World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US and Iranian presidents talk by telephone

அமெரிக்க, ஈரானிய ஜனாதிபதிகள் தொலைபேசி மூலம் பேசுகின்றனர்

By Peter Symonds
30 September 2013

Back to screen version

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ஈரானிய ஜனாதிபதி ஹசான் ருஹானியும் வெள்ளியன்று தொலைபேசியில் உரையாடிக் கொண்டனர். இது இரு நாடுகளுக்கும் இடையே 1979 ஈரானியப் புரட்சிக்குப்பின் மிக உயர்மட்ட நேரடித் தொடர்பாகும். இந்த 15 நிமிட உரையாடல் குறித்து அதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் ருஹானி இது பெரும்பாலும் அணுப்பிரச்சினை மீது கவனம் செலுத்தியது என்றார். இரு ஜனாதிபதிகளும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நீடித்த மோதல் நிலையை, உடன்பாட்டின் மூலம் நிறுத்தப்படலாம் என்று கவனமாக நம்பிக்கை தெரிவித்தனர்.

முந்தைய தினம் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஜோன் கெர்ரியும் ஈரானிய வெளியுறவு மந்திரி ஜாவாட் ஜாரிவ்வும் ஈரானிய அணுத் திட்டம் குறித்து தேக்கமடைந்திருந்த பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டபின் இந்த தொலைபேசி உரையாடல் நிகழ்ந்தது. முந்தைய P5+1 குழு (அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா, ரஷ்யா மற்றும் ஜேர்மனி) ஈரானுடன் ஏப்ரல் மாதம் காஸக்ஸ்தானில் நடத்திய கூட்டம் மேலதிக பேச்சுவார்த்தைகளைப் பற்றிய உடன்பாடு இல்லாமல் முறிவடைந்தது.

ஜூன் மாதம் ருஹானி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை இப்பொழுது ஈரானிடம் இருந்து விட்டுக்கொடுப்புகளை பெறுவதற்கு ஒபாமா நிர்வாகம் பயன்படுத்த முற்படுகிறது. நிதானமான வெளியுறவுக் கொள்கை, உரையாடல் என்பதற்குப் பிரச்சாரம் செய்த ருஹானி அமெரிக்காவுடன் உடன்பாட்டிற்கு தீவிரம் காட்டுகின்றார் இவர் ஈரானை முடக்கும் அமெரிக்கத் தலைமையிலான பொருளாதாரத் தடைகளுக்கு முடிவு கட்டவும் தற்போதைய அமெரிக்க இராணுவத் தாக்குதல் என்னும் அச்சுறுத்தலை நிறுத்தவும் முயல்கின்றார்.

அக்டோபர் மாத நடுவில் ஜெனீவாவில் ஆரம்பிக்கவுள்ள P5+1 பேச்சுக்கள் சர்வதேச பொருளாதாரத் தடைகளை அகற்ற தன் அணுத்திட்டத்தில் எத்தகைய கட்டுப்பாடுகளை ஈரான் ஏற்கத்தயார் என்பது குறித்து இறுதி முடிவு எனப்படுவது குறித்து கவனம் காட்டும். அதாவது. இதற்கு ஓராண்டு கால அட்டவணை அதனை முடிவிற்குக் கொண்டுவர கொடுக்கப்படும். காஸக்ஸ்தானில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தைகள் ஆரம்ப நம்பிக்கை கட்டமைக்கும் நடவடிக்கைகளில் உடன்பாடு காண்பதிலேயே தோற்றுவிட்டது.

அமெரிக்கா ஏற்கனவே நீண்ட கோரிக்கைகளை கொண்ட பட்டியலை வைத்திருக்கின்றது. அதில் ஈரானின் யுரேனிய செறிவுபடுத்தும் திட்டம் 20% அளவை தாண்டக்கூடாது, ஈரானின் அதிக பாதுகாப்புடைய யுரேனிய போர்டா செறிவுபடுத்தும் ஆலை மூடப்பட வேண்டும், நாட்டை விட்டு வெளியே 20% செறிவான யுரேனியம் அகற்றப்பட வேண்டும் மற்றும் இன்னும் ஆழமாக பரிசோதனை போன்றவை உள்ளன. மற்றைய கோரிக்கைகள் அராக் இலுள்ள கன நீர் உலைக்கூடம் பற்றி கவனம் காட்டும், அது கட்டுவது முற்றுப்பெற்றால் புளூட்டோனியத்தைத் தயாரிக்க இயலும்.

