுகளை அவர்களுக்கு வழங்க உதவியுள்ளது.  

ஒரு பொறிவின் உடனடி அச்சுறுத்தலை தள்ளிவைத்து விட்டு, ஸ்திரமின்மைக்கு ஒரு புதிய ஆதாரத்தை உருவாக்கி LTRO திட்டமானது ஐரோப்பிய மத்திய வங்கியை கடன் நெருக்கடிக்குள் இழுத்து வந்துள்ளது. வங்கிகள் மற்றொரு அதிர்ச்சி அலையால் பிடிக்கப்பட்டால் அல்லது பிடிக்கப்பட்டு பத்திரங்களை விற்க தொடங்கும் போது, ஐரோப்பிய மத்திய வங்கி மீண்டும் தலையீடு செய்ய நிர்பந்திக்கப்படும்.    

London School of Economicsஇன் பேராசிரியர் Paul De Grauwe பைனான்சியல் டைம்ஸின் கருத்துரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: “LTRO திட்டம் ஐரோப்பிய மண்டலத்தின் தேசிய அரசுகளின் கடன் சந்தைகளில் இருந்த அழுத்தத்தை தளர்த்தியுள்ளது. ஆனால் இது தற்காலிகமானதே. விளிம்பிலுள்ள நாடுகளின் நிதி பிரச்சினைகளை அதிகரிக்கும் ஓர் ஆழ்ந்த பின்னடைவிற்குள் அந்நாடுகள் இப்போது தள்ளப்படும்; அது நிதியியல் சந்தைகளில் புத்தம்புதிய அவநம்பிக்கையை உருவாக்கும்.” அதன் விளைவாக " தேசிய அரசுகளின் கடன் நெருக்கடி மீண்டும் வெடிக்கும்,” என்றவர் எச்சரித்தார்.   

ஐரோப்பிய கட்டுரையாளர் வொல்வ்காங் முன்ஷொவ் இன்றைய பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், ஐரோப்பிய மண்டல நெருக்கடி தீர்வதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என்று எச்சரித்தார். “ஐரோப்பிய மத்திய வங்கியின் கொள்கைகள் 'போதுமான நேரத்தை கொண்டு வந்துள்ளது' என்று நீங்கள் கருதினால், அந்த போதுமான காலம் எதற்கானது? என்று உங்களை நீங்களே கேட்டு கொள்ள வேண்டும். கிரேக்கத்தின் கடன் நிலைமை எப்போதும் போல நிலையில்லாமல் உள்ளது; போர்துக்கல்லினுடையதும் அவ்வாறே உள்ளது; ஐரோப்பிய வங்கியியல் துறையினுடையதும் மற்றும் ஸ்பெயினுடையதும் அவ்வாறே உள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கி இந்த தசாப்தத்தின் மீதிக்காலத்திற்கும் வரம்பில்லாமல் மலிவு நிதியை வழங்கினாலும் கூட, அது போதுமானதாக இருக்காது.” 

விளிம்பிலுள்ள நாடுகள் என்றழைக்கப்படுபவைகளுக்குப் பின்னால் இன்னும் இதர சாத்தியமான அமைதியற்ற புள்ளிகளும் உள்ளன. ஒரு பாரிய வங்கித்துறையை கொண்டுள்ள பெல்ஜியம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 விகிதத்தை அண்மிக்கும் ஒரு முக்கிய கடன் சுமையுடன் உள்ளது. அது குறிப்பிடத்தக்க அளவிற்கு கடன் சுமையைக் கொண்டுள்ளது. தொடர்ந்து ஒரு பற்றாக்குறை கணக்கில் ஓடிக்கொண்டிருக்கும் பிரான்ஸ், விளிம்பிலுள்ள பொருளாதாரங்களோடு கணிசமான பரிவர்த்தனைகளைக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வங்கியியல் துறையையும் கொண்டிருக்கிறது.    

