World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

IMF releases loan after Sri Lankan government imposes austerity measures

இலங்கை அரசாங்கம் சிக்கன நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்திய பின்னர் சர்வதேச நாணய நிதியம் கடனை விடுவித்தது

By Saman Gunadasa
7 April 2012

Back to screen version

நாட்டின் நிகர் நிதி நிலை நெருக்கடியை தவிர்ப்பதற்காக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் செலுத்தவிருந்த 2.6 பில்லியன் டொலர் கடனின் பாகமாக, அது இலங்கைக்கு 426 மில்லியன் அமெரிக்க டொலர் தவணை கடனை விடுவித்தது. ஒட்டுமொத்த நிதியளிப்பும் 2009 ஜூலையில் அங்கீகரிக்கப்பட்ட போதும், இறுதி இரண்டு கடன் தவணைகள், இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றத் தவறிவிட்டது என்ற அடிப்படையில், செப்டம்பர் மாதம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சர்வதேச நாணய நிதியத்தின் செய்தி அறிக்கை ஒன்று, "தற்போதைய கணக்கு பற்றாக்குறையை குறைக்கவும், இழந்த இறுப்பை மீண்டும் பெறவும் மற்றும் நிதி செயல்திறனை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க ஒரு பரந்த பொதியை கொழும்பு முன்வைத்துள்ளதன் காரணமாக, நிதியம் இந்த கடன் தவணையை விநியோகிக்க முடிவு செய்ததாக தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியமானது, உயர் வட்டி விகிதம், கடன் வளர்ச்சியில் 18 சதவீத எல்லை, மின்சாரம் மற்றும் பெற்றோலிய விலை அதிகரிப்பு மற்றும் ரூபாயின் மதிப்பிறக்கத்தையும் கோரியுள்ளதோடு இந்த ஆண்டு வரவு செலவு திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.2 சதவீதமாகக் குறைக்க அரசாங்கத்தின் வாக்குறுதியையும் கோரியுள்ளது.

மேலும் சமூக ரீதியில் பின்னடைவு நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதையும் நிதியத்தின் ஊடக அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. அது "கட்டமைப்பு சீர்திருத்தத்தை" முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனங்களை மிகவும் தாங்கிப் பிடிக்கக் கூடிய பாதையில் வைக்குமாறும் அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இன்னும் வேலை வெட்டுக்களையும் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்புகளையும் மேற்கொள்ள வேண்டிவரும்.

சர்வதேச நாணய நிதிய அறிவிப்பு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்னதாக, அரசாங்கம் மதுபானம், சிகரெட் மற்றும் இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் வரியை அதிகரித்தது. மோட்டார் சைக்கிள்களுக்கு 61-100 வீதம் வரையிலும், சிறிய கார்களுக்கு 200 முதல் 270 சதவீதமும் மற்றும் பெரிய வாகனங்களுக்கு 291 முதல் 350 சதவீதம் வரையும்  வரி அதிகரிக்கப்பட்டுள்ளன. 2010ல், வாகன இறக்குமதியாளர்களின் கனமான வேண்டுகோள்களின் பின்னர், அரசாங்கம் 50 சதவிகிதம் கார் இறக்குமதி வரியை குறைத்திருந்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு வந்த அன்றே, நிதி அமைச்சராகவும் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, அவசரமாக கூட்டப்பட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகளின் கூட்டத்தில், செலவு மேலும் குறைக்கப்படுவது அவசியம் என கூறினார். விவரங்கள் வெளியிடப்பட்டாவிட்டாலும் முக்கிய சமூக சேவைகள் இலக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கைகளின் படி, கொழும்பு இப்போது எரிவாயுவின் விலையை 10 சதவீதம் உயர்த்துவது பற்றி பரிசீலித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுக்கு மாறாக, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் இலங்கையின் எந்தவொரு பொருளாதார பிரச்சினையையும் தீர்க்கவில்லை. பதிலாக நெருக்கடியை ஆழமாக்கியுள்ளது. வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதுடன், ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சிகண்டு வருகின்றது. ஜனவரி மாதம் வர்த்தக பற்றாக்குறை 1 பில்லியன் டொலரை எட்டியது. இது, கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 50 சதவிகித அதிகரிப்பாகும். பிப்ரவரி ஆரம்பம் முதல், ரூபாய் 15 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாணய மாற்று விகிதம் இப்போது டாலருக்கு சுமார் 130 ரூபா வரை நெருங்கியுள்ளது.

மார்ச் 29 அன்று, இலங்கை மத்திய வங்கி, "மே மாதத்தில் இருந்து எண்ணெய் இறக்குமதி செலவுகளுக்கு டொலர்களை அளிப்பது நிறுத்தப்படலாம்" என்று அறிவித்துள்ளது. இந்த நகர்வு ரூபாய் மீது மேலும் அழுத்தத்தை திணிப்பதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு கோரிக்கைகளுக்கு ஏற்ப, ஏற்கனவே கடனில் மூழ்கிப் போயுள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எந்தவித அரசாங்க உதவியும் இன்றி செயல்படத் தள்ளப்படும். இதன் விளைவாக, மற்றொரு சுற்று எரிபொருள் விலை உயர்வும் வேலை அழிப்பு ஏற்படும்.

