World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP public meeting on Historical and International Foundations document

வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் ஆவணத்தை பற்றி இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி பொதுக் கூட்டம்

By our correspondents
24 November 2012
Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேசிய அடித்தளங்கள் என்ற நூலை வெளியீடுவதற்காக நவம்பர் 8 அன்று கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் ஒரு பகிரங்க விரிவுரையை நடத்தின. 2011 மே மாதம் சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முக்கிய முன்னோக்கு தீர்மானமே இந்த ஆவணமாகும். சுமார் 100 பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. அழைப்பாளருமான கபில பெர்ணான்டோ கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அவர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஏனைய பகுதிகள் அவற்றின் ஸ்தாபக மாநாடுகளை நடத்திய அரசியல் சூழ்நிலையின் முக்கியத்துவத்தை விளக்கினார்.

"லெஹ்மன் பிரதர்ஸ் வீழ்ச்சியடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி அதனது காங்கிரஸை நடத்தியிருந்தது. அமெரிக்க இராட்சத நிதி நிறுவனமான லெஹ்மன் பிரதர்ஸின் பொறிவு, தற்போதைய உலக பொருளாதார சரிவையும் அது சர்வதேச புரட்சிகர தாக்கங்களைக் கொண்டிருப்பதையும் சமிக்ஞை செய்தது. இப்போது, முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடி, மனித குலத்தை ஒரு உலக அளவிலான பெருந்தீயை நோக்கித் தள்ளுகிறது. இந்த நெருக்கடிக்கு தேசிய தீர்வு கிடையாது. தொழிலாள வர்க்கம், அதன் சொந்த சர்வதேச சோசலிச முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வலியுறுத்துகிறது," என அவர் தெரிவித்தார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் பிரதான அறிக்கையை வழங்கியதோடு கட்டவிழ்ந்துவரும் சமூக எழுச்சிகளில் பிரதான பாத்திரத்தை ஆற்றுவதற்காக தொழிலாள வர்க்கத்தை தயார் செய்வதற்கே சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த ஸ்தாபக ஆவணங்கள் என்று விளக்கினார். முதலாளித்துவத்தின் வீழ்ச்சியினால் உருவாக்கப்பட்டுள்ள புரட்சிகர போராட்டங்கள் வெடிக்கின்ற நிலையில் இது முன்கூட்டியே அவசியமாகின்றது.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் ஸ்தாபக ஆவணம், 20ம் நூற்றாண்டில் அனைத்துலகத் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் மைய மூலோபாயப் பிரச்சினைகளின் "ஒரு உண்மையான காலவரிசைப் பட்டியலாகும்" என்று அவர் தெரிவித்தார். "சமூக ஜனநாயகம், ஸ்ராலினிசம் மற்றும் பல்வேறு மத்தியவாத மற்றும் குட்டி முதலாளித்துவ போக்குகளின் காட்டிக்கொடுப்புக்களுக்கு எதிராக அனைத்துலக மார்க்சிச இயக்கத்தின் போராட்டங்களின் வரலாற்றுப் படிப்பினைகளையே எமது முன்னோக்குகள் அடிப்படையாகக் கொண்டுள்ளன."

1929 வோல் ஸ்ட்ரீட் சரிவை அடுத்து முதலாளித்துவ நெருக்கடி அபிவிருத்தியடைந்த நிலையில், லியோன் ட்ரொட்ஸ்கி எவ்வாறு தலையீடு செய்தார் என்பதை டயஸ் விளக்கினார். ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்தின் தேசிய சந்தர்ப்பவாத கொள்கைகளின் ஆதிக்கத்தில் இருந்த மூன்றாவது அகிலத்தின் போக்கை மாற்ற, இடது எதிர்ப்பு அணிக்கு தலைமை வகித்துக்கொண்டிருந்தார். 1933ல் ஜேர்மனியில் ஸ்ராலினிசத்தின் கோரமான காட்டிக்கொடுப்பின் பின்னர், ட்ரொட்ஸ்கி நான்காம் அகிலத்துக்கான போராட்டத்தினை தொடங்கினார். முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்துக்கு எதிராகப் போராட, ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத் திட்டத்துடன் ஏகாதிபத்திய மற்றும் காலனித்துவ உலகின் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்காக, இரண்டாம் உலக போருக்கு ஒரு ஆண்டுக்கு முன், 1938ல் நான்காம் அகிலம் நிறுவப்பட்டது, என டயஸ் கூறினார்.