ஐரோப்பாவிற்கு வெளியில் ஜப்பானிய பொருளாதாரத்தின் மந்தநிலைமையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் மேலாக உள்ள அதன் நீடித்த நிதிப்பற்றாக்குறையும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் அது சர்வதேச சந்தைகளில் இருந்து கடன் வாங்க நிர்பந்திக்கப்பட கூடும் என்ற கவலைகளை எழுப்பி வருகின்றன.

தம்முடைய மறுதேர்தல் பிரச்சாரத்திற்கு இடையில் பிரெஞ்ச் ஜனாதிபதி நிகோலாஸ் சர்கோசி ஐரோப்பிய நிதியியல் நெருக்கடி முடிவுக்கு வரவிருப்பதாக அறிவித்தார். ஆனால் உண்மையில் அது இப்போது தான் தொடங்கி உள்ளது. கிரேக்க நெருக்கடியைக் குணாம்சப்படுத்தி உள்ள நிதியியல் கொந்தளிப்பிற்கும் மற்றும் வீழ்ச்சி அடைந்துவரும் பொருளாதாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு, பிரதான முதலாளித்துவ பொருளாதாரங்களில் வளர்ச்சி விகித வீழ்ச்சி அல்லது மந்தநிலைமை ஏற்படுகையில், ஒரு உலகளாவிய இயல்நிகழ்வாக ஆகுமோ என்று அச்சுறுத்துகின்றது. ஐரோப்பிய கண்டம், பிரிட்டன் மற்றும் ஜப்பான் பின்னடைவில் அல்லது அதற்கு நெருக்கத்தில் உள்ளன; அமெரிக்க பொருளாதாரம் மந்தநிலைமை அடைந்துள்ளது. அதேவேளையில் சீனா அதன் முன்மதிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தை கணிசமான அளவிற்கு கீழிறக்கி உள்ளது.

அதேநேரத்தில் அனைத்து பிரதான நாடுகளின் கடன் அளவுகளும் 2008-2009இல் இருந்து உயர்ந்துள்ளது. சர்வதேச நிதியியல் மூலதனம் ஐரோப்பாவில் மட்டுமின்றி மாறாக மிக பரந்தளவில் அரசு கடன்களின் மீது குறிப்பிடத்தக்க வட்டிவிகித உயர்வுகளைக் கோருவது வெகுவிரைவிலேயே நிகழும். கிரேக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான தாக்குதலானது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான ஒரு சர்வதேச தாக்குதலின் கூர்மையான வெளிப்பாடு மட்டுமே ஆகும்.

அனைத்து மக்கள் ஊடக அறிக்கைகளும் உலகளாவிய நிதியியல் அமைப்புமுறையின் செயல்பாடுகளையும் மற்றும் கடன் நெருக்கடியையும் திகைப்பூண்டாக்கும் மற்றும் விளங்காத மொழியினால் மூடிமறைக்கின்றன.  ஆனால் அடிப்படை வர்க்க உள்ளடக்கம் தெளிவாக உள்ளது: அதாவது, அரசு கடன் நெருக்கடி மற்றும் அதன் விளைவாக சமூக செலவின வெட்டுக்கள் என்பது ஒரு உலகளாவிய சமூக எதிர்-புரட்சியின் மைய இயங்குமுறைகளில் ஒன்றாக (central mechanism) உள்ளது.   

இந்த உலகளாவிய வர்க்க யுத்தத்தை தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு சர்வதேச விடையிறுப்பின் மூலமாக----அதாவது மனிதயினத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சோசலிச வேலைதிட்டத்தின் அடிப்படையில் உலக பொருளாதாரத்தை மீள்-கட்டமைப்பு செய்ய தொடங்க ஒட்டுமொத்த இலாபகர அமைப்புமுறையை மற்றும் சர்வதேச நிதியியல் பிரபுக்களைத் தூக்கியெறிவதற்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலமாக----மட்டுமே எதிர்கொண்டு தோற்கடிக்க முடியும்.