World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president presents austerity budget

இலங்கை ஜனாதிபதி சிக்கன வரவு செலவு திட்டத்தை முன்வைக்கின்றார்

By Saman Gunadasa
21 November 2012
Back to screen version

இலங்கை ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான மஹிந்த இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, நவம்பர் 8 அன்று பாராளுமன்றத்தில் 2013 வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தார். 2006 முதல் விலைவாசி உயர்வு மற்றும் மோசமான விளைவுகளைக் கொண்ட ஊதிய முடக்கத்தாலும் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள உழைக்கும் மக்களின் வாழ்க்கை தரங்களை இந்த சிக்கன வரவு செலவு திட்டம் மேலும் கீழறுக்கும்.

இந்த வரவு செலவுத் திட்டம் அரசாங்க ஊழியர்களுக்கு ஒரு அற்பத் தொகையை மட்டுமே வழங்கியுள்ளது. அடுத்த ஜனவரியில் இருந்து வெறும் 750 ரூபா அல்லது ஒரு நாளுக்கு 20 அமெரிக்க சதங்கள், ஊதிய உயர்வாக அன்றி மாதாந்த கொடுப்பனவாகவும் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து இன்னொரு 750 ரூபாவும் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளன. இந்த தொகையானது தொழிலாளர்கள் வாழ்க்கை செலவு அதிகரிப்பை ஈடு செய்ய கோரி வருவதை விட சுமார் 10 மடங்கு குறைவானதாகும். தொழிலாள வர்க்கத்தின் மிகப் பெரும் பகுதியினரான தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாட்டின் எட்டு மில்லியன் தனியார் துறை ஊழியர்கள் சம்பந்தமாக எதுவும் கூறப்படவில்லை.  

இராஜபக்ஷ 2015ல் வறுமையை ஒழிக்க வாக்குறுதி கொடுத்த போதிலும், அது ஒரு சிடுமூஞ்சித்தனமான பொய்யாகும். வரவு செலவுத் திட்டத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன், ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 6 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதனால் தொழிலாள வர்க்க குடும்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும், பாண் (ரொட்டி) மற்றும் ஏனைய பிரதான மா பொருட்களின் விலைகள் உயர்ந்தன. உள்ளூர் தயாரிப்பாளர்களை பாதுகாக்கும் பெயரில் பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் பால் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் மீது அரசாங்கம் பெரும் வரிகளை விதித்துள்ளது.

இறக்குமதிசெய்யப்படும் மதுபாணங்களுக்கு 25 சதவீத வரி மற்றும் மோட்டார் வாகனங்களுக்கான ஆண்டு உரிமப்பத்திர கட்டனத்துக்கு 10-20 சதவீத வரி உயர்வு, சிறப்பு அங்காடிகளில் கொள்வனவு செய்பவற்றுக்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு வரி (வட்) போன்றவையும் ஏனைய வரிகளில் அடங்குகின்றன. டிராக்டர்கள், மூன்று சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் உட்பட மோட்டார் வாகனங்கள் மீதான சுங்கவரி மேலும் உயரும்.

அதி செல்வந்தர்களின் செல்வம் மற்றும் சொகுசுகளுக்கு மேல் கைவைக்கப்படவில்லை. உண்மையில், பந்தய கார்கள் மீதான 300 சதவீத வரி நீக்கப்பட்டது. முன்னர் 28 சதவீதமாக குறைக்கப்படிருந்த பெருநிறுவன வரி விகிதத்தில் கைவைக்கப்படவில்லை. இராஜபக்ஷ வெளிநாட்டு நிதிகளை பெறுவதற்காக வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களுக்கு செலாவணிக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளார்.

வரவு செலவுத் திட்டத்துக்கு முன்னதாக, பங்கு சந்தையில் தனியார் ஓய்வூதியத்தை, அதே போல் சேமலாப நிதியை, ஓய்வு நன்கொடையை, நம்பிக்கை மற்றும் சேமிப்பு நிதியை முதலீடு செய்வதற்கான கட்டுப்பாடுகளை நிதி அமைச்சு அகற்றியது. வரவு செலவுத் திட்ட சமயத்தில், பங்கு சந்தையில் நிறுவனங்கள் கொண்டுள்ள பங்கில் குறைந்த பட்சம் 20 சதவீதத்துக்கு சமமான அளவு வரி விடுமுறையும் (வரி விலக்களிப்பு) கூட மூன்று வருடகாலத்துக்கு நிறுவனங்களுக்கு  வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்கு தரகர்கள் சங்கம், "மூலதன சந்தையை உருவாக்க வேண்டியதன் முக்கியமான மற்றும் அவசரமான தேவையை நிதி அமைச்சர் சரியாக அங்கீகரித்துள்ளமை உற்சாகமூட்டுகிறது" என்று அறிவித்துள்ளது.

