World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The diversionary debate over the Benghazi attack

பென்காசி தாக்குதல் குறித்து திசைதிருப்பும் விவாதம்

Bill Van Auken
12 October 2012
Back to screen version

கிழக்கு லிபிய நகரான பென்காசியில் அமெரிக்க தூதரகத்தின் மீதும் சிஐஏ கட்டிடம் ஒன்றின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலில் தூதர் ஜே.கிறிஸ்டோபர் ஸ்டீவன்சும் மற்றும் மூன்று அமெரிக்கர்களும் கொல்லப்பட்டு ஒரு மாத காலம் கடந்து விட்டிருக்கும் நிலையில், இந்தச் சம்பவம் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் விவாதப் பிரச்சினைகளில் ஒன்றாக ஆகியிருக்கிறது.

செப்டம்பர் 11 அன்று நடந்த இந்தத் தாக்குதல் குறித்து புதனன்று நாடாளுமன்றத்தில் நடந்த விசாரணை கட்சிகளின் சூடான விவாதத்தைக் கொண்டிருந்தது. லிபியாவில் இருந்த அமெரிக்கர்களுக்கு போதுமான பாதுகாப்பினை வழங்குவதற்கு ஒபாமா நிர்வாகம் தவறியதாக குடியரசுக் கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு ஜனநாயகக் கட்சியினர் அளித்த பதிலடியில், தூதரகப் பாதுகாப்பிற்கான செலவுகளை வெட்டுவதற்கு நிர்ப்பந்தம் செய்த அதே குடியரசுக் கட்சியினர் இப்போதுஒரு துயரசம்பவத்தை அரசியலாக்கமுனைகின்றனர் என்று கூறினர்.

இஸ்லாமிய-விரோத வீடியோ ஒன்றுக்கு எதிராக பிராந்தியம் தோறும் எழுந்த ஆர்ப்பாட்டங்களில் இருந்து எழுந்த ஒரு தன்னெழுச்சியான சம்பவம் என்று இந்தத் தாக்குதலை ஆரம்பத்தில் விவரித்ததானது அல்கெய்தா பயங்கரவாத நடவடிக்கை ஒன்றை மறைக்கின்ற செயலுக்கு நிகரானது என்று குடியரசுக் கட்சியினர் கூறினர். புதன் இரவு நிகழ்ந்த நேர்காணல் ஒன்றில் இந்த வாதத்தை ஜனாதிபதி ஒபாமா நிராகரித்தார். ஆரம்ப அறிக்கைகள் அப்போது வரை கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன என்றும் அவரது நிர்வாகத்திற்கு ஒருமுழுமையான சித்திரம்கிடைத்தவுடன் அவை திருத்தப்பட்டன என்றும் அவர் வலியுறுத்தினார்.

திரிபோலியில் இருக்கும் அமெரிக்கத் தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தலைவரும், அங்கே நிறுத்தப்பட்டு பின் திருப்பிப் பெறப்பட்ட 16 உறுப்பினர் இராணுவப் பாதுகாப்பு குழுவின் தலைவரும் சாட்சியமளிக்கையில், தாங்கள் இருவருமே அந்தக் குழுவை தொடர்ந்து அங்கு பராமரிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் ஆனால் மாறான மேல் முடிவு அரசு நிர்வாகத்தால் எடுக்கப்பட்டதாகவும் கூறினர்.

இந்த விவாதம் அடிப்படையான அரசியல் கேள்விகளில் இருந்து நழுவிக் கொண்டது என்பது தான் திகைக்க வைக்கும் விடயம். லிபியாவின் ஆட்சித்தலைவராய் இருந்த முமார் கடாபி கொல்லப்பட்டு அவரது ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு நடத்தப்பட்ட அமெரிக்க-நேட்டோ போர் வெற்றி பெற்ற சமிக்கை கிட்டிய சுமார் ஒரு வருட காலத்திற்குப் பின் லிபியாவின் நிலை இப்போது என்ன? மனித வாழ்க்கையைப் பாதுகாப்பதற்கும் ஜனநாயகத்தை ஊக்குவிப்பதற்குமாய் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட இந்தப் போர் அல்கெய்தாவுடன் இணைந்த போராளிகள் தண்டனை அச்சமின்றி செயல்பட முடிகின்ற ஒரு சூழலை உருவாக்கியிருப்பது எப்படி?

