World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South African unions, government seek to quell spreading wildcat strikes

தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் திடீர் வேலைநிறுத்தங்கள் பரவுதலை அடக்க முற்படுகின்றன

By Joseph Kishore
8 October 2012
Back to screen version

பிளாட்டினம் மற்றும் தங்கச் சுரங்கங்களில் இருந்து கார்த்தயாரிப்பு நிறுவனங்கள், போக்குவரத்துத்துறை என அலையனெ வெடித்துவரும் வேலைநிறுத்தங்களை கட்டுப்படுத்துவதற்கு தொழிற்சங்கங்களும் அரசியல் நடைமுறையும் தீவிரமாக முயன்று வருகின்றன.

வெள்ளியன்று உலகின் மிகப் பெரிய பிளாட்டினம் உற்பத்தி செய்யும் நிறுவனமான ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம் (Amplats -ஆம்பிளாட்ஸ்), திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 12,000 தொழிலாளர்களைப் பணி நீக்கம் செய்தது. ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்த வேலைநிறுத்த அலையில் இருந்து இது அத்தகைய முதல் பாரிய பணிநீக்கம் ஆகும். சனிக்கிழமை அன்று Atlasta Resources தான் ஆம்பிளாட்ஸ் உடனான அதன் கூட்டு முயற்சியான போகோனி பிளாட்டினம் சுரங்கத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 2,500 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

இத்தகைய அடக்குமுறை நடவடிக்கைகள், தென்னாபிரிக்க தொழிற்சங்கங்களின் காங்கிரஸ் (COSATU) தான் சுரங்கத் தொழில் கூட்டமைப்புடன் தேசிய அளவில் பேச்சுவார்த்தைகளை நடாத்த நாடியிருப்பதாகக் கூறியுள்ளதுடன் இணைந்து வந்துள்ளன. இது பெரும்பாலும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களின் வடிவமைப்பிற்கு வெளியே வெடித்துள்ள வேலைநிறுத்த அலையைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டதாகும். 80,000 சுரங்கத்தொழிலாளர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

NUM எனப்படும் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் ஒன்றியத்தை முக்கிய உறுப்பு அமைப்பாகக் கொண்டுள்ள COSATU, ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC) உடன் நெருக்கமாக இணைந்துள்ளது. பிந்தையதுதான் தென்னாபிரிக்க ஆளும்வர்க்கத்தின் முக்கிய அரசியல் கட்சியாகும்.

வெள்ளியன்று கார்லெடன்வில்லேக்கு அருகே வேலைநிறுத்தம் செய்யும் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் கூட்டத்தில், “COATSU இப்பொழுது முன்னணியில் இருந்து, சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் என்று அதன் பொதுச் செயலர் ஜ்வெலின்ஜிமா வவி கூறினார். Gold Fields இல் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அவர் பெயரளவு ஆதரவைக் கொடுத்துள்ளார். இது உலகின் நான்காம் மிகப் பெரிய தங்கச் சுரங்க நிறுவனம் ஆகும். கடந்த வாரம் வவி 13,000 சுரங்கத் தொழிலாளர்கள் செய்துவரும் மூன்றுவார கால வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கான பேச்சுக்களில் அந்நிறுவனத்துடன் ஈடுபட்டுள்ளார்.

சுரங்கத் தொழில்துறை இன்னும் திடீர் வேலைநிறுத்தங்களை தவிர்க்க வேண்டும் என்றால், நாம் இப்பொழுது பேச்சுக்களை நடத்துவதைத் தவிர வேறு தேர்வு இல்லை என்றார் வவி. COSATU இன்று சுரங்க உரிமையாளர்கள் குழுவினரைச் சந்திக்க உள்ளது.

கவலைப் படுவதற்கு வவியிடம் காரணங்கள் உள்ளன. எழுச்சி பெறும் வர்க்கப் போராட்டங்களின் தாக்கத்தினால் COSASTU வினது அமைப்புரீதியான மேலாதிக்கம் மற்றும் அதனூடாக ANC உடைய மேலாதிக்கம் சிதைந்து கொண்டிருக்கிறது. ஆனால்  COSATU தலையீட்டின் நோக்கம் தொழிலாளர்களின் கோரிக்கைகளை அடைய வேண்டும் என்பதல்ல. மாறாக சுரங்க நிறுவனங்களின் நலன்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றுதான் உள்ளது. 

