World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

EU Summit: German Finance Minister Schäuble calls for a commissioner for austerity

ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு: ஜேர்மனிய நிதி மந்திரி ஷொய்பிள சிக்கன நடவடிக்கைக்கு ஒரு ஆணையாளர் நியமிக்கப்படவேண்டும் எனக் கோருகிறார்

By Peter Schwarz
18 October 2012
Back to screen version

இன்று பிரஸ்ஸல்ஸில் ஆரம்பித்த ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஜேர்மனிய நிதி மந்திரி வொல்வ்காங் ஷொய்பிள யூரோப் பகுதி நாடுகளின் அரசியல் ஒன்றியத்திற்கான ஒரு புதிய திட்டத்தை வெளிப்படுத்தினார். சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருகையில் அவருடன் வந்த தெரிந்தெடுக்கப்பட்ட செய்தியாளர்கள் குழு ஒன்றிடம் இந்தியப் பெருங்கடலுக்கு மேலே பறந்து வருகையில் அவர் தன்னுடைய கருத்தை விளக்கினார்.

இவருடைய திட்டத்தில் மையமாக இருப்பது நிதி விவகாரங்களுக்கான ஐரோப்பிய ஆணையாளருக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்படுவதாகும். இப்பதவி இப்பொழுது பின்லாந்தின் ஒலி ரெஹ்னால் வகிக்கப்படுகிறது. வருங்காலத்தில் நிதிய விவகாரங்கள் ஆணையாளர் உலகம் முழுவதும் அச்சப்படும்படி இருக்க வேண்டும், எப்படி போட்டித்தன்மைக்குப் பொறுப்புடைய ஆணையாளர் இப்பொழுது இருக்கிறாரோ அப்படி.என்றார் ஷொய்பிள. ஒரு நாட்டின் வரவு-செலவுத்திட்டம் தேசிய பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றுவிட்டாலும் அதை மீறும் அதிகாரம் கூட அவருக்கு இருக்க வேண்டும். இதற்கு அவர் பிற ஆணைக்குழுவின் உறுப்பினர்களை கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை.

ஷொய்பிளவின் கருத்துப்படி, நிதிய விவகாரங்களின் ஆணையாளர் ஒருதலைப்பட்சமாக பற்றாக்குறை போக்கும் நடவடிக்கைகளை எடுக்க முடியும் அல்லது ஐரோப்பிய ஒன்றிய கடன் வரம்புகளை மீறி நிற்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைகளைச் செலுத்த முடியும்.

ஷொய்பிளவின் திட்டத்துடைய பொருள் யூரோப்பகுதி அங்கத்துவநாடுகள் வரவு-செலவுத் திட்டம் பற்றிய தங்களை இறைமையை பிரஸ்ஸல்ஸுக்கு விட்டுக் கொடுத்துவிட வேண்டும், அங்குள்ள சிக்கன ஆணையாளர் ஒருவர் எந்த ஜனநாயகக் கட்டுப்பாடு அல்லது சட்டபூர்வதன்மையும் இல்லாமல் சட்டத்தை இயற்றுவார் என்பதாகும். அனைத்து யூரோப்பகுதி அங்கத்துவ நாடுகளும் கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் போல் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். அந்நாடுகள் யூரோ மீட்பு நிதியில் இருந்து நிதி பெறுவதற்காக விண்ணப்பித்திருந்தன.

நிதி விவகாரங்களை பற்றி பிரஸ்ஸல்ஸில் ஜேர்மனி நிர்ணயிப்பதிலிருந்தும், சிக்கன நடவடிக்கைகளின் தேவை குறித்து மிகவும் கண்டிப்பாக இருப்பதாலும், இது யூரோப் பகுதி அங்கத்துவநாடுகளின் வரவு-செலவுக் கொள்கைகளை பேர்லின் ஆணையிடுவதற்கு ஒப்பாகும்.