லிபியாவில் அமெரிக்கக் கட்டிடங்களில் இராணுவப் பாதுகாப்பை அகற்ற விரும்பியது அரசு நிர்வாகத்தின் அதிகாரத்துவம் மட்டுமல்ல, தூதர் ஸ்டீவன்ஸே கூட அதையே விரும்பினார். அமெரிக்கப் போர் லிபிய மக்களைவிடுதலை செய்திருக்கிறதுஎன்றும் வட ஆபிரிக்காவில் ஒரு புதியஜனநாயகத்தை உருவாக்கியிருக்கிறது என்றுமான ஒரு பொய்யை இருவருமே ஊக்குவித்தனர்.

கடாபி அடித்துக் கொல்லப்பட்டதற்கு ஒரு வருடத்திற்குப் பின் லிபியாவில் நிலவும் யதார்த்த நிலை என்பது உள்நாட்டுப் போருக்கு நெருக்கமான குழப்ப நிலையாக இருக்கிறது. செயல்படும் அரசாங்கம் என்று ஒன்று இல்லை. கனமாய் ஆயுதமேந்திய நூற்றுக்கணக்கான போராளிகள் தான் நாட்டின் பெரும்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றனர். உத்தியோகபூர்வ வட்டங்களுக்காக, லிபியா ஒருசெயல்படா அரசுஎன்றும்அடுத்த ஆப்கானிஸ்தான்என்றும் அதிகமாய் விவரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்தபா அபு ஷகுர் - நீண்டகால சிஐஏ சொத்தான இவர் செப்டம்பர் 12 அன்று பிரதமராக தெரிவானார் - அகற்றப்பட்டதால் ஒரு மாத இடைவெளியில் அரசாங்கம் நான்கு தலைவர்களைக் கண்டிருக்கிறது. பிராந்திய கன்னைகளுக்கு இடையில் எல்லை பிரிப்பதிலான கடும் மோதல்கள் வலிமையற்ற ஆட்சியை முடக்கிப் போட்டிருக்கிறது

இதனிடையே பானி வாலிட் சூழ்நிலைவிடுதலைக்கு ஒரு வருடத்திற்குப் பிறகான லிபியாவின் நிலைமையின் அப்பட்டமான வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. சுமார் 70,000 பேர் வசிக்கும் இந்த பானி வாலிட் நகரத்தை ஆயிரக்கணக்கான போராளிகள் - இவர்களில் அநேகமானோர் மிஸ்ரடா நகரத்தைச் சேர்ந்தவர்கள் - முற்றுகையிட்டுள்ளனர். இந்நகருக்கு உள்ளேயோ வெளியேயோ உணவு, மருந்து அல்லது வேறெந்த பொருட்களும் செல்வதற்கு இவர்கள் அனுமதிப்பதில்லை. கிராட் ஏவுகணைகளையும் பீரங்கி துப்பாக்கிச் சூட்டையும் கொண்டு நகரத்தை தாக்கியிருக்கும் இவர்கள் அண்டை அருகாமை குடியிருப்புப் பகுதிகளுக்கு எதிராக வாயுக்கள் அடங்கிய எறிகுண்டுகளை பயன்படுத்தியிருப்பதாக உள்ளூர் மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறுகின்றனர். முன்னாள்கிளர்ச்சியாளர்கள்கைப்பற்றிய சுற்றியிருக்கும் சிறு கிராமங்கள் எல்லாம் சூறையாடப்பட்டிருக்கின்றன, எரிக்கப்பட்டிருக்கின்றன

இந்தக் குண்டுவீச்சில் குறைந்தபட்சம் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தையும் உண்டு. மற்றவர்கள் மோசமான காயங்களைப் பெற்று உரிய மருத்துவச் சிகிச்சை இல்லையென்றால் உயிரிழக்கும் அபாயத்தில் இருக்கின்றனர்.

