World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

All-India general strike against pro-investor “big bang” economic “reforms”

முதலீட்டாளர் ஆதரவு “பெரு வெடிப்பு பொருளாதாரச் ”சீர்திருத்தங்களுக்கு எதிராய் அகில இந்திய பொது வேலைநிறுத்தம்

By Deepal Jayasekera
20 September 2012

Back to screen version

டீசல் விலை உயர்வு, நாட்டின் சில்லறை வணிகத் துறையை வால்மார்ட் போன்ற வெளிநாட்டு பல-பிராண்டு பெரும் நிறுவனங்களுக்கு திறந்து விட்டமை மற்றும் பிற முதலீட்டாளர் ஆதரவுசீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கும் ஒருநாள் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் (பொதுவாக பள்ளிகள், கடைகள் மற்றும் வேலையிடங்கள் என அனைத்தும்  மூடியிருக்கும்) இன்று பல மில்லியன்கணக்கிலான தொழிலாளர்களும், டிரக் டிரைவர்களும், சிறு கடை-முதலாளிகளும் மற்றும்  பிறரும் கலந்து கொள்கின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரு வணிகங்களிடம் இருந்தான கடுமையான அழுத்தத்தின் கீழ், காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய  முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கம் சென்ற வாரத்தின் பிற்பகுதியில்பெரு வெடிப்பு” (big bang) பொருளாதார சீர்திருத்தங்கள் என்று அது அழைத்துக் கொண்ட ஒன்றை அறிவித்தது. பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது என்கிற வெளிப்பட்ட நோக்கத்துடன் சேர்ந்து, உழைக்கும்  மக்களின் நலன்களைப் பலியிட்டு அரசின் நிதிநிலைப் பற்றாக்குறையைக் குறைப்பதும் முக்கியமான பொருளாதாரத் துறைகளை  பெருவணிகங்களுக்கு இலாபகரமானதாகத் தோற்றமளிக்கும் வகையில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்கு உத்வேகமளிப்பதும் இந்த  அறிவிப்பின் நோக்கங்களாக உள்ளன.

செப்டம்பர் 13 அன்று அரசாங்கம் டீசல் விலைகளை 14 சதவீதம் உயர்த்தியதுடன் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு மானிய விலையில் பெறக்  கூடிய சமையல் எரிவாயு உருளைகளின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்தது. முக்கால்வாசி மக்கள் தினந்தோறும் 2 டாலர் அல்லது  அதற்கும் குறைவான வருவாயில் வாழ்க்கையை ஓட்டுகின்றதான ஒரு நாட்டில் பல வருடங்களாக இரட்டை இலக்க பணவீக்கம் அல்லது  இரட்டை இலக்கத்தை நெருங்கிய பணவீக்கத்தினால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை இந்த  நடவடிக்கைகள் மேலும் நசுக்கும்.

அடுத்த நாளில் அரசாங்கம் பல-பிராண்டு சில்லரை விற்பனைக் கடைகளில் அந்நிய முதலீட்டாளர்கள் 51 சதவீத உரிமை கொண்டிருக்க  பச்சைக் கொடி காட்டியது; உள்நாட்டின் விமானப் போக்குவரத்து சேவையில் 49 சதவீதம் உரிமை கொள்ள முடியும்; உள்நாட்டின் ஒளிபரப்பு  நிறுவனங்களில் அந்நிய உரிமைத்துவ வரம்பு 74 சதவீதத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது; அத்துடன் மிகப்பெரும் அரசு பொதுத் துறை  நிறுவனங்கள் பலவற்றில் அரசாங்கம் கொண்டிருக்கும் பங்குகளை இன்னும் அதிகமாய் விற்கவிருப்பதையும் அறிவித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மாருதி சுசுகி, ஹூண்டாய், BYD எலெக்ட்ரானிக்ஸ், மற்றும் ஃபாக்ஸ்கான் உள்ளிட்ட ஏராளமான  தொழிற்சாலைகள் போர்க்குணமிக்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை உள்ளிருப்புப் போராட்டங்களின் ஒரு அலையைக் கண்டிருக்கின்றன சற்றேறக்குறைய ஏழு மாதங்களுக்கு முன்பு தான் பிப்ரவரி 28 அன்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் சமூகப் பொருளாதாரக்  கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக ஒரு நாடுதழுவிய வேலைநிறுத்தத்தில் கோடிக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள்  பங்குபெற்றனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காகவும் மற்ற பெரு வணிக அபிவிருத்தித் திட்டங்களுக்காகவும் மத்திய மற்றும் மாநில  அரசாங்கங்கள் விவசாயிகளிடம் இருந்து நிலங்களைப் பறிக்க முனைவதும் பரவலான எதிர்ப்பைத் தூண்டியிருக்கிறது.