ஷொய்பிளவின் திட்டம் இந்த வடிவமைப்பில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவநாடுகளாலும் ஏற்கப்படுவது சந்தேகம்தான். அதே போல் யூரோப்பகுதி நாடுகள் ஏற்பதும் சந்தேகம்தான். ஜேர்மனியின் மேலாதிக்கம் குறித்த அச்சம் மிகப் பெரிய அளவில் உள்ளது. மேலும் இத்திட்டம் ஐரோப்பிய ஒன்றிய உடன்பாடுகளைத் திருத்துவதின் மூலம்தான் செயல்படுத்தப்படமுடியும். அது சில நாடுகளில் மக்கள் வாக்கெடுப்பிற்கு விடாமல் இசைவிற்கு உட்படாது. ஆனால் அத்தகைய நிலையைத்தான் துல்லியமாக பெரும்பாலான அரசாங்கங்கள் தவிர்க்க விரும்புகின்றன; காரணம் அவை தோல்வி அடைந்துவிடும் என அவை எதிர்பார்க்கின்றன. ஷொய்பிளவின் திட்டத்தின் மையக்கருத்து ஐரோப்பிய உச்சிமாநாட்டில் பேச்சுவார்த்தைகளின்போது ஜேர்மனியை வலுப்படுத்துவது என்றுதான் உள்ளது.

உச்சிமாநாட்டின் ஐரோப்பிய குழுவின் தலைவர் ஹெர்மன் வான் ரோம்பே, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோசே மானுவல் பரோசோ, யூரோக்குழுவின் தலைவர் ஜோன் குளோட் யுங்கர், ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் மரியோ டிராகி ஆகியோரால் ஒரு மாற்றீட்டுத் திட்டம் பரிசீலனைக்கு உச்சிமாநாட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஷொய்பிளவின் திட்டம் போலவே நான்கு தலைவர்களின் திட்டமானஇது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேசிய வரவு-செலவுத் திட்டங்கள் மீது கடுமையான கட்டுப்பாட்டை விதிக்கிறது. ஆனால் இது இருக்கும் அமைப்புகள் மூலமும் இருதரப்பு உடன்பாடுகள் என்று தனிப்பட்ட உறுப்பு நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஆணையத்திற்கும் இடையேயான உடன்பாடுகள் மூலம் ஏற்படுமே அன்றி ஷொய்பிளவின் திட்டப்படி ஒரு சக்திவாய்ந்த நிதி விவகார ஆணையாளர் மூலமாக அல்ல.

மேலும் தலைவர்களின் திட்டம் பேர்லின் நிராகரித்த பல கூறுபாடுகளைக் கண்டுள்ளது. ஏனெனில் அவை கடன்களை மறுபகிர்வுக்கு உட்படுத்துவது மற்றும் பிற சுமைகளை யூரோப்பகுதியில் இருக்கும் அனைத்து அங்கத்துவ நாடுகளின் மீதும் சுமத்துவது என்றும் அவற்றை ஒட்டி ஜேர்மனியின் வரவு-செலவுத் திட்டத்திற்கு பாதிப்பு விளைவிக்கும் என உள்ளன.

இத்திட்டத்தில் திவாலாகிவிட்ட வங்கிகளை அகற்றுவதற்கான ஒரு பொது நிதி, சேமிப்பாளர்களின் சேமிப்புநிதிகளை பாதுகாக்கும் நிதிக்கான திட்டங்கள் ஆகியவை உள்ளன. இத்தகைய நிதிகள் ஏற்கனவே ஒரு தேசிய அரசுகளின் கட்டமைப்பிற்குள் உள்ளன. இத்திட்டம் ஒரு தனி யூரோப்பகுதி வரவு-செலவுத் திட்டத்திற்கு அழைப்பு விடுகிறது. இதுவரை ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்கும்தான் அதன் வரவு-செலவுத் திட்டம் உள்ளது. அதையொட்டி பெரிய பொருளாதார சமச்சீரற்ற தன்மைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட முடியும். இது கடன்மீட்பு நீதி ஒன்றை நிறுவவும் யூரோப் பத்திரங்கள் (“euro bonds”) எனப்படும் பொதுப்பத்திரங்களை வெளியிடுவதையும் ஆலோசனை கூறுகிறது.