சென்ற ஆண்டில் கடாபியை வேட்டையாடுவதிலும் கொலை செய்வதிலும் பங்குபெற்ற ஒரு முன்னாள்கிளர்ச்சிக்காரர்படுகொலை செய்யப்பட்டதற்குப் பொறுப்பானவர்களாகக் கருதப்படும் சில நபர்களை பானி வாலிட் நகரத்தின் உள்ளூர் தலைவர்கள் தங்களிடம் ஒப்படைக்கத் தவறினால் இராணுவ வலிமையைப் பயன்படுத்த அவசியமாகும் என்று கூறியிருந்த பொது தேசிய காங்கிரசின் (General National Congress)உத்தியோகபூர்வ ஒப்புதலுடன் தான் இந்த அட்டூழியங்கள் நடந்தேறி வருகின்றன.

பானி வாலிட் இடைவிடாத குண்டுவீச்சுகளுக்குப் பின்னர் நேட்டோ மற்றும் அதன் பினாமிப் போராளிகளிடம் வீழ்ந்த கடைசி லிபிய நகரங்களில் ஒன்றாகும். அங்கிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் அமெரிக்க ஆதரவு பெற்ற படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டனர்.

லிபியாவில் 9,000 கைதிகள் போராளிகளின் தற்காலிக சிறைகளில் அடைபட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது, அநேக சந்தர்ப்பங்களில் இவர்கள் ஒரு வருடத்திற்கும் அதற்கு அதிகமான காலத்திற்குமாய் சிறைத்தண்டனை பெற்றிருக்கின்றனர். இங்கு இவர்களுக்கு சித்திரவதை வழமையான ஒன்றாக இருக்கிறது. குற்றச்சாட்டுகளோ அல்லது விசாரணைகளோ இல்லாமல் உலகில் மிக அதிகமான சிறைக்கைதிகளை - 89 சதவீதம்கொண்டிருக்கும் நாடு லிபியா என்று சிறை ஆய்வுகளுக்கான சர்வதேச மையம் சமீபத்தில் விவரித்திருக்கிறது. இவர்களில் சுமார் 15 சதவீதத்தினர் அயல்நாட்டினர் ஆவர். அவர்களில் மிகப் பெரும்பாலானோர் துணை-சஹாரா ஆபிரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இவர்கள் தம் தோல் நிறத்தின் காரணத்தால் சுற்றி வளைக்கப்பட்டனர்.

லிபியாவின் இப்போதைய மனித உரிமைகள் நிலைமை மறைந்த சர்வாதிகாரி முமார் கடாபியின் கீழிருந்ததைக் காட்டிலும் மிக மோசமான நிலையில் இருக்கிறதுஎன்று கடாபி ஆட்சியை எதிர்த்து வந்திருக்கக் கூடிய மனித உரிமைகளுக்கான லிபிய கண்காணிப்பகம் சமீபத்தில் அறிவித்தது.

திகிலூட்டும் இந்த சூழலுக்குள்ளாக, இஸ்லாமியப் போராளிகள் தான் - இவர்களில் பலரும் எந்த அமைப்பின் தலைவர்கள் அமெரிக்காவின்பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்சிஐஏ ஆல் முன்பு வேட்டையாடலுக்கு இலக்காகியிருந்தனரோ அல்கெய்தாவுடன் தொடர்புபட்டதான அந்த லிபிய இஸ்லாமிய போராளிக் குழு என்கிற அமைப்பில் தங்களது மூலங்களைக் கொண்டவர்கள் - பென்காசி மற்றும் பிறவெங்கிலும் மிகச் சக்திவாய்ந்த கூறுகளாக எழுந்திருக்கின்றனர்.

