World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in history: December 2-8

வரலாற்றில் இந்த வாரம்: டிசம்பர் 2-8

2 December 2013

Back to screen version

வரலாற்றில் இந்த வாரம் பகுதி, இந்தக் கிழமையில் ஆண்டு நிறைவை அடையும் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் பற்றிய சுருக்கக் குறிப்பை வழங்குகிறது

25 ஆண்டுகளுக்கு முன்னர்: ஆர்ஜன்டீனிய இராணுவக் கிளர்ச்சியாளர்கள், மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர்

ஆர்ஜன்டீனிய “இழிந்த சிப்பாய்களுக்கு” மன்னிப்பு வழங்கக் கோரி, 1988 டிசம்பர் 2 அன்று சிப்பாய்கள் பியூனர்ஸ் எயார்சுக்கு அருகில் உள்ள கம்போ டீ மாயோ இராணுவத் தளத்தின் ஒரு பகுதியை கைப்பற்றினர். 1987 ஏப்பிரலில் நடந்த “ஈஸ்டர் கிளர்ச்சி” எனப்படுவதன் பின்னர் இத்தகைய முயற்சி மூன்றாவதாகும்.

“இராணுவத்தின் கௌரவமான வரலாற்று வகிபாகத்தை மீண்டும் தருமாறு” கிளர்ச்சி சிப்பாய்கள் கோரினர். கம்போ டீ மாயோவில் உள்ள குழுந்தைகள் பாடசாலையின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்ட கிளர்ச்சியாளர்கள், பியூனர்ஸ் எயார்சில் இருந்து 60 மைல்கள் தெற்கே உள்ள மெக்டலேனா இராணுவச் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றவும் முயற்சித்தனர். ஆர்ஜன்டீனிய எட்டு ஆண்டுகால “இழிந்த யுத்தத்தின்” அதிகாரிகள் மற்றும் ஜுன்டா உறுப்பினர்களும் இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இரத்தக் களரிக்கும் “30,000 அளவிலான தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் காணாமல் போனமைக்கும்” பொறுப்பாளியான அரசாங்கத்துக்கு தலைமை வகித்த ஜோர்ஜ் விடேலாவும் அந்தக் கைதிகளில் ஒருவர்.

இராணுவக் கிளர்ச்சியாளர்கள், உருமறைப்பு வர்ணங்களால் முகத்தை மறைத்துக்கொண்டும், தளங்களில் அகழி தோண்டியும் இருந்ததாலும் மற்றும் பீரங்கிகளைக் கொண்டிருந்ததாலும் “கரபின்டேடஸ்” (carapintadas) என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வலதுசாரி கேர்னல் மொஹமட் அலி செய்னெல்டீனின் கட்டளையின் கீழ் இயங்கினர். இந்த சதிப் புரட்சி முயற்சி பாதுகாப்பு படையினரால் தோற்கடிக்கப்பட்டது.

பிரமாண்டமான மக்கள் எதிர்ப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற போதிலும், இராணுவக் கிளர்ச்சி நடந்ததோடு, இராணுவ அதிகாரிகளின் கோரிக்கைகளுக்கு இணக்கத்துடன் பதிலிறுத்த அல்பொஃன்சின் அரசாங்கம், அவப்பேறுபெற்ற சிப்பாய்களுக்கு தண்டனையை மட்டுப்படுத்தியது. ஒவ்வொரு கிளர்ச்சியின் போதும், இராணுவம் பெரும் எண்ணிக்கையிலானவர்களை அணிதிரட்டியதோடு மக்கள் அரசாங்கம் மேலும் சலுகைகளை வழங்கியது.

50 ஆண்டுகளுக்கு முன்னர்: கென்னடி படுகொலையில் ஒஸ்வால்ட் தனித் துப்பாக்கிதாரியாக குறிப்பிடப்பட்டார்

1963 டிசம்பர் 3 அன்று, நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி, ஜனாதிபதி ஜோன் கென்னடி 1963 நவம்பர் 22 படுகொலை செய்யப்பட்டது சம்பந்தமாக எஃப்.பி.ஐ.யின் ஆரம்ப அறிக்கை, திரு. கென்னடியை கொன்று மற்றும் ஆளுனர் ஜோன் பி. கொன்னாலி, ஜூனியரைக் காயப்படுத்திய [லீ ஹார்வே] ஒஸ்வால்ட், மூன்று துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்ப்பதில் தனியாளாகவே செயற்பட்டுள்ளார், எனக் கூறுவதாக தெரிவித்தது. படுகொலை நடந்து பத்து நாட்கள் கடந்த பின்னும், கொலை பற்றிய உத்தியோகபூர்வ அறிக்கையில் ஒஸ்வால்ட்டின் பிந்திய நிலைமை பற்றி எதுவும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கவில்லை: “படுகொலையை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதில் ஒஸ்வால்ட் உடந்தையின்றி செயற்பட்டாரா என்பது ஒரு தீர்க்கமான புள்ளியாகும்,” என டைம்ஸ் தெரிவித்தது.

