World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkish clashes continue as Erdogan brands protesters “ extremists ”

எதிர்ப்பாளர்களை “தீவிரவாதிகளாக” எர்டோகன் முத்திரை குத்துகையில் துருக்கிய மோதல்கள் தொடர்கின்றன

By Bill Van Auken
4 June 2013

Back to screen version

அரசாங்கத்தின் திட்டமான நகரத்திலிருக்கும் சில பூங்காக்களில் ஒன்றை தரைமட்டமாகத் தகர்த்து அங்கு ஒரு வணிக வளாகம் கட்டுவதை எதிர்த்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இரண்டாம் வாரத்தில் நுழைந்த நிலையில், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் மத்திய இஸ்தான்பூல்லின் டக்சிம் சதுக்கத்தினுள் திங்கள் இரவு வெள்ளம் போல் கூடினர்.

பல்லாயிரக்கணக்கானவர்கள் துருக்கியத் தலைநகரான அங்காராவிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரு நகரங்களிலும் எதிர்ப்பாளர்கள் நிறைய கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் கலகப் பிரிவுப் பொலிசின் தாக்குதலையும் எதிர்கொண்டனர்.

கடந்த மாதம் ஒரு சில டஜன் சுற்றுச்சூழல் எதிர்ப்பாளர்களுடன் தொடங்கிய போராட்டம் இப்பொழுது நூறாயிரக்கணக்கான மக்களை நாடு முழுவதும் தெருக்களுக்குக் கொண்டுவந்து துருக்கிய பாதுகாப்புப் படைகளின் வன்முறைத் தாக்குதலை எதிர்கொள்ள வைத்துள்ளது.

தொடரும் மோதல்களை பொருட்படுத்தாதது போல், துருக்கியின் பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் நான்கு நாட்கள் வட ஆபிரிக்க சுற்றுப் பயணத்தை திங்களன்று தொடங்கினார்; முதலில் மொரோக்கோவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்: “நிலைமை இப்பொழுது எவ்வளவோ அமைதியாக உள்ளது, நியாயம் நிலைத்திருப்பது காணப்படுகிறது” என்று அவர் உறுதிப்படுத்தினார். “அனைத்தும் இயல்பான நிலைக்குத் திரும்பிவிடும் என நினைக்கிறேன். இந்த ஆர்ப்பாட்டங்கள் துருக்கி முழுவதும் இல்லை, சில பெருநகரங்களில் மட்டும்தான்” என்றார் அவர்.

திங்களன்று முதல் முதலாக உறுதிப்படுத்தப்பட்ட இறப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  சோசலிச ஒருமைப்பாடு அரங்கின் (SODAP) 20 வயதுடைய ஒரு உறுப்பினர் இஸ்தான்பூல்லின் தொழிலாளர் வர்க்க Ümraniye’s 1 Mayıs பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டிருந்தபோது கார் மோதி உயிரிழந்தார். சில தகவல்கள் அவர் வேண்டுமென்றே வலதுசாரி அரசாங்க ஆதரவாளர் ஒருவரால் இலக்கு வைக்கப்பட்டார் எனக் கூறுகின்றன.

கொலைக்கு பதிலிறுக்கும் வகையில், துருக்கிய மருத்துவர்கள் தொழிற்சங்கம் (TTB), பொலிஸ் அடக்குமுறைக்கு முடிவு வேண்டும், அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் எனக் கோரி அறிக்கை  ஒன்றைத் திங்களன்று வெளியிட்டுள்ளது. எர்டோகனின் அச்சுறுத்தல்களான அவருடைய இஸ்லாமியவாத ஆளும் கட்சி உறுப்பினர்களை ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடுவேன் என்று கூறி, மிரட்டல் மற்றும் வன்முறைச் சூழலை தோற்றுவித்ததற்கு மேலும் அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளது.

குறைந்தப்பட்சம் மேலும் காயமுற்ற ஐந்து எதிர்ப்பாளர்களாவது ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடுவதாகக் கூறப்படுகிறது. எதெம் சரிசுலுக் என்பவர் தலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திற்கு உள்ளாகியுள்ளார். துருக்கி மனித உரிமைகள் நிறுவனத்தின்படி, மருத்துவர்கள் அவர் மூளை இறப்பைக் கண்டுவிட்டார் எனத் தெரிவிக்கிறது.

