World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Despite mass opposition, India pushes ahead with operationalizing nuclear plant

இந்தியா பரந்த மக்கள் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அணுமின் ஆலையைச் செயல்படுத்த நடவடிக்கைகளை முன்தள்ளுகிறது

By Arun Kumar and Kranti Kumara
27 September 2012
Back to screen version

கிராம மக்களின் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களைப் பொருட்படுத்தாமல், இந்திய அரசாங்கம், தமிழகத்தின் மாநில அரசாங்கத்துடன் கைகோர்த்து, தமிழ்நாட்டின் தென் கடலோரத்தில் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கும் 2000 மெகாவாட் கூடங்குளம் அணு மின்நிலையத்தில் எரிபொருள் நிரப்பும் பணியை மேற்கொள்கிறது.

இந்தப் பாரிய மின் திட்டம் இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான கூட்டு செயல்பாட்டுத் திட்டம் ஆகும். இதனைக் கட்டி முடிக்க 172 பில்லியன் ரூபாய் (சுமார் 3.2 பில்லியன் டாலர்) செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆலையில் இப்போது இரண்டு PWR ( அழுத்த நீர் உலைகள்) அணு உலைகள் நிறுவப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டவை. ஆனால் மேலும் நான்கு கூடுதல் உலைகளையும் இங்கு நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது.

2011 மார்ச் மாதத்தில் ஜப்பானின் புகுஷிமா அணுமின் நிலையத்தில் நடந்த அணு விபத்துக்குப் பிறகு, அதிலும் குறிப்பாக அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்கள் எல்லாம் 2050 ஆம் ஆண்டுக்குள்ளாக நாட்டின் மின்சாரத்தில் 25 சதவீதத்தை அணுப் பிளவு தொழில்நுட்பத்தின் மூலமாக உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் அணுமின் நிலையங்களுக்கு எதிரான ஒரு ஆரவாரமான எதிர்ப்பு பெருகியுள்ளது. மக்களிடையே அவநம்பிக்கை மிக ஆழமாய் இருந்த நிலையிலும், இந்திய உயரடுக்கோ, உள்நாட்டில் பெருகும் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு அணுமின் நிலையங்கள் அவசியமானவை என்று கூறிக் கொண்டு, எந்த ஜனநாயக விவாதமும் இன்றி வெறிபிடித்ததைப் போல நடவடிக்கைகளை முன்தள்ளுகின்றது.

இந்தக் குறிப்பிட்ட ஆலை அதன் சுற்றுப்புறத்தில் வாழும் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் இடையே பெரும் கவலையைக் கொண்டுவந்திருக்கிறது, அதற்குக் காரணம் இந்த ஆலையும் ஜப்பானின் புகுஷிமா ஆலையைப் போலவே கடலை ஒட்டி அமைந்திருக்கிறது. மாநிலத்தின் தெற்கு முனையில் கட்டப்பட்டிருக்கும் இந்த KNPP இந்தியப் பெருங்கடலின் எக்காலத்திலுமான அபாயங்களான கடலடி பூகம்பங்கள் மற்றும் சுனாமிக்கு சிக்கிக்  கொள்ளும் அபாயத்தை ஒப்பீட்டளவில் அதிகம் கொண்டிருக்கின்றன. இந்தக் கவலைகள் முகாந்திரமற்றவை எனக் கூற முடியாது என்பதை 2004 இல் இந்தியப் பெருங்கடலில் நிகழ்ந்த கடலடி பூகம்பம் எழுப்பிய பாரிய கடலலைகளில் இந்த ஆலையின் கட்டுமான வசதிகள் நீரில் மூழ்கியதில் இருந்து விளங்க முடியும்.

KNPP முன்நிறுத்தும் அபாயத்திற்கு எதிராக கிராம மக்களும் மீனவர்களும் கடந்த ஓராண்டுக்கும் அதிகமாக மிக ஆவேசமாய் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக சென்ற ஆண்டில், இந்திய அரசாங்கம், ஆலையை செயல்படுத்துவதற்கான முன்னோட்டமாக முதலாவது உலையில் அணு எரிபொருளை நிரப்புவதைத் துவக்கவிருப்பதாக அறிவித்தது முதலாக, இந்தப் போராட்டம் மிகத் தீவிரமடைந்திருக்கிறது. ஆரம்பத்தில் சென்ற ஆண்டின் டிசம்பரில் மேற்கொள்ளப்படுவதாக இருந்த எரிபொருள் நிரப்பல், பரந்த மக்களின் போராட்டங்களின் காரணமாக தள்ளிப் போனது.

