World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan SEP rejects Frontline Socialist Party invitation for a “dialogue of lefts”

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி "இடதுகளின் கலந்துரையாடல்" ஒன்றுக்கு முன்னிலை சோசலிச கட்சி விடுத்த அழைப்பை நிராகரிக்கின்றது

By the Socialist Equality Party
23 November 2013

Back to screen version

பின்வருவது, இன்று இடம்பெறும் இடதுகுழுக்களின் கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்குமாறு முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.) அனுப்பிய அழைப்பிதழை நிராகரித்து, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ..) பொதுச் செயலாளர் விஜே டயஸ்  அனுப்பிய கடிதமாகும். மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ) “சந்தர்ப்பவாதத்தில்இருந்து பிரிவதாக போலியாக கூறிக்கொண்டு, அதில் இருந்து பிளவுபட்ட ஒரு கோஷ்டியே 2012ல் மு.சோ..வை உருவாக்கியது.

ஜே.வி.பீ. ஒரு தீவிரவாத, சிங்கள ஜனரஞ்சகவாத, குட்டி முதலாளித்துவ அமைப்பாக 1960களின் பிற்பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டதோடு, இலங்கை அரசியல் ஸ்தாபனத்துடன் முற்றிலும் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு வலதுசாரி கட்சியாக பரிணமித்தது. மு.சோ., ஜே.வி.பீ.யின் அரசியலில் இருந்து முறித்துக் கொள்ளவில்லை என்பதை கடந்த ஆண்டு நிரூபித்துள்ளது. "இடது" குழுக்களை மீள்குழுமயப்படுத்தும் அதன் புதிய நடவடிக்கைகள், அது மேலும் வலது பக்கம் திரும்புவதையே குறிக்கின்றது.

***
செயலாளர்

முன்னிலை சோசலிச கட்சி

நவம்பர் 22 , 2013

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழுவானது,இடது அரசியல் கட்சிகள், இடது குழுக்கள் மற்றும் இடது செயற்பாட்டாளர்களுடன்நவம்பர் 23 நடக்கவுள்ள "கலந்துரையாடலில்பங்கேற்குமாறு விடுத்த அழைப்பை ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டது. உங்கள் கடிதத்தின் முன்னுரையே, முன்மொழியப்பட்ட மாநாட்டின் நோக்கம் ஒரு தொகை முதலாளித்துவ மற்றும் குட்டி முதலாளித்துவ அமைப்புக்களின் மறுகுழுவமைவுக்கான அஸ்திவாரத்தை இடுவதே என்பதை தெளிவாகக் காட்டுகின்றது. அத்தகைய ஒரு மறுகுழுவமைவின் விளைவு, தொழிலாள வர்க்கத்துக்கு இன்னொரு அரசியல் பொறியை உருவாக்குவதாகவே இருக்கும் என்பது உணர்ந்து கொள்ளப்பட வேண்டியதாகும். 45 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச கொள்கைகளை பாதுகாத்து, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக அயராது போராடி வரும் சோசலிச சமத்துவக் கட்சிக்கு, நீங்கள் செயல்படுத்த முற்படும் அத்தகைய பிற்போக்கு மறுகுழுவமைவுக்கு நம்பகத்தன்மையை  வழங்கும் எண்ணம் கிடையாது. எனவே, சோசலிச சமத்துவ கட்சி உங்கள் அழைப்பை திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

முன்னிலை சோசலிசக் கட்சி, அது இலங்கையில் ஸ்தாபிக்க விரும்பும் கட்சியின் மாதிரியாக, கிரேக்க அமைப்பான சிரிசாவை முன்னிலைப்படுத்துகிறது என்பதை சோ..க சுட்டிக் காட்டுகின்றது. கிரேக்க நிகழ்வுகளை தீவிரமாக அவதானிக்கும் எவருக்கும், சிரிசா ஒரு முதலாளித்துவக் கட்சி என்பதும், அதுஇடதுவார்த்தை ஜாலங்களை பகிரங்கமாக விடுப்பது, தொழிலாள வர்க்கத்தை ஏமாற்றி தடம்புறளச் செய்யவும் காட்டி கொடுப்பதற்குமே அன்றி, வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்பது வெளிப்படையானதாகும். சிரிசா தலைவர் அலெக்சாண்டர் சிப்ரஸ், சிரிசா ஆட்சிக்கு வந்தால் பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்பதை உலக ஏகாதிபத்தியத்தின் தலைவர்களுக்கு புரிய வைப்பதற்காக வாஷிங்டன் டிசீக்கு பயணம் செய்தார். அதே சமயம், இது ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டளைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பின் அனைத்து வெளிப்பாட்டையும் திட்டமிட்டு ஒடுக்க செயற்பட்டு வருகிறது.

