World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French unions back closure of PSA Aulnay auto factory PSA Aulnay

கார்த் தயாரிப்பு ஆலை மூடலுக்கு பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் ஆதரவு

By Anthony Torres 
7 May 2013

Back to screen version

ஏப்ரல் 29ம் திகதி, PSA இன் மத்திய வேலைகள் சபை (Central Works Council), PSA Peugeot Citroën இல் பணிநீக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தது; இதில் 11,200 வேலை வெட்டுக்கள் மற்றும் ஓல்னே இல் உள்ளதுபோல், ஆலை மூடலும் கோரப்பட்டுள்ளது, இது 2014ல் மூடப்பட உள்ளது.

20 தொழிற்சங்கப் பிரதிநிதிகளில் 18 பேர் ஒன்பது மாதங்களுக்கு முன்பு PSA அறிவித்த திட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தனர். Le Monde இன் கருத்தின்படி, “CGT (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழிற்சங்கம் ஒன்றுதான் திட்டத்தை எதிர்த்தது, FO (தொழிலாளர் சக்தி), CFTC (பிரெஞ்சு கிருஸ்தவ தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), CFE-CGC (நடுத்தர மேலாளர்கள் தொழிற்சங்கம்), CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு), SIA (சுதந்திர கார் தொழிற்சங்கம்) ஆகியவை பணிநீக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் கொடுத்தன. திட்டம் நடைமுறைக்கு வந்தபின், நிறுவனம் அதிக உந்துதலில் ஈடுபட்டு அதன் ஆலைகளின் போட்டித்தன்மையை அதிகரிக்கும். மே மாதத்தில் அக்டோபரில் கையெழுத்திடப்படவுள்ள உடன்பாட்டிற்கான பேச்சுக்கள் தொடங்கும்.”

FO உடைய பிரதிநிதி கிறிஸ்டியான் லாபெயே இன் திமிர்த்தனச் சொற்களைப் பற்றி Le Monde  தகவல் கொடுத்துள்ளது; அவர் ஆலை மூடலைப் பாராட்டி, ஆயிரக்கணக்கான வேலைகள் அழிப்பையும் பாராட்டியுள்ளார். “தீவிர உணர்வை மீறி நியாயமான காரணம் வென்றுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் ஒருவேளை பணிநீக்கம் செய்யப்படலாம், ஓரளவு அமைதி திரும்பும்.”

FO பிரதிநிதியின் இழிந்த கூற்றுக்களுக்கு மாறாக ஒல்னே தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை ஆழ்ந்த பொருளாதார நெருக்கடிக்கு நடுவே இழப்பதில் எப்படி நிம்மதி காண்பார்கள் என்பதைக் கற்பனை செய்வது கடினம் ஆகும்.

CGT பணிநீக்கத் திட்டத்தில் கையெழுத்திடவில்லை என்றால், அதற்குக் காரணம் அது அவ்வாறு செய்யவேண்டிய தேவை இல்லை: மற்ற தொழிற்சங்கங்களின் கையெழுத்துக்கள் PSA மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் திட்டம் நிறைவேற்றப்பட போதுமானவை ஆகும்.

CGT ஒருபோதும் ஒல்னேயை மூடும் திட்டங்களுக்கு எதிரான தீவிர போராட்டத்திற்கு தலைமை தாங்க விரும்பியதில்லை. எந்த தொழிற்சங்கமும் தொழிலாள வர்க்கத்தை முழுமையாக PSA மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் திட்டங்களை எதிர்க்க அணிதிரட்ட முயலவில்லை. ஒல்னே ஆலைத் தொழிலாளர்கள் தொடக்கிய வேலைநிறுத்தம் CGT யால் தனிமைப்படுத்தப்பட்டது; இது மீண்டும் போராளித்தன தொழிற்சங்கம்” எனக் கூறப்படுவதின் துரோகப் பங்கைத்தான் உறுதிப்படுத்தியது.