இது தற்செயலானதல்ல. லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க-நேட்டோ நடத்திய போரில் இந்த சக்திகளைத் தான் அமெரிக்கா ஆயுதமளித்து ஆதரித்தது. இந்தப் போர் ஜனநாயகத்தின் பொருட்டோ அல்லது மனிதாபிமானத்தின் பொருட்டோ உந்தப்பட்டது அல்ல, மாறாக மத்திய கிழக்கு மற்றும் அதன் பரந்த எரிசக்தி வளங்களின் மீதான மேலாதிக்கத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டிருந்த தாகத்தினால் உந்தப்பட்டதாகும். கீழிருந்தான ஒரு உண்மையான புரட்சிகர இயக்கம் இல்லாத நிலையில், அமெரிக்கா இஸ்லாமிய சக்திகளை தனது சொந்த நோக்கங்களுக்காய் சந்தர்ப்பவாதரீதியாகப் பயன்படுத்திக் கொண்டது, அவர்களை ஒரு ஜனநாயகப் புரட்சியை ஏந்தி நிற்பவர்களாக முகச்சுளிப்புடன் சித்தரித்தது.

இப்போது ஆப்கானிஸ்தானில் போல - இங்கு மாஸ்கோ ஆதரவு அரசாங்கத்திற்கும் சோவியத் இராணுவத்திற்கும் எதிரான ஒரு போரில் அல்கெய்தாவையும் அதனைப் போன்ற மற்ற சக்திகளையும் அமெரிக்கா ஆதரித்தது - லிபிய தலையீட்டில் இருந்தானஎதிர்விளைவைஅமெரிக்க ஏகாதிபத்தியம் பென்காசியில் அறுவடை செய்யத் தொடங்கியிருக்கிறது.

தூதரைக் கொன்றவர்களைநீதியின் முன் நிறுத்துவதற்கானலிபிய ஜனாதிபதியின் சபதத்தைப் பயன்படுத்தி, முதலில் பயங்கரவாதிகள் என்று கூறி வேட்டையாடுவது பின் அவர்களை சுதந்திரப் போராளிகளாகப் போற்றுவது என்கிற சுழற்சியை, லிபிய இஸ்லாமியவாதிகள் விடயத்தில் பூர்த்தி செய்வதற்கு ஒபாமா நிர்வாகத்தின் மீதான அரசியல் அழுத்தம் பெருகிக் கொண்டிருக்கிறது. இது பென்காசியின் மீது ஆளில்லா ஏவுகணைத் தாக்குதல்களின் வடிவத்தையோ அல்லது சிறப்புப் படைகளின் தாக்குதல் வடிவத்தையோ எடுக்குமானால், அது லிபியாவின் சிதறலை ஆழப்படுத்தும் என்பதோடு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முடிவில்லாத உலகளாவியப் போர்களில் இன்னுமொரு போர்முனையைத் திறந்து விடும்.

பென்காசி தாக்குதலின் இந்த அரசியல் வேர்கள் குறித்து விவாதிப்பதற்கு ஜனநாயகக் கட்சியினருக்கும் சரி குடியரசுக் கட்சியினருக்கும் சரி எந்த விருப்பமும் இல்லை. இரண்டு கட்சிகளுமே சிரியாவில் பஷார் அல்-அசாத்தைக் கவிழ்ப்பதற்கான பிரிவினைவாத உள்நாட்டுப் போரில் இதேபோன்ற இஸ்லாமியப் போராளிகளை ஆதரிப்பதன் மூலமாக லிபிய சாகசத்தை இன்னும் ஆபத்தான மட்டத்திற்கு அதிகரிக்க முனைகின்றன. உண்மையில், இந்தப் போரில் திடீர் துருப்புகளாக 3,500 லிபியப் போராளிகள் சிரியாவுக்குள் அனுப்பப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்காவிலும் சர்வதேசரீதியாகவும் குட்டி-முதலாளித்துவ போலி-இடதுகளின் பரந்த அடுக்குகளால் உற்சாகத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பயங்கரவாதத்தின் மீதான போர் என்கிற மோசடியையும் மற்றும் லிபியப்புரட்சிமற்றும் அமெரிக்காவின்மனிதாபிமானத் தலையீடு ஆகியவற்றின் உண்மைத் தன்மையையும் பென்காசி விவகாரம் அம்பலப்படுத்தியிருக்கிறது என்பதே அது அளிக்கின்ற உண்மையான படிப்பினை ஆகும். அதனை இரு கட்சிகளுமே கூறப் போவதில்லை.