World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US elections and the unemployed

அமெரிக்கத் தேர்தல்களும் வேலையில்லாதோரும்

Patrick Martin
8 October 2012


Back to screen version

வெள்ளியன்று வேலைகள், வேலையின்மை பற்றிய அமெரிக்கத் தொழிலாளர் துறை அறிக்கை குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் என்று இரண்டும் அடங்கிய பெருநிறுவன ஆளும் உயரடுக்கிற்கும் மக்களில் பெரும்பான்யினரான தொழிலாளர்களுக்கும் இடையே இருக்கும் இணைக்கமுடியாத பெரும் பிளவைத்தான் நிரூபிக்கின்றன.

உத்தியோகபூர்வ புள்ளி விவரங்கள் செப்டம்பர் மாதம் 114,000 வேலைகள் ஒரு நிகர அதிகரிப்பாக கூடியுள்ளதைக் காட்டுகின்றன. இந்த எண்ணிக்கை முந்தைய மதிப்பீடுகளோடு நெருக்கமாக உள்ளதோடு, வேலையின்மை விகிதம் 8.1 %என்பதில் இருந்து 7.8% ஆக குறைவும் என எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகமாக இருந்தது. 40%க்கும் மேலான வேலையற்றோரில், கிட்டத்தட்ட 5 மில்லியன் தொழிலாளிகள், ஆறு மாதங்களுக்கும் மேலாக வேலையில்லாது உள்ளனர்.

ஒபாமா நிர்வாகமும் ஜனநாயகக் கட்சியும் உடனே வேலையின்மை விகிதத்தில் சரிவைப் பாராட்டினர். இது ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்ததில் இருந்து முதல் தடவையாக 8%க்கும் கீழே போயுள்ளது. இந்த அறிக்கை புதன் இரவு ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதத்தில் ஜனாதிபதியின் சோர்வுற்ற செயற்பாட்டில் இருந்து வரவேற்கத்தக்க மாறுதல் என்றும் அவர்கள் கருதினர்.

குடியரசுக் கட்சியும் வலதுசாரிச் செய்தி ஊடகப் பண்டிதர்களும் குறிப்பாக வேலையின்மை விகிதம் பற்றி அறிக்கையை கண்டித்தனர். இது ஒபாமா சார்பு அரசாங்க அதிகாரிகள் ஒரு சாதகமான வேலையின்மை புள்ளி விவரத்தை நவம்பர் 6 நடக்க இருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு கொடுக்கும் சதியின் விளைவு என்றும் கூறினர்.

114,000 நிகர புதிய வேலைகள்தான் என மிக நிதானமான வேலை அதிகரிப்பு என்று முதலாளிகள் கொடுத்துள்ள மதிப்பீட்டிற்கும் 800,000 குடும்பத்தினருக்கு மேல் அதிகரித்துள்ளன என்று கூறும் இந்த மதிப்பீட்டிற்கும் இடையே முரண்பாடு இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் இரு புள்ளிவிவரங்களும் தனித்தனி மதிப்பீட்டின் அடிப்படையில் தொகுக்கப்படுவதாகும். குடும்பங்கள் பற்றிய மதிப்பீடு இழிந்த முறையில் உறுதியற்றதாகும். அவை பொதுவாக முரண்பாடான விளைவுகளைத்தான் காட்டும்.

மேலும் குடும்பங்கள் பற்றிய மதிப்பீட்டின் அதிகரிப்பில் பெரும்பகுதியான கிட்டத்தட்ட 600,000 வேலைகள் பகுதி நேர வேலைகளில் வந்துள்ளது என்றும் இதிலும் பெரும்பாலானவை கல்லூரி மாணவர்கள் அவர்கள் பள்ளிக்குச் செல்லுவதால் பணி நேரத்தைக் குறைக்கும் பருவக்கால முறையினால் ஏற்படும் மாற்றங்களோடு தொடர்புடையவை. ஆகஸ்ட் மாதம் எதிர்பாராமல் வேலையின்மையில் 20 முதல் 24 வயதானவர்கள் குறித்த வேலையின்மை பெரும் சரிவை காட்டியது. அதாவது வரலாற்றுரீதியான சராசரி 98,000 என்பதில் இருந்து 530,000 என்று இருந்தது. செப்டம்பரின் அதிகரிப்பு அந்த அசாதாரண சரிவின் ஒரு தலைகீழாதலைத்தான் பிரதிபலிக்கக் கூடும்.