இத்திட்டங்கள் அனைத்தும் பிரான்சின் அழுத்தங்களில் இருந்து விளைந்தவை. ஜேர்மனியை விட அதுதான் நிதிய, பொருளாதார நெருக்கடியால் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது. எனவே அது ஸ்பெயின் மற்றும் இத்தாலியுடன் நெருக்கமாக ஒத்துழைக்கிறது. உச்சிமாநாட்டில் மோதல் என்பது இவ்வகையில் முன்கூட்டியே ஊகிக்கப்படலாம்.

ஆனால், பேர்லின் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப மற்ற உச்சிமாநாட்டில் பங்கு பெறும் நாடுகளைக் கட்டாயப்படுத்துவதற்கு வாதங்களை கொண்டுள்ளது. பொருளாதார ஆய்வுப் பிரிவான Prognos என்னும் அமைப்பு Bertelsmann Foundation வேண்டுகோள்படி நடத்திய பொருளாதார ஆய்வின்படி, யூரோப்பகுதியின் உடைவு என்பது எல்லாவற்றிற்கும் மேலாக பிரான்சிற்கு பேரழிவு விளைவுகளைத் தரும்.

ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகியவை நீங்கிவிடுவது இணையற்ற பொருளாதார வெடிப்புக்களை ஐரோப்பா, உலகம் முழுவதும் கட்டவிழ்த்துவிடும்என்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். இதன் அளவு கணக்கிலடங்காதது, பொதுவாக நாம் நெருக்கடி என்று அழைப்பதுபோல் இல்லாமல் மிகப் பெரிய அளவில் இருக்கும்.

Prognos கணித்துள்ள மாதிரிகளின்படி, கடன் கொடுத்தவர்களுடைய இழப்புக்கள் மற்றும் உலகப் பொருளாதாரத்தில் விளைவுகள் போன்ற பிற காரணிகள், கிரேக்கம் மற்றும் போர்த்துக்கல் யூரோவை நீங்குதல் என்பவை சமாளிக்கப்பட முடியும். ஆனால் ஸ்பெயினும் இத்தாலியும் யூரோப்பகுதியை விட்டு நீங்குமானால், இது உலகெங்கிலும் 17 டிரில்லியன் யூரோக்கள் செலவுகளைத் தோற்றுவிக்கும்.

ஸ்பெயின் மற்றும் இத்தாலியின் பொருளாதாரங்களுடன் நெருக்கமாகப் பிணைந்து பிரெஞ்சுப் பொருளாதாரம் கிட்டத்தட்ட அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 155% வரை பாதிப்பிற்கு உட்படும். ஆராயப்பட்டுள்ள எந்த நாட்டையும் விட மிக அதிகமான செலவு ஏற்படும். ஆராய்ச்சியாளர்கள் ஜேர்மனிக்கு இதையொட்டிய செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 70% இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளனர்.

யூரோவை காப்பாற்றுவது என்பது ஐரோப்பாவில் வலுவான பொருளாதாரமான ஜேர்மனியை முக்கியமாக  நம்பியிருப்பதால், வரக்கூடிய பேரழிவு கணிசமாகப் பிறரை அழுத்தத்திற்கு உட்படுத்தும் சாத்தியப்பாட்டை பேர்லினுக்கு கொடுக்கின்றது. ஷொய்பிளவின் திட்டம் ஜேர்மனிய அரசாங்கம் எப்படி இந்த திறனைப் பயன்படுத்த விரும்புகிறது என்பதைக் காட்டுகிறது. அதாவது ஐரோப்பாவை ஜேர்மனிய ஆதிக்கத்தின் கீழ் மறுசீரமைப்பதாகும்.

