World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: உயர்தரப் பரிட்சை பெறுபேறு தரப்படுத்தல் முறை தவறானது என்ற உயர் நீதிமன்ற முடிவு ஒரு  தீர்வு அல்ல

By Suranga Wijesiriwardane
19 July 2012
Back to screen version

கடந்த 25ம் திகதி இலங்கை உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு வழக்குத் தீர்ப்பின் மூலம், 2011ம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு தரப்படுத்தல் தொடர்பாக, உயர்கல்வி அமைச்சினால் சிபார்சு செய்யப்பட்டு, பரீட்சை திணைக்களத்தினால் அமுல்படுத்தப்பட்ட வழிமுறை தவறானது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு புதிய முறையினூடாக அதனை சரிசெய்யுமாறு உயர்கல்வி மற்றும் கல்வி அமைச்சுக்கு உத்தரவிடப்பட்டது.

2011 செப்டெம்பர் 26 அன்று பரீட்சை தினணக்களத்தினால் வெளியிடப்பட்ட உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை சவால் செய்து, இலங்கை ஆசிரியர் சங்கமும் 16 மாணவர்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. பெறுபேறு தரப்படுத்தலின் போது பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களின் கீழ் பரீட்சைக்குத் தோற்றிய இரு பிரிவு மாணவர்களுக்காகவும் தனியான (Z) இசட் புள்ளியை பயன்படுத்துவது உட்பட மேலும் பல தவறுகள் காரணமாக, மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அப்பெறுபேறுகளை செல்லுபடியற்றதாக்கி, மீண்டும் மதிப்பீடுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிடுவதற்கு கட்டளையிடுமாறும் மனுதாரர்கள் கோரியிருந்தனர்.

எவ்வாறெனினும், பரீட்சை முடிவுகளை முழுமையாக இடை நிறுத்த வேண்டும் என்ற மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்த உயர் நீதிமன்றம், பழைய மற்றும் புதிய பாடத் திட்டங்களின் கீழ் வெவ்வேறாக இசட் புள்ளிகள் கணக்கிடப்பட வேண்டும் என்று மட்டும் கட்டளையிட்டது.

பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக மாணவர்கள், பொது மக்கள் மற்றும் கல்விமான்கள் இடையே பரந்த அதிருப்தி வெளிப்படுத்தப்பட்டதுடன், பரீட்சைக்கு தோற்றியோரிடையே 147,000 வரையிலானவர்கள், அதாவது நூற்றுக்கு ஐம்பது வீதமானவர்கள், மீண்டும் விணாத்தாள் மதிப்பீட்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். அவ்வாறிருப்பினும், வழக்கு தீர்ப்பு பிரகடனப்படுத்தப்படுவதற்கு முன்னரே, கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவும் உயர் கல்வியமைச்சர் எஸ்.பி. திசநாயக்காவும், தமது அமைச்சினால் பயன்படுத்தப்பட்ட சூத்திர முறை உன்னதமான முறை என்றும் எக்காரணம் கொண்டும் அதை விலக்கிக்கொள்ளப் போவதில்லை என்றும் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தனர்.