முழுப் பிற்போக்குத்தனமுடைய முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையிலான அஇஅதிமுக (அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரசாங்கம், இந்திய அரசாங்கத்துடன் ஒத்திசைந்த வகையில், போலிஸ் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு இந்தப் போராட்டங்களுக்கு பதிலிறுப்பு செய்துள்ளது. 10,000க்கும் அதிகமான போலிசாரும் துணை இராணுவப் படையினரும் அங்கு நிறுத்தப்பட்டனர். அவர்கள் போராட்டம் செய்த கிராமத்தாரை இரக்கமின்றி துரத்தினர், அடித்தனர், நூற்றுக்கணக்கானோரை கைது செய்தனர், இன்னும் சில போராட்டக் குழுவினர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டுகளும்அரசாங்கத்திற்கு எதிராக போர் நடத்திய குற்றச்சாட்டுகளும் கூடப் பதியப்பட்டன.

சென்ற ஏப்ரலில் இந்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் நிறுத்தப்பட்டிருந்த கூட்டுப் படையினர் குறிப்பிடத்தக்க மிருகத்தனமான அடக்குமுறையைக் கையாண்டனர். போராடிய கிராமத்தாருக்கு தண்ணீர், உணவு மற்றும் மின்சார விநியோகத்தை போலிஸ் துண்டித்தது; அத்துடன் போராட்டம் மையம் கொண்டிருந்த கிராமங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் போராட்டத்துக்குத் தலைமையில் இருந்த அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் (PMANE) தமிழக மற்றும் இந்திய நீதித் துறை தனது சார்பாக தலையிடும் என்கிற நம்பிக்கையில் போராட்டத்தைக் கைவிட்டதை அடுத்து ஓரளவுக்கு போராட்டங்கள் தணிந்தன.

ஆயினும், ஆகஸ்டின் பிற்பகுதியில் சென்னை உயர் நீதிமன்றம், அணுமின் நிலையத்தை செயல்படுத்த அவசியமான நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் தொடர்வதற்கு பச்சைக் கொடி காட்டி விட்டது. அரசாங்கம் அதன் சொந்த அணு சக்தி கட்டுப்பாட்டு வாரியத்தினால் (AERB) பரிந்துரை செய்யப்பட்ட 17 முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கைகளிலேயே இன்னும் 11 நடவடிக்கைகளை அமல்படுத்தவில்லை என்பதால் இந்த அணு உலையை செயல்பட வைப்பதற்கான மேல்நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அணுசக்தி எதிர்ப்பு ஆர்வலர் ஒருவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த சமயத்தில் பரந்த போராட்டங்கள் தொடர்ந்தன, போலிசும் இன்னும் அதிகமான வன்முறையைக் கொண்டு பதிலளித்தது. செப்டம்பர் 10 அன்று போராட்டத்தில் பங்குபெற்றிருந்த அந்தோணி ஜான் என்கிற 48 வயது மீனவர் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார். போராட்டத்தைக் கலைக்க போலிஸ் தடியடியில் இறங்கிய சமயத்தில் ஒரு சிறுமியும் கூட மூச்சுத்திணறி பலியானார். மக்கள் நீரில் இறங்கி நடத்திய போராட்டத்தைக் கண்காணிப்பதற்கும் அவர்களை அச்சுறுத்துவதற்கும் கடலோரக் காவற்படை தாழப் பறக்கும் விமானங்களை இயக்கியது. போராட்டத்தில் பங்குபெற்ற சத்யம் என்கிற ஒரு மீனவர் ஒரு கண்காணிப்பு விமானம் தாழப் பறந்ததில் பீதியடைந்து தடுமாறியதில் அவரது தலை ஒரு பாறையில் மோதி அவர் உயிரிழந்தார். சத்யத்தின் இறுதி ஊர்வலம் அணு உலைக்கான எதிர்ப்புக்கு அணிசேரும் புள்ளியாக உருமாறியது; அருகிலிருக்கும் பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இந்த இறுதி ஊர்வலத்தில் பங்குபெற்றனர்.

இந்த மாத ஆரம்பத்தில் KNPP செயல்படுவதற்கு எதிரான மனுவை விசாரிப்பதற்கும் கூட இந்திய உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அதன்மூலம், ஆலை நிர்மாணத்தில் குறைகள் இருந்ததற்கு பொதுவிலே கிடைக்கத்தக்கதாக இருக்கிற ஆதாரங்கள், ஒரு சோதிக்காத உலை வடிவமைப்பைப் பயன்படுத்துவதில் பொதிந்திருக்கும் அபாயங்கள், மற்றும் ஆலையைச் சுற்றிலும் 30 கிலோமீட்டர் சுற்றுவட்டத்திற்குள் 1 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் என்பதே AERB இன் பலவீனமான நெறிமுறையையும் கூட மீறுவதாய் உள்ளது என்கிற உண்மை இவை அத்தனையையும் நீதிமன்றம் உதாசீனம் செய்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஒரு உலையில் செறிவூட்டப்பட்ட-யுரேனிய எரிபொருள் தண்டுகளை நிரப்பும் பணியை மிக அவசரத்துடன் மேற்கொள்ளத் துவங்கியது. எரிபொருள் நிரப்பும் பணி செப்டம்பர் 28க்குள்ளாக நிறைவடைந்து விடும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன்பின் வெகு விரைவில் அந்த அணுமின் நிலையம் முழு செயல்பாட்டுக்கு வரும் என்றும் அரசாங்கம் கூறியிருக்கிறது.