இது ஔல்னேயின் CGT தலைவரான ஜோன் பியர் மேர்சியே இன் கடந்த காலச் சான்றுகளில் உறுதியாகிறது: இவர் தொழிலாளர் போராட்டம் (Lutte Ouvrière -LO) என்ற அமைப்பின் உறுப்பினராக இருக்கிறார்; LO ஜனாதிபதி வேட்பாளரான Nathalie Arthaud  வின் செய்தித் தொடர்பாளராக 2012 ஜனாதிபதித் தேர்தலில் இருந்தார். அவர் கூறியதாவது: “நிர்வாகம் ஆலையை மூட அவசரப்பட்டால், அது பணம் கொடுக்க வேண்டும், ரொக்கத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.”

மேர்சியே இன் இழிந்த வெற்றுரை CGT நிர்வாகத்தின் ஆலையை மூடும் முடிவை ஏற்கிறது என்பதை உயர்த்திக் காட்டுவதுடன், ஆலை மூடலுக்கு, குறைந்தப்பட்ச பணத்தை பணிநீக்கம் ஏற்பாடு செய்யக் கொடுத்துவிட்டால் வெற்றி என்பது போல் காட்டும் முயற்சியையும் உயர்த்திக் காட்டுகிறது.

உண்மையில் மோதலின் தொடக்கத்தில் இருந்தே, CGT உட்பட தொழிற்சங்கங்கள் தம்மால் இயன்ற அளவிற்கு தொழிலாளர்களின் எதிர்ப்பை நெரிக்க முயன்றன. தொழிற்சங்கங்கள் PSA தொழிலாளர்களின் பரந்த மோதலை, தொழிலாள வர்க்கம் முழுவதையும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஹாலண்ட் மற்றும் அவருடைய சோசலிஸ்ட் கட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்துவதற்கு அணிதிரட்ட விரும்பவில்லை.

CGT உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் நெருக்கமாக அரசு மற்றும் முதலாளிகளுடன் பிணைந்துள்ளன. அரசும் முதலாளிகளும் அவர்களின் வருமானத்தில் 90 சதவிகிதத்திற்கும் மேலாக கொடுக்கின்றன என்று Perruchot அறிக்கை வெளியிட்ட தகவல்கள் கூறுகின்றன; இதையொட்டி, தொழிற்சங்கங்கள் முதலாளிகளை எதிர்ப்பதில்லை. அவை பணியிடங்களில் முதலாளித்துவவாதிகளின் நலன்களுக்கு உதவ முற்படுகின்றன; இதில் அனைத்துத் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதும் அடங்கும்.

ஜோன் பியர் மேர்சியே இன் அரசாங்கம் பற்றிய விமர்சனங்கள் நேர்மையற்றவை. “எப்படியும், இது ஒரு இடது அரசாங்கம், பணியில் வளைந்து கொடுக்கும் தன்மை பற்றிய சட்டம், முதலாளிகள் பணி நேரங்களை அதிகரித்து ஊதியங்களை குறைப்பதற்கு ஒப்புதல் கொடுக்கிறது. ஜனாதிபதி சார்க்கோசி கூட அதைச் செய்ததில்லை” என்றார் அவர்.

இது Arthaud மற்றும் LO வும் ஹாலண்டுடன் கொண்டுள்ள உடந்தைத் தன்மையையும் PS  உடைய தொழிலாளர் விரோதக் கொள்கைகளையும்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. LO மற்றும் CGT இரண்டுமே உட்குறிப்பாக மற்றொரு வலதுசாரி அரசாங்கத்தை விட PS அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது எளிது எனக் கூறின, மேலும் வெளிப்படையாக அவ்வாறு அழைப்பு விடாவிட்டாலும்கூட தாம் PS க்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விரும்புவதாகவும் தெரிவித்தன.

CGT ஆனது ஹாலண்டின் வலதுசாரி முன்னோடியான ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி செயற்படுத்திய சிக்கனக் கொள்கைகளில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. பலமுறை ஓய்வூதிய வெட்டுக்களை சார்க்கோசியுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் விவாதித்த பின், CGT அரச எந்திரத்துடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு என்பதை இதற்கு ஈடாகப் பெற்றது.