ஆனால் இன்றைய பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கக் கூடிய எதிர்க்கட்சிகளின் (ஸ்ராலினிசத் தலைமையிலான இடது  முன்னணி, பல்வேறு பிராந்திய மற்றும் சாதி-அடிப்படை முதலாளித்துவக் கட்சிகள், மற்றும் உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியான பாரதிய  ஜனதாக் கட்சி ஆகியவை) நோக்கம் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாக மூச்சுத்திணறச் செய்வதும் இந்தியாவை  முதலீட்டாளர்களுக்கான ஒரு புகலிடமாய் உலக முதலாளித்துவத்திற்கான மலிவு-உழைப்பு உற்பத்தியாளராக மாற்றுவதற்கு இரண்டு  பத்தாண்டுகளாக முதலாளித்துவம் செய்து வருகின்ற பிரயத்தனத்திற்கு ஒரு உண்மையான சவால் எழுந்து விடுவதைத் தடுப்பதுமே ஆகும்.

ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (அல்லது CPM) மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI)  ஆகியவை உள்ளிட எதிர்க்கட்சிகள் அனைத்துமே முதலாளி வர்க்கத்தின் பொருளாதாரசீர்திருத்த நிகழ்ச்சிநிரலையே அமல்படுத்தி  வந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன கோபத்தை இந்திய முதலாளிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத பாதைகளுக்குள் திசைமாற்றுகின்ற  அதேநேரத்தில் வெகுஜன கோபத்தை  வாக்குகளாகச் சுரண்டிக் கொள்வதற்கு வசதியான இடத்தில் தங்களை நிறுத்திக் கொள்ளும்  நம்பிக்கையில் எதிர்க்கட்சிகள் இன்றைய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.

அரசாங்கத்தின்பெரு வெடிப்பு சீர்திருத்தங்கள் காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகளில் பலவும் கூட  எதிர்ப்பதாகக் கூறும் அளவுக்கு சமூகரீதியாக மிக வெடிப்பு ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. மேற்கு வங்கத்தை அடிப்படையாகக்  கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சி டீசல் விலை உயர்வு குறைக்கப்பட வேண்டும் என்றும், மானிய எரிவாயு உருளைகளின்  எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த வேண்டும் என்றும், அத்துடன் வால்மார்ட் மற்றும் பிற மிகப்பெரும் பல-பிராண்டு சில்லரை-விற்பனை  பேரங்காடிகளை இந்தியாவிற்குள் அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் என்றும், இல்லாது போனால் அரசாங்கத்தில் இருந்து விலகவிருப்பதாகவும்  மிரட்டியிருக்கிறது, அதாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்றப் பெரும்பான்மைக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இன்னொரு உறுப்பு கட்சியான, தமிழகத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம், அது இன்றைய வேலைநிறுத்தத்தை ஆதரிப்பதாகவும், ஆனால் அரசாங்கத்தை விட்டு விலகுவதைக் குறித்து  சிந்திக்கவில்லை எனவும் கூறுகிறது.

