World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Share market scandal erupts in Sri Lanka

இலங்கையில் பங்கு சந்தை ஊழல் வெளிப்பட்டுள்ளது

By Saman Gunadasa
12 September 2012
Back to screen version

இலங்கை பங்கு பரிவத்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரான திலக் கருணரட்ன, அரசாங்க அமைச்சர்கள் ஊகவணிகர்களுடன் இணைந்து தொழிற்படுகின்றார்கள் என கடந்த வாரத்தில் குற்றம் சாட்டியதை தொடர்ந்து, கொழும்பு பங்கு பரிவத்தனையில் பங்குகளை கையாள்வதில் நடைபெற்ற ஊழல் வெளிப்பட்டுள்ளது. கருணாரட்ன நியமிக்கப்பட்டு ஒன்பதே மாதங்களில், ஜனாதிபதி இராஜபக்ஷவின் அழுத்தத்தின் காரணமாக தனது பதவியிலிருந்து  விலகியுள்ளார். பங்கு சந்தையில் துஷ்பிரயோகங்களை செய்த 17 கம்பனிகளுக்கு எதிராக பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு விசாரணையை தொடங்கியதே, அவரை விலக்கியதிற்கான வெளிப்படையான காரணமாகும். கருணரட்ன இராஜினாமா செய்த பின்னர், இராஜபக்ஷ உட்பட அரசாங்க தலைவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய பங்கு சந்தை மாபியாவினால் மேற்கொள்ளப்படும் பகற் கொள்ளை என கருணாரட்ன பத்திரிகையாளருக்குக் குறிப்பிட்டார்.

கருணரட்ன அரசியல்வாதியாவும் ஒரு வியாபாரியாகவும் இருக்கிறார். அவர் சிங்கள இனவாதக் கட்சியான ஜாதிக கெல உறுமயவின் ஸ்தாபக  தலைவராக இருந்து, பின்னர் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியில் (யூ.என்.பீ.) சேர்ந்து கொண்டார். 2010 ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர், அவர் இராஜபக்ஷவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குத் (ஸ்ரீ.ல.சு.க.) தாவினார்.

இந்த பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவானது கொழும்பு பங்கு சந்தையை மேற்பார்வை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்ப்பட்ட ஒழுங்குபடுத்தும் அதிகார சபையாகும்.  இராஜபக்ஷ தனது அதிகாரத்தைப் பாவித்து, ரசாங்கத்திற்கு சார்பான தலைவர்களை நியமித்தார். கருணரட்னாவுக்கு முதல் பதவியிலிருந்த, ஜனாதிபதியின் செயலாளரான லலித் வீரதுங்காவின் மனைவியான இந்திராணி சுகததாசவும், இதே சூழ் நிலமையின் கீழ் இராஜினாமாச் செய்தார்.

நீண்டகால உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, இராஜபக்ஷ அரசாங்கத்தினால் பேணி வளர்க்கப்பட்ட நிதி ஊகவணிக ஒட்டுண்ணித் தட்டினரின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு சமிக்ஞையையே புதிய ஊழல் வெளிப்படுத்தியுள்ளது. 2009 மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்பு,  பங்கு சந்தையின் விலை சுட்டெண் சடுதியாக உயர்ந்தது அது 2008ல் 1,631 புள்ளியில் இருந்து 2011ல் 7,800 புள்ளியாக உயர்ந்தது.

பங்கு விலைகளின் அதிவேக உயர்வை, அரசாங்கத்தின் பொருளாதார வெற்றிக்கு ஆதாரமாக இராஜபக்ஷ குறிப்பிட்டார். உலகில் மிகவும் பிரகாசிக்கின்ற பங்கு சந்தைகளில் ஒன்று என நிதியியல் ஊடகங்கள் பராட்டியிருந்த போதிலும், இந்த வெற்றி, பூகோள நிதி நெருக்கடியின் மத்தியில் கட்டுப்பாடற்ற ஊகத்தின் அடிப்படையில் கட்டி எழுப்ப்பட்டது. 2011 ஆரம்பத்தில், இந்தக் குமிழி உடைந்து, தற்போது 5000 புள்ளியை அண்மித்துள்ளது. வெளி நாட்டு முதலீட்டாளர்கள் நிதியை மீளப்பெறுவதோடு கொழும்பு உலகில் மிகவும் மோசமான சந்தைகளில் ஒன்று என தரப்படுத்தப்பட்டது.

