World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Europe’s leaders at loggerheads at EU summit as markets tumble

சந்தைகள் சரிகையில் ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் ஐரோப்பிய தலைவர்கள் மோதல்

By Stefan Steinberg
24 May 2012

Back to screen version

கண்டத்தின் விரைவாக மோசமாகும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு பிரஸ்ஸல்ஸில் கூடிய ஐரோப்பியத் தலைவர்கள் உருப்படியான நடவடிக்கைகள் குறித்து எந்த உடன்பாட்டையும் காணமுடியவில்லை.

நேற்று இரவு 6 மணி நேரம் நடந்த உச்சிமாநாட்டை அடுத்து, முக்கிய நாடுகளின் தலைவர்களால் பொருளாதாரக் கொள்கை குறித்த தீவிர வேறுபாடுகளை களைய முடியவில்லை. குறிப்பாக பிரான்ஸின் புதிய சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் ஆதரிக்கும் திட்டம் மற்றும் அரங்கில் இருந்த பெரும்பாலானவர்கள் ஆதரவு கொடுத்த யூரோ பத்திரங்கள் -euro bonds- வெளியிடுவது குறித்த திட்டம் பற்றி உடன்பாடுகாணமுடியவில்லை. யூரோ பத்திரங்கள் ஐரோப்பா முழுவதுமுள்ள அரசாங்க கடன்களுக்கான வட்டிவிகிதத்தை ஒரேயளவாக்கும் இலக்கை கொண்டுள்ளன. இது கண்டத்தின் நெருக்கடி நிறைந்த வங்கிகளுக்கு முட்டுக் கொடுத்து நிறுத்துவதுடன் தொடர்புபட்டதாகும்.

ஜேர்மனியின் சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் இத்திட்டத்தை உறுதியாக நிராகரித்தார். யூரோப்பகுதியில் இருக்கும் பலவீனமான நாடுகளுக்கு ஜேர்மன் மூலதனம் உதவிநிதியளிப்பதற்குக் காட்டும் எதிர்ப்பை இது பிரதிபலிக்கிறது.

யூரோப் பத்திரங்கள் குறித்து பேச்சுக்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று உச்சிமாநாடு முடிந்தவுடன் மேர்க்கெல் நிருபர்களுக்குக் கூறினார். உச்சிமாநாட்டு விவாதத்தின்போது, அவர் ஹாலண்டின் வாதங்களை உதறித்தள்ளியதாகக் கூறப்படுகிறது. யூரோப் பத்திரங்கள் வளர்ச்சிக்கு உந்துதல் கொடுப்பதில் எத்தகைய பங்களிப்பையும் கொண்டிராது என்று அவர் கூறினார்.

நாங்கள் ஒருவரோடு ஒருவர் மோதுவதற்கு இங்கு வரவில்லை. ... ஆனால் வளர்ச்சியை உயர்த்துவதற்கு எவை சரியான அமைப்புமுறைகள், சரியான வழிவகைகள், சரியான படிகள், சரியான ஆரம்ப முயற்சிகள் என்பது பற்றி நாம் நினைப்பதைக் கூறத்தான் வேண்டும் என ஹாலண்ட் அறிவித்தார்.

ஆனால் ஆழ்ந்துள்ள நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எந்த வழிவகைகள், முன்னடிகள், ஆரம்ப முயற்சிகள் தேவை என்பது பற்றி உடன்பாடு ஏதும் இல்லாமலேயே உச்சிமாநாடு இரவின் கடைசிப்பகுதியில் முடிவிற்கு வந்தது.

உடன்பாடு குறித்த ஒரு பகுதி கிரேக்கத்திற்கு யூரோப்பகுதிக்குள் இருக்குமாறு அழைப்புவிடப்பட்டதாகவும், அது எந்த புதிய அரசாங்கமும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உறுதியான உடன்பாட்டைக் கொண்டிருக்கும் அடிப்படையில் இருக்கவேண்டும் எனக் கூறப்பட்டது.

யூரோவில் கிரேக்கம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால் கிரேக்கம் அது உடன்பட்டுள்ள கடமைப்பாடுகளை உறுதியாக மேற்கோள்ள வேண்டும் என்று நிருபர்களிடம் மேர்க்கெல் கூறினார்.

