World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் பற்றிய விரிவுரை

Back to screen version

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள் அமைப்பும், இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் வரலாற்று சர்வதேசிய அடித்தளங்கள் என்ற நூலை அறிமுகப்படுத்துவதற்காக பகிரங்க விரிவுரை ஒன்றை யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் நடத்தவுள்ளன. இதன் முதலாவது விரிவுரை கொழும்பில் நடைபெற்றதன் தொடர்ச்சியாகவே இங்கு நடத்தப்படவுள்ளது. இந்த நூல், கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சோசலிச சமத்துவக் கட்சியின் ஆரம்ப மாநாட்டில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான முன்னோக்குத் தீர்மானத்தை உள்ளடக்கியுள்ளது.

1996ல் சோசலிச சமத்துவக் கட்சியாக ஸ்தாபிக்கப்பட முன்னர் அது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமாக இருந்தது. ஸ்ராலினிச, சீர்திருத்தவாத மற்றும் குட்டி முதலாளித்துவ போலி இடது தீவிரவாத கட்சிகளுக்கு எதிராக, இலங்கையிலும் தெற்காசியப் பிராந்தியத்திலும் தொழிலாள வர்க்கத்துக்கு புரட்சிகர தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அரசியல் ஆரம்பிப்பை மேற்கொள்வதற்காகவே, கழகம் கட்சியாக மாற்றப்பட்டது.

லங்கா சமசமாஜக் கட்சியின் மாபெரும் காட்டிக்கொடுப்பால் உருவாக்கப்பட்ட, தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்காக 1968ல் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் ஸ்தாபிக்கப்பட்டது. தன்னை ட்ரொட்ஸ்கிசவாதியாக அழைத்துக்கொண்ட லங்கா சமசமாஜக் கட்சி, 1964ல் சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டமை தெற்காசியா பூராவும் வெகுஜனங்களுக்கு துன்பகரமான விளைவுகளைக் கொணர்ந்தது. பிராந்தியத்தில் மிகவும் கடினமான நிலைமைகளின் கீழ், குறிப்பாக இலங்கையில் தமிழர்-விரோத உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில், 28 ஆண்டுகளாக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் முன்னெடுத்த கொள்கைப் பிடிப்பான மற்றும் உத்வேகமான போராட்டம், சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்குத் தீர்மானத்தினுள், அதன் வரலாற்று சர்வதேசிய சூழ்நிலையில் நிறுத்தி கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொழிலாள வர்க்கத்தினுள் சோசலிச அனைத்துலகவாதத்துக்காகவும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதியாகவும் மற்றும் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலும் தொழிலாளர்கள், கிராமப்புற வறியவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரதும் புரட்சிகர ஐக்கியத்துக்காவும், புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்/சோசலிச சமத்துவக் கட்சி 43 ஆண்டுகளாக முன்னெடுத்த போராட்டத்தின் கறைபடியாத சாதனைகள் பற்றிய இந்த பகுப்பாய்வு, இன்று உலகம் பூராவும் கட்டவிழ்ந்துவரும் புரட்சிகர போராட்டங்களுக்கு ஒரு வழிகாட்டியாக மிகப்பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தேசியவாத முன்னோக்குடன் கடந்த 30 வருடமாக போராடிய பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள், 2009 மே மாத நடுப்பகுதியில் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பின்னர், தமிழ் தேசியவாத முன்னோக்கு முட்டுச் சந்துக்குள் சென்று விட்டது தெளிவு.

முதலாளித்துவ தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இராஜபக்ஸ அரசாங்கத்துடன் ஓரு அதிகாரப் பகிர்வுக்கு செல்வதற்கு தனது தயார் நிலையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றது. அதற்கு அனுசரணை வேண்டி அது ஏகாதிபத்தியத்தின் காலடியில் வீழ்ந்துள்ளது.

இந்த நூல், தமது ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும், தமிழ் பேசும் தொழிலாளர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கினை முன்வைக்கின்றது.

நாம் சகல சமூகங்களையும் சேர்ந்த தொழிலாளர்கள், குடும்பப் பெண்கள், மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் இந்த விரிவுரைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.