அங்கேலா மேர்க்கெலின் பழைமைவாத அரசாங்கம் முழுப் பாராளுமன்ற எதிர்த்தரப்புக் கட்சிகளின் ஆதரவையும் நம்ப இயலும். சமூக ஜனநாயகக் கட்சிக்காரரான ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவரான மார்ட்டின் ஷூலஸ், ஷொய்பிளவின் திட்டத்தை வரவேற்றுள்ளார். அதேபோல் பசுமைக்கட்சியின் டானியல் கோன் பென்டிட்டும் வரவேற்றுள்ளார். பென்டிட்டை பொறுத்தவரை ஷொய்பிளவின் திட்டம் போதுமானவை அல்ல.. அவர் நிதிய விவகாரங்களின் ஆணையாளருக்கு அதிகாரம் கொடுத்துள்ளதுவலுப்படுத்த வேண்டும். அவர் ஐரோப்பிய பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார். இதைத்தான் அவர் Süddeutsche Zeitung பத்திரிகைக்கு கொடுத்துள்ள ஒரு நீண்ட நேர்காணலில் கூறியுள்ளார்.

வேறுபாடுகள் பல இருந்தபோதிலும்கூட, ஷொய்பிளவின் திட்டம் மற்றும் நான்கு தலைவர்களின் திட்டம் அடிப்படைப் பிரச்சினையில் ஒன்றுபடுகின்றன. அதாவது நெருக்கடி தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் சுமையை ஏற்றுவதில் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதில். இரு திட்டங்களும் வங்கிகளுக்கு இன்னும் பாரிய நிதியுதவி வழங்கப்பட வேண்டும், நிதிய முதலீட்டாளர்களுக்கும் அதேபோல் உதவியளிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன. அவை பின் சமூகநலச் செலவுகள் குறைப்பு, பணிநீக்கங்கள், ஊதியக் குறைப்புக்கள் மூலம் அடையப்பட முடியும்.

இந்த இரு திட்டங்களும் பிரெஞ்சு ஜனாதிபதி சார்ல்ஸ் டு கோல் கொண்டிருந்த அட்லான்டிக்கில் இருந்து யூரல் வரை ஒற்றுமையாக இருக்கும் ஐரோப்பாஎன்னும் திட்டம் முழுமையாக புதைக்கப்பட்டுவிடும் என்ற பொருளைத்தரும். இவை சில முக்கிய யூரோப்பகுதி உறுப்பு நாடுகளைத்தான் நம்பியுள்ளன (அவற்றுடன் போலந்து மற்றும் செக் குடியரசு ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்)இவை ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியவற்றைச் சுற்றி அமைக்கப்படும். யூரோப்பகுதி இல்லாத நாடுகள், குறிப்பாக பிரித்தானியா அதிக பங்கைக் கொண்டிருக்காது.

பிரான்சில் ஆதரவிற்கு உட்பட்ட யூரோப்பகுதியில் தனி வரவு-செலவுத் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்னும் நான்கு தலைவர்களின் திட்டம் இத்திசையில்தான் உள்ளது. ஷொய்பிளவின் திட்டமான ஐரோப்பியப் பாராளுமன்றத்தை நாடுரீதியாக துணைப் பாராளுமன்றங்களாக பிரிப்பதும் இத்திசையை நோக்கித்தான் செல்லுகிறது. அதன் பின் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பிரதிநிதிகள் மட்டும்தான் வாக்களிக்க முடியும். அதாவது யூரோ பற்றிய கேள்வியை பொறுத்தவரை, யூரோப்பகுதி நாட்டு அங்கத்தவர்களுடையதைத்தான்.

ஐரோப்பாவை காப்பாற்றுதல் என்னும் பெயரில் ஷொய்பிள மற்றும் நான்கு தலைவர்களின் வாதங்கள் இரண்டுமே அவர்களுடைய திட்டங்களை நியாயப்படுத்த உபயோகிக்கப்படுகிறது. இவை ஐரோப்பாவிற்குள் இருக்கும் சமூக முரண்பாடுகளை தீவிரமாக்கும் என்பது மட்டுமல்லாது, தேசிய அழுத்தங்களையும் அதிகரிக்கும்.