இந்த நடவடிக்கை கிராம மக்களை போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்தத் தூண்டியிருக்கிறது.

செப்டம்பர் 22 சனிக்கிழமையன்றான போராட்ட நடவடிக்கையில் 500க்கும் அதிகமான மீன்பிடி  படகுகள் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு சுமார் 100 கிமீ வடக்கில் இருக்கும் தூத்துக்குடி  துறைமுகத்தை பல மணி நேரங்களுக்கு முற்றுகையிட்டன. அணு மின்நிலையத்திற்குக் கொண்டு செல்லப்படுவதற்கான அணு எரிபொருள் வந்திறங்குவதற்கு இந்தத் துறைமுகமே பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் கிராம மக்கள் உள்ளிட்ட மற்ற போராட்டக்காரர்கள் எல்லாம்  அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைமையில்தண்ணீருக்குள் நிற்கும் சத்தியாக்கிரகத்தை  நடத்தினர். இதில் அணு மின்நிலையத்திற்குப் பக்கத்தில் இருக்கும் கடலில் இடுப்பு வரையான  தண்ணீரில் நின்று கொண்டு ஒரு மனிதச் சங்கிலிப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டனர்.

மாநிலமெங்கும் இப்போராட்டங்களுக்கு ஆதரவான போராட்டங்களும் எழுந்தன. ஆயினும் போலிஸ்  ஒடுக்குமுறை எந்த தளர்ச்சியுமின்றித் தொடர்ந்தது. ஆர்வலர்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள்  பலருக்கும் கைது வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்களில் அணுசக்திக்கு எதிரான மக்கள்  இயக்கத்தின் தலைவரான உதயகுமார் உள்ளிட்ட பலரும் இப்போது தலைமறைவாய் உள்ளனர் போராட்டத் தலைவர்களை தேடுகின்ற சாக்கில், 10 பேர் கொண்ட குழுக்களாகச் சென்ற போலிஸ்  கூடங்குளம் பகுதியில் வாழ்கின்ற கிராம மக்களின் வீட்டுக் கதவுகளை உடைத்துப் போட்டும்  சூறையாடியும் வெறியாட்டம் போட்டிருக்கிறது. அப்பகுதி மக்களை பயமுறுத்தி அடிபணியச்  செய்வதற்கு அரசாங்கம் செய்த முயற்சியே இது என்பது தெளிவு.

கூடங்குளம் ஆயுதமேந்திய போலிசாரால் ஏறக்குறைய சுற்றிவளைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே அவர்கள் உள்ளே அனுமதிக்கின்றனர். அணு  மின்நிலையத்தைச் சுற்றியிருக்கும் சில பகுதிகளில் பொதுப் போக்குவரத்தும் கூட நுழைவதற்கு  தடை செய்யப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் திகைக்கும்விதமாக இந்தப் போராட்டங்களில் மாணவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும்  கிராம மக்கள் உள்ளிட்ட மக்கள் பங்கேற்பு அபரிமிதமாகப் பெருகியிருக்கிறது. மாநிலமெங்குமான  போராட்டங்களில் மட்டுமின்றி அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலும்  கூட மக்கள் இவ்வாறாய் போராட்டங்களில் கைகோர்த்து வருகின்றனர்.

கிராம மக்களை கோபமடையச் செய்திருப்பது அணு மின்நிலையத்தின் பாதுகாப்பு மட்டுமன்று. அணு மின்நிலைய  ஊழியர்களுக்கு என முழு-வசதிகளுடனான ஒரு மருத்துவமனை உள்ளிட்ட அதிநவீன வசதிகளைக்  கட்டுவதற்கு இந்திய அரசாங்கம் மிகப் பெரும் தொகைகளை செலவிட்டிருக்கிறது, ஆனால்  அவற்றைப் பயன்படுத்துவதில் இருந்து கிராம மக்கள் தடுக்கப்பட்டுள்ளனர். கிராம மக்கள் மற்றும்  மீனவர்களில் அநேகம் பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். குழாய் நீர் போன்ற அடிப்படை  வசதிகளும் கூட அவர்களுக்குக் கிடையாது.