விவாதம் பற்றி மிகவும் குறிப்பிடத்தக்கது பொருளாதார முன்னேற்றம் பற்றிக் குறிப்பிட எந்த அளவு குறைந்த கட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பதுதான். ஜனநாயகக் கட்சியினர் களிப்படைகின்றனர், குடியரசுக் கட்சியினர் பெரும் தவறு என்று வேலையின்மை அறிக்கை பற்றிக் கூறுகின்றனர். வேறு எந்த ஜனாதிபதித் தேர்தல் ஆண்டிலும் இந்த எண்ணிக்கை பேரழிவு கொடுக்கக் கூடியது என்றுதான் கருதப்படும். பெருமந்த நிலைக்காலத்திய பிராங்க்ளின் ரூஸ்வெல்ட் காலத்தில் இருந்து எந்த ஜனாதிபதியும் வேலையின்மை 7.3% என்று உயர்ந்து இருந்தபோது மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

இரு பெருவணிகக் கட்சிகளும் வேலையின்மைப் புள்ளி விவரங்களை முற்றிலும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி மாதத்தில் ஒருவர் மீது ஒருவர் சேற்றை இறைப்பதில் ஆதாயம் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் காண்கின்றன. இரு கட்சிகளிலும் எதற்குமே உத்தியோகபூர்வமாக வேலையின்மையில் இருக்கும் 12.1 மில்லியன் மக்களுடைய நிலைமை அல்லது வேலையின்றி அல்லது பகுதி நேர வேலையில் மட்டும் இருக்கும், ஆனால் முழுநேர வேலை தேவை என்றுள்ள 23 மில்லியன் மக்களைப் பற்றி அல்லது வறுமையிலும் அதிகரிக்கும் நம்பிக்கையின்மையிலும் இருக்கும் பல மில்லியன் மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது.

ஒபாமாவும் ஜனநாயக கட்சியினரும் வேலையற்றோரை வறுமைத் தர ஊதியங்களுக்கு வேலை கொடுக்கும் பணிகளைத் தோற்றுவிப்பது ஒரு புறம் இருக்க, மீண்டும் பணியில் இருத்துவதற்குப் புதிதாக எக்கருத்தையும் கூறிவிடவில்லை. காங்கிரசின் இரு பிரிவுகளையும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்படுத்திய 2009ம் ஆண்டில் ஏற்கப்பட்ட ஊக்கப் பொதி, குடியரசுக் கட்சியினரின் ஆதரவை ஈர்ப்பதற்காகவே வேண்டும் என்று தயாரிக்கப்பட்டதுடன், அதில் வணிகங்களுக்கு வரிக்குறைப்புக்கள் மீது கவனம் காட்டப்பட்டன. மத்திய அரசாங்கம் நேரடியாக வேலைகளைத் தோற்றுவித்தல் என்பது கைவிடப்பட்டது.

ஒபாமா வெள்ளை மாளிகையில் நுழைந்ததில் இருந்து, அவருடைய முக்கிய அக்கறை தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் வோல்ஸ்ட்ரீட் வங்கிகளுக்கு பிணை கொடுத்தல், கார்த்தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பிணை கொடுத்தல் என்றுதான் இருந்தது.