பங்குகளின் விலைகள் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் ஊகங்களே என கருணரட்ன ஏற்றுக்கொண்டுள்ளார். சந்தையை அதிதீவிரமாக உச்ச மட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அதை ஊதி பெருகச் செய்வதில் நியாயமற்ற வழிமுறைகளை பயன்படுத்துபவர்களே இதற்குப் பிரதான பங்களிப்பு செய்துள்ளனர், என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் தன்னால் விசாரணை செய்யப்படும் 17 கம்னிகளின் பெயர்களை குறிப்பிடவில்லை. ஆனால், 2009 கடைப் பகுதியிலும் 2010 கடைப் பகுதிக்கும் இடைப்பட்ட காலத்தில், விலைகள் சடுதியாக அதிகரித்திருந்த விவகாரங்களை மேற்கோள்காட்டி அவர் அவற்றின் அடையாளங்களை சமிக்ஞை செய்தார். அந்த ஆண்டு பூராவும் தங்கொடுவ போசிலைன், புளூ டைமண்ஸ், ஏசியன் அலயன்ஸ் இன்ஸ்சூரன்ஸ், லங்கா ஹொஸ்பிற்றல்ஸ் மற்றும் எச்.வி.ஏ. பூஃட்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலைகள் முறையே 226, 270, 177, 204 மற்றும் 395 சதவீத்தால் உயர்ந்துள்ளன.

 நரிகளும் மாஃபியா வஞ்சகர்களும் என்ற தலைப்பில் கடந்த வாரம் சண்டே ரைம்ஸ் வெளியிட்டிருந்த ஆசிரியர் தலைப்பில் குறிப்பிட்டிருந்ததாவது: “17 ‘சந்தேக நபர்களும் ஆளும் தட்டினருக்கு நெருக்கமானவர்கள் என பொதுவாகப் பேசப்படுகின்றது. இந்த தொடர்புகள், ஆட்சியாளரின் அரசியல் பிரச்சாரத்திற்கு நிதி வழங்கும் மட்டத்திற்கு வளர்ந்துள்ளதுடன், இதற்கும் மேலாக அவர்களின் முன்னணிப் பிரமுகர்களாகவும் தொழிற்படுகின்றன.

 உட்செலுத்துதல் மற்றும் வெளிக்கொட்டுதல் எனப்படும் திட்டத்தின் கீழ், பிரதான ஒப்பந்தக்காரர்கள், பாரிய இலாபங்களுக்கு உத்தரவாதம் அளித்து குறிப்பிட்ட பங்குகளில் பணம் போடுமாறு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கின்றார்கள். பங்குகளின் விலை குறிப்பிட்ட மட்டத்தை அடையும் போது, ஒப்பந்தக்கார்ரகள் அவற்றை விற்று பிரமாண்டமான இலாபத்தை பெற்றவுடன், பங்குகளின் விலைகள் கூர்மையாக வீழ்ச்சியடைகின்றன. பல சமயங்களில் தமது சேமிப்புகள் மற்றும் ஓய்வூதியத்தையும் முதலீடு செய்த சிறிய பங்குதாரர்களுக்கு பாரிய இழப்புகள் ஏற்படுகின்றன.

மத்திய வங்கியானது இந்த ஊக வெறியை ஊக்குவிக்கும் முகமாக கலதாரி ஹோட்டல், லாஃப் கேஸ், பிரமல் கிளாஸ் சிலோன், சிலோன் கிறெயின் எலவேடர்ஸ் மற்றும் பிறவுண்ஸ் போன்ற நலிந்துவரும் கம்பனிகள் உட்பட கம்பனிகளின் பங்குகளை கொள்வனவு செய்வதற்காக, நாட்டின் மிக்க பெரிய ஓய்வூதிய நிதியான ஊழியர் சேமலாப நிதியை (ஈ.பீ.எஃப்) விடுவிக்கின்றது.  தனியார் துறை முதலீட்டுக்காக ஈ.பீ.எஃப். நிதியை விடுவிக்க வேண்டும் என்பது சர்வதேச நாணய நிதியத்தின் நீண்டகால கோரிக்கையாகும்.