பிரான்ஸும் ஐரோப்பாவும் கிரேக்கம் யூரோப்பகுதிக்குள் இருக்க வேண்டும் என விரும்புகின்றன. என ஹாலண்ட் அறிவித்தார். உங்கள் கடமைப்பாடுகளை நீங்கள் மதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நம்பிக்கையை மீட்கும் வகையில் நாம் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பதை உங்களுக்குக் காட்ட விரும்புகிறோம்.

சிறிய அளவிலான வார்த்தை வேறுபாடுகளைத் தவிர, முதலாளித்துவம் தோற்றுவித்துள்ள நெருக்கடிக்கு கிரேக்கம் மற்றும் ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கம் விலை கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தில் ஒருமித்த உணர்வு இருந்தது.

ஐரோப்பாவில் ஆழ்ந்துள்ள மந்த நிலை என்னும் பின்னணியில் வெளிப்பட்டு வரும் மோதல்கள், ஐரோப்பா முழுவதும் பங்குகளில் சரிவைத் தூண்டின. ஒரு மாதம் இல்லாத அளவிற்கு ஐரோப்பிய சந்தைகள் மிகப் பெரிய இழப்புக்களைக் கண்டன. கடந்த வாரம் பல முக்கிய பங்குச்சந்தை குறியீடுகளில் ஏற்பட்ட தீவிரச் சரிவைத் தொடர்ந்து இது வந்துள்ளது. FTSE 100 குறியீடு 2.5%  சரிந்தது; French CAC 2.6%   சரிந்தது; ஜேர்மனியின் DAX 2.4% சரிவுற்றது. ஸ்பெயினின் முக்கிய IBEX குறியீடு 3.3% சரிவுற்றது; யூரோ கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு டாலருக்கு எதிராக அதன் மதிப்பில் சரிவுற்றது. எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியுற்றன. யூரோப்பகுதி உடைந்துவிடும் வாய்ப்பு உள்ளது என்னும் சந்தையின் கவலைகளை இது பிரதிபலித்தது.

ஐரோப்பியத் தலைவர்கள் ஐரோப்பிய வங்கி முறைக்கு நிதியளிக்கப் புதிய நடவடிக்கைகளுக்கு உடன்பட இயலாமை மற்றும் ஜேர்மனி தலைமையில் ஐரோப்பிய அரசாங்கங்கள் யூரோவில் இருந்து கிரேக்கம் வெளியேறுவதற்கு திட்டங்கள் இயற்றுகிறது என்னும் இரு செய்திகளுக்கும் சந்தைகள் முகங்கொடுத்தன. திங்களன்று மாநாட்டு அரங்கில் யூரோப்பகுதியின் நிதி அமைச்சரக அதிகாரிகள் கிரேக்கம் வெளியேறினால் அவர்களுடைய அவசரக்காலத் திட்டங்கள் என்ன என்பதை வெளிப்படுத்துமாறு கோரப்பட்டனர் என்று ராய்ட்டர்ஸ் தெரிவிக்கிறது.

கிரேக்கம் யூரோப்பகுதியை விட்டுச் சென்றுவிடலாம் என்னும் ஊகத்திற்கு ஜேர்மனிய மத்திய வங்கி கிரேக்கம் வெளியேறுவது என்பது சமாளிக்கப்பட்டுவிடலாம் என்று கூறியதாக வந்த அறிக்கையினால் எரியூட்டப்பட்டது.

பிரஸ்ஸல்ஸில் ஒருமித்த உடன்பாடு ஏதும் ஐரோப்பியத் தலைவர்கள் அடையாதது வியப்பை அளிக்கவில்லை. பிரஸ்ஸல்ஸில் முறைசாரா இரவுணவு அழைப்புக் கடிதத்தில் ஐரோப்பியத் தலைவர் வன் ரொம்புவே உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதற்கான சாத்தியப்பாடுகளை முன்கூட்டியே நிராகரித்துவிட்டார். இதன் பொருள் இக்கட்டத்தில் தீர்மானங்கள்  எடுப்பது அல்லது முடிவுரைகள் காண்பது அல்ல. மாறாக ஜூன் மாதம் ஐரோப்பியக் குழுவின் அடுத்த நடைமுறைக் கூட்டத்திற்குத் தயாரிப்பதுதான் என்று அவர் எழுதியுள்ளார்.

உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜேர்மனி மற்றும் அதன் வடக்கு ஐரோப்பாவில் உள்ள சிறு நட்புக்குழுக்கள்மீது அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றால் கணிசமான அழுத்தம் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் வளர்ச்சிக்கூறுபாடு என்று அழைக்கப்படுவதனாடாக தற்போதைய கடுமையான சிக்கனக் கொள்கைகள் செயல்படுத்தும் நாடுகளுக்கு கூடுதலான நிதியுதவி வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளன. கடந்த வார இறுதியில் நடைபெற்ற G8 உச்சிமாநாட்டில் எழுப்பப்பட்ட முக்கிய கோரிக்கைகளில் ஒன்று யூரோப் பத்திரங்களை அறிமுகம் செய்தல் ஆகும். இது ஐரோப்பிய வங்கி முறையை உறுதிப்படுத்த ஒரு புதிய ஒழுங்குமுறையை வழங்கும். செவ்வாய்கிழமையன்று பொருளாதார அபிவிருத்திக்கும் கூட்டுழைப்பிற்குமான அமைப்பும் -OECD- சர்வதேச நாணய நிதியமும் -IMF- யூரோப்பத்திரங்களுக்கு ஆதரவாகத் தங்கள் கருத்தைக் கூறியுள்ளன.

யூரோப்பகுதிக் கடனை ஒருங்கிணைக்கும் அத்தகைய நடவடிக்கைகள் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடிக்கைகளை மீறியதாக இருக்கும் என்று கூறி ஜேர்மனியச் சான்ஸ்லர் மேர்க்கெல் அதை உடனடியாக நிராகரித்துவிட்டார்.

அரசாங்கக் கருவூலங்களில் இருந்து ஐரோப்பாவில் பலவீனமான வங்கிகளுக்கு புதிய நிதிகள் ஏராளமாக மாற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் தேவை என்றும் கோரப்பட்டது. ஸ்பெயினின் பிரதம மந்திரி மரியனோ ராஜோய், உச்சிமாநாட்டிற்கு முன் யூரோப் பத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுதல் ஒரு நீடித்த வழிவகை என்று புகார் கூறி, அவருடைய நாட்டின் பிரச்சனைக்குரிய வங்கிகளுக்கு விரைவில் உதவி தேவை என்று வாதிட்டுள்ளார்.

இருக்கும் ஐரோப்பிய நிதிய அமைப்புமுறைக்கு (ESM) புதிய அதிகாரங்களைக் கொடுக்கும் இரு திட்டங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதனால் அது அரசாங்கத்திற்கு என்று இல்லாமல் நேரடியாக வங்கிகளுக்கு பணத்தைக் கொடுக்க முடியும். இதைத்தவிர, ஐரோப்பிய மத்திய வங்கி நேரடியாக இன்னும் அதிக நிதிகளை வங்கிகளில் உட்செலுத்தும் திறன் விரிவாக்கப்பட முடியுமா என்றும் ஆராயப்படுகிறது. இது தேசிய அரசாங்கங்களின் ஊடாக செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்படக்கூடாது எனவும் கூறப்படுகிறது.

இரு நடவடிக்கைகளுமே ஜேர்மன் அரசாங்கதால் கடுமையாக எதிர்க்கப்படுகின்றன. ஏனெனில் ஜேர்மனி, ஐரோப்பிய வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள செலுத்தமுடியாத கடன்களுக்குத் தான்தான் முக்கிய பொறுப்பை ஏற்க நேரிடுமோ என்ற அச்சத்தைக் கொண்டுள்ளது.

கிரேக்கத்திலும் ஸ்பெயினிலும் சேமிப்பாளர்கள் வங்கிகளில் இருந்து தங்கள் பணம் முழுவதையும் எடுத்துவிடும் நிலையை சமீபத்திய நாட்கள் கண்டுள்ளன. ஏனெனில் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய சேமிப்பாளர்களும் வங்கிகளில் பொறிவு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தமது சேமிப்பை திரும்பப் பெறுகின்றனர். அத்தகைய சரிவு குறித்த அச்சங்கள் Bank of England இன் தலைமைக் கொள்கை இயற்றுபவரான ஆடம் போசனால் அடிக்கோடிட்டுக் காட்டுப்பட்டுள்ளது. அவர் திங்களன்று டோக்கியோவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், ஐரோப்பியத் தலைவர்கள் அப்பிராந்திய வங்கிகளுக்குள் பில்லியன் கணக்கில் பணத்தைச் செலுத்தத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதுதான் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்றும் எச்சரித்தார். ஐரோப்பாவில் முக்கிய பிரச்சினை கிரேக்கம் அல்ல, அதிக மூலதனத்தைக் கொண்டிராத வங்கிகளினால் வங்கிகளுக்கு இடையிலான சந்தையில் உள்ள நிதிய பாதுகாப்பின்மைதான் என்றார் அவர்.