ஸ்ராலினிசக் கட்சிகள் பல பத்தாண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியுடனும், பல்தரப்பட்ட பிராந்திய மற்றும் சாதிய முதலாளித்துவக்  கட்சிகளுடனும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில், இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியுடனும் கூட, பிற்போக்குவாதக் கூட்டணிகளை  மாறி மாறி அமைத்து வந்திருக்கின்றன. பாரதிய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசுடன் வழக்கமாகக் கூட்டு சேருகின்ற சமாஜ்வாதி கட்சி தெலுங்கு தேசம், பிஜூ ஜனதா தளம் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்துத் தான் இன்றைய  பொது வேலைநிறுத்தத்திற்கு இந்த ஸ்ராலினிசக் கட்சிகள் அழைப்பு விடுத்திருக்கின்றன.

இந்த வலதுசாரிக் கட்சிகளுடனான தங்களது கூட்டை நியாயப்படுத்தும் முயற்சியில் CPM தலைவர் ஒருவர் கொல்கத்தா டெலிகிராப்  பத்திரிகையிடம் கூறினார்: “இந்தக் கட்சிகள் எதன் மீதும் நீண்ட காலம் துணைவருவதற்கு நம்பிக்கை கொள்ள முடியாது தான். அவை  திடீரென்று நிறம் மாறி பாரதிய ஜனதாக் கட்சி அல்லது காங்கிரசின் பக்கம் போய் விடும் தான். ஆனால் நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளில்  அவர்கள் உடன்வருகையில், அவர்களைப் பயன்படுத்தினால் என்ன தவறு?”

பாரதிய ஜனதாக் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கும் அதன் கூட்டணிக் கட்சியினரும் இன்றைய பொது  வேலைநிறுத்தத்திற்குத் தனியாக அழைப்பு விடுத்துள்ளனர். 1998 முதல் 2004 வரை இந்திய அரசாங்கத்தின் தலைமையில் இருந்த சமயத்தில்  தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் மற்றும் பிற சந்தை-ஆதரவுக் கொள்கைகளை முன்னெடுத்த படுபயங்கர வலதுசாரி கட்சியான பாரதிய ஜனதாக் கட்சியின் போராட்டத்துடன் எந்த வித ஒருங்கிணைப்பும் தங்களது போராட்டத்திற்குக் கிடையாது என்று தான்  ஸ்ராலினிஸ்டுகள் கேள்வி எழும்பினால் கூறிக் கொள்வார்கள். ”அவர்களும் அதே தேதியைத் தேர்ந்தெடுத்தால் நாங்கள் என்ன செய்ய  முடியும்?” என்று புலம்பினார் CPM தலைவர் ஒருவர்.

ஆயினும் இந்த இரண்டு போராட்டங்களுக்கும் இடையில் வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்கான எந்த முக்கியமான முயற்சியையும்  ஸ்ராலினிஸ்டுகள் செய்யவில்லை. அரசாங்கத்தின்பெரு வெடிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகஒன்றுபடுவதற்கு” “தேசநலனில் அக்கறை  கொண்ட குடிமக்கள் அனைவரையும் அழைக்கின்றதாக அவர்களது வார்த்தைகளும் பாரதிய ஜனதாக் கட்சி பயன்படுத்துவது போலத் தான்  இருக்கின்றன என்பதோடு முன்னர் இவர்கள்நவ-தாராளவாதக் கொள்கைகளைத் தோற்கடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதாக்  கட்சியுடன் இணைந்து செயல்பட விருப்பத்தையும் கூட அறிவித்திருந்தனர்.

இதுதவிர, தொழிலாளர்களது எதிர்ப்பு பெருகி வருவதற்கு ஸ்ராலினிஸ்டுகள் பாரதிய ஜனதாக் கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த  தொழிற்சங்கங்களுடன் கூட்டணி உருவாக்கி பதிலிறுப்பு செய்துள்ளனர். CPM உடன் இணைந்த இந்திய தொழிற்சங்க மையமும் (CITU)  CPI உடன் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசும் (AITUC) பாரதிய ஜனதாக் கட்சியின் பாரதிய மஸ்தூர் சங் மற்றும் காங்கிரஸ்  கட்சியின் இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC) ஆகியவற்றுடனான தமது கூட்டணியைத் தொடர்ந்து போற்றி வந்திருக்கின்றன தொழிலாள வர்க்கத்தின் ஒற்றுமையில் இது ஒருவரலாற்று சாதனை என்பதாக அவை கூறிக் கொண்டன.

