World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

On eve of Merkel visit, massive anti-austerity strike in Greece

மேர்க்கெல் விஜயத்திற்கு முன் கிரேக்கத்தில் பாரிய சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான வேலைநிறுத்தம்

By Patrick Martin 
10 April 2014

Back to screen version

நூறாயிரக் கணக்கான கிரேக்கத் தொழிலாளர்கள் புதன் அன்று ஒரு 24 மணி நேரப் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்; இது ஐரோப்பிய ஒன்றிம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதே நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணையின்கீழ் சுமத்தப்பட்டுள்ள பரந்த வேலையின்மை மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பாக இந்த ஆண்டு முதல் முதலாக வெளிப்பட்டதாகும்.

இந்த “முக்கூட்டு” விரும்புவதைக் கூறுகையில், வலதுசாரி பிரதம மந்திரி ஆன்டோனிஸ் சமரசின் அரசாங்கம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 வீதத்தை கிரேக்கம் இப்பொழுது “முதன்மை” வரவு-செலவுத் திட்ட உபரி என்று கொடுக்கும் கட்டத்திற்கு பொதுநலச் செலவுகளை குறைத்துள்ளது – அதாவது கடன் திருப்பிக் கொடுத்தல், வட்டி ஆகியவை விலக்கப்பட்டால், உபரி என –. கிரேக்கத் தொழிலாளர்களுக்கு இதன் விளைவுகள் கொடூரமானவை: வேலையின்மை 27.5% ஆகவும் இளைஞர்களுக்கு 57% எனவும் உயர்ந்துவிட்டது, ஊதியங்களில் சராசரி வெட்டுக்கள் 30% அதற்கும் மேல்; சுகாதாரப் பாதுகாப்பு போன்ற பொதுப் பணிகள் அகற்றப்படவுள்ளது.

பொது வேலைநிறுத்தத்திற்கு முன்பு, ஒரு இலவச சமூக மருத்துவமனை ஏதென்ஸில் காப்பீடு இல்லாத, ஆபத்தான தொற்று நோய் உடைய நோயாளிகளுக்கு மருத்துவச் செலவுகளை வெட்டுவதற்கு எதிராக அரசாங்கத்திற்கு முறையிட்டது. எல்லினிகோவில் உள்ள மெட்ரோபோலிடன் சமூக மருத்துவமனை சுகாதார அமைச்சரகத்தின் முடிவான எட்டு Hepatitis B, C நோயாளிகளுக்கு, மருந்துகளை வெட்டுவதை “வியத்தகு முறையில் பொறுப்பற்ற கொள்கை” என்றது. மருத்துவமனை மேலும் கூறியது: “தீவிர, தொற்று நோய்கள் உடைய நோயாளிகள் புறக்கணிக்கப்படக் கூடாது.”

ஒரு வாரம் முன்புதான் கிரேக்க பாராளுமன்றம் ஒரு புதிய பிற்போக்கு நடவடிக்கைகள் பொதியை இயற்றியது; இதில் 4,000 பொதுத்துறை வேலை வெட்டுக்கள் இருந்தன; மற்றும் வேலையற்றோர் நலன்களில், ஓய்வூதியங்களில் குறைப்புக்கள் மற்றும் பல சிறு வணிகங்கள் மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்குகள், அடுக்குமனைகள், பால்பண்ணைகள் திறப்பதில் இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவது, பெருநிறுவனங்களின் அழிவுதரும் போட்டிக்கு வகை செய்வது, ஆகியவை இருந்தன. பாராளுமன்றம் தொழிலாளர் சட்டத் தொகுப்பில் 2014 இறுதியை ஒட்டி சீர்திருத்தம் ஏற்கப்படும் என்றும் அது வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை பெரிதும் குறைக்கும் என்றும் உறுதியளித்துள்ளது.