ABC யின் இந்த வாரம் நிகழ்ச்சியில் நேற்று பேசிய ஈரானிய வெளியுறவு மந்திரி ஜரிப் தெஹ்ரான் எங்கள் செறிவுபடுத்தும் திட்டத்தின் கூறுபாடுகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தத் தயார் ஆனால் எங்கள் செறிவுபடுத்தும் திட்டம் பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது அல்ல என்று குறிப்பாகத் தெரிவித்தார். அவர் மீண்டும் அமெரிக்க, இஸ்ரேலியக் கூற்றுக்களான ஈரான் அணுவாயுத தயாரிப்பிற்கு முற்படுகிறது என்பதை மறுத்து, எங்களுக்கு இராணுவத்-தர யுரேனியம் தேவையில்லை, அது உறுதி, நாங்கள் அத்திசையில் செல்ல மாட்டோம். என்றார்.

ஈரான் பலமுறையும் அணுசக்தி பரவா உடன்படிக்கையின் கீழ் அதன் உரிமைகளை வலியுறுத்தி, அதில் அது கையெழுத்திட்டுமுள்ளது. அதன்படி அணுத் திட்டங்கள் சமாதான நோக்கங்களுக்கு அபிவிருத்தி செய்யப்படலாம், அதில் யுரேனியத்தை எரிசக்தி மற்றும் ஆய்வு உலைக்கூடங்களும் அதிலிருந்து எரிபொருள் பெறுவதும் அடங்கும். அமெரிக்கா ஐக்கிய நாடுகள்  சபையின்  பாதுகாப்புக் குழுத்தீர்மானங்களை கொண்டு வந்தது. அவற்றின்படி ஈரான் அனைத்து யுரேனிய செறிவுபடுத்தும் ஆலைகளையும் மூடவேண்டும். இக்கோரிக்கை அழுத்தம் கொடுக்கப்பட்டால் விரைவில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுக்கள் அனைத்தையும் தகர்த்துவிடும்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தெனியாகு துல்லியமாக அக்கோரிக்கையைத்தான் முன்வைக்க சாத்தியமுண்டு. வாஷிங்டனில் அவர் ஒபாமாவை இன்று சந்திக்கையில். அவர் புறப்படும் முன் கூறிய கருத்துக்களில் நெத்தெனியாகு, ருஹானியின் இனிய பேச்சுக்கள், சிரிப்புக்கள் என்னும் தாக்குதலை உதறித்தள்ளினார். இஸ்ரேலின் சானல் 1 இராஜதந்திரப்பிரிவு நிருபர் கருத்துப்படி பிரதம மந்திரி ஒபாமாவிடம் ஈரானின் அணுத்திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை என்றால் இஸ்ரேல் இராஜதந்திர பாதையை கைவிடும் என்று கூறுவார். இது ஈரானுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை என்ற உட்குறிப்பைத் தரும்.

இஸ்ரேலிய அரசாங்கம், பேச்சுக்களின் சூழ்நிலையை நச்சுப்படுத்தும் வகையில் அதிகரிக்கும் ஆத்திரமூட்டல்களை வடிவமைக்கும் திறனை உடையது. அமெரிக்க ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய உளவுத்துறைப்பிரிவுகள் ஈரானின் செறிவுபடுத்தும் ஆலைகளில் இருந்த கணினிகள் மீது வைரஸ் தாக்குதல்களை நடத்தியதோடு மட்டுமன்றி, முக்கிய ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகளின் படுகொலையின் பின்னணியிலும் இருந்தது.

நெத்தெனியாகு அமெரிக்காவிற்கு வருகையில், இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பு, ஈரானிய ஒற்றர் ஒருவர் டெல்அவிவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தின் புகைப்படங்களுடன் கைதுசெய்ததாக தெரிவித்தது.

ருஹானி ஈரானுக்கு மீண்டும் வந்தபின், அவர் 60 எதிர்ப்பாளர்கள் அடங்கிய குழுவை எதிர்கொண்டார். அவர்கள் ஒபாமாவுடன் தொலைப்பேசி உரையாடலுக்காக அவர் வாகனத்தின் மீது முட்டைகளையும் காலணியையும் எறிந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைவிட கூடுதலாக 200-300 ருஹானி ஆதரவாளர்கள் இருந்தனர். எதிர்ப்பு ஒருவேளை ஈரானிய ஆட்சியின் கடினப் போக்குப் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், இது மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் மற்றும் குற்றம்சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஈரானியர்களிடையே பரந்த அவநம்பிக்கை மற்றும் விரோதப்போக்கு இருப்பதை காட்டுகிறது.