டிசம்பர் 5 அன்று, வாரன் ஆணைக்குழு தனது வாதங்களைத் தொடங்கியது. இந்தப் படுகொலை சம்பந்தமாகவும், ஒஸ்வால்ட் இரண்டு நாட்களின் பின்னர் டலாஸ் பொலிஸ் தலைமையகத்தின் அடித் தளத்தில் இரவு விடுதி உரிமையாளர் ஜக் ரூபியால் கொலை செய்யப்பட்டிருந்ததை பற்றியும் விசாரிப்பதற்காக புதிய ஜனாதிபதி லின்டன் ஜோன்சனால் இந்த விசாரணைக்குழுவு இயக்கப்பட்டது. “நாங்கள் சற்று இருட்டிலேயே வாதிட்டுக்கொண்டிருக்கின்றோம்” என ஆணைக்குழுவின் தலைவரும் உயர் நீதிமன்ற பிரதம நீதிபதி ஏர்ல் வாரன் தெரிவித்தார். “ஏனெனில், அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்தில் இருந்தும் எங்களுக்கு இன்னமும் அறிக்கைகள் வரவில்லை. இப்போது எங்களிடம் உள்ள தகவல்கள், செய்தி ஊடகங்களின் ஊடாக நாங்கள் கற்றுக்கொண்டவற்றையும் விட கொஞ்சம் அதிகமானவை மட்டுமே.”

1963 ஏப்பிரல் 10 அன்று, வலதுசாரி தீவிரவாதியும் ஓய்வுபெற்ற ஜெனரலுமான எட்வின் ஏ. வேல்கரை, டலசில் வைத்து படுகொலை செய்வதற்கு எடுத்த தோல்வி கண்ட முயற்சியில் ஒஸ்வால்டே தாக்குதல்காரனாக இருந்தார் என டிசம்பர் 6 அன்று டலஸ் பொலிஸ் அறிவித்தது. எஃப்.பி.ஐ. ஊடகங்களுக்கு பேசுவதற்கு தடைபோட்டு வைத்திருந்த, ரஷ்யாவில் பிறந்த ஒஸ்வால்டின் மனைவி மரினாவுக்கு பொலிசார் இதைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வோல்கரின் உயிரைப் பறிக்கும் முயற்சியைப் பார்த்த ஒரே சாட்சியான 14 வயது சிறுவன் மட்டுமே மரினாவின் கதையுடன் முரண்பட்டார். துப்பாக்கிச் சூட்டின் பின்னர் பலபேர் காருக்குள் பாய்ந்து தப்பிச் சென்றதாக அந்த சிறுவன் தெரிவித்தார். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் தன்னைப் பின்தொடர்ந்ததாக வால்கரும் அறிவித்துள்ளார்.