பொது வேலைநிறுத்தம், கிரேக்கப் பொருளாதாரம் உலக நிதியப் பிரபுத்துவத்தால் பேரழிவிற்கு உட்படுவதை அடையாளம் காட்டும் இரண்டு நிகழ்வுகளை முன்னதாகக் கண்டது. வியாழன் அன்று நாடு, 2010ல் நிதிய நெருக்கடியில் அது ஆழ்ந்தபின் முதல் தடவையாக அரசாங்கப் பத்திரங்களை விற்க சர்வதேச மூலதன சந்தைகளுக்கு திரும்பும், வெள்ளியன்று ஐரோப்பா முழுவதும் சிக்கன நடவடிக்கைகளை முக்கியமாக செயல்படுத்தும் ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் ஏதென்ஸிற்கு பிரதம மந்திரி சமரஸுடன் பேச்சுக்கள் நடத்த செல்வார்.

ஒரு நாள் பொது வேலைநிறுத்தம், பெரும்பாலான பொதுப்போக்குவரத்து, கிரேக்கத்தின் பல தீவுகளுக்கு இடையே செல்லும் படகுப் பயணம், பஸ்கள், இரயில்கள் உட்பட இலக்கு கொண்டது; ஏதென்ஸின் சுரங்க இரயில் அதிகம் பாதிக்கப்படவில்லை. நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன; பெரும்பாலான நீதிமன்றங்கள் இன்னும் பிற அரசாங்க அலுவலகங்களும் மூடப்பட்டன. மருந்துக்கடைகள், மருத்துவமனைகள் ஆகியவையும் அவசரமானவை தவிர மற்றவற்றிற்கு மூடப்பட்டன.

இரண்டு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்கள், தனியார் துறை பொது கிரேக்கத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு (GSEE), மற்றும் பொதுத்துறை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு (ADEDY) ஆகியவை மத்திய ஏதென்ஸில் எதிர்ப்பு அணிவகுப்பிற்கு அழைப்பு விடுத்தன; இது கிட்டத்தட்ட 6,000 என மதிப்பிடப்பட்டுள்ள தொழிலாளர்களால் பங்கு பெறப்பட்டது. இது வேலைநிறுத்தத்தில் சேர்ந்தவர்களில் ஒரு சிறிய பகுதிதான். ஒரு தனி அணிவகுப்பில், கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் தொழிற்சங்கம் PAME ஒரு சில நூறு தொழிலாளர்களைத்தான் ஈர்த்தது.

தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அவற்றின் ஒத்துழைப்பிற்காக இழிவிற்கு உட்பட்டுள்ளன. இரண்டு முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் சமூக ஜனநாயக PASOK கட்சியுடன் பிணைந்தவை; அது 2009 முதல் 2012 வரை பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கட்டுப்படுத்தியபோது வேலைகளிலும் செலவுகளிலும் இரக்கமற்ற வெட்டுக்களை சுமத்தின. அதே பங்கை, சமரஸ் அரசாங்கத்தில் (2012 முதல் இப்பொழுது வரை) இளைய பங்காளியாக இருந்து தொடர்கிறது.

PASOK இன் தலைவர் எவான்ஜெலோஸ் வெனிஜெலோஸ் துணைப்பிரதமராகவும் வெளியுறவு மந்திரியாகவும் சமரசஸ் அரசாங்கத்தில் உள்ளார்.

நினைவிற்கு தெரிந்தவரை இல்லாத அளவுக்கு கிரேக்கப் பொருளாதாரம் மந்தநிலையில் ஆழ்ந்துள்ளபோது, GSEE, ADEDY ஆகியவை தொடர்ச்சியான பயனற்ற ஒருநாள் மற்றும் இருநாள் வேலைநிறுத்தங்களுக்குள் தங்கள் விடையிறுப்பை மட்டுப்படுத்தியுள்ளன. இந்த வேலைநிறுத்தங்கள் தொழிலாள வர்க்கத்தின் ஆற்றல்திறனைக் காட்டியுள்ளன; ஆனால் மறுபக்கத்தில் வெட்டுக்களை தொழிற்சங்கங்கள் ஆதரிப்பதின் பங்கை மறைப்பதற்கும், வெறும் மூச்சுத்திணறலை வெளியே விடுவதற்கும் மற்றும் அவை வேலைகள் மீதான தாக்குதல், வாழ்க்கைத்தரங்கள் மற்றும் சமூக நிலைமைகள் பாதிக்கப்படாமல் தொடர அனுமதிப்பதை மறைப்பதற்கும்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