பல்கலைக்கழகங்களில் உள்ள மட்டுப்படுத்தப்பட்ட இடவசதிக்காக, மிகவும் தகுதி வாய்ந்த மாணவர்களை தெரிவு செய்யும் ஒரு நியாயமான வழிமுறையாகவே 2001ல் இந்த இசட் புள்ளி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதி பெறும் சகலருக்கும் பல்கலைக்கழக அனுமதியை வழங்குவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழகத் துறை பரந்தளவில் இருக்குமெனில், இந்த மிகவும் தகுதியானவர்களை தேர்வு செய்யும் அவசியம் ஏற்படாது. பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதியுள்ள சகலருக்கும் இடவசதியளிப்பதற்கு முதலாளித்துவ அமைப்பு இலாயக்கற்றதாக இருப்பதனாலேயே இந்த சூத்திர முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக முறைமையை மிகவும் தரமான வசதிகளுடைய ஒன்றாக தக்கவைப்பதற்கு மாறாக, கடந்த மூன்று தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களுமே சர்வதேச மூலதனத்தின் தேவைக்காக தனியார் பல்கலைக்கழகங்கள் உட்பட கல்வி நிறுவனங்களை உருவாக்கி கல்வியை இலாபகரமான ஒன்றாக ஆக்குவதற்கு முயற்சித்துள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் பிரகாரம் கல்விக்கான ஒதுக்கீடு வருடா வருடம் குறைக்கப்பட்டு வந்ததோடு கடந்த ஆண்டு பாதுகாப்பு செலவுக்காக வரவுசெலவு திட்டத்தில் 10.3 சத வீதத்தை ஒதுக்கிய அரசாங்கம் கல்விக்காக 2.5 சதவீதம் என்ற அற்பத் தொகையையே ஒதுக்கியுள்ளது.  

இந்த வெட்டு நடவடிக்கையின் நேரடி விளைவாக, உயர்தரப்பரீட்சையில் தேறிய அநேக மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் போயுள்ளது. இதன் தாக்கம் எப்பேர்ப்பட்டது என்றால், 2010ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தேறிய 140,000 மாணவர்களில், பல்கலைகழக அனுமதி 20,000 பேருக்கே வழங்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த இலட்சக்கணக்கான மாணவர்களது அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டு, இப்பாரதூரமான அநீதி விளைவிக்கப்பட்டுள்ள வேளையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களை மிகவும் நியாயமான முறையில் சேர்ப்பது சம்பந்தமாக, கல்வித் துறை தொடர்பான தொழிற்சங்கங்கள், கல்விமான்கள் மற்றும் அதிகாரிகளும் சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

பல்கலைக்கழகங்களில் இட வசதி மட்டுப்படுத்தப்படுவதன் காரணமாகவே இலட்சகணக்கான மாணவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமை பறிக்கப்பட்டுள்ளது என்ற மிக முக்கியமான விடயத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட்ட மனுதாரர்கள் சவால் செய்யவில்லை. அதே போல், இந்த இடவசதி மட்டுப்படுத்தப்படுவதன் நேரடி விளைவாகவே இசட் புள்ளி நெருக்கடி எழுந்துள்ளது என்பதை அந்த மனுவின் மூலமோ அல்லது வழக்கு விசாரணைகளின் போதோ மனுதாரர்கள் விவாதிக்கவில்லை. ஆகையால், இந்த அடிப்படை உரிமை அரசினால் பறிக்கப்பட்டுள்ளது என்ற விடயம் இந்த வழக்குத் தீர்ப்பினால் சவால் செய்யப்படவில்லை.

இந்த வழக்கு தீர்ப்பானது பல வழிகளில் தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆளும் வர்க்கத்தின் தேவைகளை பிரதிநிதிப்படுத்துகிறது.

முதலாவதாக, நீதித்துறை தொடர்பாக வேகமாக சரிந்து வரும் மக்களது நம்பிக்கையை மீண்டும் தூக்கி நிறுத்தவேண்டியதன் அவசியத்தை இந்த வழக்குத் தீர்ப்பு பிரதிபலிக்கின்றது. விசேடமாக அரசியலமைப்பினதும் நிறைவேற்று அதிகாரத்தினதும் நடவடிக்கைகளுக்கு சார்பான முறையில் நீதி மன்றத்தால் தொடர்ந்து வழங்கப்பட்ட தீர்ப்புகள் காரணமாக, நீதித் துறையின் சுயாதீனம் பற்றி பெருமளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய தீர்ப்புகளில், வேலை நிறுத்தம் செய்வதற்கு தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைக்கு எதிரான தீர்ப்பு, கொழும்பு சேரிவாசிகளான அவர்களது குடிசைகளிலிருந்தும் அகற்றுவதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு மற்றும் அரசை விமர்சிப்பதற்கு எதிராக வலைத் தளங்களை தடை செய்ய வழங்கப்பட்ட தீர்ப்பு போன்றவை பிரதானமானவை ஆகும். எதிர்க் கட்சிகளதும் ஊடகங்களதும் ஒத்துழைப்புடன், இந்தத் தீர்ப்புகள் நீதிமன்றத்தின் சுயாதீனத்தை வெளிப்படுத்தும் தீர்ப்புகள் என்று அரசாங்கத்தால் பாராட்டப்படுகின்றது. எனினும் மேற்குறிப்பிட்ட தீர்ப்புகள், இராஜபக்ஷ அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எந்த வகையிலும் சவால் செய்யவில்லை.