படுகொலைக்கு முன்னதாக ஒஸ்வால்ட்டை எஃப்.பி.. விசாரித்து வந்ததாக டிசம்பர் 7 செய்தி வெளியிட்ட டைம்ஸ், கென்னடி கொல்லப்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர், நவம்பர் 9 அளவில், டலஸ் பாடசாலை புத்தகக் களஞ்சியத்தில் அவர் தொழில் பெற்றிருப்பது பற்றி கவணம் செலுத்தியதாகவும் தெரிவித்தது. கடற்படையில் இருந்தபோதுஒஸ்வால்ட் சிறந்த துப்பாக்கிச் சூட்டைப் பற்றி அக்கறை காட்டவில்லை, [மற்றும்] துல்லியமாக குறிபார்ப்பதற்கு துப்பாக்கியை அடிக்கடி பயன்படுத்தியது தமக்கு தெரிய வந்ததாக டைம்ஸ் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 8 அன்று, உண்மையில் பெடரல் முகவர்களால் கனமாக ஊடுருவப்பட்டிருந்த வெளிப்படையில் காஸ்ட்ரோ-சார்பு அமைப்பாக தெரிந்த, கியூப ஆதரவாளர்கள் குழு, ஒஸ்வால்ட்டுக்கும் இந்த அமைப்புக்கும் இடையிலான ஆறு கடிதங்களை பகிரங்கமாக வெளியிட்டிருந்தது. 1963 கோடை காலத்தில் கியூப ஆதரவுக் குழுவின் அங்கீகாரம் இன்றி ஒஸ்வால்ட் செயற்பட்டு, நியூ ஓர்லியன்ஸில் தனக்கென ஒரு சொந்த கிளை அலுவலகத்தை அமைத்துக்கொண்டு, அங்கு காஸ்ட்ரோ -சார்பு பிரச்சாரத்தை அச்சடித்து விநியோகிக்கத் தொடங்கியதாக, அந்தக் கடிதத் தொடர்புகள் காட்டின. அந்தக் கடிதங்களில் “கவனத்தை ஈர்ப்பதற்காக” தனது ஆசைப்படி ஒஸ்வால்ட் எழுதியுள்ளார். “நான் விடயங்களை கிளறி எடுக்கின்றேன் தொடர்ந்தும் அப்படி செய்வேன் என்பதையிட்டு நான் மகிழ்கிறேன்” என இன்னொன்றில் அவர் தெரிவித்திருந்தார்.

75 ஆண்டுகளுக்கு முன்னர்: ரிபென்றொப் மற்றும் பொன்னேயும் பிராங்கோ-ஜேர்மன் சினேக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்

1938 டிசம்பர் 6 அன்று, ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோகிம் வொன் ரிபென்றொப், பிரான்சில் தனது சமதரப்பான ஜோர்ஜ் பொன்னே உடன் பிராங்கோ-ஜேர்மன் சினேக பிரகடனத்தில் கைச்சாத்திட்டார். பெரும் மேற்கத்தைய சக்திகள் யுத்தத்தை தவிர்த்துக்கொள்ள விரும்புகின்றன என்ற சமிக்ஞையை நாஸி தலைமைத்துவத்துக்கு அனுப்பிய இந்த உடன்படிக்கையே இராணுவ, இராஜதந்திர அல்லது பொருளாதார பதங்களில் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

பிரான்ஸ், கிழக்கு ஐரோப்பா முழுவதையும் ஜேர்மனியின் தலையிட முடியா செல்வாக்கு மண்டலமாக அங்கீகரிக்கும் என பொனே தன்னிடம் வாக்குறுதியளித்ததாக ரிப்பென்றொப் பின்னர் கூறிக்கொண்டார். கிழக்கு ஐரோப்பாவில் குறைந்தளவே அக்கறை காட்டுவதாக பொனே கூறியதை திரித்துக் கூறிய ரிப்பென்றொப், போலாந்தில் பிரான்ஸ் ஜேர்மனிக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக அர்த்தப்படுத்தினார். ஜேர்மனுடன் பதட்டங்களை தளர்த்திக்கொள்ள விரும்பிய, பிரான்ஸ் ஆளும் வர்க்கத்தின் ஒரு கன்னையின் பகுதியாக இருந்த பொனே, போலாந்தில் பிரான்சிய இராணுவத்தின் அர்ப்பணிப்புக்கும் ஆதரவளித்தார். பின்னர் ரிபென்றொப்ஸின் கூற்றை பொனே மறுத்தார்.

பிரெஞ்சு ஆளும் வர்க்கத்திடமிருந்து ரிபென்றொப் சாதகமான சமிக்ஞைகளை பெற்ற அதே வேளை, மறுபக்கம் பாரிசில் காரமான வரவேற்பே இருந்தது. “ரிபென்றொப் வீதிகளூடாக சென்றபோது, அவை வெறிச்சோடி கிடந்தன. பிரான்ஸ் அரசியல் மற்றும் கல்விமான்கள் வட்டத்தின் ஏனைய முன்னணி புள்ளிகளும் மற்றும் பல அமைச்சரவை அமைச்சர்களும், நாஜி விருந்தினருக்கு வழங்கப்பட்ட சமூக விழாக்களில் பங்குபற்ற மறுத்துவிட்டனர்,” என மூன்றாவது அரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் (The Rise and Fall of the Third Reich) என்ற நூலில் வில்லியம் எல். ஷெய்ரர் எழுதியுள்ளார்.