திங்கள் அதிகாலை வரை மருத்துவர்கள் சங்கம் இஸ்தான்பூலில் 1,480 பேரும், அங்காராவில் 214 பேரும் மற்றும் கடலோர நகரான இஜ்மிரில் 420 பேரும் காயப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளது. ஞாயிறன்று மிகப் பெரிய எதிர்ப்புக்களில் ஒன்றை நடத்திய இடமாகும் இஜ்மிர் ஆகும். இங்கு தீவிர மோதல்கள் இருந்தன, ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆளும் கட்சியான நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியினுடைய (AKP)  அலுவலகங்களுக்குத் தீ வைத்தனர்; அரசாங்கக் குண்டர்கள் ஆணி வைத்த தடிகளால் எதிர்ப்பாளர்கள் மீது தாக்கினர்.

பிரதம மந்திரி முன்னேற்றங்களுக்கான பார்வை பற்றி நம்பிக்கையுடன் இருந்தாலும், எர்டோகனின் சொந்த உள்துறை மந்திரி முயம்மர் குலெர் கருத்துப்படி, திங்கள் அதிகாலை வரை 235 தனித்தனி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்  67 வெவ்வேறு துருக்கிய நகரங்களில் நடத்தப்பட்டுள்ளன. 1,730 பேர்கள் ஞாயிறு மாலை எதிர்ப்புக்களில் கைது செய்யப்பட்டனர் என்றும் குலெர் கூறியுள்ளார்.

இதுவும் கணிசமான குறைமதிப்பீடாக இருக்கலாம். பாராளுமன்றத்தில் துருக்கிய எதிர்க்கட்சி உறுப்பினர் அய்லின் நஜ்லியக் தான் ஞாயிறு இரவு அங்காராவில் மட்டும் 1,500 பேருக்கு மேல் காவலில் வைக்கப்பட்டதையும், இன்னும் பல பஸ்களில் நிறையக் கைதிகள் கொண்டுவரப்பட்டதையும் பார்த்ததாகக் கூறினார்.

துருக்கித் தலைநகரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த இடமான வணிக நிலையங்களில் பொலிசார் ஒவ்வொருவரையும் சுற்றிவளைத்து திடீர் சோதனை நடத்தினர்; அங்கு தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் உட்படப் பலரையும் கைது செய்தனர். “கிட்டத்தட்ட 1,500 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் Hurriyet Daily News  இடம் தெரிவித்தார். “நாங்கள் அங்கு [பொலிஸ்  அலுவலகத்துறையில்] இருந்தபோது ஒன்பது மற்றய பஸ்களும் வந்தன.”

காவலில் இருந்தவர்கள் பொலிஸ் தடிகளால் தாக்கப்பட்டனர், வலுக்கட்டாயமான முறைகளிலும் பஸ்களில் ஏற்றப்படுகையில் தாக்குதலுக்குள்ளாகினர் என இவர் கூறினார். அவர்களுள் பலரும் பிளாஸ்டிக் விலங்குகள் இறுக்கமாக அவர்களுடைய மணிக்கட்டைச் சுற்றி இருந்ததால் இரத்தக் காயத்திற்கு உட்பட்டனர். பொலிஸ் காவலில் வந்தவுடன் அவர்களுக்கு வக்கீல்களின் உதவி மறுக்கப்பட்டது; புகைப்படங்கள் எடுக்கப்பட்டன, கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன; சட்டத்தை மீறியதால் கைது செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டு கைது அறிக்கைகளில் கையெழுத்திடும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்பட்டனர்.

மெக்ரெப்பிற்குப் பயணமாவதற்கு முன், எர்டோகன் பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்: இதில் பல காலமாக முற்றுகைக்குட்பட்ட சர்வாதிகாரிகள் கூறும் குற்றச்சாட்டான தெருக்களுக்கு வருபவர்கள் “தீவிரவாதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்” என்பதைக் கூறினார். அவருடைய உளவுத் துறைப் பிரிவுகள் பெயரிடப்படாத “வெளிநாட்டுத் தொடர்புகளை” ஆராய்கின்றன என்றும் கூறினார். ட்விட்டரை அவர் “பொய்களின் ஆதாரம்” என்று கண்டித்து அனைத்துச் சமூக ஊடகங்களும் “சமூகத்திற்கு மோசமான ஆபத்து என்றும்” அறிவித்தார்.

