World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Pakistan’s factory fire: An indictment of capitalism

பாக்கிஸ்தான் ஆலையில் தீ விபத்து: முதலாளித்துவத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டு

Wije Dias
19 September 2012       
Back to screen version

கடந்த வாரம் சுமார் 300 தொழிலாளர்களின் உயிரைப் பறித்து சோகமூட்டிய பெரு நெருப்பு, தாய்லாந்தில் 1993ம் ஆண்டு Kader விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்பு ஆலையின் மோசமான இறப்பு எண்ணிக்கையான 188 ஐயும் விஞ்சிய உலகின் மிக மோசமான ஆலைத் தீ சம்பவமாக ஆகியுள்ளது. சமீபத்திய தீ, ஆசியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பல மில்லியன் தொழிலாளிகளின் அன்றாட அனுபவத்தில் இருக்கும் ஆபத்தான, பொறுத்துக் கொள்ள முடியாத பணிநிலைமைகளின் விளைவு ஆகும்.

கடந்த மூன்று தசாப்தங்களில் பாக்கிஸ்தான், தாய்லாந்து போன்ற நாடுகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு, பூகோளமயமான உற்பத்தி முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஆலைத் தொழிலில், உலகப் பெருநிறுவனங்கள் தங்கள் பெருமிதம் நிறைந்த பொருட்களை உற்பத்தி செய்ய, ஆசியாவில் உள்ள அடிமை உழைப்பு பணியிடங்களுக்கு ஒப்பந்த முறையில் விடுகின்றன; இதையொட்டி நாயை நாய் உண்பது போன்ற மட்டத்திற்கு போட்டி செலவுகளைக் குறைப்பதற்கும் மிகக் குறைந்த விலையை நிர்ணயிக்கவும் சாத்தியப்படுகிறது.

தேசிய அரசாங்கங்கள் இந்த உலகளாவிய முதலாளித்துவச் சுரண்டல் முறைக்கு வசதி செய்து கொடுக்கின்றன. முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இவர்களுக்காக பேசும் வகையில் 1970ன் கடைசிப் பகுதிகளில் பகிரங்கமாக அறிவித்தார்: சர்வதேசப் பெருநிறுவன முதலீட்டாளர்களை நாம் முத்தம் கொடுத்து வரவேற்க வேண்டும். வேறுவிதமாகக் கூறினால், வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு என்ன விளைவுகள் வந்தாலும்கூட, அனைத்தும் செய்யப்பட வேண்டும்.

கிட்டத்தட்ட 650 தொழிலாளர்கள் பாக்கிஸ்தானின் வணிகத் தலைநகரான கராச்சியில் ஒரு தொழில்துறைப் பகுதியில் அலி என்டர்பிரைசஸ் ஆலையில் தீப் பிடித்த போது வேலை செய்து கொண்டிருந்தனர். இக்கட்டிடம் ஒரு மரணப் பொறியைப் போன்றது ஆகும். இதில் தீ ஏற்பட்டால், தப்புவதற்கான அவசர வாயில்கள் இல்லை; ஜன்னல்களும் மாடிப்படிகளும் எப்பொழுதும் தடைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. ஒரே ஒரு வெளியேறும் வழிதான் இருந்தது. தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் கிடையாது. தீயில் இருந்து தப்பவதற்காக பலரும் குதித்தபடியால் பெரும் காயங்களுக்குடன் தப்பிப் பிழைத்தனர்.

ஆலை சட்டபூர்வமாக பதிவு செய்யப்படவில்லை; அதன் காப்பீடு இயந்திரங்களுக்கு மட்டுமே இருந்தது, தொழிலாளர்களுக்கு இல்லை. 12 ஆண்டுகளாக இது செயல்பட்டுவந்தாலும்கூட, பாதுகாப்பு, பணி நிலைமைகளுக்காக எந்த அரசாங்க ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஊழியர்களுக்கு பணிநியமனக் கடிதங்கள் கொடுக்கப்படவில்லை; ஊதியங்களைக் குறைத்துக் கொடுக்கவும், ஓய்வூதியம் பிற நலன்கள் மறுக்கப்படவும் ஒரு தொழில் ஒப்பந்தக்காரர் மூலம் பணியில் இருத்தப்பட்டனர். அலி என்டர்பிரைசஸ் ஆலையில் அடிமைகளுக்கான நிலைமை போல் இருப்பது, நூற்றுக்காணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான பிற ஆலைகளில் இருப்பதைப் போலவேதான் இருந்தன; தொழிலாளர்கள் குற்றம் சார்ந்த வகையில் சுரண்டப்படுவதற்குத் துணை நின்றதைத்தான் தேசிய மற்றும் மாநில அரசாங்கங்களுடைய ஆதரவு சுட்டிக் காட்டுகிறது.

