World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Ex-army chief calls for regime change in Sri Lanka

இலங்கையில் முன்னாள் இராணுவத் தளபதி ஆட்சிமாற்றத்திற்கு அழைப்பு விடுக்கின்றார்

By Nanda Wickremasinghe
23 July 2012
Back to screen version

இலங்கையின் முன்னாள் எதிர்கட்சி ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சரத்பொன்சேகா இந்தமாத ஆரம்பத்தில் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு அழைப்பு விடுத்தார். ஜனநாயக முறையில் அரசாங்கத்தை தூக்கி வீசுவதற்கு நான் நிச்சயமாக மக்களை கிளர்ந்தெழுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் பிரிட்டனிலிருந்து வெளிவரும் டெய்லி ரெலிக்கராப் ஊடகத்துக்கு யூலை 8ம் திகதி தெரிவித்தார்.  

லிபியாவில் நேட்டோவின் தலையீடு மற்றும் சிரிய அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கான தற்போதைய முயற்சிகளின் வழியில் ஆட்சியை மாற்றுவதற்கு சரத்பொன்சேகா மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கின்றார். இராஜபக்ஷவை சர்வாதிகாரி என கண்டித்த அவர், “[அவர்கள்] அரசாங்கத்தை அங்கீகரிக்காமல், மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மக்களின் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் ஒரு சர்வாதிகாரி மீறுவாராயின், அதைப் பற்றி உலகம் கவணம் செலுத்தும் என நான் நினைக்கின்றேன், என்றார்.

 ஜனநாயக வழிகள் பற்றி குறிப்பிடும் பொன்சேகா மாற்று முறையையும் நிராகரிக்கவில்லை. ஏனைய நாடுகளில் அது எப்படி நடந்தது, மற்றும் சர்வாதிகார ஆட்சியிடமிருந்து அந்த மக்கள் எவ்வாறு மீட்கப்பட்டார்கள் என்பதை பார்த்திருப்பீர்கள். அது லிபியா மாதிரி இருக்க கூடாது என நான் நம்புகின்றேன், வழிபடுகின்றேன், என அவர் கூறினார்.

இராஜபக்ஷவுடனும் அவரது அரசாங்கத்துடனும் இணைந்தவாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை நடத்திய இராணுவத்திற்கு தலைமை தாங்கிய பொன்சேகா, ஆயிரக்கணக்கான மக்களை கொன்றமை உட்பட யுத்தக் குற்றங்களுக்கு பொறுப்பானவராவார். 2009 மே மாதம் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் இராஜபக்ஷவுடன் முரண்பட்டுக்கொண்ட அவர், இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்து, பிரதான எதிர்கட்சிகளின் ஆதரவுடன், அவர்களின் பொது ஜனாதிபதி வேட்பாளராக 2010 தேர்தலில் போட்டியிட்டார்.

பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்ததுடன், அவரும் அவரது ஆதரவாளர்களும் இராணுவச் சதியில் ஈடுபட்டார்கள் என்ற ஆதாரமற்ற  குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். இறுதியாக அவருக்கு இராணுவத்தில் கடமையில் இருக்கும் போது அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை மற்றும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டமை போன்ற புனையப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டணை விதிக்கப்பட்டது. அவரிடமிருந்து அவரின் பட்டங்கள், ஓயவூதியம் மற்றும் ஏனய சலுகைகளும் பறிக்கப்பட்டு, அவர் சிறைவைக்கப்பட்டதுடன், 2010 பொதுத் தேர்தலில் அவர் வென்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் நீக்கப்பட்டது. 

பொன்சேகா சிறைவைக்கப்பட்டதானது யுத்தக் காலத்திலும், யுத்தம் முடிந்ததிலிருந்தும் இராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொண்ட ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பரந்த தாக்குதலின் ஒரு பாகமாகும். பாதுகாப்பு படைகளுடன் ஒத்துழைக்கும் அரசாங்க சார்பான கொலைப்படைகளால், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டனர்.

புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு ஆதரவளித்த, இராணுவத்தினது யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக மோதலின் இறுதி சில மாதங்கள் வரை மெளனமாக இருந்த அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய கூட்டும், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமைகள் என்ற பிரச்சனையை சுரண்டிக்கொண்டன. சீனாவுடனான இராஜபக்ஷவின் அபிவிருத்தியடைந்து வரும் உறவு சம்பந்தமாகவே வாஷிங்டன் கவலை கொண்டுள்ளதே அன்றி, ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாக அல்ல.

 “மனித உரிமைகள் பிரச்சாரத்துக்கு பதிலிறுப்பாக, இராஜபக்ஷ அண்மைய மாதங்களில் மேற்கத்தைய சக்திகளுடன் உறவை சரிசெய்வதற்கு முயற்சிக்கின்றார். மே மாதம், சர்வதேச விமர்சனங்களை திசை திருப்பும் முயற்சியில், அவர் பொன்சேகாவுக்கு மன்னிப்பை வழங்கினார். முன்னாள் இராணுவத் தளபதி விடுதலை செய்யப்பட்டாலும், அவருக்கு குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டதால் அவரால் தேர்தலில் வேட்பாளராக நிற்க முடியாது.

பொன்சேகா ஆட்சிமாற்ற நடவடிக்கைக்கு தானாகவே தலைமை வழங்க முன்வந்திருப்பதுடன், அதற்கு மேற்கு நாடுகளின் உதவியையும் கோருகின்றார், என்பதே அவர் டேய்லி ரெலிக்கிராப் பத்திரிகைக்கு வழங்கியிருக்கும்  பேட்டி எடுத்துக் காட்டுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளையின் கீழ் அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பை அவர் சுரண்டிக்கொள்ள முயற்சிக்கின்றார். பெப்ரவரியில் எண்ணெய் விலை ஏற்றத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் செய்து ஒரு மீனவர் கொல்லப்பட்டதை அவர் குறிப்பாக  சுட்டிக்காட்டுகின்றார்.

2010 தேர்தல் பிரச்சாரத்தின் போது, இராஜபக்ஷ இலங்கையில் சர்வதேச சமூகம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு குழி பறிக்கின்றார் என விமர்சித்ததன் மூலம், பொன்சேகா தனது மேற்கத்தைய சார்பு நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். பொன்சேகா சிறையிலிருது விடுதலையான பின்னர், இந்த வருடம் ஜூலை 4ம் திகதி சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு, அமெரிக் தூதரக வாசஸ்தலத்திற்கு அவரை அழைத்ததின் மூலம், அவருக்கு குறிப்பிட்ட ஆதரவை அமெரிக்கா சமிக்ஞை செய்துள்ளது. அன்றைய தினம், அமெரிக்க தூதுவர் பற்றீசியா புட்டினிஸ், அரசியல் தளத்தில் வேறுபட்ட கருத்துக்கள் இருந்தபோதும் சிறீலங்காவுடனான ஈடுபாட்டை தொடர்ந்து அமெரிக்கா பேணும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த தருணத்தில், ஒபமா நிர்வாகம் இராஜபக்ஷ அரசாங்கத்தை அகற்றுவதற்கு வெளிப்படையாக ஆதரவு கொடுக்காததோடு, தொடர்ந்தும் மனித உரிமைகள் பிரச்சனைக்கூடாக  அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றது. ஏப்பிரலில், யுத்தம் சம்பந்தமான இராஜபக்ஷ அரசாங்கத்தின் சொந்த விசாரணயின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ஐ.நா. மனித உரிமை சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வந்த.