அரசாங்கத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, இப்போதே சகல அரசியல் கட்சிகள் மற்றும் அதன் கன்னைகள் வேலையில் இறங்கியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் (யு.என்.பீ.) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான டி.எம். சுவாமிநாதன் பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்ட சமயத்தில், இசட் புள்ளி சூத்திரம் சம்பந்தமாக உயர் நீதிமன்றம் பிரகாசமான தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது. நான் இது சம்பந்தமாக உயர் நீதிமன்றுக்கு அதன் உயர்ந்த தீர்ப்பு சம்பந்தமாக பாராட்டை வெளிப்படுத்த இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன், என்றார்.

த ஐலண்ட் பத்திரிகையில் வெளியான அறிக்கையின்படி, மக்கள் விடுதலை முன்னணியை (ஜே.வி.பீ.) சார்ந்த, சோசலிச மாணவர் சங்கத்தின் அமைப்பாளர் நலிந்த ஜயதிஸ்ஸ், இந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு மாணவர்களுக்கு மட்டுமன்றி முழு தேசத்திற்கும் கிடைத்த ஓர் வெற்றி ஆகும், என தெரிவித்துள்ளார். இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டான்லினும், இது வரலாற்று புகழ்பெற்ற தீர்ப்பு என புகழ்ந்துள்ளார். இலட்சக் கணக்கான மாணவர்களின் உயர்கல்வி உரிமையை அகற்றும் அரசாங்கத்தின் திட்டத்தை எந்த முறையிலாவது சவால் செய்யாத இந்த தீர்ப்பை வர்ணிப்பதானது, முழு ஸ்தாபனத்தைப் பற்றியும் சரிந்து வரும் பொதுசன நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் கையாலாகாத முயற்சிக்கு சேவையாற்றுவதையே எடுத்துக்காட்டுகின்றது. இதன் மூலம் உரிமைகளை பெறும் பொருட்டு சுயாதீனமான பொதுசன இயக்கமொன்றை கட்டியெழுப்புவதற்கு குழி பறிக்கப்படுகின்றது.

மறுபுறத்தில், இந்த தீர்ப்பை சாதகமாகப் பயன்படுத்தியபடி, கல்வித்துறையில் மேற்கொள்ளும் பாரிய வெட்டுகளுக்கு எதிராக எழுந்துள்ள மக்கள் எதிர்ப்பை, உயர்கல்வி மற்றும் கல்வி அமைச்சர்கள் இருவர் மீதும் மற்றும் மேலும் பல உயர் மட்ட அதிகாரிகள் மீதும் சுமத்திவிடும் முயற்சியிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. சகல அரசியல் கட்சிகள், தொழிற் சங்கங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளும் அரசாங்கத்தின் இம்முயற்சிகளை மக்களிடையே பரப்புவதற்கு எற்கனவே நடவடிக்கையில் இறங்கியுள்ளன.                                                    

கடந்த யூலை 26ம் திகதி ஜலணட் பத்திரிகை, இந்த அமைச்சர்கள் இருவரும் இந்நாட்டின் கல்வி முறையை சீர்குலைத்துள்ளதால் அவர்கள் இராஜினமாசெய்ய வேண்டும் என்று ஜே.வி.பீ. பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயகா கூறியதாக தெரிவித்தது.

