World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Detention of Glenn Greenwald’s partner approved at highest levels of US and UK governments

கிளென் கிரீன்வால்டின் பங்காளி காவலில் வைக்கப்படுவது அமெரிக்கா, ஐக்கிய இராச்சிய அரசாங்கங்களின் மிக உயர்மட்டங்களில் ஒப்புதல் கொடுக்கப்பட்டது

By Thomas Gaist and Joseph Kishore 
21 August 2013

Back to screen version

ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம், கிளென் கிரீன்வால்ட்டுடன் இணைந்து பணியாற்றுபவரான டேவிட் மிராண்டாவை ஹீத்ரோ விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரத்திற்கு தடுத்து வைத்திருந்த முடிவையும் மூர்க்கத்தனமாக பாதுகாத்து, அவருடைய மடிகணினி, புகைப்படக்கருவி, கைபேசி இன்னும் சொந்தப் பொருட்களையும் கைப்பற்றிக் கொண்டது. மிராண்டா பேர்லினில் இருந்து அவருடைய ரியோ டி ஜனேரியோ வீட்டிற்குப் பயணித்துக் கொண்டிருந்தவேளையில், ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாதச் சட்டம் ஒன்றின்கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

மிராண்டாவை காவலில் வைத்துள்ளது பிரித்தானிய, அமெரிக்க அரசாங்கங்களால் செயல்படுத்தப்படும் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான குற்றங்கள், சதித்திட்டங்கள் ஆகியவற்றை அம்பலப்படுத்த முற்படும் அனைவருக்கும் எதிராக இயக்கப்படும் அரசியல் மிரட்டலின் அப்பட்டமான செயலாகும்; இதில் முன்னாள் NSA ஒப்பந்தக்காரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனும் அடங்குவார்.

கிரீன்வால்டுன் நெருக்கமாக பணியாற்றிய ஸ்னோவ்டென் தற்பொழுது ரஷ்யாவில் அகதியாக உள்ளார். ஒபாமா நிர்வாகத்தின் தலைமையில் நடத்தப்படும் ஒரு சர்வதேசப் பழி தூற்றலின் இலக்கு ஆவார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கொடுக்கும் அறிக்கை ஒன்றின்படி, “ராய்ட்டர்ஸிடம் ஒரு அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரி, பிரித்தானிய அரசாங்கம் மிராண்டாவைக் காவலில் வைத்து விசாரிப்பதன் முக்கிய நோக்கங்களில் ஒன்று, ஸ்னோவ்டென் கொடுத்த தகவல்களை வாங்கியவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்புவது, இதில் கார்டியனும் அடங்கும்; பிரித்தானிய அரசாங்கம் கசிவை நிறுத்துவதற்கு முயல்வதில் தீவிரமாக உள்ளது என்றார்.

வேறுவிதமாகக் கூறினால், தடுப்புக்காவல்  என்பது, “பயங்கரவாதம்” அல்லது “தேசியப்பாதுகாப்பு” உடன் எந்த தொடர்பும் கொள்ளவில்லை; மாறாக, இது ஒரு அரசியல் முடிவு ஆகும். இந்த முடிவில் அமெரிக்க, பிரித்தானிய அரசாங்கங்களின் மிக உயர்ந்த மட்டங்கள் தொடர்பு உடையவை என்பது தெளிவு. திங்கள் அன்று வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒருவர், ஒபாமா நிர்வாகம் திட்டமிட்ட தடுப்புக்காவல் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார்.

பிரித்தானியா பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் மிராண்டாவை தடுப்புக்காவலில் வைக்கும் திட்டங்கள் குறித்து முன்கூட்டிய அறிவிப்பைப் பெற்றார் என்று டௌனிங் தெரு நேற்று உறுதி செய்தது. அரசாங்கத்திற்குள் இருக்கும் ஆதாரத்தை மேற்கோளிட்ட கார்டியன்  “வழக்கமான முறையில் நாங்கள் அவ்வப்பொழுது நடப்பதை அறிந்து கொள்ளுகிறோம். நாங்கள் பொலிஸ் விசாரணைகளை இயக்குவதில்லை” எனக் கூறியதாக அது தெரிவித்துள்ளது.

ஐக்கிய இராச்சிய அரசாங்கத்திடம் வந்துள்ள தகவலான, உள்ளூர் பொலிஸ் நிறுவனங்களால் இறுதி முடிவு எடுக்கப்பட்டது என்பது ஒரு மோசடிச் செய்தியாகும். மிராண்டவின் தடுப்புக்காவல், டௌனிங் தெரு இலக்கம்.10 மற்றும் வெள்ளை மாளிகையில் இருந்துதான் வந்துள்ளன என்பது மிகத் தெளிவு.