"1930களின் பொருளாதார சரிவை விட மோசமானதாக உள்ள முதலாளித்துவப் பொறிவின் அழிவுகரமான விளைவுகளை இன்று நாம் காண்கின்றோம். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் ஒவ்வொரு நாட்டினதும் பொருளாதார வளர்ச்சி பற்றி குறைத்துக் கணிப்பிட வேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டுள்ளன. முன்னர் பொருளாதார வளர்ச்சியின் இயந்திரங்களாக கருதப்பட்ட சீனா மற்றும் இந்தியா, தங்கள் விகிதங்களை 4 சதவீத புள்ளிகளால் குறைத்துக்கொண்டுள்ளன," என டயஸ் கூறினார்

ஒவ்வொரு அரசாங்கமும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமையை அழிக்க கடுமையான சிக்கன திட்டங்களை மேற்கொள்கின்றமை தொழிலாளர்களை போராட்டத்துக்கு எழச் செய்யும், என அவர் தொடர்ந்தார்.

2011ல் துனீசியா மற்றும் எகிப்தில் நடந்த புரட்சிகர எழுச்சிகளைத் தொடர்ந்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வேலை நிறுத்த மற்றும் ஆர்ப்பாட்ட அலைகள் கிளம்பின. ஆனால் இந்த போராட்டங்கள், "புரட்சிகர முன்னோக்கு மற்றும் தலைமை இல்லாத காரணத்தால் பின் தள்ளப்பட்டன. இந்தியாவின் மிக பெரிய வேலை நிறுத்தங்கள் மற்றும் இலங்கையில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் அண்மைய 100 நாள் வேலை நிறுத்தமும் அதே இக்கட்டான நிலையை எதிர்கொண்டன," என டயஸ் தெரிவித்தார்.

அரசியல் தயார்நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய டயஸ், 1991ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஆளும் வர்க்கம் வரலாற்றின் முடிவு மற்றும் சோசலிசத்தின் இறுதி என அறிவித்தது என்றார். "நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, 1985-86ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சி கட்சியின் சந்தர்ப்பவாத ஓடுகாலிகளிடம் இருந்து அரசியல் ரீதியில் பிளவுபட்டதன் மூலம், முன்னதாகவே தயார் நிலையில் இருந்ததன் காரணமாக, இந்த வெற்றி ஆரவாரத்தை எதிர்க்க முடிந்தது."

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற ஆவணம், கடந்த நூற்றாண்டில் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் முக்கிய மூலோபாய அனுபவங்களை பற்றிய உண்மையான மதிப்பீட்டை மட்டுமே வழங்குகிறது, என்று பேச்சாளர் விளக்கினார். அனைத்து வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்ற இன்றியமையாத உண்மையை நிராகரிக்கும் முதலாளித்துவ கல்வியாளர்களின் படைப்புகளில் இவற்றைக் காண முடியாது.

இலங்கை முதலாளித்துவம் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தைப் போல் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து ஏன் சுதந்திரத்தைக் கோரவில்லை என்பதை இந்த ஆவணம் விளக்குகிறது, என டயஸ் கூறினார். இதற்குக் காரணம், இலங்கை முதலாளித்துவவாதிகள் பிரமாண்டமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாள வர்க்கத்தை எதிர்கொண்டதோடு அவர்கள் அதை பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களை விட மிகப் பெரிய ஆபத்தாகவும் கருதினர்.

இதனாலேயே, அவர்கள் மீது சுதந்திரம் திணிக்கப்பட்ட போது இலங்கை முதலாளித்துவவாதிகள் உடனடியாக தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக வஞ்சம் தீர்க்க முன்நகர்ந்தனர், என டயஸ் கூறினார். இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் (BLPI) ட்ரொட்ஸ்கிஸ்டுகள் மட்டுமே, அந்த திட்டமிட்ட தாக்குதல்களுக்கு எதிராக ஒரு கொள்கை ரீதியான போராட்டத்தை நடத்தினர்.