இதெல்லாம் தவிர, 1984 ஆம் ஆண்டில் போபாலில் நடந்த யூனியன் கார்பைடு பெருவிபத்தின்  போதும் அதற்குப் பிறகும் செயல்திறனின்மை மற்றும் உணர்ச்சியின்மை இரண்டும் கலந்ததொரு  விதத்தில் அரசாங்கம் செயல்பட்டிருப்பதை எடைபோடும் கிராம மக்கள், ஒரு அணு விபத்தைக்  கையாளுவதற்கு இந்திய உயரடுக்கு பெற்றிருக்கக் கூடிய திறனின் மீது எந்த நம்பிக்கையும்  கொள்ளத் தயாராயில்லை. போபாலில் நச்சுவாயு கட்டுப்படுத்தமுடியாமல் வெளியாகி 20000  மரணங்கள் உள்ளிட அரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதற்கு  காரணமானது. உலக வரலாற்றில் மிக மோசமான தொழிற்துறை விபத்தாக இது அமைந்தது இச்சம்பவம் நடந்து 38 வருடங்கள் கடந்தும் கூட, இந்த தொழிற்சாலைப் பகுதியையும் அதன்  சுற்றுப் புறங்களையும் நச்சுப் பொருட்களால் கடுமையாக நஞ்சாக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே  இன்னும் அரசாங்கம் விட்டு வைத்திருக்கிறது. குற்றவியல்ரீதியாக எவரொருவரும்  பொறுப்பாக்கப்படவில்லை என்பதோடு யூனியன் கார்பைடு நிறுவனத்திடம் இருந்து அற்பமாய் 470  மில்லியன் டாலர் தொகையை இழப்பீடாகப் பெற ஒப்புக் கொண்டதன் மூலம் இந்த பாரியக்  குற்றத்தில் இந்திய அரசாங்கமும் அடிப்படையாக ஒத்துழைத்திருக்கிறது.

இந்தப் பயங்கரமான முன்னுதாரணம் இருந்தும் கூட, இந்திய அரசாங்கமானது, கூடங்குளம் அணு  மின்நிலைய உலையை வழங்கி நிறுவியிருக்கக் கூடிய ரஷ்ய நிறுவனம், ஏதாவது விபத்து நடக்கும்  பட்சத்தில், எந்தப் பொறுப்பும் ஏற்க வேண்டியதில்லை என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறது.

போராட்டங்களை அரசு ஒடுக்குவதை நியாயப்படுத்துவதற்கான ஒரு விரக்தியான முயற்சியில் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியாவின்முன்னேற்றத்தைத் தடம்புரளச் செய்ய விரும்புகின்ற  அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற அரசு சாரா அமைப்புகளின் (NGO)  உத்தரவின் பேரில் தான் அணுசக்தி எதிர்ப்பு போராட்டக்காரர்கள் செயல்படுவதாக கொஞ்சமும்  நாக்கூசாமல் அறிவித்திருக்கிறார்.

நாட்டை நெடுங்காலமாய் பாதித்து வரும் மின்சாரப் பற்றாக்குறையை குறைக்க உதவும் என்று கூறித் தான் அணு மின் நிலையங்களை திறக்க தான் விடாப்பிடியாக முயலுவதை இந்திய ஸ்தாபகம் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு அணு மின்நிலையங்களை விடவும் செலவு குறைந்த திறம்பட்ட வழிகள் உள்ள நிலையில் இத்தகைய வாதங்கள் மோசடியானவையாக இருக்கின்றன

ஆனால் மலிவு விலை மின்சாரம் வழங்குவதைக் காட்டிலும் மற்ற நோக்கங்கள் தான் இந்திய  உயரடுக்கை நாட்டின் அணு மின்சக்தித் துறையை விரிவாக்குவதற்கு உந்திக் கொண்டிருக்கிறது அதன் அணு ஆயுதக் கையிருப்பை பெரிதாக்குவதற்கான உந்துதல் இவற்றில் முதலானதும்  முதன்மையானதும் ஆகும். 2008 ஆம் ஆண்டில் இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம்  கையெழுத்தானதன் மூலம், இந்திய உயரடுக்கு, மிக நவீன அணுசக்தி தொழில்நுட்பத்தில்  நிபுணத்துவத்தை பெறுவதற்கும் எட்டுவதற்கும் முடியும் என்கிற அதேசமயத்தில் உள்நாட்டின்  யுரேனியக் கையிருப்பை ஆயுத உற்பத்திக்கென இப்போது அதனால் பயன்படுத்திக் கொள்ள  முடியும்.