தெற்காசியா பூராகவும் சீனாவின் பொருளாதார மற்றும் மூலோபாய செல்வாக்கை கீழறுப்பதற்கான இராஜதந்திர எதிர்த்தாக்குதலின் பாதையிலேயே வாஷிங்டனின் நடவடிக்கைகள் உள்ளன. ஒபாமா நிர்வாகம், ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுடன் இராணுவ கூட்டையும் அந்தப் பிராந்தியம் பூராவும் கூட்டுறவுகளையும் பலப்படுத்துவதுடன், பர்மா போன்ற நாடுகள் பெஜ்ஜிங் உடன் கொண்டுள்ள உறவை பலவீனப்படுத்தி,  தம் பக்கம் இழுக்க முயற்சிக்கின்றது.

தனது சகோதரர்கள், இராணுவத் தளபதிகள், உயர் மட்ட அரச அதிகாரிகள் உட்பட்ட ஒரு அரசியல்-இராணுவ குழுவினூடாக இயங்கும் இராஜபக்ஷவினால் ஓரங்கட்டப்பட்ட ஆளும் வர்க்கத்தின் பகுதியினரையே பொன்சேகா பிரதிநிதித்துவம் செய்கின்றார். இந்த முன்னாள் ஜெனரல் ஒரு ஜனநாயகவாதியல்ல மற்றும் அவர் சிங்கள இனவாதத்தில் ஊறிப்போனவர். இராஜபக்ஷவை ஒரு சர்வாதிகாரி என கண்டனம் செய்யும் அதே நேரம், பொன்சேகா பல வருடங்களாக ஜனாதிபதியின் ஆட்சிக் குழுவில் ஒரு முன்னணி புள்ளியாக இருந்தார்.

2010 தேர்தலில் ஒரு பொது வேட்பாளராக பொன்சேகாவை நிறுத்துவதற்கு ஆதரவு கொடுத்த, வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.), சிங்களப் பேரினவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ.) போன்ற எதிர்கட்சிகளின் அனுசரணையினால் மட்டுமே அவரால் ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டிக்கொள்ள முடிகின்றது. ஆட்சியில் இருக்கும் போது ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலுக்கு இழிபுகழ்பெற்ற யூ.என்.பீ., ஜனநாயக நம்பகத் தன்மையைக் காட்டுவதற்காக, நவ சமசமாசக்கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற முன்னாள் இடது அமைப்புக்களில் தங்கியிருக்கின்றது.

ஜே.வி.பீ.யிலிருந்து பிரிந்து சென்ற, தம்மை சோசலிஸ்டுகளாகக் காட்டிக்கொள்ளும் முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) வலதுசாரி முன்னாள் ஜெனரலுக்கு அனுதாப நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. பொன்சேகா தவிர்க்க முடியாதவாறு இராஜபக்ஷ ஆட்சிக்கு எதிரான சின்னமாக இருப்பார் என மே 27 வெளியான மு.சோ.க.யின் ஜனரல பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. அரசாங்கத்திற்கு எதிரான மக்களுக்கு தலைமை வகிக்க, பொன்சேகா வெளியிடும் வேலைத்திட்டத்தை எதிர்பார்த்திருப்பதாவும் அது மேலும் குறிப்பிட்டிருந்தது.

தொழிலாளர்கள், இளைஞர்கள் இந்த மோசடியை நிராகரிக்க வேண்டும். 2010 தேர்தல் பிரச்சாரத்தில் பொன்சேகா தெளிவுபடுத்தியது போல், சர்வதேச நிதி மூலதனம் கோரும் சிக்கன நடவடிக்கைகளை அமுல் படுத்துவதில் அவரும் இராஜபக்ஷவைப் போல் ஈவிரக்கமற்றவராக இருப்பார். அத்தகைய சிக்கன வேலைத்திட்டத்தை ஜனநாயக வழியில் அமுல்படுத்த முடியாது. தற்போதய அரசாங்கத்தைப் போலவே முன்னாள் ஜெனரலும், எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்காக நாட்டின் உள்நாட்டு யுத்தத்தின் போது கட்டி எழுப்பப்பட்ட அதி விரிவான  பொலிஸ்-அரச அதிகாரங்களை பயன்படுத்துவார்.