மரபார்ந்த முறையில் பெருவணிக அரசியலின் செயற்பட்டியல் மற்றும் எல்லைக் கோடுகளை நிர்ணயிக்கும் குடியரசுக் கட்சியினர் இன்னும் கடுமையான முறையில் வறுமையைக் குறைத்தல், வேலையின்மையை அகற்றுதல், சமூக துன்பங்களை போக்குதல் ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். உள்நாட்டுச் சமூகநலச் செலவுகளை கிட்டத்தட்ட அழித்துவிடும் வரவு-செலவுத் திட்டங்களை முன்வைக்கின்றனர். உணவு உதவிகளுக்கும் மருந்துவ உதவிகளுக்கும் உரிமை என்ற வகையில் முற்றுப்புள்ளி வைப்பதுடன் அவற்றை மிகவும் குறைவான நிதியுடைய மாநிலங்களுடைய பொறுப்பிற்கும் மாற்றியுள்ளனர்.

உண்மையான வெளிப்படையாக பேசும் கணத்தில், இரு ஜனாதிபதி வேட்பாளர்களின் அணுகுமுறை தொழிலாள வர்க்க மக்கள் குறித்து எப்படி இருக்கிறது என்பதை அவர் கௌரவமான வீடுகள், உணவு, சமுகப் பணிகளுக்கு உரிமை உடையவர்கள் என கருதும் 47 சதவிகித கருத்தை உதறியபோது ரோம்னி வெளிப்படுத்தினார். அவர்களைப் பற்றி நான் கவலைப்பட முடியாது என்றார் அவர். இந்த 47%த்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் தன்னுடைய பிரச்சார உரைகளில் பரிவுணர்வு காட்டுகின்றனர் என நினைக்கும் அனைத்து வேலையில்லாதோரும் அடங்குவர்.

2012 தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே ஒரு கட்சிதான் வேலையற்றோருக்கும் தகுதிக்கு குறைந்த வேலைகளில் இருப்பவர்கள் சார்பில் பேசி, சமூக உரிமைகளில் மிகவும் அடிப்படையானது வேலைபெறும் உரிமை என்பதை நிலைநிறுத்துகிறது. அதுதான் சோசலிச சமத்துவக் கட்சியும் எமது வேட்பாளர்களான ஜனாதிபதிப் பதவிக்கு ஜெரி வைட்டும், துணை ஜனாதிபதிப் பதவிக்கு பிலிஸ் ஷேரரும் ஆவர்.

சோசலிச சமத்துவக் கட்சியுடைய பிரச்சாரம் அவசரகால பொதுப்பணித் திட்டத்தை கோருகிறது. இது அனைவருக்கும் வேலையளிக்கும் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்; பள்ளிகள் மறுகட்டமைக்கப்பட வேண்டும், மருத்துவ மனைகள், பொதுவீடுகள், சாலைகள், வெகுஜனப் போக்குவரத்து வசதிகள் இன்னும் பிற சமூக உள்கட்டமைப்புக்கள் தேவைப்படுகின்றன. பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மற்றும் தொழிலாளர் பிரிவில் நுழையும் புதிய இளந்தலைமுறையினர் அனைவருக்கும் நாம் சம்பளத்துடன் கூடிய வேலைப் பயிற்சி மற்றும் வேலை என்று கோருகிறோம். பொருளாதாரத்தில் ஒரு புதிய சரிவு தொடுவானில் தென்படும் சூழலில் பாரிய பணிநீக்கம், ஆலை மூடல்கள் ஆகியவற்றிற்கு எதிரான நேரடிப் போராட்டத்திற்குத் தொழிலாள வர்க்கம் அணிதிரட்டப்பட வேண்டும் என்று அழைப்பு விடுகின்றோம்.

வேலைகளுக்கான போராட்டம் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தைத் அடித்தளமாகக் கொண்ட பரந்த அரசியல் இயக்கத்தை வளர்க்கும் பரந்த போராட்டத்துடன் பிணைந்துள்ளது. இதுதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் எமது இளைஞர் அமைப்பான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள், மாணவர்கள் என்ற பிரிவு தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரங்களில் நடத்தும் மாநில மாநாடுகளின் உள்ளடக்கமாகும். இவற்றைப் பற்றி மேலதிகமாக தெரிந்து கொள்ளுவதற்கும் மாநாடுகளில் கலந்து கொள்ளவும் இங்கே அழுத்தவும்.