இராஜபக்ஷ, தனது சகோதரர் கோடாபய இராஜபக்ஷவால் இயக்கப்படும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுகளுக்கு மீண்டும் 60 பில்லியன் ரூபாயில் இருந்து 290 பில்லியன் ரூபா வரை நிதி அதிகரித்துள்ளார். இந்த 26 சதவிகித அதிகரிப்பு, பிரதானமாக தமது வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொழிலாளர்களின் எதிர்ப்பு வளர்ந்து வரும் அறிகுறிகளின் மத்தியில், ஏற்கனவே விரிவுபடுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இயந்திரத்தை வலுப்படுத்துவதற்குப் பயன்படும்.

ஜனாதிபதி சுகாதாரம் மற்றும் கல்விக்கான செலவை அதிகரிப்பதாக வாக்குறுதியளித்த போதும், அது யதார்த்தமாவது சாத்தியமில்லை. அவரது உரையில், அவர் 154 மற்றும் 125 பில்லியன் ரூபாக்கள் கல்வி மற்றும் சுகாதார செலவுக்காக ஒதுக்கப்படும் என்று குறிப்பிட்ட போதிலும், கடந்த மாதம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதாவில் முறையே 65 மற்றும் 93 பில்லியன் ரூபாக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.  

இந்த வரி உயர்வுகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20 சதவீதம் வருவாயை அதிகரிப்பதையும், மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளின் படி 2013ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை 5.8 சதவீதமாக குறைப்பதையும் இலக்காகக் கொண்டவையாகும். 1.785 பில்லியன் ரூபாய் உத்தேச செலவுடன், மொத்த வருவாய் 1.257 பில்லியன் ரூபாய்களாக (9.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) இருக்கும்.

2009ல் சர்வதேச நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் டொலர் கடன் பெற்றுக் கொண்ட அரசாங்கம், தற்போது மேலும் நிதி தேடுகிறது. இலங்கையானது நிகழ்சாத்திய நிதியில் மற்றொரு 500 மில்லியன் டொலரை எதிர்பார்த்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நடப்பு கண்காணிப்பு திட்டமொன்றைப் பெற ஆர்வம் காட்டியுள்ளது என லங்கா பிஸ்னஸ் ஒன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், தற்போதுள்ள கடன்களை திருப்பி செலுத்த நிதி ஒதுக்கும் பொருட்டு, அரசாங்கத்துக்கு 2013ல் 1,303 பில்லியன் ரூபாய்கள், அல்லது கிட்டத்தட்ட 10 பில்லியன் டொலர்கள் புதிய கடன்களைப் பெறவேண்டியது அவசியம். இதை கடந்த ஆண்டு அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2012 ஜூலை இறுதிக்குள் பொதுக் கடன் 6,161 பில்லியன் ரூபா வரை 24 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், ஒரு கெடுதியான சுழற்சியை உருவாக்குகிறது. இலங்கை குறிப்பாக சீனாவின் கடனில் பெரிதும் சார்ந்துள்ளது.  

பல ஆசிய நாடுகளிலும் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட பொருளாதார சரிவினால் இலங்கை பொருளாதாரம் கலங்கிப் போயுள்ளது. தீவின் வளர்ச்சி வீதம் கடந்த ஆண்டு 8.3 சதவிகிதத்தில் இருந்து இந்த ஆண்டு 6.5 சதவிகிதம் வீழ்ச்சியுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாத ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைந்தது. நாட்டின் உயர்மட்ட ஏற்றுமதியான ஆடை உற்பத்தி சுமார் 9 சதவிகிதமும் ரப்பர் உற்பத்திகள் கிட்டத்தட்ட 20 சதவிகிதமும் வீழச்சியடைந்துள்ளன.