உண்மையில், மாருதி சுசுகி அல்லது நெய்வேலி லிக்னைட் கார்பரேஷன் நிறுவனங்களில் போல, எப்போதெல்லாம் போர்க்குணத்துடன்  தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் வெடிக்கிறதோ, அப்போதெல்லாம் CITUவும் AITUCயும் மற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்புகளுடன்  கைகோர்த்துக் கொண்டு அப்போராட்டத்தைத் தனிமைப்படுத்தி, அதன்மூலம் அரசு போலிசையும் நீதிமன்றங்களையும் பயன்படுத்தி  எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி தொழிலாளர்களுக்கு சேதமிழைக்க அனுமதிக்கின்றன.

கடந்த இரண்டு பத்தாண்டுகளாக, முதலாளித்துவ வர்க்கத்தின்சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துவதிலும் சரி, அதற்கு தொழிலாள  வர்க்கத்திடம் இருந்தும் கிராமப்புற உழைக்கும் மக்களிடம் இருந்தும் பெருகுகின்ற எதிர்ப்பினை தடம்புரளச் செய்வதிலும் சரி ஸ்ராலினிஸ்டுகள் முதலாளித்துவ வர்க்கத்திற்கு அச்சாணி போன்ற ஆதரவினை வழங்கி வந்திருக்கின்றனர்.

சோசலிசம் என்பது நீண்டகாலத்தில் நடைபெறக் கூடியது என்று கூறி நிராகரித்த ஸ்ராலினிஸ்டுகள், 1991 இல் முதலாளித்துவ வர்க்கத்தின்  “புதிய பொருளாதாரக் கொள்கையைத் தொடங்கிய நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் சிறுபான்மை அரசாங்கத்திற்கு முட்டுக்  கொடுத்தனர். இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அந்த அரசாங்கத்தில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அதன்பின் 2004 முதல் 2008  வரையான காலத்தில், “சீர்திருத்தங்களை மனிதாபிமான முகத்துடன் அமல்படுத்துவது சாத்தியமே என்பதான கூற்றை விளம்பரம் செய்து  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு அதற்குத் தேவையான நாடாளுமன்றப் பெரும்பான்மையை வழங்கினர்.

மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் இருந்த ஸ்ராலினிஸ்டுகள் தலைமையிலான அரசாங்கங்கள் சென்ற ஆண்டில் நடந்த மாநில சட்டசபைத்  தேர்தலின் மூலம் பதவியில் இருந்து அகற்றப்படுகின்ற வரைக்கும்முதலீட்டாளர்-ஆதரவு பொருளாதாரக் கொள்கைகள் என்று அவர்களே கூறி வந்ததைத் தான் இரக்கமற்று கடைப்பிடித்தனர். மேற்கு வங்கத்தில் CPM தலைமையிலான அரசாங்கம் தகவல்தொழில்நுட்பத் துறையில்  வேலைநிறுத்தங்களைத் தடை செய்தது என்பதோடு, பெருவணிகங்களுக்காக மாநில அரசு தங்கள் நிலங்களைப் பறிப்பதை எதிர்த்துப்  போராடிய விவசாயிகளின் மீது மிருகத்தனமாய் தாக்குதல் நடத்துவதற்கு போலிசையும் கட்சிக் குண்டர்களையும் நிறுத்தியது.