புதன் நடந்த வேலைநிறுத்தமும் ஒன்றும் வேறுபட்டிருக்கவில்லை. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து அணிவகுத்திருக்கையில், நிர்வாக சீர்திருத்த மந்திரி கைரியகோஸ் மிட்சோடகிஸ் Vima FM இடம் பொதுத்துறை ஊழியர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வேலை உறுதி என்பதை நிறுத்தும் காலம் வந்துவிட்டது என்றார். கிரேக்க அரசியலமைப்பு பொதுத்துறை, கட்டுப்பாட்டு காரணங்களைத்தவிர தொழிலாளர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட முடியாது எனக்கூறுகிறது. ஆனால்சமூகம் இதைபற்றி விவாதிக்க முதிர்ச்சி அடைந்துள்ளது” என்றார் மிட்சோடகிஸ்.

புதன் அன்றே, அரசாங்கத்தின் சொத்துக்களை “முக்கூட்டின்” கோரிக்கையான தனியார்மயமாக்குவதற்கு விற்பனை செய்ய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 மில்லியன் யூரோக்கள் ($689 மில்லியன்) ஏலத்திற்கு தொகுப்புக்கள் விற்கப்படுவதற்கு வரும் என்றது ஹெலனிக் குடியரசு சொத்து அபிவிருத்தி நிதியத்தின் நிர்வாக இயக்குனரான ஆண்ட்ரியஸ் டாப்ரன்ட்ஜிஸ் நிறுவனம் 5 பில்லியன் யூரோக்கள் சொத்தை விற்றுள்ளது, இதில் 1.8 பில்லியன் யூரோக்கள் நிலச்சொத்துக்களில், கடந்த 14 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன, இவற்றில் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலம் மற்றும் பிற சொத்துக்கள் அடங்கும் என்றும் கூறியுள்ளார்.

மூன்று மிகப் பெரிய ஐரோப்பிய வங்கிகள் –UBS, Deutsche Bank, BNP Paribas --  ஆகியவை விற்பனையை மேற்பார்வையிடுகின்றன. “சிறிது காலம் சிந்தித்தபின், முதலீட்டாளர்கள் இப்பொழுது கிரேக்க வாய்ப்பை பயன்படுத்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்னும் உணர்வு மாற்றம் உள்ளது.” என்று ப்ளூம்பேர்க் நியூசிடம் டாப்ரன்ட்ஜிஸ் கூறினார். “எப்படி பங்குகள் விற்பனையாகவுள்ளன என்பதை பாருங்கள்.” ஏதென்ஸ் பங்குச் சந்தை ஜூன் 2012ல் மிகவும் குறைந்த நிலையை அடைந்தபின் இப்பொழுது 175% ஏற்றம் பெற்றுள்ளது.

பொதுமக்களின் பொது இடர்களுக்கும் நிதிய உயரடுக்கின் சுய செழிப்பிற்கும் இடையே உள்ள அப்பட்டமான வேறுபாடு, பொது வேலைநிறுத்தத்திற்கு அடுத்தநாள், கிரேக்கம் சர்வதேச மூலதனச் சந்தைகளுக்கு திரும்பும் என்ற அறிவிப்பால் அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது. சமரஸ் அரசாங்கம் 2.5 பில்லியன் யூரோக்களை பத்திரங்களில் கணிக்கப்பட்டுள்ள 5% வட்டிவிகிதத்திற்கு விற்கும் திறனைக்காட்டியுள்ளது, அதன் கொள்கைகள் வெற்றியடைந்து வருகின்றன என்பதற்கு நிரூபணம் ஆகும்.

சிக்கனக் கொள்கைகளை ஆதரிக்கும் நியூ யோர்க் டைம்ஸ் கூட “நிதிய நம்பிக்கைக்கும் மில்லியன் கணக்கான வேலையற்ற கிரேக்க மற்றும் பல மில்லியன் வேலையற்ற பரந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற இடங்களில் உள்ளவர்களின் பெருந்திகைப்பிற்கும் இடையே உள்ள இடைவெளியை இணைப்பது மிகவும் கடினமாகும்” என எழுதியுள்ளது.