இலங்கை தொழிலாள வர்க்கம், ஏற்கனவே லங்கா சமசமாஜ கட்சி, நவசமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நிச்சயமாக ஜே.வி.பீ.யினதும் பிற்போக்கு அரசியலின் அரை நூற்றாண்டுகால கசப்பான அனுபவங்களை கொண்டுள்ளது. லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணியினதும் "ஐக்கிய இடது முன்னணி", 1964ல் பண்டாரநாயக்க அம்மையாரின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துகொள்ள எடுத்த முடிவினால் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாள வர்க்கம்,  இன்றுவரை தொடர்ந்தும் கசப்பான விலை கொடுக்கத் தள்ளப்பட்டுள்ளது. இது 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தம் உட்பட தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளுக்கு பேரழிவுமிக்க விளைவுகளை ஏற்படுத்தியது. முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் ஒரு இனவாத, வலதுசாரி கட்சியாக பரிணமித்த ஜே.வி.பீ.யின் தோற்றம், அந்த மாபெரும் காட்டிக்கொடுப்பின் ஒரு விளைவே ஆகும். வரலாற்று பதிவின் பொருட்டு, ஜே.வி.பீ 1971ல் பண்டாரநாயக்க அரசாங்கத்தின் தாக்குதலுக்கு உள்ளான போது, புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமானது (சோ...யின் முன்னோடி) ஜே.வி.பீ.யை பாதுகாத்ததை நினைவுபடுத்த எங்களை அனுமதியுங்கள். ஆயினும் அது, 1980களில் எமது உறுப்பினர்கள் மீது கொலைகார தாக்குதல்களை ஏற்பாடு செய்வதில் இருந்து ஜே.வி.பீ.யை தடுக்கவில்லை.

ஜே.வி.பீ. குமாரதுங்க அரசாங்கத்தில் பங்குபற்றி, அதன் இனவாத யுத்தத்தை முழுமையாக ஆதரித்ததோடு இறுதியாக இராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவருவதில் அது பங்காற்றியதன் மூலம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அவப்பேறு பெற்றதனால், ஜே.வி.பீ. தலைவர்களில் ஒரு குழுவினராலேயே முன்னிலை சோசலிச கட்சியான உங்கள் சொந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஜே.வி.பீ. உடனான பிளவு, சந்தர்ப்பவாத கணக்கீடுகளால் உருவாக்கப்பட்டதாகும், மற்றும் நாம் ஜே.வி.பீ.யின் பிற்போக்கு அரசியல் மற்றும் வேலைத்திட்டத்தை மு.சோ.க கைவிட்டிருப்பதற்கான எந்தவொரு அறிகுறியையும் காணவில்லை.

நீங்கள் நட்புறவு கொண்டுள்ள நவசமசமாஜ கட்சி, ஐக்கிய சோசலிச கட்சி ஆகிய போலி இடது அமைப்புக்கள், முந்தைய ஸ்ரீ..சு., லங்கா சமசமாஜ கட்சி மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்திருந்த கூட்டணி அரசாங்கத்தை ஆதரித்ததோடு, தற்போது ஒரு அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு கொள்கையை முன்னெடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியுடன் அணிசேர்ந்துள்ளன.

மு.சோ.. பிரேரித்துள்ள பேச்சுவார்த்தைகளில் சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) ஏதாவதொரு வகையில் ஆர்வம் காட்டும் என்று நீங்கள் எப்படி நம்பிக்கை வைத்தீர்கள் என்பது எங்களுக்குப் புரியவில்லை.

ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச சமத்துவ கட்சி, தொழிலாள வர்க்கத்தின் நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேச வேலைத்திட்டத்தை அபிவிருத்தி செய்கின்றது. தெற்காசியாவில் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசு என்ற வடிவிலான ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக நாம் போராடுகின்றோம்.

இந்த அடிப்படையிலேயே நாம் சோசலிசத்துக்கான ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர இயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தையும் அனைத்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஐக்கியப்படுத்துவதற்காக போராடுகின்றோம். நீங்கள் உத்தேசித்துள்ள பேச்சுவார்த்தை, அத்தகைய ஒரு இயக்கத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை இலக்காகக் கொண்டிருக்கும் என்று நாம் நம்புகிறோம். எனவே, சோசலிச சமத்துவக் கட்சி உங்கள் அழைப்பை சமரசமின்றி நிராகரிக்கின்றது.

தங்கள் உண்மையுள்ள,
விஜே டயஸ்