ஆனால் எதிர்ப்பின் சிறிய அளவு ருஹானியின் இராஜதந்திர ஆரம்ப முயற்சிகள் ஆதரவு பெற்றுள்ளன அல்லது குறைந்தப்பட்சம் மிக்குயர் தலைவர் ஆயத்தொல்லா அலி காமெனீய் உட்பட ஆளும் வட்டங்களால் பொறுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைக் காட்டுகின்றன. ஆரம்ப பரிசோதனை எந்த அளவிற்கு ருஹானி விரைவாக அழுத்தங்களைக் குறைத்து பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதில் பேச்சுக்களை நடத்துவர் என்பதில் உள்ளது. ஏனெனில் இவை ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதிகளை அரைவாசியாக்கி, ஈரானை சர்வதேச வங்கிமுறை, நிதிய அமைப்புமுறை ஆகியவற்றில் இருந்து வெட்டிவிட்டது.

மிகத் தீவிர மற்றும் நம்பிக்கை எதிர்பார்ப்பிற்கு அப்பால், ஈரானிய தூதுக்குழுவின் கைகளில் அது திரும்புகையில் கையளவு உறுதிமொழிகளைத் தவிர அதில் அதிகம் ஏதும் இல்லை என்று கடினப் போக்கு Kayhan செய்தித்தாளின் தலையங்கம் கூறுகிறது.

சிரியா மீதான நெருக்கடி மற்றும் அமெரிக்க இராணுவத் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் ஈரான் மீதான கவனமாக விரைவாக மாற்றப்பட்டுள்ள தன்மை தெஹ்ரான் எப்பொழுதும் வாஷிங்டனின் முக்கிய கவனத்தில் உள்ளதென்பதை நிரூபிக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் சிரிய இரசாயன ஆயுதக் கிடங்கை அகற்ற அமெரிக்க ரஷ்ய உடன்பாட்டை அறிவிக்கையில் ஒபாமா ஈரான்மீது இராணுவத் தாக்குதலைப் புதுப்பிக்கும் வகையில் தன் அச்சறுத்தலை வெளியிட்டார்: ஈரானியர்கள் அணுப்பிரச்சினை எங்களுக்கு இரசாயன ஆயுதப் பிரச்சினையைவிட மிகப்பரந்த பிரச்சினை என்பதை உணர வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அணுவாயுதம் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான அச்சுறுத்தல் என்பது எங்கள் அடிப்படை நலன்களுக்கு மிகவும் நெருக்கமானவை என்றார்.

உண்மையில் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிக்க முற்படுகிறது என்னும் அமெரிக்க கூற்றுக்கள் எப்பொழுதும் அதன் ஒரு பரந்த செயற்பட்டியலைத் தொடருவதற்கான போலிக்காரணங்களாகத்தான் இருந்து வந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியம் 1979ல் ஷா முகம்மது ரேசா பஹ்லவி அகற்றப்பட்ட அடியில் இருந்து சமரசம் அடையவே இல்லை. இஸ்லாமியவாத ஆட்சியை தன் பொருளாதார, மூலோபாய முனைப்புகளுக்கு தடையாகத்தான் கருதுகிறது. ஈரானிடம் கணிசமான எண்ணெய், எரிவாயு இருப்பது மட்டும் இல்லாமல், அது மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் உள்ள எரிசக்தி செழிப்புடைய பகுதிகளுக்கு நடுவே மூபோபாய முக்கியத்துவம் உள்ள பகுதியில் உள்ளது.

சில வாரங்களுக்கு முன்புதான் சிரியா மீது குண்டுத்தாக்குதல் நடத்தும் விளிம்பில் இருக்கையில், இது ஈரான் உட்பட சிரியாவின் நட்பு நாடுகளுடன் ஒரு பரந்த மோதலைத் தூண்டும் அச்சுறுத்தலைக் கொண்ட ஆக்கிரமிப்புச் செயலாக இருந்தது. ஆனால் அமெரிக்காவிற்குள்ளும் சர்வதேச அளவிலும் பெரும் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுத்த வகையில், ஒபாமா நிர்வாகம் ரஷ்யாவுடன் இராசயன ஆயுதங்கள் உடன்பாட்டை பயன்படுத்தி ஒரு தற்காலிக பின்வாங்கலை செய்தது. தற்போதைக்கு ஒபாமா நிர்வாகம் மத்திய கிழக்கில் அமெரிக்க நலன்களை முன்னெடுக்கும் வழியாக ஈரானுடன் இராஜதந்திர பாதையை பயன்படுத்த, முயல்கிறது என்றாலும், போர் ஆபத்து இன்னும் தொடர்கிறது.