அரசாங்கம் இப்பெரும் துன்பியலை எதிர்கொண்ட உத்தியோகபூர்வ முறை வாடிக்கையாக நடைமுறையில் இருப்பதுதான். தீயைத் தோற்றுவித்த சூழ்நிலைக்கு அரசியலளவில் பொறுப்புக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து முற்றிலும் பாசாங்குத்தனமான பரிவுணர்வுச் சொற்கள் வெளிவந்தனஅதில் பாக்கிஸ்தானிய ஜனாதிபதி அசிப் அலி சர்தாரியில் தொடங்கி மத்திய அரசாங்க மந்திரிகள் மற்றும் சிந்து மாநிதலத்தில் பல அரசியல் வாதிகள் வரை அடங்குவர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஓர் அற்பத்தொகையை அரசாங்கம் கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளதுஇது இத் தீ தொழிலாள வர்க்கத்தின் பரந்த அதிருப்தியாக குவிக்கப்படுவதற்கு முன் அதைத் தடுக்கும் நோக்கத்துடன் கொடுக்கப்படும் வாயை மூடவைக்கும் தந்திரோபாயமாகும்.

தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் இரண்டுமே விசாரணைகளை அறிவித்துள்ளன; அவற்றின் நோக்கம் ஒரு சில பலிகடாக்களை அடையாளம் கண்டு, தீக்கான ஆழ்ந்த சமூகக் காரணங்களை மூடிமறைப்பதாக இருக்கும். ஆலைச் சொந்தக்காரர்களும் ஒரு சில அரசாங்க அதிகாரிகளும் ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர். எப்படியும் பாக்கிஸ்தானின் 1934ம் ஆண்டு ஆலைச் சட்டம் இதுவரை திருத்தப்படவே இல்லை. தொழில்துறையில் கவனமின்மைக்கு அதிகப்பட்ச அபராதம் 500 ரூபாய்கள்தான் (5 அமெரிக்க டாலர்).

பாக்கிஸ்தானிய செய்தி ஊடகமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இழிந்த நிலைமகள், அரசாங்கத்திடம் இருந்து கட்டுப்பாடு இல்லாத நிலை மற்றும் ஆய்வு, செயல்படுத்தும் முறையில் அப்பட்டமான பற்றாக்குறைகள் பற்றி கையை பிசைவதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் பொதுச் சீற்றம் குறைந்தவுடன், செய்தி ஊடகம் மற்றும் தொழிற்சங்கங்களின் பரபரப்பும் குறைந்துவிடும்; அவை தொடர்ந்து தொழிலாளர்களைச் சுரண்டுவதில் ஒத்துழைப்புக் கொடுக்கும்.

இன்றுவரை அலி என்டர்பிரைசில் தங்கள் ஆடைகளைத் தயாரிக்கும் உலகப் பெருநிறுவனங்கள் மௌனமாக உள்ளன. தூய்மையான துணிகள் பிரச்சாரம் (Clean Clothes Campaign -CCC),  என்னும் ஜேர்மனிய ஆர்வலர் அமைப்பு ஜேர்மனியில் ஏழாம் மிகப் பெரிய ஆடைகள் விற்பனை நிலையமான KIK அதற்கு ஆடைகளை அளிக்கும் ஆலையில் ஏற்பட்டுள்ள தீ பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்று புகார் கூறியுள்ளது. “KIK இது குறித்து வருத்தமோ ஒரு அவசரப் போக்கோ காட்டாதது சிறிதும் மரியாதையற்ற தன்மை, அவர்களுக்கு பொருட்களை வழங்கும் சங்கிலியில் வேலைபார்க்கும் தொழிலாளர்களிடம் அவர்கள் காட்டும் உணர்வைத்தான் வெளிப்படுத்துகிறதுஎன்று CCC கூறியுள்ளது.

ஆனால் துயரத்தை வெளிப்படுத்துவதோ, KIK  போன்ற நிறுவனங்கள் நிலைமையை முன்னேற்றுவிப்பதாகக் கொடுக்கும் வெற்று உறுதிமொழிகளோ தங்கள் வணிக முத்திரைப் பெயர்களையும் பொதுத் தொற்றத்தைப்பாதுகாக்கும் வகையிலான வணிக முடிவுகளாகத்தான் இருக்கும். இந்நிறுவனங்கள் முதலாளித்துவச் சுரண்டல் முறையின் உச்சியில் இருப்பவை. மலிவு விலைப் பொருட்களுக்கான அவர்களுடைய உந்துதல், தங்கள் போட்டியாளர்களைவிடக் குறைந்த விலைக்கு விற்க வேண்டும் என்னும் உந்துதல்தான், இது பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் தொழிலாளர்கள் முகங் கொடுக்கும் அவல நிலைகள் தொடர்வதற்கு உறுதியளிக்கின்றன.