வெகுஜன எதிர்ப்புக்களை எதிர்க் கட்சியான CHP அல்லது மக்கள் குடியரசுக் கட்சியின் வேலை என்றும் எர்டோகன் சித்தரிக்க முற்பட்டார்; ஏனெனில் அது தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்துவிட்டது. இது அபத்தமானது; ஏனெனில் கெமாலிசவாத CHP ஆனது எர்டோகன் அரசாங்கத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான தகைமை இல்லாதது என்பதை நிரூபித்துள்ளது; மேலும் பரந்த அளவில் அது நம்பப்படுவதில்லை; ஏனெனில் இராணுவத்துடனும் நாட்டின் மதச்சார்பற்ற உயரடுக்குடனும் அது வரலாற்றுரீதியான தொடர்புகளினால். CHP  தலைவரான Kemal Kılıçdaroğlu எதிர்ப்பாளர்களுக்கு உரையாற்ற முயன்றபோது, அவர்கள் உரத்தகுரலில் கத்திப் பாடி அவரைத் தடுத்துவிட்டனர்.

கெஜிப் பூங்காவை அழிப்பது என்னும் திட்டத்தால் தூண்டிவிடப்பட்டுள்ள வெகுஜன எதிர்ப்புக்களின் வெடிப்பின் அடித்தளத்தில் முதலாளித்துவத்தின் மிக நெருங்கிய நண்பனான ஒரு அடுக்கின் நலன்களுக்காக அதனுடைய முக்கிய பிரதிநிதியாக உருவாக்கப்பட்டுள்ள பெருகிய முறையில் சர்வாதிகார முறையில் ஆட்சி நடத்தும் அரசாங்கத்திற்கு எதிராக ஆழமான வெகுஜன கோபம் உள்ளது; அதே நேரத்தில் ஒரு வெகுஜன தளத்தைத் தக்க வைத்துக் கொள்ளுவதற்கு மக்களின் மிகவும் பிற்போக்குப் பிரிவுகளுக்கு இஸ்லாமியவாத அடிப்படையிலான சமூக கொள்கைகளை முன்வைத்து முறையீடுகளை இந்த ஆட்சி செய்கின்றது.

கெஜி பூங்காவை தரைமட்டமாக்கி தகர்த்து அங்கு ஒரு வணிக வளாகத்தைக் கட்டும் திட்டம் பல முக்கிய “நகர்ப்புறப் புதுப்பித்தல்” திட்டங்களில் ஒன்றுதான்; இவை அரசாங்கத்தால் மூடிய கதவுகளுக்குப் பின் முடிவெடுக்கப்படுகின்றன. இத்திட்டங்களில் இருந்து நேரடியாக நன்மை பெறுவோர் அரசியலில் தொடர்புடைய முதலாளித்துவத்தினர் ஆவர்—இதில் எர்டோகனுடைய மருமகனும் உள்ளார்; அவர் முக்கிய வளர்ச்சி நிறுவனத்தின் உரிமையாளர், இஸ்தான்பூல்லின் மேயர், சில்லறை வணிகத் தொடர் கூடங்களின் உரிமையாளர்; பூங்கா கடையாக மாறினால் நல்ல இலாபம் பெறக்கூடியவர்.

மற்றொரு கட்டுமானத் திட்டமான போஸ்போரஸ் மீது மூன்றாவது பாலம் கட்டுதல் என்பதில், எர்டோகனும் அவருடைய AKP யும் தங்களுடைய முதலாளித்துவ நண்பர்களை இன்னும் வசதிப்படுத்துவதில் வெற்றியடைந்து, குறும்குழுவாத அழுத்தங்களுக்கு எரியூட்டியுள்ளனர். அவர்கள் ஒரு 16ம் நூற்றாண்டு ஓட்டோமன் சுல்தான் பெயரை அதற்கு வைத்துள்ளனர்; அவரோ பல்லாயிரக்கணக்கான அலெவிக்களைப் படுகொலை செய்து இழிந்த பெயர் பெற்றவர்; அலெவிக்கள் ஷியைட் பிரிவு ஒன்றைச் சேர்ந்தவர்கள், இன்று நாட்டின் மிகப் பெரிய மதச் சிறுபான்மையினர் ஆவார்கள்.

பெயரளவிற்கு ஒரு மதச்சார்பற்ற அரசான துருக்கியில் மதத்தை தளமாகக் கொண்ட கொள்கைகளைத் தொடர்ந்து அறிமுகப்படுத்துவது, மக்களின் பரந்த பிரிவுகளை பிளவுபடுத்தியுள்ளது. இதில் சிறுபான்மையினர் அலெவிக்கள், குர்திஷ் மற்றும் துருக்கிய மதச் சார்பற்றவர்களில் பெரும் பிரிவுகள் உள்ளனர். இதில் நுகர்வு மற்றும் விற்பனையில் கடுமையான மதுபான கட்டுப்பாடுகளைச் சுமத்துதல் மற்றும் கருச்சிதைவைத் தடை செய்யும் முயற்சி ஆகியவைகள் உள்ளன.