உண்மையில், பத்திர விற்பனை, வலதுசாரி அரசாங்கத்திற்கு அரசியல் ஏற்றம் கொடுப்பதற்கும், மே 25ல் நடக்க இருக்கும் நகரசபை மற்றும் ஐரோப்பிய பாராளுமன்றத்தை அது நடத்த முடிவதற்கும் மற்றும் ஒரு நொருங்கும் அரசியல் தோல்வியை சந்திக்காமல் தொடர்வதற்கும் சமரஸ் மற்றும் அவருடைய ஐரோப்பிய ஆதரவாளர்களின் சூழ்ச்சிக்கையாளலாக இருக்கிறது.

ஜேர்மனிய செய்தித்தாள் Süddeutsche Zeitung புதன் அன்று எச்சரித்தது: “கன்சர்வேடிவ் கிரக்கப் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரசின் கீழ் உள்ள அரசாங்க பெரும்பான்மை 2 எம்.பி.க்கள் என விழுந்துவிட்டது. அவருடைய கட்சி உள்ளூர் அல்லது யூரோத் தேர்தல்களில் மே மாதம் தோற்றால், அது முன்கூட்டிய பாராளுமன்றத் தேர்தல்களுக்கு வழிவகுக்கும்; இது பின் அரசியல் உறுதிப்பாடற்ற நிலை இன்னும் கூடுதல் நெருக்கடிக்கு வழிவகுக்கும், அது முழு யூரோப் பகுதிக்கும் ஒரு அச்சுறுத்தல் ஆகும்.

செய்தித்தாள், இந்த கட்டத்தில் முக்கூட்டின் அறிக்கையின்படி, கிரேக்கம் அநேகமாக புதிய கடனாக 16 முதல் 17 பில்லியன் யூரோக்கள் 2016 வரை தேவைப்படும். இது புதிய பிணையெடுப்பு பொதிக்கு வழிவகுக்கும். ஐரோப்பிய அரசியல் வாதிகள் நேர்மையாக இருந்து கிரேக்கத்திற்கு ஒருவேளை ஒரு புதிய பிணை எடுப்பு பொதி தேவை என்று கிரேக்கர்களுக்கு விளக்க வேண்டும். அங்கேலா மேர்க்கெல் ஏப்ரல் 11 சமரசை பார்க்க செல்லுதல் அதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்". என்று குறிப்பிட்டுள்ளது.

எந்தப் புதிய பிணை எடுப்பும், கிரேக்கம் அதன் கடன்காரர்களுக்கு தொடர்ந்து திருப்பிக் கொடுப்பதை உறுதிப்படுத்தும்: நிதிகள், ஐரோப்பிய மத்திய வங்கி அல்லது முக்கிய சர்வதேச வங்கிகளுக்கும் பத்திரம் வைத்திருப்போர்களுக்கும் மறு சுழற்சி செய்யப்படும்; சிக்கன நடவடிக்கை தொழிலாளர்கள் மீது இன்னும் இறுக்கப்படும்.

இதற்கு முக்கிய பாராளுமன்ற எதிர் கட்சியான போலி இடது சிரிசா கூட்டணியின் விடையிறுப்பு பத்திர விற்பனை முடிவை விமர்சித்தல் ஆகும்; ஏனெனில் அது “பொதுக்கடனை பெருக்கும்”, கடன் வாங்கும் கட்டாயத்தில் இருக்கும் ஒரு நாடு என்னும் தோற்றத்தை கிரேக்கத்திற்கு கொடுக்கும் என்பதாக இருந்தது.

தேர்தல்களுக்கு முன்பு, சிப்ரஸ் பலமுறையும் ஒரு சிரிசா அரசாங்கம், விதிகள் “மறு பரிசீலனை” செய்யப்படும்போது கிரேக்கத்தின் கடன்களை பில்லியனர்களுக்கும் ஐரோப்பிய மத்திய வங்கிக்கும் திருப்பிக் கொடுக்கும் என்று கூறியிருந்தார். நிதிய தன்னலக்குழு அத்தகைய வழிவகையில் எப்படியும் சாட்டையை கையில் வைத்திருக்கும்; சிரிசா யூரோப்பகுதிக்குள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளும் இருக்கும் என்று உறுதி கூறும்: இதையொட்டி கிரேக்க மக்கள் நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளுக்கு தாழ்த்தப்படுவர்.