போசனும் மற்றவர்களும் தவிர்க்கமுடியாத வங்கிச் சரிவு பற்றிய எச்சரிக்கைகள், இந்த வாரம் முன்னதாக OECD அறிக்கை வந்துள்ளதைத் தொடர்ந்துள்ளன. அந்த அறிக்கை ஐரோப்பாவில் ஆழ்ந்துள்ள நெருக்கடி சர்வதேசப் பொருளாதாரத்தை குழப்பும் என்று  எச்சரித்துள்ளது. பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவும் உலகமும் ஒரு பொருளாதார நெருக்கடியின் புதிய கட்டத்தின் விளிம்பில் உள்ளன என்பதைக் குறிக்கின்றன. இந்நெருக்கடி 2008ல் லெஹ்மன் பிரதர்ஸ் சரிவுடன் ஆரம்பித்தது.

பிரஸ்ஸல்ஸில் கூடிய 27 ஐரோப்பியத் தலைவர்கள் ஒரு சீரான, ஒருமித்த பிரதிபலிப்பை உருவமைக்க முடியாத நிலைமை ஐரோப்பா மற்றும் உலகப் பொருளாதாரம் முகங்கொடுக்கும் நெருக்கடியின் ஆழ்ந்த தன்மைக்கு அடையாளம் ஆகும். எப்படியும், அவர்கள் ஒன்றில்மட்டும் ஒன்றுபட்டு உள்ளனர்: ஐரோப்பாவில் உள்ள தொழிலாளர் வர்க்கம் நெருக்கடிக்கு முழு விலையையும் கொடுக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்துவதே அது.

மேர்க்கெல் வலியுறுத்தும் இப்போதுள்ளதை தொடருவதோ, ஹாலண்டின் வளர்ச்சி மூலோபாயத்திற்கு அழைப்பு என்று எந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், அது தொழிலாள வர்க்கத்தின்மீது இன்னும் மிருகத்தனத் தாக்குதல் தேவை என்ற முன்கருத்திலிருந்துதான் உருவாகிறது.

இங்கு ஊக்கம் என்பதற்கு பெரும் செல்வந்தர்களுக்கு இன்னும் அதிக பணம், அதைக் கொடுப்பவர்களுக்கு அதிக வேதனை என்பதுடன் இணையான பொருளைத்தான் காட்டுகிறது. எந்த வடிவத்தில் பிணையெடுப்புக்கள் கொடுக்கப்பட்டாலும், அவை வங்கிகளின் பாதுகாப்பறைகளுக்கும், செல்வந்தர்களின் பைக்குளும் போய்விடும். ஐரோப்பிய ஆணையத்தின் சொந்தத் திட்டங்கள்படிக்கூட, அதிக வேலைகள் மீட்பு என்பதற்கு தொழிலாளர் கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கை தேவை எனக்கூறப்படுகின்றது. இதன் பொருள் ஊதியங்களைக் குறைத்தல், விரைவில் பணி நீக்கம் செய்தல், பெருநிறுவனத்தின் மீதான வரிகளைக் குறைத்தல் என்பாதாகும்.

ஐரோப்பாவில் முதலாளித்துவ அரசியல்வாதிகள் மற்றும் பெரிய வங்கிகள், பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் கரங்களில் அவர்களுடைய விதி விடப்படும் வரை ஐரோப்பாவின் தொழிலாளர்களுக்கு சாதகமான விளைவுகள் ஏற்படப்போவதில்லை. ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகள் என்பதன் கீழ் தொழிலாள வர்க்கத்தின் ஆட்சி என்பதன் ஊடாகத்தான் செய்யப்படமுடியும். இதன் பொருள் கண்டத்தின் செல்வம், உற்பத்தி ஆதாரங்கள் அனைத்தும் ஊக வணிகர்கள், மற்றும் அவர்களுடைய பாரிஸ், பேர்லின், லண்டன், பிரஸ்ஸல்ஸில் உள்ள இரத்தக் காட்டேரிகளின் கோரிக்கைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு, சமூகத்திற்கு பயன்படும் இலக்குகளான அனைவருக்கும் தேவைப்படும் வேலைகள், கல்வி, சுகாதார வசதிகளுக்கு செலுத்தப்பட வேண்டும்.