ஆம்பிளாட்ஸிலும் இன்னும் பிற சுரங்கங்களிலும் நடக்கும் திடீர் வேலைநிறுத்தங்கள் NUM மீது இருக்கும் ஆழ்ந்த விரோதப் போக்கினால் உந்துதல் பெறுகின்றன. NUM ஆகஸ்ட் மாதம் லோன்மின் மாரிக்கானா பிளாட்டினம் சுரங்கத்தில் 34 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் படுகொலையில் நேரடி உடந்தையாக இருந்தது.

ஞாயிறன்று வெளியிட்ட ஒரு ஆய்வில் ராய்ட்டர்ஸ் பின்வருமாறு எழுதுகிறது: தென்னாபிரிக்க தொழிலாளர் சந்தையில் இருக்கும் விதிகள் மாறிவிட்டன. புதிதாக விதி இயற்றுபவர்கள் ஆம்பிளாட்ஸில் திடீரென வேலைநிறுத்தும் செய்யும் ஷிபோ மோடிஸ் மற்றும துலானி சோகோ போன்ற தொழிலாளர்கள்தான்.

ஒரு 30-வயது இயந்திரம் இயக்கும் மோடிஸ் ஐ ராய்ட்டர்ஸ் மேற்கோளிட்டுள்ளது; அவர் ஜோகன்ஸ்பர்க்கிற்கு வடமேற்கே ஆம்பிளாட்ஸ் சுரங்கத்திற்கு அருகே உள்ள சேரிக் குடியிருப்பில் வசிக்கிறார். தொழிற்சங்கங்களுடன் ஒரே மேசையில் நாங்கள் உட்கார விரும்பவில்லை. எங்களை அவர்கள் நாசப்படுத்திவிட்டனர். என்றார் அவர்.

நாடெங்கிலும் இருக்கும் சுரங்கத் தொழிலாளர்கள் மோசமான பணி நிலைமைகள் மற்றும் அதிகரிக்கும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றால் போராட்டத்தில் தள்ளப்பட்டுள்ளனர். லோன்மின் சுரங்கப் போராட்டத்தின் விளைவுகளாலும் அவர்கள் ஊக்கம் பெற்றுள்ளனர். அங்கு ஒரு சமூக வெடிப்பைத் தவிர்க்கும் முயற்சியாக சுரங்க நிறுவனம் 22 சதவிகிதம் ஊதிய உயர்வைக் கொடுக்க கடந்த மாதம் ஒப்புக் கொண்டுள்ளது.

ஆம்பிளாட்ஸில் பெரும் துப்பாக்கிச் சூடுகளுக்கு பிரதிபலிப்பாக போராட்டம் விரிவுபடுத்தப்படும் என தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கூறினர். நிறுவனம் எங்கள் சடலங்களின் மீதுதான் பதிலுக்கு மற்றவர்களை வேலைக்கு அமர்த்த முடியும் என்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளி ஈவான்ஸ் ராமோக்கா சனிக்கிழமை நடைபெற்ற அணிவகுப்பில் கூறினார்.

பொலிசார் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டு மற்றும் இரப்பர் தோட்டாக்களை இயக்கி ஒரு தொழிலாளியை கொன்றதற்கு மறுநாள் பாரிய துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. 48 வயதான மிட்சுவன்க்வெலெனி ககம்பா என அடையாளம் காணப்பட்டுள்ள தொழிலாளி ஒரு இரப்பர் தோட்டாவால் வயிற்றில் சுடப்பட்டிருந்தார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரதிநிதி ஒருவர் தென்னாபிரிக்க பொலிஸ் பிரிவிற்கு எதிராக கொலை குறித்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய இருப்பதாக அறிவித்தார்.