கராச்சித் தீயை சூழ்ந்துள்ள நிலைமைகள் மற்றும் அதை மூடிமுறைக்கும் செயல்கள் கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் முன்பு தாய்லாந்தில் Kader ஆலையில் நடந்ததற்கு இணையாகத்தான் உள்ளன. ஏதேனும் கூறவேண்டும் என்றால், இப்பிராந்தியம் முழுவதும் தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் நிலமைகள் உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னர், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் சரிவில் இருந்து ஏற்பட்டுள்ள விளைவுகளால் மோசமாகிப் போய்விட்டன. மேலும் ஆடைகள் வழங்குதற்கும் வெளிமுதலீட்டிற்கும் போட்டி தீவிரமாக போய்விட்டன.

பாக்கிஸ்தானில் தொழிலாளர்கள் நிலைமை அடிப்படையில் ஆசியா முழுவதும் இருக்கும் அவர்களுடைய வர்க்க சகோதர, சகோதரிகளுடைய நிலைமையில் இருந்து வேறுபட்டவை அல்ல. இப்பிராந்தியத்தில் இருக்கும் பல பொருளாதாரப் பகுதிகளுக்குள் முதலீட்டாளர்கள் ஏராளமான சிறப்புச் சலுகைகளை அனுபவிக்கின்றனர்; அவற்றுள் வரிவிலக்குகள், வரிச்சலுகைகள் என்பவற்றுடன் குறைந்தப்பட்ச தொழிலாளர் கட்டுப்பாட்டுவிதிகளும் உள்ளன. தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முடியாது, தொழிற்துறை நடவடிக்கையும் எடுக்க முடியாது.

இலங்கையில் சுதந்திர வர்த்தக வலையத்தில் (FTZ) உள்ள தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் நிலைமையும் பாக்கிஸ்தான, பங்களாதேசம், வியட்நாம் இன்னும் பிற நாடுகளில் இருப்பதைப் போலவே அடக்குமுறைத் தன்மையைத்தான் கொண்டுள்ளது. கிராமப்புற பெண் தொழிலாளிகளை அடிமை உழைப்பு ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் சேர்க்கப்படுவதற்கு அரசாங்கம் உதவுகிறது; இவர்கள் நீண்ட நேரம் பணிபுரிவதுடன் நெருக்கடி நிறைந்த, மிகப் பழமையான விடுதிகளில் வசிக்கின்றனர். இலங்கையின் கட்டுநாயக்கா சுதந்திர வர்த்தக வலையத்தில் கடந்த ஆண்டு தொழிலாளர்களிடையே வருங்கால வைப்பு நிதி உரிமைகள் குறித்து சீற்றம் வெடித்தபோது, அரசாங்கம் பாதுகாப்புப் படைகளை அனுப்பியது; அது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார், பலர் காயமுற்றனர். இக்கொலைக்காக எவரும் தண்டனைக்கு உட்படுத்தப்படவில்லை.

கராச்சி ஆலைத் தீ போன்ற துன்பியல் நிகழ்வுகள் அறநெறி அக்கறை மூலமோ, அதிகாரத்தில் உள்ள சக்திகளுக்கு முறையிடுவதன் மூலமோ நிறுத்தப்பட்டுவிட முடியாதவை. இலாபமுறையில் இருந்தே இயல்பாக ஊற்றெடுக்கும் இத்தகைய பேரழிவுகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான சமூக விரோதக் குற்றங்கள் ஆகும்.  உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி, பூமியில் ஒவ்வொரு மனிதப்பிறவிக்கும் கௌரவமான வாழ்க்கைத் தரம் அளிக்கும் திறன் உண்டு; ஆனால் முதலாளித்துவத்தின்கீழ் இது ஒரு சிறிய பெருநிறுவன உயரடுக்கிற்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்து, உழைக்கும் மக்களுக்கு ஆழ்ந்த வறிய நிலையைத்தான் கொடுத்துள்ளது.

ஆசியாவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கம் ஐக்கியப்படுத்தப்படுவதில்தான் இதற்கான தீர்வு உள்ளதுஉலக முதலாளித்துவச் சுரண்டல் முறை அகற்றப்பட்டு, சமூகம் மேலிருந்து கீழ்வரை ஒரு திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தின் அடிப்படையில் மறுகட்டமைக்கப்பட வேண்டும். அந்தப் புரட்சிகர சோசலிச முன்னோக்கிற்குத்தான், சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் பிரிவுகளும் போராடுகின்றன.