தேசிய சந்தர்ப்பவாத லங்கா சமசமாஜ கட்சிக்கு எதிர் நிலையில் இருந்து பி.எல்.பீ.ஐ. முன்னெடுத்த போராட்டம் இந்த சோசலிச சமத்துவக் கட்சி ஆவணத்தில் கலந்துரையாடப்படுகிறது. லங்கா சம சமாஜ கட்சி 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொண்டதில் செய்த மாபெரும் காட்டிக்கொடுப்பில் உச்சகட்டத்தை அடைந்த, 1950களில் தொடங்கிய அந்த கட்சியின் அரசியல் பின்னடைவும் இதில் அடங்கும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் இணைந்து 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தை (பு.க.க.) உருவாக்குவதற்கு முன்நடவடிக்கைகளை எடுத்த, காலஞ்சென்ற தோழர் கீர்த்தி பாலசூரியா உட்பட சிலர் ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தை பாதுகாத்தனர். ட்ரொட்ஸ்கியைப் பற்றிய மற்றும் பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் வரலாற்று பாரம்பரியத்தை பற்றிய ஒரு முழுமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த தத்துவார்த்த அடித்தளங்கள், கடந்த 44 ஆண்டுகளாக, ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான, சுயாதீன பாட்டாளி வர்க்க புரட்சிகர நிலைப்பாட்டை பாதுகாக்கவும், இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியா முழுவதும், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு போராட்டத்திற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை வழங்க புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்துக்கு இயலுமையை கொடுத்தன, என டயஸ் மேலும் தெரிவித்தார்.

ஒவ்வொரு சந்தர்ப்பவாத போக்கும் அதன் சொந்த வரலாற்றுக்கு அஞ்சுகிறது, என டயஸ் தொடர்ந்தார். அவர்களது கொள்கைகள் அன்றன்டாட நடைமுறையில் அக்கறைகாட்டுவதிலேயே தீர்மானிக்கப்படுகின்றன. இலங்கையில் நவசமசமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் இந்த வகையறாவில் அடங்கும். "முன்னர் அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை (யூ.என்.பீ.) வெளியேற்ற இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஆதரித்தனர். இன்று அவர்கள் இராஜபக்ஷவுக்கு எதிராக யூ.என்.பி. உடன் இருக்கின்றனர்," என பேச்சாளர் கூறினார்.

டயஸ் இந்த போலி இடது அமைப்புக்களுக்கும் அமெரிக்கவில் சர்வதேச சோசலிச அமைப்பு, பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கட்சி, எகிப்தில் புரட்சிகர சோசலிசலிஸ்ட் மற்றும் பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற அவர்களது சர்வதேச சக சிந்தனையாளர்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது, என அவர் சுட்டிக்காட்டினார்.

"இதற்கு மாறாக, தெற்காசியாவிலும் மற்றும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் பேரில், தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காகவும் அதற்குப் பின்னால் ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டுவதற்காகவும் இடைவிடாது போராடும் உறுதியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டதே சோசலிச சமத்துவக் கட்சியாகும். ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் நான்காம் அகிலம் இந்த முன்னோக்குக்கே போராடுகிறது.

"சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு ஆவணத்தில் உள்ளடங்கியுள்ள வரலாற்று படிப்பினைகள், அரசியல் அதிகாரம் பற்றிய பிரச்சினையை முன்கொணரும் போராட்டங்களில், அனைத்து சமூகங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு மிகப் பெறுமதிமிக்க புரட்சிகர வழிகாட்டியாகும். இந்த போராட்டத்துக்குத் தலைமை வகிக்க தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்பப்பட வேண்டும்," என வலியுறுத்தி டயஸ் உரையை முடித்தார்.

பல தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் விரிவுரை சம்பந்தமாக ஆர்வத்துடன் பிரதிபலித்ததுடன் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைவது பற்றி தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும் உடன்பட்டனர்.