ஆனால், தொழிற்சங்க அதிகாரத்துவமானது அவர் பிரெஞ்சுப் போட்டித்தன்மை என்ற பெயரில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்கு வழிநடத்த விரும்புகிறார் என்பதை நன்கு அறிந்தும்கூட ஜனாதிபதிப் பதவிக்கான பிரான்சுவா ஹாலண்டின் வேட்பாளர் தன்மைக்கு ஆதரவளித்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, செய்தி ஊடகங்கள் பரந்த பணிநீக்கங்கள் பிரான்சில் நடக்கும் என்று கூறின; மேலும் PSA  இல் வேலைகள் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளன என்றும் கூறின; 2011ல் PSA  ஆவணங்கள் இதை உறுதிபடுத்தியிருந்தன. CGT மற்றும் LO  இரண்டும் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின்போது இதை ஒரு அரசியல் பிரச்சினையாக ஆக்கவில்லை.

ஜூலை 2012ல் 8,000 வேலைகள் தகர்ப்பு, ஒல்னே ஆலை மூடப்படுகிறது என்ற உத்தியோகபூரவ அறிவிப்பிற்குப் பின், மேர்சியே தொழிலாளர்களை அணிதிரட்ட முயற்சி எடுக்கவில்லை. ஏதேனும் நடவடிக்கை எடுக்க செப்டம்பர் வரை காத்திருந்தார்; அதுதான் அராசங்கம், PSA மற்றும் தொழிற்சங்கங்கள் பேச்சுக்களை நடத்தத் தொடங்கிய காலத்துடன் இணைந்த நேரம் ஆகும். ஐரோப்பா முழுவதும் கார்த் தொழிலாளர்கள் PSA நிலைமையிலான தாக்குதல்களை முகங்கொடுத்தாலும், CGT தான் தொழிலாளர்களின் போராட்டங்களை ஐரோப்பிய கார்த் தயாரிப்புத்துறையில் ஐக்கியப்படுத்தாமல் விரோதப் போக்கைக் காட்டியது.

மேர்சியேயின் முன்னோக்கு PSA Aulnay தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், அவர்கள் ஆலை மூடுவதை ஏற்கும் வரையில் என இருந்தது.

பணிநீக்கத் திட்டம்தான், பூர்சுவாசியால் கார்த் தயாரிப்புத் தொழிலாளர்கள் மீது மேலும் கடுமையான தாக்குதல்கள் நடத்த தொடங்கும் ஆரம்பக் கட்டமாகும். இது ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் படர்ந்தது. PSA ஆனது மே மாதம் ஆலைகளின் போட்டித்தன்மை குறித்து பேச்சுக்கள் நடத்த திட்டமிட்டிருந்தது. CGT பிற நிறுவனங்களில் செய்ததைப்போல் செய்துள்ளதால்மிகச் சமீபத்திய உதாரணம் Bosch ஆகும்; அங்கு அது ஊதியங்கள் முடக்கம் மற்றும் வளைந்து கொடுக்கும் பணி நேரங்களுக்கு ஒப்புதல் கொடுத்து கையெழுத்திட்டுள்ளது; SUD தொழிற்சங்கத்துடன் சேர்ந்து. CGT ஆனது சமூகப் பிற்போக்குத்தனத்தைத்தான் தொழிலாளர்கள் மீது சுமத்தும்.

PSA தொழிலாளர்களை தொழிற்சங்கங்களும் போலி இடது அமைப்புக்களும் காட்டிக் கொடுத்திருப்பது, தொழிற்சங்கங்கள் அவற்றின் இழிந்த தொழிலாளர் விரோதக் கொள்கையுடைய LO போன்ற அமைப்புக்களிடம் இருந்து முறித்துக் கொண்டு, தொழிலாள வர்க்கம் சிக்கனத்திற்கும் வேலை வெட்டுக்களுக்கும் எதிராக ஐக்கியப்பட்டு சுயாதீன போராட்டங்களை நடத்துவதற்கு நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டிய தேவையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.