World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: brutal attack on Jaffna University student leader

இலங்கை: யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் தலைவர் மீது கொடூரத் தாக்குதல்

By Subash Somachandran and G.Krishna
26  May 2012

Back to screen version

மே 18 அன்று காலை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந் அடையாளம் தெரியாத குண்டர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கறுப்பு தலைக் கவசங்களை அணிந்து மோட்டார் சைக்கிள்களில் வந்த குண்டர்கள், பல்கலைக்கழகத்துக்கு முன்னால் உள்ள இராமநாதன் வீதியில் வைத்து இரும்புக் கம்பிகளால் தர்ஷானந்தைத் தாக்கினர்.

தர்ஷானந் உயிர் தப்புவதற்காக அருகில் உள்ள கடை ஒன்றுக்குள் ஓடினார். அவரை விரட்டிச் சென்ற குண்டர்கள் கடைக்குள்ளும் வைத்து அவரைத் தாக்கினர். பொதுமக்களும் மாணவர்களும் அங்கு கூடிய பின்னரே அவர்கள் விட்டோடினர். தர்ஷானந் யாழ்ப்பாண வைத்தியசாலையில் மாணவர்களால் அனுமதிக்கப்பட்டார். அவரது கை, நெஞ்சு மற்றும் முதுகிலும் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குடாநாட்டில் மாணவர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களில் இது புதிய சம்பவமாகும். இதே போன்று கடந்த அக்டோபரிலும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயற்பாட்டாளர்களான . கவிராஜன் மற்றும் சுப்ரமணியம் தவபாலசிங்கமும் தாக்கப்பட்டனர். ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2006ல் யுத்தத்தை புதுப்பித்த பின்னர் மாணவர்கள் அச்சுறுத்தல்களையும், கொலைகளையும், சரீர ரீதியான தாக்குதல்கள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகளையும் எதிர்கொள்கின்றனர்.

மூன்று ஆண்டுகளுக்கும் முன்னர் யுத்தம் முடிவடைந்த போதும், வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு தீவிரமாக்கப்ப்ட்டு, பத்தாயிரக்கணக்கான படையினர் அங்கு நிலைகொண்டுள்ளனர். பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பரமேஸ்வரா சந்தியில் ஒரு இராணுவ காவலரண் அமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், மாணவர்களின் அரசியல் செயற்பாடுகளையும் பாதுகாப்புப் படையினர் நெருக்கமாக அவதானித்து வருகின்றனர்.

தர்ஷானந் மீதான தாக்குதல் தற்செயலானதல்ல. அது யுத்தம் முடிவடைந்து மூன்றாவது ஆண்டு நிறைவின் போதே நடந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தின் வெற்றியைக் கொண்டாட திட்டமிட்டுக்கொண்டிருந்த அதேவேளை, மாணவர் ஒன்றியமானது 2009 மே மாதம் யுத்தத்தின் இறுதி நாட்களில் கொல்லப்பட்ட பத்தாயிரக்கணக்கான பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்தது. இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிராக சுமத்தப்படுகின்ற யுத்தக் குற்றங்களை அது முற்றாக மறுக்கின்ற நிலையில், அத்தகைய அஞ்சலி நிகழ்வுகளை அதனால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது தெளிவு.

பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து ஆயிரக்கணக்கான மாணவர்களும் வகுப்புகளை பகிஷ்கரித்து எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தாக்குதலுக்குப் பொறுப்பான குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோருகின்றனர்.

இந்த தாக்குதல் அரசாங்க பாதுகாப்புப் படையினரால் அல்லது அவர்களோடு சேர்ந்து இயக்கும் துணைப்படைக் குழுக்களால் நடத்தப்பட்டுள்ளது என மாணவர்கள் நம்புகின்றனர். தர்ஷானந் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும் போது, “நாம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்துகொண்டிருந்தோம். அப்போதுதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் இராணுவத்தால் அல்லது அவர்களைச் சார்ந்த குண்டர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என நான் நம்புகிறேன்,” என்றார்.

உயிரழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை எங்களுக்கு இல்லையா?” என கேட்ட இன்னொரு மாணவர் பிரதிநிதி, “நாங்கள் ஏதாவது வேலைத் திட்டத்தை கலந்துரையாடினால் உடனடியாக புலனாய்வு அதிகாரிகள் எங்களை தொலைபேசியில் அச்சுறுத்துகின்றனர்,” எனத் தெரிவித்தார்.