CPM மற்றும் CPI இன் தொழிற்சங்க அமைப்புகள் எல்லாம் கடந்த பத்தாண்டு காலத்தில், வருடந்தோறும் நாடுதழுவிய ஒருநாள் பொது  வேலைநிறுத்தங்களை நடத்துவதை வழமையாகக் கொண்டிருந்து வந்திருக்கின்றன. அதன்மூலம் தான் அவை, பெருகி வந்த தொழிலாள  வர்க்கத்தின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்கும், அந்த எதிர்ப்பை இந்தியாவின் மத்திய அரசாங்கம் - அது பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலானதாக இருந்தாலும் சரி அல்லது காங்கிரஸ் கட்சி தலைமையிலானதாக இருந்தாலும் சரி -மக்கள்-ஆதரவுக் கொள்கைகளைக்  கடைப்பிடிக்கும் படி நெருக்குதல் அளிக்க முடியும் என்கிற பிற்போக்குத்தனமான முன்னோக்குடன் கட்டிப் போடுவதற்கும் இயன்றது.

இந்தப் போராட்டங்களை எல்லாம் அடுத்தடுத்த அரசாங்கங்கள், CPM இன் ஆங்கில வார இதழான People's Democracy இல் செப்டம்பர் அன்று வெளியாகியிருக்கும் ஒரு கட்டுரையில் இருந்தான வார்த்தைகளைப் பயன்படுத்தி கூறுவதென்றால், “துச்சமான அலட்சியத்துடன்  எதிர்கொண்டிருக்கின்றன என்பதை ஸ்ராலினிஸ்டுகளே கூட ஒப்புக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

காங்கிரசின்பெரு வெடிப்பு நடவடிக்கைகளுக்கு ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு என்பது வெறுமனே தேர்தலை  மனதில் கொண்டு இல்லாத மட்டத்திற்கு, அது இந்திய தேசியவாதத்தை, அதாவது அந்நிய மூலதனத்தின் நுழைவால் அச்சுறுத்தலாக உணரும்  இந்தியாவின் தேசிய முதலாளி வர்க்கத்தின் பிரிவின் நலன்களைப் பாதுகாப்பதை, அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது.

பெரு மந்தநிலைக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மிகப்பெரும் நெருக்கடி நிலைமைகளின் கீழ், இந்தியாவில் உள்ள தொழிலாள  வர்க்கமானது, உலகெங்கிலும் இருக்கும் அதன் வர்க்க சகோதர சகோதரிகளைப் போலவே, ஒரு போராட்டத்திற்குள், பொருளாதாரமானது  ஒருசிலரை வளப்படுத்துவதற்காய் அல்லாமல் மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கானதாய் ஒழுங்கமைக்கப்படுகின்ற வகையில்  சமூகத்தை மறுஒழுங்கு செய்கின்ற ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுப்பதற்கான அவசியத்தை  முன்நிறுத்துகின்ற ஒரு போராட்டத்திற்குள், உந்தித் தள்ளப்படுகின்றது.

பெருவணிகம், நில அதிபர்கள் மற்றும் கந்துவட்டிக்காரர்களுக்கும் மற்றும் அவர்களது அரசியல் பிரதிநிதிகளுக்கும் எதிரான ஒரு  போராட்டத்தில் ஏழை விவசாயிகளையும் மற்றும் சமூகத்தின் பிற ஒடுக்கப்பட்ட பிரிவுகளையும் தொழிலாள வர்க்கம் தனது தலைமையின் கீழ்  அணிதிரட்ட வேண்டும். முதலாளித்துவத்தைத் தூக்கியெறிந்து ஒரு தொழிலாளர் மற்றும் விவசாயிகளது அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான  போராட்டத்தை நடத்துவதற்கு சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டத்தையும் முன்னோக்கையும் அடிப்படையாகக் கொண்டிருக்கக் கூடிய  ஒரு வெகுஜனப் புரட்சிகரக் கட்சியை, லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபகம் செய்யப்பட்ட உலகப் புரட்சிகரக் கட்சியான நான்காம் அகிலத்தின் இந்தியப் பிரிவை, கட்டுவதே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.