ஐக்கிய இராச்சிய அரசாங்கச் செய்தித் தொடர்பாளர் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு நடவடிக்கையை ஆதரிக்கும் வகையில் கூறினார்; “அரசாங்கமும் பொலிசும் மக்களைக்காக்கும் கடமையையும், நம் தேசியப்பாதுகாப்பைக் காக்கும் கடமையையும் கொண்டுள்ளன. ஒரு நபர் மிக இரகசியத் திருட்டுத் தகவலை வைத்திருக்கிறார், அது பயங்கரவாதத்திற்கு உதவக்கூடும் என்று பொலிஸ் நம்பினால், அவர்கள் செயல்பட வேண்டும், சட்டம் அவர்கள் அதைச் செய்வதற்கு வடிவமைப்பைக் கொடுத்துள்ளது.”

இதன் பின் அந்த அறிக்கை தொடர்ந்து அச்சுறுத்தியது: “இது போன்ற நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தாங்கள் எதை மன்னிக்கிறார்கள் என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும்.”

ஐக்கிய இராச்சியத்தின் உள்துறை மந்திரி தெரிசா மேயும் மிராண்டா தடுப்புக்காவல் திட்டங்கள் குறித்துத் தமக்குக் கூறப்பட்டது என்பதை ஒப்புக் கொண்டார். “பொலிசார் எவரேனும் அவரிடம் மிக இரகசியத் திருட்டுத் தகவலை வைத்துள்ளனர் என்று நம்பினால், அவர்கள் செயல்படுவது சரியே” என்றார் அவர். இந்த ஆவணங்கள் பயங்கரவாதிகளுக்கு உதவும், “உயிர்கள் இழக்கப்படுவதற்கு வழிவகுக்கும்.”

அதாவது அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் மற்றும் பிற அரசாங்கங்களின் பாரிய, சட்ட விரோதத் திட்டங்களை அம்பலப்படுத்துவது பயங்கரவாதிகளுக்கு உதவுவதுடன் சமமாக்கப்படுகிறது. இத்தகைய வாதங்களுடன், அரசாங்கம் இன்னும் நேரடி நடவடிக்கையை இக் குற்றத் திட்டங்களை வெளிப்படுத்துபவருக்கு எதிராக இலக்கு கொள்ள முற்படுகிறது.

லண்டனின் மெட்ரோபொலிடன் பொலிசும் மிராண்டா காவலில் வைக்கப்படுவதற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இதை “சட்டபூர்வமாகவும், முறைப்படியும் சீரானது” என்று அழைத்துள்ளது. ஸ்காட்லாந்து யார்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, “ஞாயிறன்று 18 ஆகஸ்ட், ஹீத்ரோ விமான நிலையத்தில் 28 வயது நபரை, 2000ம் ஆண்டு பயங்கரவாதச் சட்ட அட்டவணை 7ன்படி விசாரணை செய்வது, ஒரு விரிவான முடிவெடுக்கும் நடவடிக்கையின் கீழ்த்தான் உள்ளது என்று அறிவித்துள்ளது.

மிராண்டாவை கைப்பற்றியதில் “சட்டபூர்வ” அதிகாரம் ஏதும் இல்லை. ஒரு பிரிட்டிஷ் குடிமகனில்லாதவர், கைப்பற்றப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அவருடைய உடைமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டன; காரணம் அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்த பணியாற்றிய ஒரு செய்தியாளருடன் அவர் கொண்டிருந்த தொடர்பு. இவைதான் பொலிஸ் அரசின் வழிவகைகள் ஆகும்.

தன்னுடைய 9 மணிநேர தடுப்புக்காவல் குறித்து மிராண்டா கூறினார்: “முழு நேரமும் அவர்கள் என்னை அச்சறுத்தினர், நான் ஒத்துழைக்காவிட்டால் சிறையில் தள்ளுவதாகக் கூறினர். நான் ஒரு குற்றவாளி போலவும், ஐக்கிய இராச்சியத்தை தாக்க இருப்பது போலவும் என்னை நடத்தினர்.” அவர் ஒன்பது மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எந்த விளக்கமும் மிராண்டாவிற்கு கொடுக்கப்படவில்லை; மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் அனுமதிக்கப்படவில்லை (அவருடைய முதன்மையான மொழி போர்த்துக்கல் ஆகும்); ஒரு பேனா கூடக் கொடுக்கப்படவில்லை.

தன் உபகரணங்கள், தரவுகளை பொலிஸ் பறிமுதல் செய்தது சட்ட விரோதமானது என்று மிராண்டா வாதிடுகிறார். மிராண்டாவின் வக்கீல் இடம் இருந்து ஒரு கடிதம், மிராண்டா தடுப்புக்காவல் “உரிமையை மறுத்த” சட்டவிரோதச் செயல், ஐரோப்பிய மனித உரிமைகள் மரபின் 5ம் விதியை மீறுவது என்று உறுதிப்படுத்துகிறது.