100 ஆண்டுகளுக்கு முன்னர்: கூர்மையடைந்த அரசியல் பதட்டங்களின் மத்தியில் பிரான்ஸ் அமைச்சரவை கவிழ்ந்தது

1913 டிசம்பர் 2, பிரதமர் லூயிஸ் பார்தோவின் இராஜனாமாவுடன் பிரெஞ்சு அமைச்சரவை கவிழ்ந்தது. நிதிக் கொள்கையின் மீதான முரண்பாட்டில் உடனடியாக இந்த நெருக்கடி உருவான அதே வேளை, ஐரோப்பா முழுவதும் ஏகாதிபத்திய உள் பதட்டங்களின் வளர்ச்சி, மற்றும் வட ஆபிரிக்காவில் பிரான்ஸ் ஏகாதிபத்தியத்தின் இராணுவப் பின்னடைவு சம்பந்தமாக பிரான்ஸ் ஆளும் கும்பலுக்குள் ஆழமாக காணப்பட்ட முரண்பாடுகளையே இது வெளிப்படுத்தியது.

பாராளுமன்றத்துக்குள் அமைச்சரவை மீதான எதிர்ப்புக்கு முன்னாள் பிரதமரும் ரடிக்கல் கட்சியின் தலைவருமான Joseph Caillaux தலைமை வகித்தார். அவர், மேலதிக வரி விதிப்பின்றி 52 மில்லியன் பவுன்ட் பொதுக் கடனை பெறும் பாத்தோவின் கொள்கையை எதிர்த்தார். ஜனரஞ்சக வாய்வீச்சுக்களுடன் சோசலிசஸ்ட் கட்சியின் பகுதியனருடன் உறவு கொண்டிருந்த கைலக்ஸ், முன்னேற்றமான வருமான வரியை அறிமுகப்படுத்துமாறு அழைப்புவிடுத்தார்.

பிரேரிக்கப்பட்ட கடனின் கால் பகுதிக்கும் மேல், அடுத்து வந்த மூன்று ஆண்டுகளுக்கு கனிசமான சமூக அமைதியின்மைக்கு சான்றாக இருந்த, மொரொகோ காலனித்துவ ஆட்சிக் காவலரனில் பிரான்ஸ் இராணுவ செயற்பாடுகளை சமாளிக்க செலவிடப்படவிருந்தது. கட்டாய இராணுவச் சேவையை இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரை நீடிப்பதற்கு செலவிட வேண்டியது அவசியம் என்றும் பார்தோ கூறினார். இந்த கால அதிகரிப்பு மே மாதம் நிறைவேற்றப்பட்டது.

“மூன்று ஆண்டுகால சட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டதை, சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரதான தொழிற்சங்க சமாசங்களும் 100,000 பேருக்கும் அதிகமானவர்களுடன் ஆர்ப்பாட்டம் செய்து பரந்தளவில் எதிர்த்தன. இந்த சட்டம் இராணுவ வாதத்தின் மீதான எதிர்ப்புக்கு குவிமையமாகிவிடும் என்ற பீதியிலேயே Caillaux அதை எதிர்த்தார்.

ஆட்சேர்ப்புச் சட்டம், ஜேர்மனியின் இராணுவக் கட்டமைப்பு அதிகரிப்புக்கு ஒரு பதிலிறுப்பாக பரந்தளவில் கணிக்கப்பட்ட அதே வேளை, இரு நாடுகளுக்கும் இடையில் நெருக்கமான உறவை Caillaux பரிந்துரைத்தார். மொரொகோவை கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பிரன்கோ-ஜேர்மன் பதட்டங்கள் உக்கிரமடைந்திருந்த காலத்தில், ஜனாதிபதியின் அனுமதியின்றி ஜேர்மன் அரசாங்கத்துடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியமை அம்பலத்துக்கு வந்ததை அடுத்து, 1912 ஜனவரியில் பிரதமர் பதவியில் இருந்து அவர் விலகத் தள்ளப்பட்டார்.

பாராளுமன்றத்தில் கடன் மசோதா மீதான வாக்கெடிப்பில் தனது அமைச்சரவை தோல்வி கண்ட உடனேயே பார்தோ இராஜினாமா செய்தார். ஜனாதிபதி Raymond Poincaré, தீவிரவாத துணை பிரதமர் Gaston Doumergue வை பிரதமராக்கியதோடு Caillaux நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.