யு.என்.பீ.யும் அமைச்சர்கள் இராஜினமா செய்ய வேண்டுமென்று கூறுவதுடன் முன்னிலை சோசலிச கட்சி சார்ந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சங்க அமைப்பாளரான சன்ஜீவ பண்டாரவும் சிறு பத்திரிகையாளர் மகாநாட்டில் பேசிய போது, இந்த தவறு கல்வித் துறையினுள் பரந்து காணப்படும் அலட்சிய தன்மையின் வெளிப்பாடேயாகும் என குறிப்பிட்டிருந்தார்.               

இது அமைச்சர்கள் இருவரது மற்றும் உயரதிகாரிகள் பலரது அலட்சியத்தின் விளைவாகவே இப்பிரச்சனை ஏற்பட்டது என்று கூறி, கல்வித்துறை நெருக்கடியானது முழு முதலாளித்துவ முறையுமே எதிர்கொன்டுள்ள நெருக்கடியே என்பதை தொழிலாள ஒடுக்கப்படும் மக்களிடமிருந்து மூடி மறைப்பதற்கே இச்சகல குழுக்களும் பகல் இரவு பாராது சிரமப்படுகின்றன. அதனூடாக முதலாளித்துவ முறைமைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் இயக்கமொன்று வளர்வதை தடுப்பதே அவர்களது நோக்கமாகும்.

ஆகையினால், ஏனைய துறைகளில் நிலவும் வர்க்க போராட்டத்துடன் கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள போராட்டத்தை ஒன்றிணைப்பதை தடுத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் போன்ற வளைவுகள் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலம் உரிமைகளை பெற்றுவிடலாம் என்ற நப்பாசையை மக்களிடையே பரப்புவதற்கே அவர்கள் செயற்படுகின்றனர். ஆளும் வர்கத்தின் கைத் தேங்காயாக செயற்படும் இந்தக் குழுக்கள் அனைத்தும், தொழிலாள வர்க்கத்தை திசை திருப்பும் வேலைத்திட்டங்களுக்கு பெரிதும் ஒத்தாசை வழங்கி வருகின்றன.

உண்மையில், நீதிமன்றத் தீர்ப்பின்படி, தரப்படுத்தலுக்காக புதிய வழிமுறை பயன்படுத்தப்பட்டாலும் கூட, பல்கலைக்கழக அனுமதி கிடைக்கும் மாணவர் தொகையில் அதிகரிப்பு ஏற்படாது. இறுதியாக கூறப் போனால், மீறப்பட்டுள்ள அடிப்படை உரிமை தொடர்பாக எந்தவொரு மாற்றத்தையும் நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்தவில்லை.

மாணவர்கள், இளைஞர்கள் புத்திஜீவிகள் உட்பட முழு தொழிலாளர் ஒடுக்கப்படுவோரும் இந்தக் காரணத்தைப் பற்றி பாரியளவில் கவனமெடுக்கவேண்டும். நெருக்கடிக்குள் முழ்கியுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு நிர்ப்பந்தம் செய்வதால், எந்தவொரு ஜனநாயக உரிமையையும் வென்றெடுக்க முடியாது. மாறாக, அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வல்ல தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கத்தை அதிகாரத்துக்கு கொண்டு வருவதால் மட்டுமே கல்வி உள்ளடங்கலாக தொழிலாள வர்க்கத்தின் சகல பிரச்சனைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும். அதற்காக முதலாளித்துவ கட்சிகளதும் அவர்களது வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுசாரிக் கட்சிகளிடமிருந்தும் சுயாதீனமாகி, தொழிலாளர் வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இத்தகைய வேலைத் திட்டத்திற்காக போராடுவது, சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் மாணவர் அமைப்பான சமுக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர் இயக்கமும் மட்டுமே ஆகும்.