World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

LTTE officials work with Sri Lankan government after civil war

உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இயங்குகின்றனர்

By K. Nesan
22 November 2012
Back to screen version

இலங்கை அரசாங்கம், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் முடிவில், 2009 இல் தமிழீழ விடுதலைப் புலிகளை அது இராணுவரீதியாக நசுக்கியதற்கு பின்னர், தமிழ் தொழிலாள வர்க்கத்தை கண்காணிப்பதற்கு தமிழ் தேசியவாதிகளை அது எங்ஙனம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் முன்னாள் உறுப்பினரான செல்வராசா பத்மநாதனின் அரசியல் வாழ்க்கை மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகிறது.

ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான பத்மநாதன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய ஆயுத கொள்முதலாளராகவும் நிதிதிரட்டுபவராகவும் இருந்தார். போரின் இறுதி மாதங்களில், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், பத்மநாதனை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான தலைவராக நியமித்தார்.

இந்தப் பொறுப்பில் இருந்தவண்ணம், தமிழீழ விடுதலைப் புலிகளின்  தலைமை சரணடையும் சாத்தியம் தொடர்பாக, நோர்வேயின் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹைம் உட்பட, மேற்கத்திய நாடுகளின் உளவுத்துறை முகமைகள் மற்றும் அரசுப் பிரதிநிதிகளுடன் பத்மநாதன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்திய சக்திகளுக்கு போரை நிறுத்த தலையிடக்கோரி பலனற்ற விண்ணப்பங்களை பகிரங்கமாக அவர் விடுத்தார்.

இலங்கை இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த கடைசித் துண்டு நிலத்திலும் நுழைந்து பிரபாகரன் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைமையையும் படுகொலை செய்தது.

ஆரம்பத்தில் பிரபாகரன் இறந்த செய்திகளை தமிழீழ விடுதலைப் புலிகள்  மறுத்தது. அவர் பாதுகாப்பாய் இருக்கிறார் என்றும் பொருத்தமான நேரத்தில் அவர் தோன்றுவார் என்றும் அது கூறியது. பின்னர் இந்த அறிக்கையை கைவிட்டு பத்மநாதன் பிரபாகரனின் இறப்பை உறுதிப்படுத்தினார்.

தன்னை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக நியமித்துக் கொண்ட அவர், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாகவும் சுய-நிர்ணயத்துக்கான போராட்டத்தை அமைப்பு தொடர்ந்து நடத்தும் என்றும் அறிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE) என்பதன் உருவாக்கத்தை அறிவித்து, அதன் இடைக்காலத் தலைவராக நியூயோர்க்கை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகின்ற அரசியலமைப்பு வழக்கறிஞரான விசுவநாதன் உருத்திரகுமாரனை நியமித்தார். பின்னர் TGTE இன் பிரதம மந்திரியாக உருத்திரகுமாரன் ஆனார்.

பத்மதாதன் கைதுசெய்யப்பட்டதாக கூறப்பட்டு மலேசியாவில் இலங்கை உளவுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக பத்மநாதனின் நான்கு-மாத அரசியல் வாழ்க்கை திடீரென முடிவுக்கு வந்தது. கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட அவர் இலங்கை அரசாங்கத்துடன் ஒத்துழைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு ஸ்தாபகங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்களை வழங்கினார்.

இவரது முன்முயற்சியின் பேரில், தமிழீழ விடுதலைப் புலிகளின்  உறுப்பினர்கள் உட்பட வெளிநாடுகளில் வாழ்ந்த தமிழ் தலைவர்கள் மற்றும் வர்த்தகர்களின் பல்வேறு தூதுக்குழுக்களும் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய இராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசினர். இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றத்திற்கும் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகளின் மறுவாழ்வுக்கும் உதவுகின்றதாகக் கூறப்பட்ட, வட கிழக்கு மறுவாழ்வு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (NERDO) என்ற அமைப்பை அரசாங்கத்தின் சம்மதத்துடன் பத்மநாதன் அமைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கன்னைகளிடையே பத்மநாதனுக்கு இருக்கின்ற பரந்த தொடர்புகளைப் பயன்படுத்தி அக்கன்னைகளை அரசாங்கத்துடன் ஒத்துழைப்பதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின்  சொத்துகளை இலங்கைக்கு மாற்றுவதற்கும் சம்மதிக்க வைப்பதே NERDO இன் உண்மையான நோக்கமாகும்.

இலங்கையின் டெய்லி நியூஸ் பத்திரிகையில் வெளியான சமீபத்திய பத்தி ஒன்றில், டி.பி.எஸ். ஜெயராஜ் பத்மநாதனின் இந்த மாற்றத்தைப் புகழ்ந்து கூறினார். அவர் எழுதினார்: உலகம் முழுவதிலும் இருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகளுடனும் NERDO உறவை கொண்டுள்ளது. ஒரு தன்னார்வ அடிப்படையில் வேலைசெய்கின்ற இந்தப் பிரதிநிதிகள் NERDO திட்டங்களை அமுல்படுத்துவதற்கு அவசியமான பெருந்தொகையான நிதியை சேகரிப்பதற்கும் வழங்குவதற்கும் பெரும் பொறுப்புடன் செயல்படுவர். இந்தப் பிரதிநிதிகள் பிரதானமாக பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜேர்மனி மற்றும் ஒரு சில மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்களாவர்.

கடந்த மாதத்தில் இலங்கை அரசாங்கம் பத்மநாதனை பாதுகாப்புக் காவலில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்தது. பாதுகாப்பு அமைச்சக செய்தித்தொடர்பாளரான லக்ஷ்மன் ஹலுகல்லே மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் இந்த விடுதலை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது: இது எங்களுக்குக் கிடைத்த ஒரு வெற்றியாகும். ஏனென்றால் அரசாங்கத்திற்கு எதிராக போரிட்டு வந்த ஒரு தமிழ் தலைவர் இப்போது நாட்டின் அபிவிருத்திக்காக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

இலங்கையில் முன்னர் தமிழீழ விடுதலிப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளின் நிர்வாகத் தலைநகராய் இருந்த கிளிநொச்சியில் தமிழீழ விடுதலிப் புலிகளின் அரசியல் பிரிவின் முன்னாள் தலைவரான பரமு தமிழ்ச்செல்வனின் வீட்டில் பத்மநாதன் குடிபுகுந்துள்ளார். அடுத்த ஆண்டில் வடக்கு மாநிலத் தேர்தல்களில் அவரை முதலமைச்சராக நிறுத்துவதற்கு அரசாங்கம் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதை ஊடகத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.