திறைசேரி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர, பெப்ரவரியில் விதிக்கப்பட்ட எரிபொருள் விலை அதிகரிப்பு, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இழப்புகளை 200 பில்லியன் ரூபாய்களில் இருந்து 60 பில்லியன் ரூபாய்கள் வரை குறைத்துள்ளது என்று சமீபத்தில் பெருமைபட்டுக்கொண்டார். இதன் தாக்கம் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் மீதே மிக கடுமையாக ஏற்பட்டுள்ளது. குறைந்தது 400,000 இலங்கை குடும்பங்கள் வெளிச்சத்துக்காக மண்ணெண்ணையை பயன்படுத்துகின்றன. பல ஆயிரக்கணக்கான மீனவர்கள் அவர்களின் படகுகளை இயக்குவதற்காக மண்ணெண்ணெய் மற்றும் டீசலைப் பயன்படுத்துகின்றனர்.

எரிபொருள் விலை உயர்வானது போக்குவரத்துக் கட்டணத்தையும் பாண் மற்றும் ஏனைய பேக்கரி உற்பத்திகள் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகள், மார்ச் மாதம் 10 முதல் 15 சதவிகிதம் உயர்ந்துள்ளன. அரசாங்க வரி அதிகரிப்பு தொடர்ந்தும் முன் சென்றால் இறக்குமதியை நிறுத்தவேண்டி வரும் என பால் மா இறக்குமதியாளர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

மத்திய வங்கி, கடந்த மாதம் அதன் 8 சதவீத வளர்ச்சி எதிர்பார்ப்பை திருத்தி, இந்த ஆண்டு 7.2 சதவிகிதமாக குறைத்துள்ளது. "நமது அனைத்து முக்கிய கொள்வனவாளர்கள், உலகளாவிய நிதி நெருக்கடி காரணமாக தங்களுடைய முன் ஊகிப்புகளை குறைத்துள்ள நிலையில், உயர் வளர்ச்சி திட்டம் என்பது பயனுடையதல்ல," என ஒரு முன்னணி பொருளாதார ஆய்வாளர் சமீபத்தில் இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்குக் கூறினார்.

சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பொருளாதார எழுத்தாளர் நிமால் சந்தரட்ன, அரசாங்க கொள்கைகள் வர்த்தக பற்றாக்குறையை குறைத்தாலும், அவை வர்த்தக இடைவெளியை இல்லாமல் செய்யப்போவதில்லை என மார்ச் 24 அன்று எழுதினார். அரசாங்கம் உயர்ந்த வரி மற்றும் சேவை கட்டணங்கள், மற்றும் மூலதன உட்புகுத்தலை அதிகரித்தல் மூலமாக அதனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ள முயற்சித்தாலும், உலக பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, விளைவு நிச்சயமற்றதாகவே இருக்கும், என அவர் சுட்டிக்காட்டினார்.

2010ம் ஆண்டில், இலங்கையின் 4.9 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறையின் 84 சதவீதத்தை, வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பிய பணம் ஈடு செய்தது. கடந்த ஆண்டு, வர்த்தக பற்றாக்குறை கிட்டத்தட்ட 9.7 பில்லியன் டொலர் வரை இரட்டிப்பானதுடன், வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தால் 53 சதவீத இடைவெளியை மட்டுமே நிரப்ப முடிந்தது.

60 சதவீத வெளிநாட்டுப் பணத்தை உருவாக்கும் மத்திய கிழக்கு, வெகுஜன அமைதியின்மைக்குள் மூழ்கிக்கொண்டிருக்கின்றது, வருமானத்தை குறைக்கக் கூடியவாறு பூகோள அரசியல் அழுத்தங்களை உக்கிரமாக்கிகொண்டிருக்கின்றது என சந்தரட்னே சுட்டிக்காட்டினார். அதே போல் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணமும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாத்துறை இலாபங்கள் அதிகரித்த போதிலும், இந்த வருவாயும் உலக பொருளாதார நிச்சயமின்மையினால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றது என்று சந்தரட்னே விளக்கினார்.

சர்வதேச குறிகாட்டிகள், 2010ல் உலகின் "சிறப்பாக செயற்படும் பங்கு சந்தை" என கொழும்பு பங்கு சந்தையை மதிப்பிடப்பட்டதாக இராஜபக்ஷ அரசாங்கம் முன்னர் கூறிக்கொண்டது. இருப்பினும், 2011 நடுப்பகுதியில் இருந்து, பங்கு பரிமாற்ற சுட்டெண் செங்குத்தாக வீழ்ச்சியடைந்து, இந்த ஆண்டு ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 5,000 புள்ளிகள் வரை இறங்கியது.

சர்வதேச நாணய நிதியத்தின் புதிய சுற்று கோரிக்கைகள், அப்படியே அடிமைத்தனமாக கொழும்பு அரசாங்கத்தால் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், அது தவிர்க்க முடியாமல் அரசாங்கத்துக்கு எதிரான ஒரு புதிய சுற்று போராட்டங்களை வெடிக்கச் செய்யும். இராஜபக்ஷ அரசாங்கம் ஏற்கனவே போலீஸ் அரச வழிமுறைகளையும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கும் எதிரான ஒரு கருத்தியல் பிரச்சாரத்தையும் பயன்படுத்த தயார் செய்து வருகின்றது. நாட்டுக்கு எதிராக "ஒரு மேற்கத்திய சதி" மேற்கொள்ளப்படுவதாக கூறும் அரசாங்கம், எந்தவொரு போராட்டத்தையும் தேசப்பற்றுக்கு எதிரானதாக முத்திரை குத்துகின்றது.