எர்டோகன் அரசாங்கம் சிரிய எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம், பணம் மற்றும் முக்கிய விநியோக உதவிகளை அமெரிக்க வெளியுறவுத் துறை உதவியுடன், நேட்டோ கூட்டணி நாடு என்னும் முறையில் ஆதரவு கொடுத்திருப்பதும் மக்களிடையே செல்வாக்கைப் பெறவில்லை.

துருக்கியில் அடக்குமுறை நடப்பதை ஒபாமா நிர்வாகம் மிருதுவான கையுறைகளைக் கொண்டு பார்க்கிறது. வெள்ளை மாளிகைச் செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே செய்தியாளர்களிடம், “துருக்கி ஒரு முக்கியமான கூட்டணி நாடாகும்” என்றார். துருக்கியில் பாரிய அரச வன்முறை குறித்து அவர், “எல்லா ஜனநாயகங்களிலும் பிரச்சினைகள் உள்ளன, அவை கவனிக்கப்பட வேண்டும்” என்றார்.

வெகுஜன எதிர்ப்புக்களின் இதயத்தானத்தில் சமூக சமத்துவமின்மை பிரச்சினைகள்தான் உள்ளன, இவை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் அதிக எண்ணிக்கையிலிருந்த நகர்புற இளம் மத்தியதர வர்க்கப் பிரிவுகளாலும் மற்றும் தொழிலாள வர்க்கத்தினாலும் ஆழமாக உணரப்படுகின்றன. எர்டோகனுடைய “நகர்ப்புற புதுப்பித்தல்” திட்டங்களான ஆடம்பர வீடுகள், வணிகங்களானது செல்வந்தர்களுடைய நலன்களுக்காக செயற்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் வறிய மக்களின் பிரிவுகள், மற்றும் தொழிலாள வர்க்கத்தை இஸ்தான்பூலின் மையப் பகுதியில் இருந்து விரட்டியடிக்கின்றன.

இதற்கிடையில் “துருக்கிய அற்புதம்” என அழைக்கப்படுவது, புதிய தாராளவாத முதலாளித்துவக் கொள்கைகளுக்கு நிரூபணம் என்பதோடு, மத்திய கிழக்கிற்கு ஒரு மாதிரி எனப் பாராட்டப்படுவது, ஸ்தம்பித்து நிறுத்தப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 9 சதவிகிதத்திலிருந்து கிட்டத்தட்ட பூஜ்யம் என்ற நிலையில்தான் இன்று உள்ளது. அதே நேரத்தில் முறையான துறைகளில் வேலைகள் 5 சதவிகிதம் குறைந்துவிட்டது; இது தொழில்துறை, பொதுப்பணிகளில் பெரும் வேலை இழப்புக்களைப் பிரதிபலிக்கிறது.

துருக்கி முழுவதும் தன்னெழுச்சியான வெடிப்புக்களானது அரசாங்கத்தின் கொள்கையை எதிர்ப்பவர்களுக்கு தாக்குப் பிடிக்கத்தக்க அரசியல் போராட்ட வழிமுறைகள் இந்த உத்தியோகபூர்வ அரசியல் வடிவத்திற்குள் இல்லை என்பதையும், அல்லது அப்படிப்பார்த்தால், தொழிற்சங்க இயக்கத்திற்குள் சொல்லவும் தேவையில்லை என்பதையும் காட்டுகிறது.

பொதுத்துறை ஊழியர்ளை பிரதிநிதித்துவப்படுத்தும், ஒரு துருக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு இரண்டு நாட்கள் வேலைநிறுத்தத்தை ஜூன் 4ல் இருந்து எர்டோகன் அரசாங்கத்தின் “அரச அச்சறுத்தலுக்கு எதிராக” அழைப்பு விடுத்துள்ளது. 240,000 உறுப்பினர்கள் கொண்ட பொதுத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பினுடைய (KESK) வெளிநடப்பானது பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொது அலுவலகங்களை துருக்கி முழுவதும் மூடிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, துருக்கி புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (DISK) அதனுடைய உறுப்பினர்களை எதிர்ப்புக்களில் சேருமாறு அழைப்பு விடுத்தது, ஆனால் சுயாதீனமான தொழிற்துறை நடவடிக்கைகளை அது அறிவிக்கவில்லை.