விளைவு அழிவுகரமானதாகும். உதாரணமாக, 2010ல் நவலோக ஹொஸ்பிடல்ஸ் நிறுவனத்திடம் இருந்து, நட்டத்தில் இயக்கும் கலதாரி ஹோட்டல்ஸின் பங்குகள், ஒரு பங்கு 32.50 ரூபா படி,  23.7 மில்லியன் பங்குகள் ஈ.பீ.எஃப். நிதியில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 2012 ஜூலை மாதமளவில், பங்கின் விலை 11 ரூபாவுக்கு குறைவடைந்து. இதனால் ஈ.பி.எஃப். நிதிக்கு 500 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. இந்த வருட நடுப்பகுதியில் மொத்தமாக ஈ.பி.எஃப். நிதிக்கு 6 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் நாலக கொடகேவாவும், அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவர். அவர், பங்குகளை சூழ்ச்சி திறனுடன் கையாள்கின்ற கொழும்பு காணி மற்றும் அபிவிருத்தி (சி.எல்.டி.) அமைப்பின் தலைமையில் இருக்கின்ற போதிலும், இந்த வேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சி.எல்.டி. கொழும்பில் முன்னணி தனி சொத்து அபிவிருத்தியாளராக இருந்த போதும், நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் ஒரு கூட்டு திட்டத்துக்காக மறுசீரமைக்கப்பட்டது. 2010ல் அரசாங்கம் சிவில் அமைப்பான நகர அபிவிருத்தி அதிகார சபையை (யூ.டி.ஏ.), ஜனாதிபதியின் சகோதரரான கோட்டாபய இராஜபக்ஷவின் தலைமையின் கீழான பாதுகாப்பு அமைச்சுக்கு மாற்றப்பட்டது. முதற்படியாக 70,000 சேரிவாழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றும் திட்டத்துடன், கொழும்பை வர்த்தக மையமாக அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு யூ.டி.ஏ. மையமாக செயற்படுகின்றது. பாதுகாப்பு படையினர் ஏற்கனவே நூற்றுக்கணக்கான குடும்பங்களை பலவந்தமாக அகற்றியுள்ளனர்.

 “பங்கு சந்தை மாபியாவின் ஒரு அங்கத்தவராக அண்மையில் ஊடகங்களினால் அடையாளங் காணப்பட்டவர்களும் அரசாங்கத்துடன் தொடர்புடையவர்கள். திவச ஈகுய்டி நிறுவனத்தின் தலைவர் டிலித் ஜயவீர, பங்கு சந்தை விவகாரம் பற்றி பேச கோட்டாபய இராஜபக்ஷவை சந்தித்ததாக ஏற்றுக்கொண்டார். பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழுவின் தலைவர் கருணரட்னவை சந்திப்பதற்கு, பங்கு ஒப்பந்தக்காரர்களின் சுதந்திரத்திற்காக கோரிக்கை விடுப்பவராக அறியப்பட்ட ஜயவீரவுக்கு கோட்டாபய இராஜபக்ஷ ஒழுங்கு செய்தார்.

பங்கு சந்தை ஊழலின் வெளிப்பாடு, இராஜபக்ஷ அரசாங்கம் மற்றும் அவரது வியாபார அடிவருடிகள் சம்பந்தமாக கூட்டுத்தாபன பிரமுகர் தட்டினர் மத்தியில் நிலவும் ஆழமான அதிருப்தியை காட்டுகிறது. கருணரட்னவின் இராஜினாமா சம்பந்தமாக கவலை வெளிப்படுத்திய இலங்கை வர்த்தகர்கள் சம்மேளனம், அது வெளிநாட்டு முதலீட்டார்களுக்கு பிழையான சமிக்கையை வழங்கும் என எச்சரித்துள்ளது.

ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் வளர்ந்துவரும் வரத்தக பற்றாக்குறை நெருக்கடிக்கு ஊடாக இலங்கையின் பொருளாதாரத்தை பாரிய முறையில் பாதிக்கின்ற உலகப் பொருளாதார பொறிவு மோசமடையும் நிலையிலேயே, ஆளும் வட்டத்திற்குள்ளான இந்த பிளவுகள் ஏற்பட்டடுள்ளன. இழப்புக்களின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீதே சுமத்தும் அரசாங்கத்துடன், ஒட்டுண்ணித்தனமான ஊகவணிகத் தட்டினரும் பங்கு விலை சூழ்ச்சியாளர்களும் ஒத்துழைத்துச் செயற்படுவதையே இந்த ஊழல்கள் அம்பலப்படுத்துகின்றன.