ஒரு தொழிலாளர் பிரதிநிதியான ஜோர்ஜ் ட்யோபெகா, AFP செய்திநிறுவனத்திடம் பின்வருமாறு கூறினார்: அவர்கள் மக்கள் மீது சுட்டு.... எங்களில் ஒருவரை கொல்லும்வரை ஊழியர்கள் போராடவில்லை; அவர்கள் ஒரு குன்றின் மீது வெறுமனே அமர்ந்திருந்தனர்.

இதற்கிடையில் கும்பா இரும்புத் தாதுப் பொருள் சிஷென் சுரங்கத்திலுள்ள 300 தொழிலாளர்கள் ஒரு திடீர் வேலைநிறுத்தம் செய்தனர். இவர்களும் NUM இன் கட்டுப்பாட்டிற்கு வெளியே இருப்பவர்கள் ஆவர்.

சுரங்கத் தொழிலில் அலையென வேலைநிறுத்தங்கள் நடைபெறுவதைத்தவிர, போக்குவரத்துத் துறையிலும் வேலைநிறுத்தங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இவை COSASTUவில் குறைந்தபட்சம் தற்பொழுதேனும் அங்கத்துவ அமைப்புக்களாக இருக்கும் தொழிற்சங்கங்களின் வடிவமைப்பிற்குள் இருக்கின்றன.

ஜோகன்ஸ்பேர்க்கில் கிட்டத்தட்ட 20,000 வாகன சாரதிகள் இரண்டு வாரங்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இது நாட்டின் முக்கியமான பொருளாதார மையங்கள் ஒன்றிற்கு எரிபொருள் இன்னும் பிற பொருட்கள் அனுப்பப்படுவதைப் பெரிதும் பாதித்துள்ளது. வார இறுதியில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் சில பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாபிரிக்க போக்குவரத்து, தொடர்புடைய தொழிலாளர்களின் சங்கம் SATAWU, துறைமுகம் மற்றும் இரயில் பணியாளர்களின் ஒருநாள் வேலைநிறுத்தத்திற்கு இந்த வாரம் ஏற்பாடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

SATAWU வைத் தவிர, Professional Transport and Allied Workers Union (PTAWU) மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களும் (MTWU) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கான ஒரு உடன்பாட்டினை அண்மித்திருப்பதாக தொழிற்சங்கங்கள் குறிப்புக் காட்டியுள்ளன. இதனால் வேலைநிறுத்தம் செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் ஒரு பரந்த தொழிலாள வர்க்க அணிதிரடுதலில் இருந்து ஒதுக்கப்படக்கூடும். மிக அதிகமானவை பணயத்தில் இருப்பதால் தீர்வு காணமுடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று MTWU தலைவர் டிர்க் வைட் கூறியுள்ளார்.

பெரும்பாலான தொழிற்சங்கங்கள் Road Freight Employers Association (RFEA) எனப்படும் சாலைப் போக்குவரத்து முதலாளிகள் சங்கத்தில் ஒரு உடன்பாட்டில் கடந்த வாரம் கையெழுத்திட்டுள்ளன. உடன்பாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு சராசரியாக 9 சதவிகித ஊதிய உயர்வு அடங்கும். இதில் 10% முதலாண்டு அதிகரிப்பும் இருக்கும். மத்திய கோரிக்கையாக ஆண்டு ஒன்றிற்கு இரட்டை இலக்க அதிகரிப்பு தேவை என்று கோரியுள்ள SATAWU உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை.

வேலைநிறுத்தத்தை முடிப்பதற்கான முயற்சியில் சாலைப் போக்குவரத்து முதலாளிகள் சங்கம் (RFEA) நீதிமன்ற ஆணை ஒன்றப்பெற முயல்கிறது.  உள்ளூர் செய்தி ஊடகம் வேலைநிறுத்தம் செய்பவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் என்ற குற்றச்சாட்டைப் பரப்புகின்றனர். தங்கள் கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மறுத்தால், வேலைநிறுத்தத்தை முடிக்க நேரடி அரசாங்கத் தலையீடு மேற்கொள்ளப்படும் என்னும் அச்சுறுத்தலும் தொழிலாளர்கள் முன் வைக்கப்பட்டுள்ளது.