நாங்கள் இந்தப் போராட்டத்தில் தனிமைப்பட்டுள்ளோம். எங்களுக்கு ஆதரவு கிடைத்தால் நாம் உறுதியாக நிற்போம்,” என அவர் மேலும் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பும் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதும் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் உள்ள அமைதியின்மையை வெளிப்படுத்தி காட்டுகிறது. அரசாங்கத்தால் கல்விச் செலவு வெட்டப்படுவதும் மாணவர்கள் மத்தியிலான சீற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. இலவசக் கல்வியை வெட்டித் தள்ளுவதன் பாகமாக அரசாங்கம் தனியார் பல்கலைக்கழகங்களை அனுமதித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையிலேயே, வெற்றிக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இராஜபக்ஷ, “பிரச்சினைகள் தீரும் வரை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவம் திருப்பியழைக்கப்படமாட்டாது என பிரகடனம் செய்தார். இனவாத உணர்வுகளுக்கு தூபம் போட்ட அவர், அரசாங்கத்துக்கு எதிராக ஒரு சதி நடப்பதாகவும்ஆயுதத்தால் பிரபாகரன் பெற முயற்சித்து தோல்வி கண்டதை வெறு வழியில் பெற சில சக்திகள் முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

பல அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் வழமை போல் இந்த தாக்குதலை கண்டனம் செய்துள்ளன. இந்த தாக்குதலை கண்டனம் செய்யும் அதே வேளை, யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சங்கமும் விரிவுரையாளர்கள் சங்கமும், “மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் என மாணவர் ஒன்றியத்திடம் கேட்டுக்கொண்டுள்ளன. இந்த தலையீட்டின் மூலம், இந்த தொழிற்சங்கங்கள் மாணவர்களின் போராட்டங்களை அரசாங்கம் நசுக்குவதற்கு சாக்குப் போக்கை வழங்குகின்றன.

தொழிற்சங்கங்களுக்கு சமாந்தரமாக, பல்கலைக்கழக நிர்வாகமும், எதிர்ப்பு நடவடிக்கைகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படுகின்றது என குற்றஞ்சாட்டியுள்ளது. பல்கலைக்கழக நிர்வாகம் தம்மை பாதுகாக்கவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மாணவர்களின் சீற்றத்தை தணிக்க முயற்சித்த பல்கலைக்கழக உப வேந்தரும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஏனைய பிரதிநிதிகளும், யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹதுருசிங்கவிடம் மாணவர் பிரதிநிதிகளை அழைத்துச் சென்றனர்.

மாணவர்களின் படி, “இனிமேல் இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் தான் பார்த்துக்கொள்வதாக தளபதிஉறுதியளித்துள்ளார்”. இதற்கு முன்னரும் இத்தகைய போலி வாக்குறுதிகள் அவரால் கொடுக்கப்பட்ட போதும், மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஏனையவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன.

ஹதுறுசிங்கவின் கருத்துக்கு பிரதிபலித்த ஒரு மாணவன் தெரிவித்ததாவது: “நாங்கள் அவர்களது கருத்துக்களை நம்புவதில்லை. இதற்கு முன்னர் நடந்த தாக்குதல்கள் விசாரிக்கப்படாததோடு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை. குற்றவாளிகளைத் தெரியாது என அவரால் கூற முடியாது.”

முன்னைய தாக்குதல்களுக்கு எதிராக அமைக்கப்பட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் பற்றி கேட்ட போது, “அதில் பல அரசியல் ஆதரவாளர்கள் இருந்தனர், இப்போது அதைக் காணவில்லை என ஒரு மாணவர் கூறினார். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இந்து மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இருந்தன. இது இத்தகைய தாக்குதல்களுக்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவர நெருக்குதவற்காக மட்டுமே அமைக்கப்பட்டது

மே 22 அன்று, பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ் உள்ள யாழ்ப்பாணத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது எனக் கூறினார். “இந்த தாக்குதல் மீண்டும் முரண்பாடான விளைவுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதோடு, இது இராணுவப் புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கையா என்ற சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது, என அவர் கூறினார்.

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்குமாறு கோரும் அதே வேளை, சம்பந்தன் தமிழ் முதலாளித்துவத்துக்காக வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு அரசியல் இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இராஜபக்ஷ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வருகின்றார்.

இராணுவ மற்றும் துணைப்படைக் குண்டர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொள்ளும் பாதுகாப்பற்ற மாணவர்களைப் பாதுகாக்க முன்வருமாறு நாம் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

தமது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தமிழ் மற்றும் சிங்கள முதலாளித்துவ அமைப்புக்களில் மாணவர்கள் நம்பிக்கை வைக்கக் கூடாது. அவர்கள் கல்வி உட்பட சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு முதலாளித்துவ ஆட்சியைத் தூக்கி வீசுவதற்காக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்த்துடன் இணைய வேண்டும். சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (.எஸ்.எஸ்..) அமைப்பும், சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ...) இந்த வேலைத் திட்டத்துக்காகவே போராடுகின்றன.