அரசாங்கம் வாகனங்கள் போன்ற பொருட்களின் இறக்குமதி வரியை அதிகரித்ததோடு அதிகரித்துவந்த சென்மதி நிலுவை நெருக்கடியை தடுக்கும் முயற்சியில் ரூபாயை மதிப்பிறக்கம் செய்ய அனுமதித்த நிலையில், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இறக்குமதி செப்டம்பர் மாதம் 25 சதவிகிதம் குறைந்துள்ளது.  

இராஜபக்ஷ தனது அரசாங்கத்தின் சமூக தளத்தை உயர்த்தும் முயற்சியில், விவசாயிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட உதவிகளை வழங்கியுள்ளது. அவர் 500 மில்லியன் ரூபாவுக்கு குறைவான வருடாந்த வருவாய் கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 10 சதவீதம் வரியை குறைத்தார். அவர் சிறு தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பெருந்தோட்டங்களுக்கு மீள் நடுகைக்காக கொஞ்சம் நிதி உதவி செய்வதாகவும் அறிவித்தார்.

பல விவசாயிகள் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதனால், வங்கிகள் வட்டி பெறுவதை நிறுத்துமாறும் மற்றும் அடுத்த சாகுபடி பருவம் முடியும் வரை கடன் மீளப் பெறுவதை தாமதிக்குமாறும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. இராஜபக்ஷ இந்தப் பருவத்தில் 30 ரூபாயில் இருந்து அடுத்த பருவத்தில் 35 ரூபாய்வரை நெல்லுக்கான உத்தரவாத விலையை அதிகரித்துள்ளார். அறுவடையின் 90 சதவீதம் குறைவான விலையில் தனியார் கொள்வனவாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், அரசாங்கத்தின் இந்த உத்தரவாத விலையானது சிறு விவசாயிகளுக்கு சொற்பளவே உதவும். பயிர் செய்கைக்கு அவசியமான பொருட்களின் விலை அதிகரிப்பாலும் அவர்களது அறுவடைக்கு மலிவு விலையே கிடைப்பதாலும் விவசாயிகள் அடியோடு சுரண்டப்படுகின்றனர்.

பெருநிறுவன துறை இந்த வரவு செலவுத் திட்டத்தை வணிகச் சினேகமானது என பாராட்டியுள்ளது. இலங்கை வர்த்தக சம்மேளனம் தெரிவித்ததாவது: "கடினமான பேரின பொருளாதார சூழல் இருந்த போதிலும், வரி சீர்திருத்தங்களுடன் தொடர்ந்தும் முன்செல்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம்."

பிரதான எதிர் கட்சிகள், வரவு செலவு திட்டத்தின் மீதான வெகுஜன எதிர்ப்பு மற்றும் சீற்றத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் (யூ.என்.பீ.) பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், இது சிறப்புப் பணக்காரர்களுக்கானது என கண்டனம் செய்தனர். எனினும், வலதுசாரி யூ.என்.பி., பெரு வணிகர்களின் கட்சி என்ற முறையில் அவப்பெயர் பெற்றதாகும். 1970களின் கடைப் பகுதியில் சந்தை சார்பு மறுசீரமைப்பை ஆரம்பித்த அது, தொடர்ச்சியாக பெருநிறுவன தட்டினருக்காகவும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காகவும் திசையமைவுபடுத்தப்பட்டதாக வரவு செலவுத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ) பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க, இந்த வரவுசெலவுத் திட்டம் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கு பெரும் அடி கொடுத்துள்ளது என்று அறிவித்தார். எனினும், ஜே.வி.பீ.யும் அதன் தொழிற்சங்கங்களும், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு அரசியல் போராட்டத்தையும் தடுக்கும் கருவியாக செயற்படுகின்றன. ஜே.வி.பீ. 2004ல், சர்வதேச நாணய நிதியத்தின் மறுசீரமைப்பு கோரிக்கைகளை செயல்படுத்திய, இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணி அரசின் ஒரு பகுதியாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தின் ஆணைகளை செயல்படுத்தத் தள்ளப்பட்டுள்ளதனால், தொழிலாளர்களின் பெருகிவரும் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆழமடைந்து வரும் நெருக்கடியையே இந்த வரவு செலவுத் திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது.